ஆற்றுப் படுகையிலிருந்து ஒரு மரண வாக்குமூலம் :
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என நம் மக்கள் பேசும்போதெல்லாம் , நம்மையும் ஒரு பொருளாக எடுத்துப் பேசுகிறார்களே என்று மணல் பெருமைபட்டிருக்கும் முன்பு..
ஆனால்........
தொடரும் அடுத்த 10ம் ஆண்டின் முடிவில்
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என மேடை போட்டுப் பேசுபவரிடமே கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர் கேள்வி கேட்பார்
‘எல்லாம் சரிதான் ..மண்ணு, மண்ணுங்கறீங்களே ..
அப்படீன்னா என்ன ?’
கடந்த 20 ஆண்டுகளில் , ஆற்று மணலின் இருப்பில் பாதியை கொள்ளையடிக்கப் பட்ட அவலம் கண்டு ,பொங்கி எழுவோர் யாருமில்லை... தவறி யாரும் எழுந்தாலும் அவருக்கு துணைவருவோர் யாருமில்லை .. நம் குழந்தைகளின் வருங்காலம் நம் கண்முன்னே கொள்ளை போய்க் கொண்டிருப்பதை யாரும் உணர்ந்ததுபோலவேத் தெரியவில்லை .
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?
ஆற்றுப் படுகையில் 1 அங்குலம் உயரத்திற்கு மண் சேகரமாகிப் படிய ஆகும் காலம் 5000 ஆண்டுகள் ..
நமது அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அளித்திருக்கும் அளவு 3 அடி ..அதாவது 36 அங்குலம் தோண்டிக்கொள்ளலாம் ...
அதாவது 1,80,000 ஆண்டுகள் சேமிப்பை அரசாணை என்ற பெயரில் அபகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ...
ஆனால் ... நடப்பது என்ன ???
இயந்திரங்களின் உதவியோடு 20 அடி ஆழம் தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப் படுகிறது ....அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல்லாயிரம் மடங்கு அதிகமாக......
என்னவாகும் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் நிலத்தடி நீரோட்ட நிலைமை ?
ஆற்றின் நீர்மட்ட அளவைப் பொறுத்தே அமையும் கிணற்றின் நீர்மட்டங்களும் ....ஏற்கனவே 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 40 அடியைத் தாண்டியும் கிடைப்பதில்லை.
கடல் மட்டம் உயரும் பொழுது உள் நுழையும் நீர் பள்ளங்களில் தேங்கி பக்கவாட்டில் நீரோட்டங்கள் மூலமாக விளை நிலங்கள் , கிணறுகளில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கிறது ... குடிமக்களின் குடி நீர் ஆதாரங்களை அழிக்கிறது
இனி அணைகளில் திறந்துவிடப்படும் நீர்.... இடையிலேயே இந்தப் பள்ளங்களில் தேங்கி, கடைமடையை அடையாமலேயே போகக் கூடும்..
கேரள ஆறுகளில் மணல் எடுக்க அங்கே தடை உள்ளது.அந்த அரசுக்கு மணலின் தேவை புரிந்திருக்கிறது ...ஆனால் இங்கோ...!!
இரவு,பகல் பாராமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கிருந்து நம் மணல் வளங்களை கேரளாவுக்குக் கடத்தி கொண்டிருக்கிறோம்....
ஏன் ..நமக்கந்த விழிப்புணர்ச்சி இல்லை...எங்கே போனது நம் சுயபுத்தி .... எப்போதிரிந்து இப்படி சுயநலமாகவே சிதிக்கத் தொடங்கினோம் ?
பழமொழிகளின் பெருமையே அது காலத்தைத் தாண்டியும் நிலைத்து நிற்பதுதான்...
ஆனால் நம் முன்னால் அது தோற்கப் போகிறது ... ஆம் பழமொழிகளின் பெருமையை சிதைத்த பெருமையை நாமே முதன்முதலில் அடையப் போகிறோம்
RIVERS NEVER GO REVERSE
--இந்தப் பழமொழி விரைவில் காணாமல் போகும்...ஆம் ..கடல் ஒருநாள் பொங்கும் போது .. நாம் தோண்டி வைத்திருக்கும் பள்ளங்களின் வழியே கடல்நீர் ஆறாக பின்னோக்கி ஓடத்தான் போகிறது ...
வாழ்க நமது திறமை !...வளர்க அதன் புகழ் ..!!