Thursday, September 5, 2013

பாச மலர் எல்லாம் .....பத்தடிக்குப் பின்னால் தான் .......!


ஊர்சுற்றியின் பிதற்றல்கள் 10


ஒரு சின்ன ப்ளாஷ் பேக் : எங்க வீட்டுல நான் 5 வருசத்துக்கு அப்புறமாத்தான் பிறந்தேன்..என் தம்பி அடுத்த 5வது வருசத்துல ... நாங்க 2 பேர்தான் ........

-------------------------------------------------------------

ஒரு 10 வருசத்துக்குப் பிறகு ..கிராமத்தில் / சித்திக்குச் சொந்த ஊர் .. கோவில் கொடை ... வெள்ளை (வாடகை) அம்பாசிடர்ல போய் எறங்கினோம் .. டேப் ரெக்கார்டர் , முன் சீட்டுல / பின் சீட்டுக்கு ரெண்டு பக்கமும் ஃபேன் என்று ஹைடெக் கார் அது ... கோவிலுக்கு வந்த நண்டு சுண்டுங்க கூட்டத்தில் முக்கால்வாசி காரைச் சுத்தித்தான் J.. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊர் திரும்ப..காரில் ஏறி உட்கார்ந்தவுடன் தொடங்கியது புது சிக்கல் ... சித்தியின் மகள் ..செலவ லெட்சுமி.. ஒரு 1.75 வயசிருக்கும் ...போட்டிருந்த ஜட்டியோடு வண்டியின் முன்னே.. இந்தப்பக்கத்துத் தெருவுக்கும் அந்தப்பக்கத்துத் தெருவுக்கும் உருண்டு புருண்டு ஒரே அழுகை

“ நானும் போவேன் “ ..

யார் பிடித்தும் உருளல் நிற்கவில்லை. அதற்கு மேல்

என்னாலும் தாங்க முடியவில்லை ...

இறங்கி ஓடிப்போய்த் தூக்கிக் கொண்டேன் ..

“ நாங்க கொண்டுபோறோம் “

“எய்யா ..என்ன திடீர்ன்னு இப்பிடி சொல்லுத”

“பின்னே..புள்ள இப்டி கெடந்து அழுவுது ..அவ்ளோதான் .. நீங்க ஒரு வாரம் கழிச்சு வந்து தூக்கீட்டுப்போங்க “

அன்னிக்கு வந்தவதான் ..அப்பிடியே எங்க வீட்டு மகாலெட்சுமி ஆகிப்போனாள் .. இப்போ எங்க வீட்டுல நாங்க 3 பேரு

....................................................

வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தேன் ..ஏற்கனவே உள்ளே ஒரு பெருங்கூட்டம் .. புரியவில்லை ..கொஞ்சம் குழப்பமாக சாந்தியிடம்

“என்ன?”

“பொண்ணு கேட்டு வந்திருக்காங்க “

‘யாருக்கு “

“5வது தெரு குமார் வீட்டுல இருந்து “

“அதுசரி ..அதுக்கு இங்கே என்னாக் கூட்டம்”

“அட..லெட்சுமியத்தான் கேட்டு வந்திருக்காங்க “

எனக்கு சுர்ர்ர்ர்ர்ருன்னு எங்கோ பற்றியது .. ’அவளுக்கா!!!!!! ..சின்னப்புள்ளை.. இன்னும் படிக்க வேணாமா ... என்ன சின்னப் புள்ளத்தனமா வந்து உக்காந்திருக்குக இந்தப் பெரிசுக எல்லாம் ..’

“அதெல்லாம் ஒண்ணும் இப்போ..........”

நான் பேசும் போதே எனவாய் பொத்தப்பட்ட்து ..

“போய் அங்கே நடுவுல உக்காருங்க ... நல்ல சம்பந்தம் ..இங்கே பக்கத்துல வேறு ..அப்பா. அம்மா எல்லாரும் சரீன்னுட்டாங்க .. நல்ல புள்ளையா அடக்கமா அங்கே சிரிச்சுக்கிட்டே தலையாட்டீட்டு வ்ந்திடுங்க “

’அட..இவ்ளோதானா நம்ம வெய்ட்டு ... எல்லாம் நீங்கதான் நீங்கதான்ன்னு சொல்லுவாங்க...ஆனா எல்லாம் முடிச்சு வச்சிட்டு... கடைசீல சிக்னலுக்குத் தலையாட்டத்தான் நாம்பளா L’ ரைட்டு .. பாத்துக்குகிடுவோம்’

கூடத்தில் கேலியும் கும்மாளமுமாக இருக்க ..வேகமாய்ப் போய் நடுவில் உட்கார்ந்தேன்..

“கடைசீல பக்கத்துலயே மாபளைய புடிச்சிட்டீரேய்யா ”

- யாரு நானா?? ஏன் சொல்ல மாட்டீங்க !

”எல்லாம் சரி.. மாப்ள வீட்டுல அவங்க மனசுக்கு மேலேயே செய்து விடுகிறேன் .. ஆனால் ...”

”என்னய்யா ஆனால்”?””’ “

”ஒரே ஒரு கண்டிசன் ”

”என்னது அது ”

”எந்தங்கச்சி இங்கே எப்டி இருந்தாளோ ...அதேப் போல அங்கேயும் வச்சிருக்கணும் ... அவ்ளோதான் ..எதாவது மாறிச்சுன்னா ..அப்புறம் பாத்த்துக்கோங்க .. என்னைபத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும் .... சொல்லீட்டேன் “

”இதெல்லாமா கண்டிசன் ..அதெல்லாம் அப்டித்தான் நல்லாவே பார்த்துப்பாங்க ”

”அப்போ சரி ...”

கிளம்பும் போது மாப்பிள்ளை மெதுவாக என்னிடம் வந்தார்

“ அது வந்து ..அவ இங்கே எப்டி இருந்தான்னு சொன்னீங்கன்னா...”

” அதையும் சொல்லியாத் தருவோம் ... அதெல்லாம் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கோங்கன்னேன் “

”போய்ட்டு வாரோம்” ந்னு சொல்லிப் பறந்தே விட்டார் .

கல்யாணம் ..

ஒருபக்க அழைப்பிதழுக்கு , 40பக்க உறவினர் பட்டியல் இலவச இணைப்பு. இதுல இனிசியல் மாறிப்போச்சு, படிப்பு போடல, பேரு கீழே வந்திருச்சு, கமா போடல , புள்ளி வைக்கலன்னு ஒரு பெரிய பஞ்சாயத்து .. வழக்கமான கல்யாணக் கலாட்டாக்கள் களேபரங்கள் ..

எல்லாம் இனிதே முடிந்து ( நான் பட்டப் பாடு எனக்கேத் தெரியும் ..அது தனியான புலம்பலாக வரும் ) .. சாயங்காலம் அவங்க வீட்டுல கொண்டு விட்டுவிட்டு (... 3 தெரு தள்ளி இருக்கும் அவங்க வீட்டு மாடியில இருந்து போன் இல்லாமலேயே “ஹலோ” ந்னு கூப்பிட்டா ., இங்கிருந்து

“ஹலோ நீங்க யாரு பேசரது ”ன்னு கேக்கும் அளவுக்குப் பக்கம் ..)

”மாப்ளே... கண்டிசன்..கண்டிசன்..பாத்துக்கோங்க” ந்னு சிரிச்சுக்கிட்டே ஒரு எச்சரிக்கை அறிக்கையையும் கொடுத்துட்டு, வீட்டுக்கு வந்து நிம்மதியா ஒரு காப்பிக் குடிச்சு முடிக்கல்ல ..கோவைல இருந்து போன்

“காலைல ஒரு அவரச மீட்டிங்க்.. நீங்க உடனே கிளம்பி வந்தீங்கன்னா நல்லா இருக்கும் “

’ஆஹா..கொஞ்சம் தூங்கலாமுன்னு பாத்தேனய்யா’

இரவோடு இரவாக கிளம்பியாகி விட்ட்து

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

3 நாட்கள்... வேலை பரபரப்பில் வீடு மறந்தே போனது ... வேலை முடித்து கோவையில் கிளம்பி தூத்துக்குடி வர மாலை மணி 5 ஆகிப்போனது ..

3வது தெரு நெருங்கும்போதுதான்.. அட.. ..தங்கையின் புதுவீடு .. வாசலில் ‘சர்க்’ எனக் பிரேக் அடித்து நின்றேன் ..

‘என்ன செய்யலாம் இறங்கி உள்ளே போவோமா? .. மொதமொதல்ல போவதற்கு ஏதாவது முறை இருந்தால்? ..அதனால் வீட்டுக்குப் போய்ட்டு சாந்தி, புள்ளைங்களொட வருவோமா ...??

யோசித்துக் கொண்டு நிற்கையிலேயே வீட்டின் கதவு வேகமாகத் திறக்க “அண்ணே” என்று சத்தமாக அழைத்தபடியே லெட்சுமி ஓடிவந்தாள் ... நான் திடுக்கிட .. பின்னாலேயே மாப்பிள்ளையும் ஓடி வர.. வந்தவள் என் கையைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கி அழ ஆரம்பிக்க ... எனக்கு மண்ண்டக்குள் ரத்தம் சூடாகப் பாய்ந்தது ..

சரட்டென வண்டிக் கதவைத் திறந்தேன் .(ஸ்லைடிங் டோர்)

“ஏறு உள்ள”

மாப்பிள்ளையைப் பார்த்தேன் ..

“என்ன செல்லி அனுப்பி வச்சேன் அவளை .. புள்ளைய அழவச்சுப் பாத்துக் கிட்டு இருக்கீங்களோ”

பின்னாலயே மாப்பிள்லையின் அப்பாவும் ஆச்சியும் வந்து சேர , எனக்கு கோபம் எல்லைக் கடந்தது

“எல்லாரும் உள்ளேதான் இருந்தீங்களா .. நல்லா இருக்குங்க “

லெட்சுமி இன்னும் தயங்கி நிற்க

“இப்போ ஏறப் போறியா ..இல்லையா”

நான் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கம் எல்லா வீட்டிலிருந்தும் ஆட்கள் வெளியே வர ...

“மச்சான் ..ஏன் கோவப் படுறீங்க ..இருங்க”

மாப்பிள்ளை ஏதோ சொல்ல வர ...

”எதுன்னாலும் எங்கே பேசனுமோ ..அங்கே வச்சுப் பேசிப்போம்”

சொல்லீட்டு நான் கதவை மூடி வண்டியைக் கிளப்பிய வேகத்தில் தெருவே கலங்கிப் போனது ..

வண்டி வீட்டிற்கு வருவதற்குள் , சாந்தி, அம்மா, அப்பா எல்லாம் வாசலுக்கு வந்து காத்து நிற்க ( அதுக்குள்ல்ள செய்தி வந்திடுச்சா இங்கே !)...

வேகமாக நிறுத்தி, கதவைதிறந்து “போ உள்ளே” என்றேன் ..

இறங்கியவள் “அண்ணீஈஈ” என்று அலறியபடியே ஓட ..

இன்னும் வெறியானேன்..

‘எப்படியும் அவங்க ஆளுங்க பேசுவதற்கு வரப்போறாங்க .. நாம் நம்ம ஆளுங்களுக்குச் சொல்லி விடுவோமா ..சே.சே வேண்டாம் ..எத்தனை பேரு வந்திரப்போறாங்க ..தனியாவே மோதிப் பாத்திருவோம் ’

வீட்டுக்குள் போகாமல் நான் வெளியவே காத்திருக்க ..எதிர்பாத்தது போலவே அவர்கள் ஒரு பத்து இருபதுபேர் ஆணும் பெண்ணுமாக கூட்டமாக வந்தார்கள் ..

ஒரு பெரிசு ஆரம்பித்தது

“என்ன தம்பி”

”என்ன என்ன தம்பி”

”ஏன் இவ்ளோ கோவம் ”

”என்ன ஏன் இவ்ளோ கோவம் ”

”பொறுமையா இருங்க ”

”என்ன என்ன பொறுமையா இருங்க”

”ஏங்க !”

இது சாந்தியின் குரலாச்சே!

திரும்பிப் பார்க்க ...வீட்டு வாசலில் எல்லாரும் குசுகூவென்னு பேசியபடியும் சிரித்துக் கொண்டும் நிறக ...எனக்கு இங்கே கொந்தளிப்பு அதிகமானது ..

’மனுசன் தனியா நின்னு எத்தனை பேரை சமாளிச்சிக்கிட்டு இருக்கோம் ..அங்கே என்னா இளிப்பானி வேண்டிக் கெடக்குது ’

”என்னா இப்பொ”

”இங்க வாங்க ”

”பேசிக்கிட்டு இருக்கேன்ல்ல .. கொஞ்ச நேரம் இரு”

”அட ..ரொம்பக் குதிக்காம இங்கே வாரீங்களா இல்லையா ”

ஆஹ்ஹா ..இது டேஞ்சரான சிக்னலாச்சே... கோவத்துடன் வந்தவங்களை முறைத்தபடியே ... அதே வேகத்தில் திரும்பி வந்து சாந்தியின் முன் நின்றேன்

”இப்போ என்ன சொல்லித் தொலை ”

”ஆங் .. பன்றதையும் பண்ணிப்புட்டு பேச்சப் பாருங்க ..நல்லா பேசிக்கிட்டு இருந்த புள்ளைய தூக்கி, வண்டிக்குள்ள அடைச்சுத் தூக்கீட்டு வந்துட்டு, .. இங்கே வந்தவங்க கிட்டே ஆட்டம் போடுறீங்க ”

’தூக்கீட்டு வந்தேனா ??????????’

அப்போத்தான் லெட்சுமியப் பார்த்தேன் ..அவள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தபடி நிறக ..’என்னய்யா நடக்குது இங்கே ...’

”அவ அழுதுகிட்டே ஓடி வந்தாளே எங்கிட்ட ..”

”உங்க வண்டி வந்து நின்னதைப் பார்த்திருக்கா ..உடனே காப்பிப் போட எடுத்துவச்சிட்டு வந்து பார்த்தா.. நீங்க இன்னும் இறங்காம வண்டியிலயே இருந்திருக்கீங்க.. அட்டா! அண்ணனை வான்னு கூப்பிட யாரும் வரலயேன்னு அண்ணன் நெனைச்சிக்கிட்டு உக்காந்திருக்கோன்னு பதறிப்போயி ஓடி வந்திருக்கா ... 3 நாளு கழிச்சுப் பாத்தவுடன் கண்ணு கலங்கி இருக்கு .. நீங்க என்னடான்னா வான்னு சொல்ல வந்தவளை வந்தளை வண்டிக்குள்ள தள்ளி இங்கே கொண்டு வந்துட்டீங்க ...

’ஆஹ்ஹ்ஹ்ஹா ..அவசரத்துல நாமதான் தப்புப் பண்ணீட்டமோ ..’

மெல்லத் திரும்பிப் பார்க்க ..தெருவே என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது ....

பி.கு:

1) ஒரு வாரத்துக்கு வெளியில் தலைகாட்ட முடியவில்லை .. நண்டு சுண்டுகள் எல்லாம் என்னைப் பார்த்தவுடன் “மாமாஆஆஆ” ந்னு கண்ணைக் கசக்கிய படியே ஓடி வந்து .என்னைத் தலைதெறிக்க ஓட வைத்தன

2) குடும்ப நிகழ்வுகளில் இதுபோன்ற சூழலில் லெட்சுமி தவறாமல் சொல்வது ”எங்க அண்ணே முன்னால யாரும் அழ மட்டும் செஞ்சிறாதீக”

...

Wednesday, August 14, 2013

ஒரு மகளின் அப்பாவாகிய நான் ...!

ஒர் ஊர்சுத்தியின் பிதற்றல்கள் : 1

+2 ரிசல்ட்

கோவையில் நான் ..செல்போன் அடிக்க எடுத்தேன்

”அப்பா .. நான் 1132 மார்க்”

”ஆகா ..கலக்கீட்டியேடா ... இதோ வாரேன் ..”

எல்லாத்தையும் பாதியில நிறுத்திவிட்டு கெளம்பியாச்சு ..4மணி நேரம்

தூத்துக்குடி..கேக்கும் சாக்லேட்டுமாக துள்ளிக்குதித்து வீட்டுக்குள் நுழைய ..

அட என்ன் இது ..அங்கே (ஒரு அமானுஷ்ய) அமைதி .... ஏன் ..என்னாச்சு ..

”ஏன் எல்லாரும் இப்பிடி இருக்கீங்க ?”

”அவளையேக் கேளுங்க”

”என்னடே ..”

”அப்பா.. காலேஜுக்கு நான் வெளியூரெல்லாம் போக மாட்டேன் .. வீட்ல இருந்துதான் போய்ட்டு வருவேன் ... இப்டீன்னு தெரிஞ்சிருந்தா நான் மார்க் குறைச்சலாவே எடுத்திருப்பேன்”

”அட..இதுக்குத்தானா .. கோவைல நம்ம காலேஜ்லயே ( நான் கட்டிய கல்லூரி அது..தற்புழுதும் வேலை நடக்கிறது அங்கே ) சேர்துக்கலாம் .. அங்கே வீட்ல இருந்து போய்க்கலாம் ..அடுத்த வருசம் தம்பியும் காலேஜ்தானே..அவனும் வந்திருவான் ,.. அப்புரமா எல்லாரும் அங்கேதானே”

இருண்டுகிடந்த முகத்தில் லேசாக வெளிச்சம் ...

”அங்கே என்கூட யார் இருப்பா”

”இப்போ ஆச்சி இருக்கட்டும் .. நான் வாரம் 2 நாள் வந்திருவேன்..சனி ஞாயிறு அம்மா வந்திருவா ..பிறகென்ன”

”ஐஈஈஈஈ..ஜாலி..ஜாலி...” அவள் மகிழ்ச்சியில் குதிக்க நண்டு சுண்டுகள் எல்லாம் சேர்ந்து கொள்ள வீடும் சேர்ந்து குதிக்க ஆரம்பித்த்து ..

நான் நழுவி என் அறைக்குள் நுழைந்தேன் ..பின்னாலேயே வீட்டம்மா .சாந்தி..

அவள்முகம் அப்படியே முன்பார்த்த மகள்முகம்போல் இருண்டு கிடந்த்து ..

கூடுதலாக கண்ணும் கலங்கி இருந்த்து

”இப்போ உனக்கென்ன?”

”ஏங்க ,, நீங்க சொன்னதெல்லாம் உண்மையா”

”பாப்போம்”

”என்ன பாப்போம் ..அப்போ பொய்யா சொன்னீங்க”

”பாதி”

அவள் கண்ணைத் துடைக்க .. நான் கோபமானேன்

”என்ன இது சின்ன பப்பா மாதிரி அழுதுகிட்டு ... அவ என்ன சின்னப்புள்ளயா .

நல்லாப் படிக்கணுமுன்னா வெளியே போய்த்தானே ஆகணும் .. குழந்தை மாதிரி அழுது மத்தவங்களையும் குழப்பி விட்ட்டு விடாதே”

வெடுக்கென்று திரும்பினாள் ”உங்களுக்கென்ன நீங்க ஆண்புள்ள”

’என்ன இப்படி சொல்லீட்டாளே’

பிறந்ததிலிருந்து ஒருநாள்கூட அவளில்லாமல் தூங்கியதில்லை..இருக்கட்டும்

தும்மினால் கூட மகள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் – இருக்கட்டும்

இப்போ உனக்குத் தும்மல் வரும் பாருன்னு அம்மா மகளிடம் சொல்வாள் – இருக்கட்டும் .. ஆனாலும் நடைமுறை வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே .. அதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் .. இதுகூடப் புரியாமல் வயசாகி என்ன ப்ரயோசனம் ?

”இனிமே என்முன்னால கண்ணுல தண்ணிவுட்டேன்னா பாத்துக்கோ .. என்னக் கோவப்படுத்தாம நிலைமையப் புரிஞ்சுக்கப் பாருங்க”

மகளைவிட அம்மாவுக்குத்தான் சொல்லிப் புரிய வைக்க நாளாகுமோ .. பார்ப்போம் ..

அவளுக்கு படம் வரைவதிலும் , புதியனவற்றை உருவாக்குவதிலும் ஆர்வம் அதிகம் என்பதால் ‘ஆர்க்கிடெக்ட்’ ஆகணும்/ ஆக்கணும் என்றே முடிவாகிவிட்ட்தால் .. NATA விலும் நல்ல தேர்ச்சி ( ஒரு மாதக் கோச்சிங் க்ளாஸ் இதற்கு உண்டாம் ..ஆனால் இவள் வீட்டிலிருந்தே 150 ரூ புத்தகம் மட்டும் தான் வாங்கிப் பார்த்திருந்தாள் )... மாநிலக் கோட்டாவில் 7வது இடம் வாங்கிவிட்டாள் .



வீட்டில் எனக்கு சிக்கல்கள் ஆரம்பம்

”இந்தாங்க .. நல்லா சப்பிட்டுக்கோங்க இன்னிக்க்கு ..இந்தமாதிரி இனிமே வைக்க மாட்டேன் ..இது அவளுக்கு ரொம்ப்ப் பிடிக்கும் ..லீவுல அவ வ்வார அன்னிக்குத்தான் இதெல்லம் கெடைக்கும்”

”இந்தாங்க ..செர்ரி பழம் .. நல்லா சாப்பிட்டுக்கோங்க இன்னிக்கு....”

”இந்தாங்க எலுமிச்சை சர்ப்பத் நல்லா....”

”இந்தாங்க பாயாசம் .....”

”இந்தா...”

”இ..”

ஆகா .. நம்மள கொல்றாய்ங்களே

கோவைக் கல்லூரியின் சேர்மன், முதல்வர் எல்லாரிடமும் பேசி எல்லா ஏற்பாடுகளும் முடித்து வைத்தாகிவிட்ட்து ..

சென்னையில் கவுன்சிலிங்கிற்கு 3 நாட்களுக்கு முன்பு

”அப்பா நான் மதுரைல படிக்கிறேனே ... ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடலாம்பா ... ப்ளீஸ்ப்பா”

”என்ன இப்போப்போயி இப்படிச் சொல்ற ,, மதுரைன்னா ஹாஸ்ட்டல்லதான் தங்கணும்..பரவாயில்லையா ?”

”பரவாயில்லப்பா .. நெனச்சா நீ வந்து கூட்டிப்போயிருவேல்ல”

”பார்ப்போம்டே”

பாவமாக இருந்தது ..

என்ன செய்ய .. கோவையில் என்ன பதில் சொல்ல ..குழப்பத்திலேயே இரவு கழிந்த்து

மறுநாள் காலை.. சென்னைக்குக் கிளம்பியாகி விட்ட்து.. வழியில் மதுரைக் கல்லூரிக்குச் சென்று பார்த்துவிட்டு ( எல்லாருக்கும் பிடித்துப்போய் விட்ட்து.. அதுதானே அவுங்க திட்டமும் கூட : நன்றி மதுரை நட்புகள் பாலாஜி பாஸ்கரன், சுப்புரமணி, உதயன் ) சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்று மறுநாள் நிகழ்வுக்காக ஒரு ஒத்திகைப் பார்த்துவிட்டு

சென்னை நண்பர்களைப் பார்த்துவிட்டு (’அவளை சென்னைலயே சேருங்க .. நாங்க எங்க குழந்தைப் போலப் பாத்துக் கொள்கிறோம்’ / நன்றி – ஆசாத் ஜீ , விழியன், உதயன், மோர்சுப்ரா) இரவு சிறிது குழப்பத்துடனேயே உறங்கச் சென்றோம்



அண்ணா பல்கலைக் கழகம் :

சில பல குழப்பங்களுக்கிடையே ... ஆரம்பக் கட்டங்களை எல்லாம் தாண்டி இடம் தேர்வு செய்யும் பகுதி ... கால் லெட்டரைக் கொடுத்துவிட்டு

கம்ப்யூட்டர் முன் நான் , அவள் ...

”எந்த காலேஜ் வேணும் உங்களுக்கு?”

”கோவை அல்லது மதுரைல கிடைக்குமா பாருங்களேன்”

கொஞ்சம் அமைதி

திடீரென்று பக்கத்து மேசையில் ஒரு பெண் ‘ய்ய்ய்ய்ய்ய்யெஸ்ஸ்ஸ்’ என்று வேகமாக அலற, அவளது அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் குதிக்க ..

(அவங்க கேட்ட காலேஜ் கிடைத்து விட்டதாம் )

”அமைதி அமைதி” எனக் கூறிக்கொண்டே வந்தார் ஒரு அம்மையார் ..

”என்ன இது ..சுற்றிலும் எத்தனை பேர் பதட்டமா உக்கார்ந்திருக்காங்க பாருங்க .. இப்படி சத்தப் போட்டால் ஏதாவது தப்பா எண்ட்ரி போட்டுட்டா என்னாவது ..”

”உக்காருங்க மொதல்ல” என்று கொஞ்சம் மிரட்டலாகச் சொல்லிவிட்டு .. எங்கள் பக்கம் திரும்பினார் .. ”இவங்களுக்கு என்னவாம்” .. எனக் கேட்டுக் கொண்டே உமாவின் பேப்பர்களை கையிலெடுத்த்தார் ... திரையைப் பார்த்தார் .. என்னைப் பார்த்தார் ...

”அப்பாவா”

”ஆமாம் அம்மா”

”என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க”

”எஞ்சினியர்”

”இப்போ இங்கே என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன்”

நான் திரு திருவென்று முழிக்க

”அவள் ரேங்க் 7 .. தமிழ் நாட்டின் டாப் 40 ஸ்ட்டூடண்ட்ஸ் படிக்கப்போற SAP லயே அவளுக்கு இடம் கிடைக்கும் .. இந்த வாய்ப்பை விட்டுவிட்டு வேற எங்கேயோ தேடிக்கிட்டு இருக்கீங்க”

”அது வந்து ..பக்கத்துல இருந்து ..

”சார் உங்க வசதிக்காக பசங்க வாய்ப்பைக் கெடுத்திடாதீங்க ,, அவ்ளொதான்”

போய்விட்டார் .. ( அவர்தான் SAPன் டீன் SAP = ஸ்ஹூல் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் / அண்ணா யுனிவெர்சிட்டி ) ...

நான் பாப்பாவைப் பார்க்க , அவள் என்னைப்பார்க்க , ஆபரேட்டர் கணினியை பார்த்து ஓகே சொல்லி ஆர்டரை எடுத்துக் கையில் கொடுத்து ”””கண்கிராட்ஸ்” என்றார் .

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடம் , எத்ர்ர்பார்ப்புகளே இல்லாமல் வந்த எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்துவிட்ட்து ..

”வெளியே காத்திருங்க சார் .. அவங்க மட்டும் இருக்கட்டும் .. ஆர்டரோடு வருவாங்க”

நான் வெளியே போய் நிற்க ..வீட்டம்மா ஆவலாய் ஓடிவந்தார்

”எங்கே?”

”சென்னை!”

”சென்னையா!!!!”

ஒவ்வொரு குழந்தையாய் கையில் ஆணையுடன் துள்ளிக் குதித்துவர ..இவள் மெதுவாக நடந்து வந்தாள் ..முகம் கவலையால் சுருங்கிப்போய் இருந்த்து

”அடுத்தவாரமே ஜூலை 19ல் காலேஜ் தொடங்குதாம்”

ஒருவாரம்..

மிக்க் கடினமான காலமாகிப் போனது எனக்கு

வீட்டில் ஒவ்வோருவரையும் சமாளித்து சமாதானப் படுத்தி , அழுதவர்களை மிரட்டி ஒருவழியாக ஒரு நிலைக்குக் கொண்டுவந்து ... ஒரு லாரி சாமான்களோடு 18ல் சென்னை வந்து சேர்ந்தோம்

சில நிர்வாக்க் குறைபாடுகள் ... அங்கே இங்கே என்று அலைச்சல்கள் ..மனதில் சஞ்சலம் உருவாக்க .. ஒருவழியாய் விடுதி அறைஎண்

4 மணிக்குத்தான் கொடுத்தார்கள் .. அங்கும் சில குறைகள் ..எல்லாவற்றையும் சரிசெய்து கிளம்ப இரவு மணி 9 ஆகி இருந்த்து

”பாப்பா ..கெளம்பட்டுமா ...”

காலைல பெற்றோர்கள் சந்திப்பு 9 மணிக்கு .. அதுக்கு வந்திட்டு ..சாயங்காலம் வரைக்கும் இங்கே இருந்திட்டுத்தான் கிளம்ப்புவோம் ..

அவள் அமைதியாய் குனிந்து நின்றாள்

”நானும் உங்ககூட இன்னிக்கு வாரேனே”

”ஏண்டா”

’எனக்கு இங்கப் பிடிக்கல அப்பா”

எனக்குப் பகீரென்றது .. முதன்முதலாய் எனக்குத் தொண்டை அடைத்தது

”புரிஞ்சுக்கோடா ... காலைல நீ 8.30க்கு வகுப்புல இருக்கணும் .. நைட்டு புது ரூம் ப்ரண்ட்ஸ் கூட அறிமுகமாகி சந்தோசமா இருக்கணும் ..என்ன..சரியா”

”நான் வாரேன்பா ..ப்ளீஸ் ...”

அவள் இதுவரைக்கும் என்னிடம் வேண்டுகோளாய் எதுவும் கேட்டதில்லை ..

என்கண்கள் கலங்கியது போலத் தெரிந்த்து

’அழுதிருவேனோ’

சாந்திக்கு ஏதோ புரிந்திருக்கும் போல ( இப்போது சாந்தி மிகத் தெளிவாய் இருந்தாள் ) ..அவளை மெல்ல அழைத்துக்கொண்டு தூரம் சென்று ஏதோ சொல்லியபடி இருந்தாள் ... பாப்பா திடீரென ஓடிவந்து எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ( இது இரவு படுக்கப் போகும் முன்னால் தினமும் கிடைக்கும் ) திரும்பிப் பார்க்காமல் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள் .. மழை தொடங்கி இருந்தது

மெல்ல வண்டியை எடுத்து எங்கோ சாப்பிட்டு, எங்கோ அறை எடுத்து படுக்கப் போகும்போது மணி 11 .. அலைச்சல் காரணமாக சாந்தி உடன் தூங்கிப்போக .... எனக்குள் மட்டும் ஏதோ இனம் புரியாத குடைச்சல் ..

இரவு மணி 2 .. ஒரு எஸ் எம் எஸ் ...

பதட்டத்தோடு எடுக்க ..அவள் தான்

‘ஐ மிஸ் யூ டாட் ‘

அதுவரையில் இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் ஒளிந்து கிடந்த எனக்கேத் தெரியாத அவன் ‘ஓ’ வென்று வாய் விட்டுக் கதற ஆரம்பித்தான் ..

எப்பொழுது தூங்கினேனோ தெரியவில்லை ..சாந்தி 6 மணிக்கு எழுப்பினாள்

“கிளம்புங்க .. 8க்கு முன்னால்யே அங்கே போனாத்தானே நல்லா இருக்கும்

அட..என்ன கண்ணெல்லாம் வீங்குனாப்ல இருக்கு”

”சரியா தூக்கமில்ல”

அவள் நம்பினதுபோல் தெரியவில்லை

பல்கலைக் கழகம் ..காலை 8 மணி ..விடுதியில் இருந்து அவள் வரக் காத்திருந்தோம் ... ஒரு கூட்டமாய் வந்தார்கள் .. பின்னால் கடைசியாக அவள் .. பகிரென்றது ..LKGல் இருந்து +2 வரையில் ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை ( 14 ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே 2 மணி நேரம் முன்னதாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அழைத்து வந்திருக்கிறோம்) தாமதமாகப் போனதில்லை .. எதிலும் முதலாய் இருக்க வேண்டுமென்று நினைப்பவள் ..

எங்களைப் பார்த்த்தும் கூட்ட்த்தை பிளந்து ஓடி வந்தாள் ..அவளுக்கும் கண்கள் வீங்கி இருந்தது .. சாந்தி அர்த்தத்தோடு என்னைப் பார்க்க ,என்னிடம் ஏதோ எதிர்பாத்து என்கண்ணுக்குள் பாப்பாவும் பார்க்க , நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்க்க எங்கோ பார்க்க ஆரம்பித்தேன் ..

சந்திப்பு முடிந்து எல்லாரும் கிளம்ப எத்தனிக்க ., ஆங்காங்கே குடும்பம் குடும்பமாய் கூடி நின்று பேசி சிரித்து விடைபெற்றுக் கலையத் தொடங்க ,

”இப்போ போயிருவீங்களாப்பா” என்றாள் மெதுவாய்...
எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்த்து .. கண்ணீர் பெருக்கெடுக்க .. வண்டியை பார்த்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன்

”என்னாங்க எங்கே போறீங்க ?”

திரும்பாமலேயே சொன்னேன்

”அங்கேயே இருங்க ..இதோ முகம் கழுவீட்டு வாரேன்”


அந்த அரைமணிக்குள் 6 முறை முகம் கழுவிய என்னைபார்த்து முதலில் பயந்த குழந்தைகள் எல்லாம் இப்போது சிரிக்கதொடங்கி இருந்தன ..

’’

Saturday, May 18, 2013

க(தை)விதை :நிறைவேறாத ஒன்று ......!


மீடகப் படுகிறது
ஊதிய உடல் ஒன்று.......

தண்ணீரில்லாத அந்தக்
கிணற்றைச் சுற்றிலும்
கண்ணீர் தேங்கிய கண்கள் ...

மிகக் கனத்த
கவலை தோய்ந்த கணம் அது....

எல்லாம் முடிந்து
எங்கோ.....
’அது’ எரியூட்டி
கரைக்கப் பட்டபின்பும்

இங்கே......
வெறுமையால் நிறைந்த
அந்தப் பாழும் கிணற்றின்
கைப்பிடி சுவரையும் தாண்டி
’கவனிப்பாரில்லாக் கவலையுடன்’
பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........

‘அதோடு’
சேர்ந்து விழுந்த
கரைசேராத சோகங்களும்..
விடைகிடைக்காத கேள்விகளும்...

கொஞ்சம் கவனியுங்கள்....
உங்களின் காலடியிலும்
கசிந்து கொண்டிருக்கலாம்
இதுபோல
ஏதாவது ’ஒன்று’ ......