Wednesday, January 28, 2009

ஹவ் ஈஸ் தாட்...!!!!!


ஆங்கிலம் பேசும் அந்நியர்கள்
இங்கிலாந்து நாட்டவர்கள்
இந்தியாவை சுற்றிப் பார்க்க
வந்திருக்கிறார்கள் இன்பச்சுற்றுலா

சுற்றிப் பார்க்க வந்த இடத்தில்
சும்மா இருக்கவில்லை அவர்கள்
சுற்றிக் காட்டும் என்னிடம்
சுரண்டியபடியே இருக்கிறார்கள்

"உங்கள் தாய்த் திரு நாட்டை
நாங்கள் அடிமை படுத்தியிருந்தோம்
எங்கள் காலடியில் மிதித்திருந்தோம்
இருநூறு ஆண்டுகளாய் எங்கள்
இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தோம்
போராடித்தானே உங்களால்
பெறமுடிந்தது விடுதலையை"

திறந்த வாயை அவர்கள்
திரும்பவும் மூடவே இல்லை

விருந்தோம்பல் போற்றும் நம்மிடம்
வீணாய் வீராப்பு பேசி அவர்கள்
உராய்ந்து கொண்டே இருக்கிறார்கள்
பொறுமை இழக்கவில்லை நான்
பொறுப்பை உணர்ந்தும் இருக்கிறேன்

ஆனாலும் பேசியாக வேண்டும் நான்
அவர்கள் வாயை அடைக்க வேண்டும்
பாரம்பரியம் தெரியாத விருந்தினரை
பழிவாங்கலாம் தப்பே இல்லை

"அன்பர்களே! உங்களுக்குத் தெரியுமா?
அறிந்து கொள்ளுங்கள்உண்மை நிலையை!
கனவானகளே! ஒன்றல்ல இரண்டல்ல
கடந்த எழுபதாண்டுகளாய் நாங்கள்

நித்தம் நித்தம் உங்கள் தாய்மொழியை
கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கிறோம்
கடித்து கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறோம்
கழுவேற்றிக் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்

இருநூறு ஆண்டுகள் அல்ல!
ஈராயிரம் ஆண்டுகளானாலும் சரி !!
இதிலிருந்து விடுதலை பெற
இயலுமா அய்யா உங்களால்?
முடிந்த வரையில் நீங்களும்
முயற்சி செய்துதான் பாருங்களேன் !!!"


இப்போதும்

திறந்த வாயை அவர்கள்
திரும்பவும் மூடவே இல்லை

ஹவ் ஈஸ் தாட்...!!!!!

1 comment:

S.sampath kumar said...

very nice post! very good post!