Monday, January 5, 2009

மாற்றி யோசி...!


சந்திரயான்-1 மூலம்
சந்திரனில் கால் பதித்து
வானியல் வல்லரசுகளின்
வரிசையில் நிலைத்துவிட்டோம் !

முன்னூற்று எண்பது கோடி செலவில்
மூவர்ணக் கொடியின் தடத்தை
முழு நிலவில் விதைத்துவிட்டோம் !
அறிஞர்களின் அறுபதாண்டு கால
அர்ப்பணிப்பில் சாதித்துவிட்டோம் !!

அந்த நிலவு போலவே
இது இந்தியாவின் வெளிச்சப் பக்கம்.
இனி அறிந்துகொள்வோமா
இருண்ட அதன் வேறு பக்கம்


காலையில் கழிப்பறை தொடங்கி
கடைசியில் மயானம் போகும்வரை
அலைபேசியில் மாதத்துக்கு
ஆயிரம் கோடிக்கு பேசி முடிக்கிறோம்

ஐநூறுகோடி செலவில் ஆண்டுக்கு
ஐம்பதுக்குமேல் அரைவேக்காடு
அதிரடித் திரைப்படங்கள் வெளியிட்டு
அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறோம்

இருநூறுகோடி விலையில் ஆண்டுக்கு
இருபதுக்கும் மேல் ஆடம்பரவாகனங்கள்
இந்த ஏழை விவசாய நாட்டுக்குள்
இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்

ஆயிரம் கோடி வருமானம் என
ஆட்சியில் இல்லாத கட்சி கூட
ஆணித்தரமாய் கணக்கு காட்டும்
அதிசயமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

இந்த அரசியல்வாதிகளின்
இல்லாத பெயர்களில்
வெளிநாட்டு வங்கிகளில்
வெளியே தெரியாமல் முடங்கும் பணம்
இந்திய வரவு செலவைவிட
இருமடங்குக்கும் மேல்
அதிகம் இருக்கும்
அற்புதமும் நடந்து கொண்டிருக்கிறது

இலவசம் எனற பெயரில்
செலவு செய்யும் பணம்
பல்லாயிரம் கோடியைத் தாண்டி
பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது

இன்னும்......
இன்னும்........
இன்னும்..........

முன்னூறு கோடி செலவிலேயே
முன்னணிக்கு வந்துவிட்டோமே!
முடிந்தவர்கள் மனது வைத்தால்
முதல் இடம் அடைந்துவிட மாட்டோமா ???

No comments: