Showing posts with label ஞாபகம் வருதே. Show all posts
Showing posts with label ஞாபகம் வருதே. Show all posts

Tuesday, April 6, 2010

........3........(மூவர்) ..!


யார் ? :

கிண்ணத்தில் கொடுத்த
பால் முழுவதையும்
மொத்தமாய் எதுவும்
மிச்சம் வைக்காமல்
குடித்தக் குழந்தையை
வாரி அணைக்க..
பொங்கும் மகிழ்ச்சியில்
பாசமாய் அன்போடு
அழைக்கிறாள் அம்மா.....

கிண்ணத்தில் கொடுத்த
பால் முழுவதையும்
மொத்தமாய்க் குடிக்காமல்
மிச்சம் பாதி வைத்ததால்
அடிக்கக் கூப்பிடும்
அம்மாவை எண்ணி..
விஞ்சும் பயத்தில்
நடுங்கியபடி அடியெடுத்து
நுழைகிறாள் குழந்தை.....

இருவரையும் கவனித்தபடி
உள்ளுக்குள் சிரித்தபடி
பரணின்மேல் படுத்திருக்கிறது
பதட்டமில்லாமல் பூனை. :)

.

Saturday, November 14, 2009

மாடிவீட்டு ஏழைகளின் குழந்தைகள்தின வேண்டுகோள்


"பல்லாங்குழி ஆடியதில்லை
பச்சக்குதிரை ஏறியதில்லை
பம்பரஆக்கரு குத்தியதில்லை
பாவைக்குத்து பார்த்ததில்லை

ஐஸ்பால் ஆடியதில்லை
பால்ஐஸ் சாப்பிட்டதில்லை
கயிறுபஸ்ஸு ஏறியதில்லை
கள்ளன்போலீஸ் தேடியதில்லை

தட்டாமாலை சுற்றியதில்லை
கொட்டும் மழையில் நனைந்ததுமில்லை
சர்ப்பத்து சாப்பிட்டதில்லை
பாண்டியாட்டம் ஆடியதில்லை

ஆவியம் தாண்டியதில்லை
சோவிதாயம் ஆடியதில்லை
மரக்குரங்கு ஏறியதில்லை
மணலில்வீடு கட்டியதில்லை

குட்டிக்கரணம் அடித்ததில்லை
கூட்டாஞ்சோறு பொங்கியதில்லை
கோலிக்குண்டு பார்த்ததில்லை
கல்கோணா சப்பியதில்லை

டயறு வண்டி ஓட்டியதில்லை
கண்ணாமூச்சி ஆடியதில்லை
கட்டவண்டியில போனதில்லை
காம்புப்பால் குடிச்சதில்லை

கோவில்கொடைக்குப் போனதில்லை
கொடிக்கறியும் சாப்பிட்டதில்லை
வேட்டைசாமிய பார்த்ததில்லை
விபூதி வாங்கி பூசியதில்லை

அடுக்குமாடிக் குடியிருப்பை
அதிசயமாய் அண்ணாந்து பார்க்கும்
வசதிஇல்லா கிராமத்துக் குழந்தைகளுக்கு
வாய்ப்பாய் அத்தனையும் கிடைக்கிறதாம்

ஆனால்......

அதிசயத்துக்குள் குடியிருக்கும்
அபூர்வப் பிறவிகள் எங்களுக்கும்
அதில் பாதியாவது கிடைக்கவேண்டும்

குழந்தைகள் தினமாம் இன்று !

ஆள்வோருக்கோர் அவசர வேண்டுகோள்...
அதிரடிச் சட்டம் ஏதாவதுபோட்டு
இன்றே நாங்கள் விளையாட
ஆவன செய்ய முடியுமா !

.

Tuesday, August 11, 2009

நல்ல திட்டம்தான்..., நடக்காமத்தான் போச்சு .... !


வீதியில உருண்டு பொரண்டு
வீட்டுக்குள்ள வந்த பொறவுதான்
வீட்டுப்பாடம் செய்ய மறந்தது
விசுக்குன்னு ஞாபகம் வந்தது

காலைல வாத்தியாரு
கண்டபடி சாத்துவாரே !
முட்டிப்போட்டு வாசலிலே
முழுநாளும் நிறுத்துவாரே !

கக்கத்துல உள்ளி வச்சா
காய்ச்சல் உடனே வருமுன்னு
எங்கூடவே உள்ள ஒருகிருமி
ஏடாகூடமா சொன்னத நம்பி

வெங்காயத்த நெறயா உரிச்சு
வெளியே தெரியாம மறைச்சு
கக்கத்துக்குள்ள ஒளிச்சு வச்சு
கனாக்கூடக் காணாம கண்முழிச்சு
காலைல வரைக்கும் காத்திருந்தேன்

ராப்பொழுது முடிய முழுசாய்
ரெண்டு நாளு ஆகிப்போச்சே
காலைல எனக்கு லேசாவே
காய்ச்சலும் வந்தது போலவே.....

சோகமா முகத்த வச்சிக்கிட்டு
சுத்தி வந்தேன் அம்மா பின்னால...
நடக்கவே முடியாதவனப்போல
நடந்து காட்டினேன் அப்பா முன்னால....

