Saturday, January 31, 2009

ஏமாந்தது யாரிடம்.?



சாதகப் பொறுத்தம் பார்த்து
சாதகம் பாதகம் பேசி
நல்ல நேரம் பார்த்து
நாலு முறை கூடிப் பேசி
நல்லபடியாய் முடிவு செய்தனர்
நண்பன் அவன் திருமணத்தை

அங்கே.....

அவளை பற்றி அறிய
அவளைப் பின் தொடர்ந்தார்
அலுவலகத்திலிருந்து அவனின் மாமா

அலுவலக வாசல் தாண்டிய
அடுத்த நிமிடம் குனிந்த தலை
ஆறாவது தெருவில் இருக்கும்
அவள் வீடு வரும் வரை
அங்கே இங்கே திரும்பவில்லை
அரை அங்குலம் கூட நிமிரவில்லை

குடும்பத்தில் விளக்கேற்ற
குலமகளைத் தேடிய இடத்தில்
குத்து விளக்கே கிடைத்த மகிழ்ச்சி
குதூகலமாய் கிளம்பிப்போனார் மாமா

இங்கே......

அவன் நிலைமை விசாரிக்க
அவனிருக்கும் இடம் சென்றார்
ஆர்வத்தோடு அவளின் தாத்தா

இடையிலேயே பார்த்துவிட்டார் அவனை
இடைஞ்சலான போக்குவரத்திலும்
இருசக்கர வாகனத்தில் போகும் அவன்

கரம் கூப்ப வழி இல்லாததால்
சிரம் தாழ்த்தி வணங்கிச் செல்லும்
அவனின் சிறந்த பண்பால்
அங்கமெல்லாம் சிலிர்த்து
ஆரவாரமாய் கிளம்பிப் போனார்

எந்தவிதக் கேள்வியும் இல்லாமல்
அந்தத் திருமணம் இனிதே முடிந்தது

நன்று:ஆனாலும்

ஒரு உண்மை எல்லோருக்கும்
தெரிந்தே தான் ஆக வேண்டும்

அன்று அவள்.......

அலுவலக வாசலில் குனிந்து
அனுப்ப ஆரம்பித்தாள் குறுந்தகவல்(SMS)
அவள் வீடு போய்சேரும் வரை
அதுவும் போய் சேரவே இல்லை
அவளின் குனிந்த தலையும்
அதுவரை நிமிரவே இல்லை

அன்று அவன்.......

கழுத்துக்கும் காதுக்கும்
தோளுக்கும் இடையில் அந்த
அழுத்திப் பிடித்து இருந்த
அலைபேசியில் பேச
தலையை சாய்த்த அவன்
தாறுமாரான போக்குவரத்திலும்
தலையை தூக்கவே இல்லை
தாத்தாவையும் பார்க்கவே இல்லை

இரு வீட்டாரும் சேர்ந்து
இணைந்தே ஏமாந்து போனார்கள்
அவர்கள் எதிபார்க்காத ஒன்றிடம்!
அந்த அலை பேசியிடம்!!

No comments: