Thursday, December 31, 2009

இந்த ஆண்டே உனக்குள் வெடிக்க வாழ்த்துகள்


பெருவெடிப்பு/திருப்புமுனை:

சிறுமீன்கள் ஒற்றைக்
காலைச் சுற்றிவர,
பெரும் கெண்டைக்காக
மறுகாலைத் தூக்கித்
தவமிருக்கும் கொக்காய்....

முயல்கள் முன்னே
துள்ளி விளையாட
புள்ளி மானுக்காகப்
பதுங்கியிருக்கும் புலியாய்....

வந்ததை எல்லாம் விழுங்கி
தனக்கான எழுத்துக்காகக்
தன்னையேத் துடைத்து
எதிர்பார்த்திருக்கும் கரும்பலகையாய்....

காத்திருக்கிறேன் நான் .......
எனது வாழ்வின்
பெருவெடிப்புக்காக (பிக் பாங்க்)
.......................................................

நிகழ்வும் ,தகவும் சந்திக்கும்
அந்தப் புள்ளியே நிர்ணயிக்கும்

நான்
புத்தனாய் ஆவதையும்
சித்தார்த்தனாய்த் தொடர்வதையும்
……………


இனிய உள்ளங்களே....
இந்த வெடிப்பு உங்களுக்குள்
இந்த ஆண்டே நிகழ
இனிய வாழ்த்துகள் ,,,

Sunday, December 27, 2009

மழைக்கு ஏங்கும் நிலம்போல....


வானம் பார்த்தே
வருடமெல்லாம் வாய்ப்பிளந்து
வறண்டு தகிக்கும் பொழுதில்
வராது வந்து சேர்ந்த
கோடைமழையின் சாரலில்
குளிர்ந்து குதூகலிக்கும் வேளையில்..

கலையத் துவங்கும் மேகம் கண்டு
கலங்கி மேலும் தகிக்கத்
துவங்கும் நிலமாய்………

விடுமுறை முடிந்து
விமானத்தில் ஏறி
சன்னல்வழி வெளியே
கைகாட்டும் பொழுது
தவித்துத் துடிக்கத்
துவங்கியது மனசு ........

.

Wednesday, December 23, 2009

மேனகையும் நானும் ...!


பழிக்குப் பழி :

சிங்கமாயிருந்தேன்
அசிங்கப்படுத்திவிட்டாள் என்னை !

அலட்சியம் தோய்ந்த பார்வை
ஆணவம் தடவிய செய்கை
விசம் புதைந்த வார்த்தைகள்
வீசி எறியும் பேச்சுகள்
--தாங்க முடியவில்லை

பழி வாங்கியே ஆகவேண்டும்!

அலுவலகத்திலிருந்து
அரைமணிக்கு ஒருமுறை
அலைபேசியில் அழைத்து
ஒருமணி நேரம் பேசுவேன்
--இன்று பேசவில்லை

ஆறு முழம்பூவும்
அரைக்கிலோ அல்வாவும்
அவளுக்கென வாங்குவேன்
--இன்று வாங்கவில்லை

ஆணியடித்தாற் போல்
ஆறுமணிக்கு அவளருகே
வீட்டில் இருப்பேன்
--இன்று இருக்கவில்லை

ஒன்பது மணி..
அழைப்புமணியை அடித்து
வாசலில் காத்திருக்கிறேன்
--அவள் வரவில்லை

நானே திறந்து
உள் நுழைகிறேன்
--விளக்குகள் எரியவில்லை

படுக்கையறைக் கதவை
வேகமாய்த் திறக்கிறேன்
உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்
--இன்னும் விழிக்கவில்லை

கோபம் தலைக்கேற
கதவினை அறைந்து சாத்துகிறேன்

பதறி எழுகிறாள்.....
பதட்டமாய் அடிப்பார்வையால்
எனைத் துளைக்கிறாள்.......

மெல்ல இருகைத் தூக்கி
மெதுவாய் எனக்கு முன்னால்
மேனகையாய் மாறி அவள்
சோம்பல் முறித்த அந்த
அழகிய நொடியில்
கலைந்தே போனது
இந்த விசுவாமித்திரனின் தவம்...

Monday, December 21, 2009

விதைத்ததே விளையும்..



மெல்லியப் பூக்களைப் பறித்து
சாலையில் வெயிலில் விரித்து
அதன்மேல் நடந்தாலும்
அவள்பாதம் நோகுமென்று
என்பாதத்தின் மேலேற்றித்
தொடர்ந்தேன் பயணம்.......

காலத்தின் ஓட்டத்தில்
பாதையும் , ஓரமும்
கல்லும் முள்ளுமாய் மாற
நான் பழக்கிவிட்ட அந்தப்
பயணமுறை மட்டும்
மாறாமல் தொடர்கிறது......

குருதி தோய்ந்த எனது
காலடித் தடங்களை பார்த்து
கேலிசெய்து கொண்டிருக்கின்றன

பாதையின் ஓரத்தில்
சருகாய்க் காய்ந்து கிடந்த
அந்தப்பூக்கள் .

.

Thursday, December 17, 2009

வழக்கம்போல வாலாட்டுகிறது...!


காலத்தின் கோரலீலையில்
சிக்கிய சிலையாய் அவள்....

அன்று ....
உனது கரம் பிடிப்பேன் அல்லது
காலனிடம் சிரம் கொடுப்பேன்
என்ற என்னவள் அவள்

இன்று...
வந்து நிற்கிறாள்
இன்னொருவனின் கரம்பிடிக்கும்
மண நாளுக்கான அழைப்பிதழோடு

பகுத்தறிவுக்குப் புரிகிறது நிலை
பேதைமனதுக்குத்தான் புரியவில்லை

இல்லை என்றானபின்பும்
அவளைப் பார்த்தவுடன்
துள்ளிக் குதித்து
வழக்கம் போலவே
வாலாட்டுகிறது மனது

.

Wednesday, December 16, 2009

ஒற்றைப் புத்தக நூலகம்..!


(1=1)

நாளெல்லாம் திட்டமிடுகிறேன்
மனதுக்குள் ஒத்திகைப் பார்க்கிறேன்

வாய்த்தப் பொழுதில்...
ஆயிரம் பக்கங்களை முழுதுமாய்
நிமிடத்தில் படித்து முடிக்கிறேன்

சமயத்தில்...
ஒருவார்த்தைக்கு அர்த்தம் புரியாமல்
ஓராயிரம்முறைப் புரட்டிப் பார்க்கிறேன்

எல்லாம் படித்தத் திருப்தியில்
ஒருநொடியில் மூழ்கிப் போகிறேன்

விழித்து எழுந்தபின் எனக்குள்
அனைத்துமே அணைந்துபோய் ,
படித்ததெல்லாம் மறந்துபோய்,
எல்லாமே புதியதாய்த் தோன்ற
மீண்டும் தயாராகிறேன்.....

அடுத்தத் திட்டத்துக்கும்
அதற்கான ஒத்திகைக்கும்....

அங்கே........
சளைக்காமல் ஆர்வமாய்
சலிக்காமல் காத்திருக்கிறது
எனக்காக நூலகம்...

ஒரேஒரு புத்தகம் கொண்ட
எனக்கான நூலகம் ......

Monday, December 14, 2009

மண்வாசம் போல...!


வெட்டவெளிப் பாலையில்
சுட்டெரிக்கும் வெயிலில்
பாதை தெரியாமல்
பலநாள் பயணித்து
வரும் வழியிலேயெ
வாழ்க்கையை முழுவதுமாய்
தொலைத்து நின்ற வேளையில்.....
மழையின் வருகையை அறிவிக்க
மண்வாசம் சுமந்துவரும்
உயிர்க் காற்றை உணர்ந்தேன்
’மௌனம் உடைத்த அவளது
மெல்லிய உதட்டுச் சுழிப்பில்’

.

Friday, December 11, 2009

முயன்றால்தான் முடியும் உன்னால்


எதிரே...

கரடு முருடாய்
மேடும் பள்ளமுமாய்
கல்லும் முள்ளுமாய்
தள்ளிவிடத் தயாராய்ப் பாதை

நாற்புறமும்
கூர்மிகு முட்களுடன்
குத்திக் கிழிக்கக் காத்திருக்கிறது
அடர்ந்த காத்தாடி முள்க்காடு

காலுக்குச் செருப்பிருந்தும்
மேலுக்குப் போர்வையிருந்தும்
தொடர இயலாமல்
மேலும் முயலாமல்
திகைத்து நிற்கிறேன்
நான்

அரவமற்ற அந்தப் பொழுதில்
என்னைத் தாண்டி தன்
பழையசட்டையைக் கழட்டிவிட்டு
பளபளக்கும் புதுத்தோலுடன்
தயங்காமல் நிதானமாய்
காடுகடக்க நுழைகிறது
அரவம் ஒன்று

.

Wednesday, December 9, 2009

நிர்வாணம்


கடந்த பின்
புறமுதுகில் ஊடுறுவி
ஆடை கடந்து
அங்கம் தடவி
வளைவுகளை
கற்பனையில் ரசிக்கும்
உனது பார்வையின் சூட்டில்
நான் உணர்கிறேன்

உனது நிர்வாணம் !

.

Monday, November 23, 2009

நான் ! மிகப்பெரியவன் நான் !!


சமூகத்தில் உயர்ந்த நிலையில் நான்

சான்றோர் நிறைந்த சபையில்
மேடையில் தலைமை தாங்கியிருக்கிறேன்
நிறைவு உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்

திடீரெனத் தடைபடுகிறது எனதுபேச்சு
தாமதமாக விடைபெறுகிறது எனதுமூச்சு

கீழேக் குழுமியிருக்கும் கூட்டத்தில்
தள்ளிக்கொண்டு என்னை நோக்கித்
தாவிவர முயல்கிறார் ஒருபெரியவர்

கலைந்த தலையும்
கசங்கிய உடையுமாய்,
மடித்துக்கட்டிய வேட்டியும்
மழிக்காத தாடியும் ,
மஞ்சள்ப்பை கக்கத்திலுமாய்....

எங்கோ பார்த்த முகம்? - ஆம்!
எங்கள் கிராமத்துக்காரர் அவர்
பால்ய வயதில் எங்கள்
பக்கத்து வீட்டுக்காரர் அவர்..

வரும் வேகம் பார்த்தால்
விவகாரமாகத்தான் படுகிறது

என்னவோ கேட்கப்போகிறார்
என்னிடம் என்னவோ கேட்கப்போகிறார்

பணமாகக் கேட்டால் பதுங்கிவிட வேண்டும்
உதவியாகக் கேட்டால் உதறிவிட வேண்டும்
கடனாகக் கேட்டாலும் கைகழுவி விடவேண்டும்

சிபாரிசு ஏதும்கேட்டு
சிக்கலில் மாட்டி விடுவாரா
கட்டிப்பிடித்து கூட்டத்தில்
கேவலப்படுத்தி விடுவாரோ

என்னவாக இருக்கும்
எனக்குள் ஏனிந்த இறுக்கம்

உரையைப் பாதியில் முடித்து
வேறு பாதையில் கிளம்புகிறேன்

கடவுளே !
இதோ இங்கேயும் வந்துவிட்டார்
வேறுவழி இல்லை
சந்தித்தேதான் ஆகவேண்டும்
சமாளித்துதான் ஆகவேண்டும்

”தம்பி !
நல்லா இருக்கீங்களா ?
வீட்டுல ஆத்தா , தாயீ
புள்ளக் குட்டியெல்லாம்
சொகமா இருக்குதா ?

பருவத்துல ஏஞ்சேக்காளிய
பாத்தது போலவே இருக்கீங்க !
உங்க அப்பாவை அச்சுல
வாத்தது போலவே இருக்கீங்க !!

இன்னும் பழசெல்லாம்
இந்தப் பாவிப்பயலோட

மொடங்கிப்போன நெஞ்சுக்குள்ள
முங்கிப் போயித்தான் கெடக்கு !

தம்பி .....
அதான் சொர்க்கம் ‘’


சொல்லி முடித்துவிட்டு
கண்களைத் துடைத்துக்கொண்டு
தனக்குள் ஏதோபேசிக்கொண்டே

வந்தவழியில் திரும்பி
இலக்கில்லாமல் நடக்கிறார் அவர்

ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு
மறைந்துபோய் விட்டார் அவர்
ஒருவார்த்தைப் பேசமுடியாமல்
உறைந்துபோய் நிற்கிறேன் நான்

அவர் தான் பெரியமனிதர் !

நான் ?????

.

Saturday, November 14, 2009

மாடிவீட்டு ஏழைகளின் குழந்தைகள்தின வேண்டுகோள்


"பல்லாங்குழி ஆடியதில்லை
பச்சக்குதிரை ஏறியதில்லை
பம்பரஆக்கரு குத்தியதில்லை
பாவைக்குத்து பார்த்ததில்லை

ஐஸ்பால் ஆடியதில்லை
பால்ஐஸ் சாப்பிட்டதில்லை
கயிறுபஸ்ஸு ஏறியதில்லை
கள்ளன்போலீஸ் தேடியதில்லை

தட்டாமாலை சுற்றியதில்லை
கொட்டும் மழையில் நனைந்ததுமில்லை
சர்ப்பத்து சாப்பிட்டதில்லை
பாண்டியாட்டம் ஆடியதில்லை

ஆவியம் தாண்டியதில்லை
சோவிதாயம் ஆடியதில்லை
மரக்குரங்கு ஏறியதில்லை
மணலில்வீடு கட்டியதில்லை

குட்டிக்கரணம் அடித்ததில்லை
கூட்டாஞ்சோறு பொங்கியதில்லை
கோலிக்குண்டு பார்த்ததில்லை
கல்கோணா சப்பியதில்லை

டயறு வண்டி ஓட்டியதில்லை
கண்ணாமூச்சி ஆடியதில்லை
கட்டவண்டியில போனதில்லை
காம்புப்பால் குடிச்சதில்லை

கோவில்கொடைக்குப் போனதில்லை
கொடிக்கறியும் சாப்பிட்டதில்லை
வேட்டைசாமிய பார்த்ததில்லை
விபூதி வாங்கி பூசியதில்லை

அடுக்குமாடிக் குடியிருப்பை
அதிசயமாய் அண்ணாந்து பார்க்கும்
வசதிஇல்லா கிராமத்துக் குழந்தைகளுக்கு
வாய்ப்பாய் அத்தனையும் கிடைக்கிறதாம்

ஆனால்......

அதிசயத்துக்குள் குடியிருக்கும்
அபூர்வப் பிறவிகள் எங்களுக்கும்
அதில் பாதியாவது கிடைக்கவேண்டும்

குழந்தைகள் தினமாம் இன்று !

ஆள்வோருக்கோர் அவசர வேண்டுகோள்...
அதிரடிச் சட்டம் ஏதாவதுபோட்டு
இன்றே நாங்கள் விளையாட
ஆவன செய்ய முடியுமா !

.

Monday, November 9, 2009

எதனால் இந்த நடுக்கம் ....?


இயலாமை !
வயோதிகத்தால் எனது உடல் நடுங்குகிறது

இருள் இன்னும் விலகாத
மார்கழி மாத அதிகாலை..
ஆற்றில் மூழ்கி தலைதுவட்டாது
அப்படியே நடந்து வருகிறேன்

தாங்கமுடியாமல்
குளிரால் எனது உடல் நடுங்குகிறது

தாங்கித்தான் ஆகவேண்டும்

காஷ்மீரக மலையில் எனது
கால்கள் நடந்தே ஆகவேண்டும்

வாழ் நாள்க் கனவு அதை
வீழுமுன் நடத்திக் காட்டவேண்டும்

தென்கரையிலிருந்து வடகோடிக்குத்
தவழ்ந்தேயானாலும் போய்ச் சேருவேன்

மலைமீது காலடி வைத்தபின்புதான்
மேலுலகம் போய்ச் சேருவேன்

பயிற்சியும் அதற்கான முயற்சியும்
எடுத்தேதான் ஆகவேண்டும்

முடியுமா ?
கவலையால் எனது உடல் நடுங்குகிறது


‘ எண்பது தாண்டியும்
.ஏன் இப்படி அலையுது ? ’
‘ கட்டைல போற கெழவிக்கு
.காஷ்மீரு போறஆசையப் பாரு’
’அதுக்குத்தான்யா ஆண்டவன்
.அளந்தே வச்சிருக்கான்’


கேலியும்,கிண்டலும் !
சுடுசொல்கேட்டு எனது உடல் நடுங்குகிறது

கடைசிவரையில்ப் போராடி
பார்க்கவேண்டியவரை பார்த்து
விழவேண்டிய காலில் விழுந்து
ஒருவழியாய் சாதித்துவிட்டேன்

இதோ ...........
மலையேறிக் கொண்டிருக்கிறேன்
எங்கு நோக்கினும் வெண்பனி
என்னைச் சுற்றிலும் வீரர்கள்

பாதுகாப்பாய் இருந்தாலும்
கடும்பனியால் எனது உடல் நடுங்குகிறது

காலடி எடுத்து வைக்கிறேன்
கார்க்கிலின் கடும் பாறையில்

நின்று நிதானித்து
இழுத்து உள்வாங்குகிறேன் மூச்சை..

இதில் எப்படியும் கலந்திருக்கும்
இங்கே உலாவிக் கொண்டிருக்கும்
எனது மகனின் இறுதிமூச்சும்........

இப்பொழுதும் எனது உடல் நடுங்குகிறது

ஆனால் இது எதனால்...????
எனக்குத் தெரியவில்லை .........


.

Tuesday, October 27, 2009

முடிவில் ஆரம்பமாகும் பயணங்கள் ........


ஒட்டு மொத்த குடும்பமும்
ஒரு தோளின் மேல்.
தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
தலைமகன் நான்.

சன்னல் கதவுக்கு ஒன்று
வாசல் காலுக்கு இரண்டென
வீட்டுக்கே மூச்சுத் திணறும்
கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்

மணம் முடித்த அவளுடன்
மனம் விடுத்துப் பேசவே...
வந்தவளுடன் தனிமையில்
தொந்தரவின்றிப் பேசவே...
வாரம் ஒன்று முழுதாய் ஆனது

மண வாழ்வைத் தெடங்கவே
மாதம் மூன்றுக்கும் மேலானது

இயந்திர உலகில் கரையேற
இயந்திரம் போல் இயக்கம்..........

தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
திருமணம் , புகுந்தவீடு பயணம்........

தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........

பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
பராமரிப்பு , கடைசிப் பயணம்...........

குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
திருமணம் ,வெளிநாடுப் பயணம்.......


பயணம்,பயணம்,பயணம்............
பயணத்தைத் தொடர்ந்து
பயணிக்க வைக்க எனக்கும்
சயனம் இல்லாத பயணம்.........


எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
வந்துசேர்ந்தது பணி ஓய்வும்

இதோ.....

சுற்றியிருந்த உறவெல்லாம்
விட்டுச் சென்ற பிறகு நான்...
தலையணை தேடும் மனதுடன் !
தனிமையில் தொடரும் அவளுடன் !!

கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..

அடடா,,,, !!!!!!!!!!

உண்மையது எனக்கு அப்போதுதான்
உறைக்கத் தொடங்கியது .....!

உதறிச் சென்றொருக்கெல்லாம்
விரட்டித் தேடி செய்தேனே !
எனை நம்பி வந்தவளை
நினைக்க மறந்தே போனேனே !!

என்னவளின் எண்ணங்களை
எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
கடமையின் நெரிசலில் அவளின்
ஆசைகள் எதையும் அறியவியில்லையே

குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
குனிந்த படியே இருக்கிறேன்....
நேருக்கு நேராக அவளை
நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....

என்முகத்தை தனக்குள் அணைத்து
தன்மூச்சை எனக்குள் அழுத்தி

இச்சென முத்தம் ஒன்றை
உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
மெதுவாய் கையிலிருந்த உணவை
ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,

மெல்லத் திரும்பி நடக்கிறாள்
மெளனமாய் சிரித்து விட்டு !
’ நானிருக்கிறேன் ‘ என்ற சேதியை
நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!

ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !

என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
எங்கோ முடியப் போகும் தருணத்தில்
இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
எங்களின் மன வாழ்க்கை புதிதாய் !!

Wednesday, October 7, 2009

விசமா ? வேசமா ?? விசேசமா ???.....


மெளனம்...........

இன்று அவளின் மெளனம் - அதனால்
ஆனதென் மனம் ஊனம்

ஒலி இல்லாமல் -
பேசும் மொழி இல்லாமல்

அவளின் மெளனம் -
அது ஆயிரம் வழியில் பேசும்

ஆம்........

அணைப்பில் சம்மதம் சொல்லும்
அரவணைப்பில் என்மனம் வெல்லும்

மகிழ்வில் மனம்கொள்ளை கொள்ளும்
இகழ்வில் தினம்என்னைக் கொல்லும்

கோபத்தில் கொடுவாளை எடுக்கும்
தாபத்தில் விடியலைத் தடுக்கும்

பழக்கத்தில் சாமரம் வீசும்
குழப்பத்தில் சமரசம் பேசும்

கொஞ்சுகையில் வீணையே கெஞ்சும்
மிஞ்சுகையில் நானே தஞ்சம்

மஞ்சத்தில் எனைத் தகிக்கும்
தஞ்சத்தில் எனையேத் துதிக்கும்

ஒட்டிவந்தால் வாடையாய் வீசும்
எட்டிநின்றால் சாடையில் பேசும்

ஆனாலும்......

அவளின் மெளனம்....
இன்றவளின் மெளனம்........

அது..........

வீழ்த்தும் விசமா ? வெறும் வேசமா ??
உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

அர்த்தமென்ன இதுவரை! தெரியவில்லை - அதன்
ஆழமும் எதுவரை? புரியவில்லை

.

Monday, October 5, 2009

பார், பார்,.....காத்திருக்கும் பார் ...!


பார் ! பார் !!

அதிகாரமையத்தின் ஆளுமையைப் பார்
அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தைப் பார்

அதிகாரிகள் அடக்குவதைப் பார்
வியாபாரிகள் விழுங்குவதைப் பார்

பாதிக்கப்பட்டோரின் சூழ்நிலை பார்
மிதிக்கப்பட்டோரின் கீழ்நிலை பார்

ஆசீர்வதிக்கப்பட்டோரின் வளமை பார்
அவதிப்படுவோரின் நிலமை பார்

வளமை ஓரிடமே சேரும் காரணம் பார்
வறுமையை ஓட விரட்டும் நிவாரணம் பார்

பணம் கைகொட்டி வரும் வலம் பார்
குணம் கைகட்டி நிற்கும் அவலம் பார்

அணுதினமும் உதிரும் வியர்வை பார்
அவனுதிரமாவது உயரும் தீர்வைப் பார்

களம் இருந்தும் திணறுவோர் பார்
தளம் புகுந்தும் தடுமாறுவோர் பார்

உனக்காகக் காத்திருக்கிறது பார் - ஆம்
உனக்காகவே காத்திருக்கிறது இந்தப் பார்

உன்வரவை எதிர்பார்த்திருக்கிறது பார் - ஆம்
உன்வரவுக்காகவே பார்த்திருக்கிறது இந்தப் பார்

வா !

எழுந்து வா !
வீறுகொண்டு எழுந்து வா !
விதி சமைக்க விரைவாய் எழுந்து வா !
வீர நடைபோட்டு விரைவாய் எழுந்து வா !

Friday, October 2, 2009

கலி வெண்பா(!) : காந்தி விடச்சொன்னார் ...!


அந்நிய நாட்டவரின் இந்தியச் சுற்றுலா
வந்தயிடத் தில்கணையாய் வந்துவிழும் வார்த்தைகள்

காந்தியின் வாழ்வினைக் கேள்விகளால் துளைக்கிறார்
காந்தியின் கொள்கையைக் கர்வமாய்க் கேட்கிறார்

எமக்கான வாய்ப்பினை ஏற்றே அமைகிறேன்
எம்மகான் ஆசை எடுத்துமுன் வைக்கிறேன்


”இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்

அந்நிய மோகமதை அப்போ(து) விடச்சொன்னார்


தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்

ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்


ஆள்க்கொள் ளுமாசை அடியோ(டு) விடச்சொன்னார்

ஆழ்மன வேற்றுமையை மானுடம்வி டச்சொன்னார்


வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்

சோம்பல் அதனை சுத்தமாய்வி டச்சொன்னார்


மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்

உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்”


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்
அடுத்தொரு கேள்வியைத் தானவர் தொடுத்தார்

”சொன்னார் மகாத்மாவும்; சொன்னதெல்லாம் உங்களுக்கு !
என்னவெல்லாம் விட்டீர்கள் ? என்னிடம் சொல்லுங்கள் !!”

ஒருவரியில் கேட்டு ஓய்ந்தார வர்தாம்
ஒருநொடியில் மூச்சு ஒடுங்கியதெ னக்கு

எதிர்பார்க்க வில்லைஎதிர்க் கேள்வியதை நானும்
எதையும் விடவில்லை! ஏனென்(று) தெரியவில்லை?

அவர்பிறந்த நாள்அன்று விட்டதொன்று மட்டும் ;
அவர்சொல்லா(து) இன்று விடுப்பு

Monday, September 28, 2009

வாழ்க்கைப் பாடம் வீட்டிலிருந்து.....


மூன்றுமாதக் குழந்தையில் பிரிந்து
மூன்றுவருட முடிவில் பார்க்கப்போகிறேன்
மூன்றுமாத விடுப்பு சொர்க்கமதை
மூச்சுவிடாமல் க(ழி)ளிக்கப்போகிறேன்


இன்றா நேற்றா....!

முன்னூறு நாட்களுக்கும் மேலாய்
தினம் தினம் நடக்கும் ஒத்திகையது
கனவிலும் தொடரும் நிகழ்ச்சியது - அதை
இன்று நிகழ்த்தப் போகிறேன்

அவளுக்குப் பிடித்தது கையில் கிடைத்தது
அத்தனையும் வாங்கியிருக்கிறேன்
அதிரடியாய்க் காட்டி - ஆனந்த
அதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறேன்


அயலகம் விடுத்து
வானகம் கடந்து
தாயக வாசம் உணர்ந்து
தாய்மண்ணை நுகர்ந்து

அல்லல்பட்டு வெளிவந்து
அவதிப்பட்டு சாலைகடந்து

தலை வாசல் நுழைந்து
தாயவள் பாதம் பணிந்து

தங்கையவள் விழி துடைத்து
என்னவள் உச்சி முகர்ந்து - பின்

தேவதையவளை சந்திக்கத்
திட்டமிட்டபடித் தயாராகிறேன்

மனைவி காட்டிய இடத்திலிருந்த
மகளின் ஆசைப் பையிலிருந்த
அத்தனையையும் அதிலிருந்து
அகற்றிப் பார்க்கிறேன்

குளிர்பான மூடியும் , உடைந்த வளவியும்
கிழிந்த படமும் , கசங்கிய தாளும்
குப்பையும் , கூளமும்
எச்சமும் , மிச்சமுமாய்.....

அத்தனையும் கூட்டி
மொத்தமாய் அள்ளித்
தலையைச் சுற்றி
தெருவில் வீசுகிறேன்

விலை உயர்ந்த பொருளனைத்தையும்
வகையாய் உள்ளே அடுக்கிவைத்துவிட்டு
வசதியாய் ஓளிந்து கொள்கிறேன் - அவளின்
வ்ரவுக்காகக் காத்திருக்கிறேன்

பள்ளியிலிருந்து பறந்து வந்தவள்
சிட்டாக சிறகடித்து வந்தவள்
”அப்பா வந்தாச்சா ?” என்றவள்
அந்தப் பையை ஓடி எடுக்கிறாள்

பையைத் திறக்கிறாள்
பதறிப்போய்த் துடிக்கிறாள்
இடி விழுந்த கொடிபோல
கருகிப்போய் வெடிக்கிறாள்

ஒன்றும் புரியவில்லை எனக்கு
நடந்தது பொதுவாக - பின்
மூளைக்குள் தெளிவாகிறது
உண்மையது மெதுவாக

பையில் இருந்ததெல்லாம்
பாவிமகள் சொத்தல்லவா !
தேடித்தேடி சேகரித்ததெல்லாம்
விலையில்லா வித்தல்லவா !

அவள் வயதுக்கத்தனையும்
அவளின் உயிருக்கும்மேலான
ஆசைப் புதையலல்லவா !

எப்படி மறந்தேன் இதை
உணராமல் போனேன் இதை !

பணமீட்டும் பாதையில் நான்
குணத்தைப் புதைத்து விட்டேனோ ?

பணமென்னும் போதையில் நான்
சின்னமனமதை சிதைத்து விட்டேனோ ?

வாழ்க்கைப் பாடமது
வாழ்வின் கடைசிவரை
வழியிலேயே கிடைக்கும் !

இன்று அது
எனக்குக் கிடைத்திருக்கிறது
வழியில் இல்லை; வீட்டிலேயே !
என் மகளின் மூலமாக !

.

Monday, September 21, 2009

உன்னை, என்னை, நம்மைப் போல ஒருவன் ..!


மகாபாரதம் :

துரியோதனன் கண்ணனிடம்
”துரோகம் இழைத்துவிட்டாய் கண்ணா
அவதாரமாய் இருந்தும்,
தர்மம் மீறி போர்க்களத்தில் நடந்து கொண்டாய் ,
வதந்தி பரப்பிக் குழப்பம் விழைவித்தாய் ,
கர்ணனை சூழ்ச்சியால் வீழ்த்தினாய் ,
அர்ச்சுனனுக்கு சாரதியாய் வந்து மாயம் செய்தாய் ,

அதர்மமாய் நடந்து கொண்டாய் கண்ணா
அதர்மம் விளைவித்துவிட்டாய் ! “

கண்ணின் பதில்
“அதர்மம் செய்பவர் , எதிரேயிருப்பவரிடம் தர்மம் எதிர்பார்ப்பது முறையில்லை !

அதர்மத்தை அதர்மத்தால் அழிக்கலாம் , தப்பில்லை !! ”

--இதுதான் படத்தின் செய்தி


அடர்ந்த கானகம் :
வேட்டைக்களம் .
உயர்ந்த பாறையின் மேல் அமர்ந்திருக்கிறது சிறுத்தை .
புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் பொறுமையாய் ,
குட்டிகளுக்கு வேட்டையாட தளம் அமைத்துக்கொடுத்து விட்டு
நடப்பவற்றை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது பெருமையாய் !

-- இதுதான் (உலக) நாயகன்


ஆங்காங்கே குறிப்பால் உணர்த்தும் சின்னச் சின்ன செய்திகள் :
(படத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் , நாம் தெரிந்துகொள்வதற்காக ....)

[படத்தில் வந்த வரிசையில்]

#)மனைவியால் தாக்கப்படும் (சிறுபான்மை) கணவன்மார்களுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றியக் கேள்விகுறி?
#) கன்ஸ்யூமர் சட்டங்களின் உண்மை நிலை பற்றிய சந்தேகம் ! ( குக்கர் )
#) இடதுகைப் பழக்கமிருந்தாலும் அடுத்தவருடன் புழங்கும்போது வலதுகையை உபயோகப்படுத்த வேண்டும் ( பேனாவைத் திருப்பிக் கொடுக்கும் போது )
#) அரசாங்க அலுவலகக் கட்டிடங்களின் நிலமை ( பாத்ரூமில் தண்ணி வராது )
#) லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் ! கவனம் !!
#) இடமாற்றம் போன்ற இடர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கும் இளைய சமுதாயம் ( காவல்துறையிலும் )வந்துகொண்டிருக்கிறது ! ( ஆரிப்)
#) விஞ்ஞான முன்னேற்றத்தை வரவேற்க வேண்டும் ( பேக்ஸ் வேண்டாம் , ஈ-மெய்ல் அனுப்பு)
#) பதட்டம் / அலட்சியம் குறைக்க வேண்டும் ( ஆரிப் - 20 மாடிகள் தேடி ஏறியவர், மொட்டை மாடிதானே எனக் கவனிக்காமல் விடுவது )
#)அரசியலின் உண்மை முகம் ( தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வராதே )
#) புகழுக்காக செயல்படும் ஊடகங்களின் நிலை ( எது நிகழ்ந்தாலும் நேரடி ஒளிபரப்பு )
#) அரசியல் கனவில் உள்ள நட்சத்திரங்கள் ( ’தளபதி’ ஸ்ரீமான் )
#) பெண்களுக்கான முக்கியத்துவம் ( சக்தி வாய்ந்த ஹோம் செக்ரட்டரி , விஜெவுக்கு காவலதிகாரி சிகரெட் பற்ற வைக்கும் இடம் )
#) பலியாடுகளாக்கப்படும் உயரதிகாரிகளின் மனநிலை ( மோகன் லால் )
#) ஐடி இளைஞர்களின் தெளிவான பிம்பம் ( தொலைபேசியில் ‘கேர்ள் ப்ரண்ட்’ ,/ உண்மையான இடத்தைக் கண்டுபிடித்த பிறகும் , [ நிகழ்வது நியாயத்திற்குத்தான் எனத் தெரிந்தபின் ] கண்டுபிடிக்கவில்லை என மறுப்பது )
#) மதத்தின் புனிதத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ளும் தீவிரவாதிகள்
#) உடனடி நீதியை எதிர்பார்த்து ,( தாமதமான நீதியைத் தவிர்க்க ) நமது சட்ட அமைப்பின் முன்னால் எழுப்பப் பட்டிருக்கும் கேள்வி !


--இது(வும்)தான் படம்


பி.கு : 20 மாடிகளுக்கும் மேலான கட்டிடத்தின் , கைப்பிடிச் சுவறில்லாத மொட்டைமாடியின் விளிம்பில் முன்னும் பின்னும் அசைந்துகொண்டே நாயகன் நிற்பது (பயமாக இருந்தாலும் (இருக்கும்)வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ) ஒரு மிகப்பெரிய சாதனை

உயரத்திலிருந்து உலகினை (பறவைப் பார்வையில்) உள்ளபடி காட்டிய தொழில் நுட்ப்பக் கலைஞர்கள் , படைப்பாளிகள் அனைவருக்கும் வெற்றிப் பயணம் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்


காட்சிக்குக் காட்சி ரசிங்க
திரையரங்குக்குப் போய் ருசிங்க

தவறு நடக்கும்போதே தட்டிக் கேளுங்க
தீவிரவாதத்தை வேரிலேயே வெட்டிக் கொளுத்துங்க

வாழ்க பாரதம் !


.

Friday, September 18, 2009

கண்தானம்


இறந்தபின் மண்ணில் புதைத்துவிடாமல்
இல்லாதவரின் கண்ணில் விதைத்துவிடு...
காத்திருக்க வேண்டாமே மறுபிறவி பார்க்க
காணலாமே உலகையுடனே இப்பிறவி முழுக்க...

கண்தானம் செய் உடனே...
கண் விழித்து சேவகம் செய்ய
காலமெல்லாம் காத்திருப்பார்
கடவுள் உன்னுடனே...


. (நன்றி : கரு/ கு.த.செய்தி)

Thursday, September 17, 2009

பொய் X பொய் = மெய் = நான்


கண்ணால் காண்பதும் பொய் !

ஆம்....! இது பொய் !

கல்லுடைக்கிறேனா? - நான்
கல்லுடைக்கிறேனா மலையில்?

நன்றாகப் பாரும்...

உடைத்துக்கொண்டிருக்கிறேன் மலையை !
சிதைத்துக்கொண்டிருக்கிறேன் அதன் நிலையை !!

காதால் கேட்ப்பதும் பொய் !!


ஆம்...! இதுவும் பொய் !!

மணலுக்குள் எனைப் புதைத்துவிட்டதாய்
மாட்சிமைப் பேசித் திரிவோரே ....

இதையும் கேளும் ....

கவிழும் மணலுக்காகவே - நான்
காத்திருக்கும் விதையாவேன்

மூழ்கியபின் ஊடுருவுவேன் - நான்
ஆழமாய் வேர்விடுவேன்

வீரியமாய் வள்ர்வேன் - நான்
விருட்சமாய் விரிவேன்

தீர விசாரிப்பதே மெய் !!!

ஆம் !....


தீயினில் விழுந்த அங்கமல்ல - நான்
தீயினில் பழுத்த தங்கம்

இருவிழியில் நெருப்பை உமிழ்வேன் - நான்
எரிகுழம்பின் இருப்பை இகழ்வேன்

ஒருநாள்......

தீயிலிருந்தே விளைந்து வருவேன் - நான்
தீயினிற்கே விருந்தும் தருவேன்

Monday, September 14, 2009

சுகமா?....சுகம் சுகமா??.....சுகமே சுகமா???


பெறுநர் : எம்புருசன் ,
.அயலகம்



எம் மாமாவுக்கு ..,

அயலகத்தில் நீ சுகமா ?
அருகிலேயே நானும் சுகமா ?

உனது தனிமை சுகமா ?
உடனென் இனிமை சுகமா ?

உனது மனம் சுகமா ?
உணர்ந்த எனது மணமும் சுகமா ?

உனது திமிர் சுகமா ?
அருகிலென் உயிரும் சுகமா ?

உனது தினவு சுகமா ?
உருகுமென் கனவும் சுகமா ?

உனது முன் கோபம் சுகமா ?
அதைத்தேடுமென் தாபம் சுகமா ?

உனது தெனாவட்டு சுகமா ?
மனதிலென் முகவெட்டும் சுகமா ?

உனதிரவுத் தூக்கம் சுகமா ?
விழித்திருக்குமென் ஏக்கம் சுகமா ??

நானிருக்கும் உனதுள்ளம் சுகமா ?
நீயில்லா என்மனப்பள்ளம் சுகமா ?

உயிருக்குள் ஊடுருவும் பார்வை சுகமா ?
உனைத்தேடி வாடுமென் வியர்வை சுகமா ?

எல்லாம் இங்கிருந்தும் நீயங்கு சுகமா ?
எதுவுமே இங்கில்லாத நானங்கு சுகமா ?

இப்படிக்கு
.உம் மனைவி
.வி. முத்துப் பேச்சி
.வடுகப் பட்டி


.

Sunday, September 13, 2009

இடிவந்து தாக்கியது போல...!


மந்திரிச்சுவிட்டக் கோழிபோல் நான்
எந்திரிச்சு உன்னிடம் வந்திருக்கிறேன்

கோவில்முரட்டுக் காளைபோல நான்
காதல் சொல்ல வந்துநிற்கிறேன்

’’மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


மற்றவன் பார்வைக்கு எப்போதும்நீ
அரைக்கிழவியாய் இருந்தாலும்

உற்றவன் எனக்கு இப்போதும்நீ
பேரழகியாகத்தான் தெரிகிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


ஏதோ ஒருகணத்தில் மட்டும்நீ
ராட்சசியாகத் தெரிந்தாலும்

எல்லாக் கோணத்திலும் எனக்குநீ
ரட்சகியாகவே இருக்கிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


அஞ்சுகமே உனை எந்தன்
மஞ்சத்தில் வைத்திருப்பேன் !

வஞ்சகமின்றி நானும் உந்தன்
நெஞ்சத்தில் வாழ்ந்திருப்பேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


குறிவைத்து என் இதயமதை
பறித்து விட்டாயே திருடி !

பறிகொடுத்த வெற்று இடமதை
இறகால்தடவி விடுவாயா வருடி !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


சரியென்று வந்தபின்னே நீ
சொன்னதெல்லாம் ஒத்துப்போவேன் !

சரியாக வில்லையெனில் நான்
சொல்லாமலேயே செத்துப்போவேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !! ‘’



நேருக்கு நேர் பார்க்கிறேன்.....
நெஞ்சை நிமிர்த்தி கேட்கிறேன்......

”காதலிக்கிறேன் உன்னை !” என்கிறேன்

கைநீட்டினாலும் எட்டாத தூரத்தில்
கைகட்டித் தயாராய் (!) நிற்கிறேன்

”ஆமாம் நானும் !!” என்றாள்

உலகமே இருண்டது முன்னே !
உள்ளபடியே மூர்ச்சையானேன் அண்ணே !!




.

Friday, September 11, 2009

தெரியுமா பாரதமே...? இன்று பாரதியின் நினைவுநாள் ........!!


மகாகவியின் நினைவு நாளில் ( 11-09-2009)
அவரின் நினைவில் :


ஏ தேசமே..
என் இனிய பாரத தேசமே...


உனக்காகவே போராடி
உனக்குள் புதைந்த ஒருவனை

அறிமுகப் படுத்துகிறேன் உனக்கு !
அத்தனையும் வாங்கிக்கொள் உனக்குள் !!

அவன் ........

கடவுளிடம் வாதாடும்
திண்மை கொண்டவன்...

வீணையின் புனிதமாய்
தன்னை அறிந்தவன்....

காலம்கடந்து சிந்தித்து
காணாமல் போனவன்....

கனவுகளில் வாழ்ந்து
காற்றில் கரைந்தவன்.....

ஏட்டு சுரைக்காயின்
உண்மை உணர்ந்தவன்.....

எதிர்பார்த்து ஏங்கியே
ஏதுமின்றி ஏமாந்தவன்.....

எதற்கும் பணியாமல்
எல்லாம் இழந்தவன்....

ஊருக்கு உழைத்து
தெருவில் நின்றவன்....

பதுமைப்பெண் வேரறுத்து
புதுமைப்பெண் வரவேற்றவன்....

பாரதி ! - ஆம்
பாரதி என்ற பரதேசி அவன் ......!


நெஞ்சிலேதும் இடமுண்டா? - அவனைப்பற்றிய
நினைவுகள் ஏதும் மிச்சமுண்டா??
....................................................
...................................................

ஏ தேசமே.......!
என் இனிய பாரத தேசமே.......!


தேசத்தின் கனவுகள் மெய்ப்பட
தேடித்தேடி வேண்டியவனின்
கனவுகளைப் பொய்யாக்கிய
கடவுளின் தேசமே !

இனியொரு விதிசெய்ய
இறந்து விரும்பியவனின் ஆசைகளை
இன்றுவரை நிறைவேற்றாத
இனிய தேசமே !

காணிநிலம் கேட்டு
பராசக்தியிடம் வேண்டியவனை
பாராமுகம் காட்டியே
கோணியில் கட்டிய
புண்ணிய தேசமே !

இறுதிவரை போராடியவனின்
இறுதி யாத்திரைக்கு
இருபதுபேர்கூட அனுப்பாத
இந்திய தேசமே !

வா.......................
இதுதான் சமயம் !
பரிகாரத்திற்கு இதுவே சமயம் !!

அவனது கனவு மெய்ப்பட
ஆவன செய்வோம் ! - அதற்குடனே
ஆவணம் செய்வோம் !!

இளையோர் வாழ்வு வளம்பெற
இனியொரு விதி செய்வோம் ! - வா
இனியாவது செய்வோம் !!...


.

Sunday, September 6, 2009

எல்லாம் தெரிந்தவர்கள் ...!


எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


கைமண்ணளவே படித்து
எல்லாமும் முடித்ததாய் நினைப்பார்கள்
அதற்குள் இலக்கு நிர்ணயித்து
பல இலக்கணம் வகுப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


ஊர்வலம் என்றாலே அது
தே(கா)ர் ஊர்வலம் மட்டுமே என்பார்கள்
பாதசாரிகள் ஊர்வலம் பற்றி எல்லாம்
அறிந்தும் அறியாதவர் போலிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


பிறக்கும்போதே நாவில் விழுந்தது
சரசுவதியின் கையொப்பம் என்பார்கள்
வரம் வாங்கி வந்ததாய்ப் பல
சுரம் பாடிக் காட்டுவார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


மழலையின் கிறுக்கலை ஒரு
விரலசைவில் மறுப்பார்கள்
தனது ஆரம்பமும் கிறுக்கலென்பதை
திட்டமிட்டே மறப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


எல்லாம் எமக்குத்தெரியும் என்ற
ஏகாந்தப் போர்வைக்குள் வசிப்பார்கள்
எல்லையைச் சுருக்கிக்கொண்டு
எதிரேயிருப்பதைப் பரிகசிப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


போர்வைக்குள் சூழ்ந்திருக்கும்
புதிரான இருட்டுக்குப் பழகியிருப்பார்கள்
பழங்கதைப் பேசி தனியேப்புழங்கி
பலகாத தூரம் விலகியிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைத்தாண்டி எதுவுமில்லை என
தனக்குள்ளேயே மூழ்கி இருந்து
தன்னையும் அறியாமல் இதுவரை
தன்னையேத் தாண்டாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைச் சுற்றி அமைத்த
தான் என்ற வேலியை
தன்னையும் தாண்டி வளரவிட்டு
தாண்டிவரத் தெரியாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!

Wednesday, September 2, 2009

உயிருக்கும் உண்டோ அளவுகோல்....... ?


சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே..

கோழிப் பண்ணையின் சுற்றுச் சுவரில்லா
கிணற்றில் தவறிவிழுந்த திருட்டுப் பூனை

பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !

காப்பாற்ற கயிறு கடப்பாரையோடு தீயணைப்புத்துறை
காவலுக்கு கடமை உணர்வோடு காவல்துறை

பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !

ஓர் உயிரை காப்பாற்ற ஒற்றுமையாய்
ஒட்டுமொத்த ஊரும் திரண்டு வந்துநிற்கிறது

பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !

காப்பாற்றிய திருட்டுப் பூனையை கையிலேந்தி
ஆர்ப்பாட்டமாய் ஊர்நுழையும் அதிரடிவீரர்கள்

பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !

உயிர்பற்றிய கவலையோடு அப்பாவியாய்
உயிர்பறிக்கவே வளர்க்கப்படும் உயிர்கள் !

பார்த்துக்கொண்டே....!

வாழும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் - ஆனாலும்
வழியேயில்லாத ஆயிரமாயிரம் அனாதை சீவன்கள் !!

சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே...........!

Friday, August 28, 2009

மனமும் சேர்ந்தே விலைபோகும் இங்கே ...!


அது...
மனிதர்கள் பேரம் பேசும்..
மாடுகள் இடம் பெயரும்...
பெரும் பணம் கைமாறும்....
பெரிய மாட்டுச் சந்தை

இங்கே....
பொத்தி பொத்தி வளர்த்து
பெயர் வைத்து அழைத்து
குழந்தைபோல பாதுகாத்து
குடும்பத்துள் இணைத்து

வளமாய் வாழ்ந்து பின்
வஞ்சிக்கப்பட்ட மனிதரின்
வயிற்றுப் பிழைப்புக்காக
விலை பேசப்படும் மாடுகள்

முடிந்தபின்...
பணம் நிறைந்து இருக்கும் பைகளில்
மனம் நிறைந்து இருக்கும் வெறுமையில்
கட்டியிருந்த கயிறு மட்டும் கைகளில் - வீதியில்
கேட்டபடியே இருக்கும் மணியோசை காதுகளில்

"நல்ல வெலைக்குப் போச்சுது
நெறையப் பணமும் கெடைச்சது"

வெளியே சந்தோசமாய் சிரிக்கும்
வெளிச்ச முகமூடி மாட்டியபடி

'நல்ல இடத்துல சேருமா - இல்ல
அடி மாடாப் போயிருமோ'

கதறி உள்ளே அழும்
சிதறிய ஊமை உள்ளங்கள் .