சமையல முடிச்சு எடுத்து வச்சு
சாப்பாட்ட அடைச்சு கூடைல திணிச்சு
வாசல்வரை வந்து டாட்டா காட்டி
வாய் நெறைய சிரிச்சு வண்டியில ஏத்தி
வழியணுப்பியும் வச்சிட்டாங்களே......!

ஆகா....!
என்ன ஆச்சு !!
எங்கோ தப்பு நடந்துருச்சு !!!

யாருமே கவனிக்கலியே ?
எந்திட்டமும் பலிக்கலியே ?
என் நடிப்பும் கெலிக்கலியே ?

அம்மா... ஒத்த வார்த்த கேக்கலியே ?
அப்பா... நிமிந்து கூடப் பாக்கலியே ?
அய்யோ... எஞ்சோலியும் முடிஞ்சிருச்சே !

வாசலில பெரம்போட
வாத்தியாரும் காத்திருப்பாரு
வானத்துல ஏறப்போகுது
இன்னைக்கு எம்மானம் பாரு

வெங்காயத்த வச்சு நல்லா - உள்ள
வெந்து போக வச்சுட்டானே !
தப்பா சொல்லிக் கொடுத்து - இப்போ
தவிக்க வச்சிட்டுப் போயிட்டானே !!

எங்க இருப்பான் அந்தக் கிருமி !
நொங்க தேடித்தான் பிடிக்கணும் - நல்லா
வாங்கினத திரும்பக் கொடுக்கணும் இனி !!

Tuesday, July 7, 2009

கடப்பாரை ஊசி ....!


ஆலமரத்தடி திண்ணைக்கு
ஆயாவோட மருத்துவரும்
அம்மைத் தடுப்பூசி போட
அமர்க்களமாய் வந்து இறங்கினார்

"திருக்கூசி டாக்டரு டோய் !
தெருவில நிக்கான் டோய் !!
தப்பிச்சு போயிருங்க டோய் !!!
தனியா மாட்டீராதீங்க டோய் !!!!"


சத்தம் கேட்ட மறுநொடியில
சந்து பொந்துல நொழஞ்சோமே !
வேட்டு கேட்ட கொக்கப்போல
எட்டு திக்குல பறந்தோமே !!

எப்படி எல்லாம் ஒடுனோமுன்னும்
எங்கே எங்கே ஒழிஞ்சோமுன்னும்
எதுக்குள்ள பதுங்குனோமுன்னும்
எங்களுக்கே கூடத் தெரியாதே !!

பரணு தட்டிக்கு மேலே......
பலக கட்டிலுக்குக் கீழே.....
குதிலு பானைக்கு உள்ளே.....
மதிலு படலுக்கு வெளியே.....ன்னும்

ஆலமரத்து மேலே ஒண்ணு....
அய்யனாருக்கு கீழே ஒண்ணு....
கொளத்துக் கரையில ஒண்ணு....
கெணத்து உறையில ஒண்ணு....ன்னும்

ஒண்ணொன்னா இழுத்துப் புடிச்சி
ஒட்டுமொத்தமா போட்டு முடிக்க
ஒருநாப் பொழுதும் அங்கே
ஒருவழியா முடிஞ்சே போச்சுதே !

பத்து வயசு வரைக்கும் ஊசிய
பக்கத்தில கூட பாக்காததால
பதட்டத்துல வந்த குளுரும்
பயத்தில வந்த காய்ச்சலும்

அஞ்சுநாளாகியும் பயபுள்ளைங்களுக்கு
கொஞ்சங்கூட அடங்கலியே அன்னிக்கு !
அந்தஊசிக்கு அப்பொறமா எனக்கு
எந்தஊசியும் போடலியே உண்மைக்கும் !!

ஊசியக் காமிச்சாதான இன்னிக்கு
கொழந்த கூட பொறக்குது !
ஊசியிலும் மருந்திலும் தான - இப்போ
ஒலகமே இங்க இயங்குது !!

Wednesday, October 15, 2008

மாடி வீட்டு ஏழைகள்


சுழற்றியடித்த
சூறாவளி மழை
சிறுசிறு இழையாய் இன்னும்
தூறிக்கொண்டே இருக்கிறது

தாத்தாவின் காவலிலிருந்து
தப்பிவந்து தண்ணீருக்குள்
குட்டிக் கரணம் அடிக்கும்
குட்டித் தம்பிகள்

சேறும் சகதியும் காலுக்கு
செறுப்பாய் மாற கூட்டு சேர்ந்து
கும்மாளம் போடும்
குட்டிப் பாப்பாக்கள்

குதித்து வரும் தண்ணீருக்கு
குறுக்கே மணலில் அணைகட்டி
பக்கத்து வீட்டுப் பாட்டிகளோடு
பகை இழுக்கும் அக்காமார்கள்

கணக்கு நோட்டுகளை எல்லாம்
கப்பலாய் மாற்றி தெருவில் ஓடவிட்டு
அப்பாவின் அடிக்கு மாட்டாமல்
தப்பி ஒடும் அண்ணன்மார்கள்

பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
பால்கனியிலிருந்து ஏக்கத்தோடு
ஆரோக்கியம் சுகாதாரம் என்ற
ஆகாத பெயர் சொல்லி
அனைத்தையும் இழந்த
அந்த மாடிவீட்டுக் குழந்தைகள்