Saturday, November 14, 2009

மாடிவீட்டு ஏழைகளின் குழந்தைகள்தின வேண்டுகோள்


"பல்லாங்குழி ஆடியதில்லை
பச்சக்குதிரை ஏறியதில்லை
பம்பரஆக்கரு குத்தியதில்லை
பாவைக்குத்து பார்த்ததில்லை

ஐஸ்பால் ஆடியதில்லை
பால்ஐஸ் சாப்பிட்டதில்லை
கயிறுபஸ்ஸு ஏறியதில்லை
கள்ளன்போலீஸ் தேடியதில்லை

தட்டாமாலை சுற்றியதில்லை
கொட்டும் மழையில் நனைந்ததுமில்லை
சர்ப்பத்து சாப்பிட்டதில்லை
பாண்டியாட்டம் ஆடியதில்லை

ஆவியம் தாண்டியதில்லை
சோவிதாயம் ஆடியதில்லை
மரக்குரங்கு ஏறியதில்லை
மணலில்வீடு கட்டியதில்லை

குட்டிக்கரணம் அடித்ததில்லை
கூட்டாஞ்சோறு பொங்கியதில்லை
கோலிக்குண்டு பார்த்ததில்லை
கல்கோணா சப்பியதில்லை

டயறு வண்டி ஓட்டியதில்லை
கண்ணாமூச்சி ஆடியதில்லை
கட்டவண்டியில போனதில்லை
காம்புப்பால் குடிச்சதில்லை

கோவில்கொடைக்குப் போனதில்லை
கொடிக்கறியும் சாப்பிட்டதில்லை
வேட்டைசாமிய பார்த்ததில்லை
விபூதி வாங்கி பூசியதில்லை

அடுக்குமாடிக் குடியிருப்பை
அதிசயமாய் அண்ணாந்து பார்க்கும்
வசதிஇல்லா கிராமத்துக் குழந்தைகளுக்கு
வாய்ப்பாய் அத்தனையும் கிடைக்கிறதாம்

ஆனால்......

அதிசயத்துக்குள் குடியிருக்கும்
அபூர்வப் பிறவிகள் எங்களுக்கும்
அதில் பாதியாவது கிடைக்கவேண்டும்

குழந்தைகள் தினமாம் இன்று !

ஆள்வோருக்கோர் அவசர வேண்டுகோள்...
அதிரடிச் சட்டம் ஏதாவதுபோட்டு
இன்றே நாங்கள் விளையாட
ஆவன செய்ய முடியுமா !

.

1 comment:

Anonymous said...

Nalla kavithai ungal muyachikku vazhthukal