ஓரமாய் ஆணியில் தொங்கும்
காற்றில் மெதுவாய் அசையும்
கழுத்து மணியின் ஓசை
ஆலய மணியின் அலறலாய்
அடிமனதுள் இறங்கும்.

தொடரும் வாரங்களிலும்
தொடர்ந்து வலம் வரும்
தொடர் அவலம் இங்கே !

அதே சந்தைதான்..
அதே வறுமைதான் !
வேறு மனிதர்களோடு..
வேறு மாடுகளோடு !!

Wednesday, August 26, 2009

திரும்பி வருவேன் ........!


நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

உன்னைப்போல நானல்ல !

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

உன்னைப்போல நானல்ல !

காலமது கூடுமே - அதுவரை
காத்திருப்பேன் நானுமே !

ஒருநாள் நானாவேன்...

திமிரும் நாணாவேன்...!
நிமிரும் நாணலாவேன்...!!

திலகம்சூட்டி வருவேன் நானுமே - அன்று
முகம்பொத்தி உலகமே நாணுமே !

Tuesday, August 25, 2009

நட்சத்திர உணவக விருந்து முடிந்து.....!


கடைசியில் ஆரம்பமாகியிட்டது
காத்திருந்த விருந்து

*காளான் சூப்
*கோழி பிரியாணி
*ஃப்ரைடு ரைஸ்
*மட்டன் மஞ்சூரியன்
*சிலோன் பரோட்டா
*பட்டர் நான்
*கிரில் சிக்கன்
*பட்டர் சிக்கன்
*தந்தூரி சிக்கன்
*ப்ரான் ஃப்ரை
*க்ராப் மாசால்
*சீஸ் பீசா
*எக் சாண்ட்விச்
*மிக்ஸ்டு பர்கர்
*புல்ஸ் ஐ
*இன்னும் .........
பெயரிடப்படாத
பல வகைகள்....
*ஆம்ப்லெட்டுடன்
*ஐஸ்க்ரீம் ......................( ஆங்கிலம்/வழியில்லை/மன்னிக்கவும் :)

நட்சத்திர உணவகம் என்றாலே
நடைமுறையில் இதுதான் சிக்கல் !
எல்லாம் வந்து சேரும்வரை
எதையும் மனதாலும் தொடமுடியாது !!

நாசுக்காய் ஊர்மெச்ச
நாக்கால் மட்டும் சுவைத்து.....
மொத்தமாய் வந்தது
அத்தனையும் மிச்சம் வைத்து ....
......................?!?!?!?!?!?!?

” கரண்டியால சாப்பிட்ட பின்ன்னால
கையக்கழுவி வாயத் தொடைக்க

கடைசியில வரும் பாரு !
குளுகுளு எலுமிச்சை சாறு !!
கெடைச்சா அடிக்குமே ஜோரு !!!
குடிச்சா அதுதானே பேறு !!!!

பொறவாசலப் பாத்தே உக்காந்திருக்கோமே நாங்க !
பொசுக்குன்னு வாச்சுமேனு வந்திருவானே இங்க !!

எப்பத்தான் சாப்பிட்டு முடிப்பாங்க அங்க ?
எவ்வளவு நேரமாத்தான் காத்திருக்கோம் போங்க ?? “

Sunday, August 23, 2009

இந்த வருட சாகித்திய அகாடமி விருது எனக்கு...


””மொரையோட அவங்கக்குடிக்கிற
அரைப்போனி பால்காப்பிக்காக
அலைபாயிதே எம்மனசு

டூரு போகும் குடும்பத்தோட
ஊரு சுத்திவர தவிச்சுபோய்
தெருவிலயே நிக்குதே எம்மனசு

ஊஞ்சலில தொத்திக்கிட்டு
உந்தித்தள்ள ஆளில்லாம
சுத்தும்முத்தும் பாக்குதே எம்மனசு

நடுத்தெருவு நண்பனோட
நாள்கணக்காப் பேசனுமுன்னு
நெஞ்சுமுட்டி ஏங்குதே எம்மனசு

பக்கவாதம் வந்து நொந்து
படுக்கையிலக் கெடக்கேனே
போத்திவிட ஆள்தேடுதே எம்மனசு

காத்திருக்கும் சேதியது
காலனுக்குப் போய்ச்சேரும்
காலத்துக்குக் காத்திருக்கே எம்மனசு

வாழ்க்கை இன்னும் நீளாம
வதைபடாமப் போய்ச் சேரும்
பாதையையும் நாடுதே எம்மனசு “”


இதோ
அன்பு உள்ளங்களே !
அருமை நெஞ்சங்களே !
உங்கள் முன் நான் ...
உறுத்தும் உண்மையோடு நான் ...

உள்ளத்தின் உள்ளே உள்ளதை
உள்ளபடி சொல்ல முடியாமல்
வெளியேயும் சொல்ல இயலாமல்
வெளியே திண்ணையில் வீழ்ந்த
வாழ்ந்து கெட்ட மனிதர்களின்
வார்த்தைகளுடன் உங்கள் முன் ..

வாழவைத்த வாலிபம் இங்கே
வீழ்ந்துகிடக்கிறது வயோதிகத்தில்..
வாழவைத்தவரை எதிர் நோக்கி ?
வாழவைப்பாரா என நோக்கி !

கோரிக்கை ஒன்றாவது
சேருமிடம் சென்றுவிட்டால்.....

ஒரேஒரு மனதாவது
ஆறுதல் பெற்றுவிட்டால்......

அதுவே எனக்கு
இந்த வருடத்துக்கான
சாகித்ய அகாடமி விருது !

வாழ்நாள் முழுதும்
விருது எனக்கேக் கிடைக்க
வேண்டி நிற்கிறேன் உங்களை !

Tuesday, August 18, 2009

இது நிலாச்சோறு அல்ல.,


பள்ளிக்கூடம் முடிஞ்சு
வீடுவந்து சேந்து

கொஞ்சமா வெளயாடீட்டு
கையக்கால கழுவீட்டு

வீட்டுப்பாடம் முடிச்சு
வயித்த தடவுனா

பசிக்குதே.......

வீட்டுக்குள்ள வந்து
வரிசையா உக்காந்தோம்

நாந்தான் கடைக்குட்டி
நாலாவதா இருக்கேன்

”முத்தத்துக்குப் போவோமா
நிலாச் சோறு திம்போமா’’


அம்மாகிட்ட கேக்கேன்
அவளும் சரீன்னாளே !

அப்பத்தானே பாக்கேன்
அஞ்சாவதா அது நிலா

வட்டமா ஏம்பக்கத்துல
வாட்டமா அவ இருக்கா

ஏனோ ஏம்பக்கத்துல
ஏக்கமா அவ இருக்கா

வானத்துல இருந்து அவ
வேகவேகமா வந்திருக்கா

தரையில இருக்கா - கூரை
ஓட்டை வழியா வந்திருக்கா

”அம்மா ....

இப்போ வேண்டாம்
நிலாச் சோறு !

இன்னிக்கு நம்ம வீட்டுல
நிலாவுக்கே சோறு !!”

Monday, August 17, 2009

நான்.....! .மிகப் பெரியவன் நான்.........!!


அவன்.....
லட்சத்தில் குளிக்கிறான் !
கோடியில் முகம் துடைக்கிறான் !!

சக்தியின் அதிகார மய்யம் - அவனிடம்
சத்தியமே கைகட்டி சேவகம் செய்யும்
பெய்யென்றால் தான் மழையே பெய்யும்

அவன் வரும் வழியில்
அமைச்சர்கள் கைகட்டி இருப்பார்கள்
அதிகாரிகள் வாய்பொத்தி நிற்பார்கள்


அவனிருக்குமிடத்தில்
பணம் பந்தியில் விஞ்சி இருக்கிறது
குணம் கைகட்டி அஞ்சி நிற்கிறது

காசு கை காட்டும் இடத்தில் - மெய்யது
தூசு தட்ட காத்திருக்கிறது

விந்தையாய்த் தெரியாது இது
அகந்தை உள்ளிருக்கும் வரை

புதியதாய் அகம் அரியணை ஏறுகிறது
பழகிய முகம் அடுக்களை ஏகுகிறது


வீட்டில்...
எழுப்பிவிட.. தூக்கிவிட
பல்துலக்க.. பாதம்துடைக்க
துணி மடிக்க.. துவட்டிவிட
ஊட்டிவிட.. வாய்துடைக்க
செருப்பு மாட்ட.. ஆடை பூட்ட
வாசல் திறக்க.. வழி அணுப்ப

அப்பப்பா....
ஆயிரம் சேவகர்கள் !!


வெளியில்...
கால் பிடிக்க.. காக்கா பிடிக்க
செருப்பு துடைக்க.. உறுப்பு துடைக்க
கார் கழுவ.. கதவு திறக்க
அழைத்துசெல்ல.. அறிமுகம் சொல்ல
எழுதிக்கொடுக்க.. எடுத்துப் படிக்க
வாய்பார்க்க.. திறந்தவுடன் கைதட்ட
கைகூப்ப.. காலில் விழ

அப்பப்பப்பா...
ஆயிரம் ஆயிரம் சேவகர்கள் !!!

திடீரென.....
சகாராவில் மழைதுளி போல
சிம்லாவில் பனித்துளி போல
சுனாமியில் சுண்டைக்காய் போல
சூறாவளியில் பஞ்சுமிட்டாய் போல

எரிமலையில் தண்ணீர் போல
கடலலையில் கண்ணீர் போல
ஒருநொடியில் அத்தனையும்
ஒருங்கே காணாமல்போனது

பங்குசந்தையின் சரிவில்
சிக்கி சீரழிந்த காளையாகிறான்
சீக்கிரமே உயிரிழந்த கரடியாகிறான்

பணம் பாதாளம்வரை பாயுமாம் - இங்கே
பணம் பாதாளத்துள் புதைந்துவிட்டது !

தேரில் வந்து கொண்டிருந்தவன்
தெருவில் விழுந்து கிடக்கிறான் !!

இன்று இவன்....
கண்ணைக் கட்டிக்
காட்டில் விட்டது போல

கையைக் கட்டி
கிணற்றில் இறக்கியது போல

அடுத்த அடிக்கு பாதை புரியாமல்
அடுத்த வேளைக்கு வழி தெரியாமல் ?????
................................................................

இங்கே இன்று இவனுக்கு.....
பெரிசாக எதுவும் வேண்டாம் - வயிறாற
பரிசாக ஏதாவது கிடைத்தால்போதும் !

அங்கே அவர்கள் சேவகர்களாகவே
அவரவர் வேளையில்
அவரவர் வேலையில்

அவரவர் நிலையில் நிரந்தரமாய்........!
அவரவர் பொறுப்பில் கவனமாய்................!

Sunday, August 16, 2009

ஐந்தில் வளைந்தது....


வறுத்தெடுக்கும் வெயிலில்
வசதியாய் வாழப் பழகிவிட்டதால்
வந்துவிழும் மாமழையை
வாசலில் வரவேற்கத்
தெரியவில்லை

லட்சியம் கலங்க வைக்கும்
நிச்சயம் திணற அடிக்கும்
அச்சம் கொள்ள வைக்கும்
லட்சம் வார்த்தைகள் -
அதனால் என்ன?
கவலையில்லை

பேசாமல் இருந்து
பேதைமனம் புகுந்து
அடியில் தீவைக்கும்
அவளின் மெளனம் -
அதன் ஆழம்!
தாங்கவில்லை

????!!!!!!!!!??????!!!!!!!!!!!

Friday, August 14, 2009

சுதந்திரம் : ஒரு தியாகியின் மீள் பார்வையில் ...


சகோதர சகோதரிகளுக்கு
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

விடுதலைப் போராட்ட தியாகி ஒருவர்
தொடர்கிறார் உங்களிடம் :


””அன்று
அடிமை நாட்டில்.....

சுதந்திரம்
அது ஒன்றே
எங்களுயிர் மந்திரம்

ஒரே தலைமை
ஒன்றே இலக்கு

வேற்றுமையைப் போக்கும்
ஒற்றுமையே நோக்கம்

அமைதியாய் ஆர்ப்பாட்டம்
அகிம்சையேப் போராட்டம்

பலன் எதிர்பாராத எண்ணம்
நாட்டின் எதிர்காலமே திண்ணம்

தன்வாரிசுகளை மறந்த கூட்டம்
தாய்மண்ணின் எதிர்காலமே திட்டம்

வாங்கித்தந்தோம் சுதந்திரம் - பாதுகாக்கக்
கொடுத்துவைத்தோம் உங்களிடம்

இதோ..
கடந்துவிட்டது
அறுபத்திரண்டு ஆண்டுகள்

இன்று ...
சுதந்திர நாட்டில்

சுதந்திரம்........?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........???
சுதந்திரம் என்றால்........?

சாதிக்கொரு தலைமை
சாதிக்க இல்லை நிலைமை

வீதிக்கொரு கொள்கை
விதியே என்ற வாழ்க்கை

காலையில் சாதி ஓழிப்புப் போராட்டம்
மாலையில் இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

தாய் நாட்டையே மறந்த கூட்டம்
தன் வாரிசின் எதிர்காலமே திட்டம்


சுதந்திரம்......?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........??
சுதந்திரம் என்றால்......???

ஊர் வம்பே சுதந்திரம்
வெட்டிப் பேச்சே சுதந்திரம்

ஆணவப் போக்கே சுதந்திரம்
ஆடைக் குறைப்பே சுதந்திரம்

வீட்டினுள் மதுசேர்த்தல் சுதந்திரம்
வெளியில் மாதுசேர்தல் சுதந்திரம்

முதியோர் மதியாமை சுதந்திரம்
பெரியோர்சொல் கேளாமை சுதந்திரம்

அதிகாரிகாரங்கள் தேனெடுக்க சுதந்திரம்
அதிகாரிகளுகள் புறங்கைநக்க சுதந்திரம்

மதத்துக்குள் மோதல் சுதந்திரம்
மதத்துக்கே மதம்பிடித்தல் சுதந்திரம்

கலாச்சார சீரழிவு சுதந்திரம்
பாலியல் சீர்கேடு சுதந்திரம்

இன்றைய இளைஞர்களுக்கே
இதுதான் தெரிந்த சுதந்திரம் ..............

நாளைய நமது
வருங்காலத் தூண்களுக்கு ????

காந்திஎன்றால்....
கம்பூன்றிய தாத்தாவாகவும் .,
விடுதலையென்றால்.....
விடுமுறையும் இனிப்பும் .,
தமிழக வரலாற்றில் முதன்முறையாக
புத்தம்புதுத் திரைப்படத்தோடும் .,
சிறப்புப் பட்டிமன்றத்தோடும்
முடிந்தே போகும்...!

ஏ ., இளைஞனே !
இந்தியக் குடிமகனே !!

ஏமாளிகள் நாங்கள்
சந்ததியர் உங்களை நம்பி
வெள்ளையனிடம் போராடி
வாங்கித்தந்த சுதந்திரமதை

தானென்ற அகந்தையில்
தெரியுமென்ற போதையில்
மதிகெட்டு மமதையில்
வீதியில் தொலைத்துவிட்டு

எங்களைப்போல உங்களின்
வாரிசுகளிடம் சேர்க்காமல்
வாரிக் கொடுத்துவிட்டு
மீண்டும் அடிமையாகிக் கொண்டிருக்கிறாய்
அந்நிய மோகமென்னும்
கிழக்கிந்தியக் கம்பெனியின்
மாற்று உருவிடம் !


வேண்டும் வேண்டும்
இன்னும் ஒரு சுதந்திரம் !
இனியாவது சுதந்திரம் !!

ஆனால்.......
யாரிடமிருந்து !?!?!?!?!?!?!?

முடிவு செய் இன்றே !
முயற்சி செய் நன்றே !! “”

--தாய் மண்ணுக்கு வணக்கம் _/\_

Thursday, August 13, 2009

இரு தண்டுப் பூமரமாய்.......


நீதி தேவதையின் கையிலிருக்கும்
நியாயத் தராசின் நிமிர்ந்தமுள்
நிலை கொள்ளால் இருபக்கமும்
தலையாட்டிக் கொண்டிருக்கிறது

அசையாமல் ஆகாயவிமானம்
அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறது

தடுமாறிப் போனத் தொடர்வண்டி
தடம்மாறிச் சென்று கொண்டிருக்கிறது

இது கண்டு ஆரவாரமாய்
இரு தண்டுப் பூமரமாய் - அதோ
வந்து கொண்டிருப்பது அவளேதான்
நிகழ்ந்து கொண்டிருப்பதும் அவளால்தான்

அவளின் அழகுமுகம் அறிந்த நாள்முதல்
ஆதவனென் அறிவுமுகம் அழித்து நிற்கிறேன்
ஏந்திழை முகவரி தெரிந்த நாள்முதல்
எனதிழை முகவரியும் தொலைத்து நிற்கிறேன்

"எனைநான் நினைவிலெடுக்க முயல்கிறேன்,
உனைத்தானே நகலெடுத்து முடிக்கிறேன் !
எந்தன்கனவினில் கவிதைகள் பிறக்கின்றதே !!
அந்தக்கவிதையிலும் கனவுகள் பறக்கின்றதே !!!"


கூடவே நானும் சிறகுடன்..........!
கூடவே அவளுடன் நானும்.......!!

Wednesday, August 12, 2009

கண்ணுக்குத் தெரியாதது ...?!?!


இன்று பிறந்த நாள் எனக்கு
இனிய விழா மாலையில் இருக்கு

இதோ....

என்னை வாழ்த்திப் பரிசளிக்க
ஆளாளுக்குக் காத்திருக்கிறார்கள்
கடைக்குட்டி அவளும் அதற்காக
காலையிலிருந்தே தயாராயிருக்கிறாள்

வாழ்த்துகளில் நனைந்து
விழிகலங்கி இருக்கிறேன்
பரிசுகளில் முற்றும்மூழ்கி
பரவசமாகி இருக்கிறேன்

*பெற்றோரின் ஆசீர்வாதம்
*உற்றோரின் ஆரவாரம்

*மனைவியின் முத்தப் புன்னகை
*மகள்தந்த புத்தம்பு துநகை

*என்மகன் அணிவித்த கைக்கடிகாரம்
*நண்பரின் அணிவகுத்த வாழ்த்துகானம்

உற்சாகம்....
எங்கு நோக்கினும் உற்சாகம்......

அடடா .....

அற்புதமான வேளையில்
அபரிதமான மகிழ்ச்சியில்
கடைசியில் அவளை மறந்தே போனேனே
கடைக்குட்டியைக் கவனிக்கவேயில்லையே

அதோ .......

என்முகம் பார்த்தே அமர்ந்திருக்கிறாள்
எதிரேயே அமர்ந்திருக்கிறாள் - எதையோ
எதிர்பார்த்தே அமர்ந்திருக்கிறாள்

அருகே அழைக்கிறேன்
அவளை அணைக்கிறேன்
பரிசை வாங்குகிறேன் - மெல்லப்
பிரித்துப் பார்க்கிறேன்

அட்டைத் தாளை வைத்து
அவளது மூளை உபயோகித்து
அவளாகவே தயாரித்து முடித்த
அளவான பரிசுப் பெட்டி அது !

ஒன்றுமே இல்லைப் பெட்டிக்குள் !
வெறுமையே இருந்தது பெட்டிக்குள் !!


ஆச்சரியமாக கண்சுருக்கி
நான் அவளைப் பார்க்கிறேன் !
அதிர்ச்சியாக கண் விரித்து
அவள் என்னைப் பார்க்கிறாள் ??


’’பத்து முத்தம் உள்ளேஇருக்கு - தெரியலியா
அப்பா அது இன்னும் உனக்கு’’


உறைந்து போகிறேன் - எனக்குள்
உடைந்தும் போகிறேன்

நானென்ன பெரியவன் ?- இங்கே
அவளென்ன சிறியவள் ??

Tuesday, August 11, 2009

நல்ல திட்டம்தான்..., நடக்காமத்தான் போச்சு .... !


வீதியில உருண்டு பொரண்டு
வீட்டுக்குள்ள வந்த பொறவுதான்
வீட்டுப்பாடம் செய்ய மறந்தது
விசுக்குன்னு ஞாபகம் வந்தது

காலைல வாத்தியாரு
கண்டபடி சாத்துவாரே !
முட்டிப்போட்டு வாசலிலே
முழுநாளும் நிறுத்துவாரே !

கக்கத்துல உள்ளி வச்சா
காய்ச்சல் உடனே வருமுன்னு
எங்கூடவே உள்ள ஒருகிருமி
ஏடாகூடமா சொன்னத நம்பி

வெங்காயத்த நெறயா உரிச்சு
வெளியே தெரியாம மறைச்சு
கக்கத்துக்குள்ள ஒளிச்சு வச்சு
கனாக்கூடக் காணாம கண்முழிச்சு
காலைல வரைக்கும் காத்திருந்தேன்

ராப்பொழுது முடிய முழுசாய்
ரெண்டு நாளு ஆகிப்போச்சே
காலைல எனக்கு லேசாவே
காய்ச்சலும் வந்தது போலவே.....

சோகமா முகத்த வச்சிக்கிட்டு
சுத்தி வந்தேன் அம்மா பின்னால...
நடக்கவே முடியாதவனப்போல
நடந்து காட்டினேன் அப்பா முன்னால....

சமையல முடிச்சு எடுத்து வச்சு
சாப்பாட்ட அடைச்சு கூடைல திணிச்சு
வாசல்வரை வந்து டாட்டா காட்டி
வாய் நெறைய சிரிச்சு வண்டியில ஏத்தி
வழியணுப்பியும் வச்சிட்டாங்களே......!

ஆகா....!
என்ன ஆச்சு !!
எங்கோ தப்பு நடந்துருச்சு !!!

யாருமே கவனிக்கலியே ?
எந்திட்டமும் பலிக்கலியே ?
என் நடிப்பும் கெலிக்கலியே ?

அம்மா... ஒத்த வார்த்த கேக்கலியே ?
அப்பா... நிமிந்து கூடப் பாக்கலியே ?
அய்யோ... எஞ்சோலியும் முடிஞ்சிருச்சே !

வாசலில பெரம்போட
வாத்தியாரும் காத்திருப்பாரு
வானத்துல ஏறப்போகுது
இன்னைக்கு எம்மானம் பாரு

வெங்காயத்த வச்சு நல்லா - உள்ள
வெந்து போக வச்சுட்டானே !
தப்பா சொல்லிக் கொடுத்து - இப்போ
தவிக்க வச்சிட்டுப் போயிட்டானே !!

எங்க இருப்பான் அந்தக் கிருமி !
நொங்க தேடித்தான் பிடிக்கணும் - நல்லா
வாங்கினத திரும்பக் கொடுக்கணும் இனி !!

Monday, August 10, 2009

அவனது சிரிப்பின் ரகசியம்


நெடுநாளைக்குப்பின் விழாவில்
குடும்பத்துடன் சந்திக்கிறோம்

நண்பனவன் இல்லாள் அங்கு
பம்பரமாய்ச் சுழல்கிறாள்

வருபவர்கள் யார் என்றாலும்
வாய்நிறைய வரவேற்கிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”அப்படித்தான்” என்கிறான்
”கொடுத்து வைத்தவன்” என்கிறேன்

குழந்தைகளுக்குத் துடைத்து எடுத்து
கால்கழுவி விடுகிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”எப்பவுமே அப்படித்தான்” என்கிறான்
”யோகம் அமைந்தவன்” என்கிறேன்

விழாவின் வேலைகளெல்லாம்
விழுந்து விழுந்து செய்கிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய்ச் சிரிக்கிறான்
”அவள் எப்பவுமே
...அப்படித்தான்”
என்கிறான்
”சொர்க்கத்தோடு வசிக்கிறாய்” என்கிறேன்

வயதானவர்கள் காலில் விழுந்து
வாழ்த்துப் பெறுகிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”வெளியே அவள்
.....எப்பவுமே அப்படித்தான்”
என்கிறான்
”கடவுள் உன்னுட........”

எனது வார்த்தை பாதியில் உடைந்துபோனது
அது வரும் பாதையில் உறைந்துபோனது

வார்த்தையது செய்தியை உரக்கசொன்னது
அவனது சிரிப்பின் ரகசியம் விளக்கிச்சென்றது

அவனும் வெளியே மட்டுமே சிரிக்கிறான்’

Sunday, August 9, 2009

காதல் யு(மு)த்த விண்ணப்பம்...


வா...... :(

காத்திருக்கிறேன் உனக்காகவே நித்தம்
காதுக்குளே உன் வளவியின் சத்தம்

கலங்கியதே இப்பிறவியில் சித்தம்
குறையுமா உனைப் பற்றிய பித்தம்

நீயாய் வா.... :(

வா என்றபின் வருவதா யுத்தம்
தா என்றபின் தருவதா முத்தம்

தானாய் வருவதல்லவா யுத்தம்
தன்னால் தருவதல்லவா முத்தம்

வந்தால் தொடருமே முத்தயுத்தம்
தந்தால் அதிருமே யுத்தமுத்தம்

தீயாய் வா..... :(

வருவாயெனில் பிழைப்பேனே செத்தும்
வந்தபின்னால் பறக்குமே பத்தும்

வருவாயா என்மன முற்றம்
வரும்வரை காக்குமென் சுற்றம்

அன்பே உன் கரம் பற்றும்
நாள்வரை என் சிரம் சுற்றும்

அதுவரை எதையும் கவனியேனே சற்றும்
அந்நாள் தான் இப்பிறப்பு முற்றும்

அதோ............. :)

Friday, August 7, 2009

இது சுயநலமா? நட்பின் ஆழமா??


பிரசவ அறை வாயிலில்
பிரேதம் போலக் காத்திருக்கிறேன்
மருத்துவரின் வருகைக்காக - வரும்
அவரின் ஒரு வார்த்தைக்காக

எந்தக் குழந்தையானாலும் சரியென்பேன்
எனது நண்பனவன் பெயர் வைப்பேன்

அவன்.................

குழந்தையிலிருந்தே என்
கூடவே தான் இருக்கிறான்

நான் செய்யும் தப்புக்கெல்லாம்
தான் பழி ஏற்றிருக்கிறான்

குச்சி திருடியது நான்
உக்கிப் போட்டிருக்கிறான் அவன்

சடை இழுத்தது நான்
சாத்து வாங்கியிருக்கிறான் அவன்

நோட்டுக் கிழித்தது நான்
முட்டிப் போட்டிருக்கிறான் அவன்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

பேருந்தில் எனக்காகப்
பாய்ந்து இடம் பிடித்திருக்கிறான்

கல்லூரியில் எனக்கவன்
காவலாளியாய் இருந்திருக்கிறான்

கயவர்களிடம் பாதுகாக்க
பயமில்லாமல் மோதியிருக்கிறான்

அப்பாவிடம் பொய்சொல்லி
ஆபத்திலிருந்து காத்திருக்கிறான்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

காதலியவளை எனக்காகக்
கன்னம் வைத்துக் கடத்தியிருக்கிறான்

மிஞ்சி அவள் காலில்ஏற
நெஞ்சில் மிதி வாங்கியிருக்கிறான்

வாழ்க்கையில் காலூன்ற
வழி உண்டாக்கிக் கொடுத்திருக்கிறான்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

தனெக்கென வாழாமல்
எனக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான்

ஏதோ மருந்துவாங்க
இதோ எனைத்தாண்டி ஓடுகிறான்.......

அவன் பெயர் வைத்.....?!?!?!?!?!??????????

முடியாது !
வைக்க முடியாது !!
அவன் பெயர் வைக்கவே முடியாது !!!

எனது குழந்தை தியாகியாக
எனக்கு விருப்பமில்லை

இது

நானென்ற சுய நலமா ?
நானறிந்த நட்பின் ஆழமா ??

நட்புக்கு இலக்கணமா ?
நட்ப்பை உணர்ந்த லட்ச்சணமா ??

Wednesday, August 5, 2009

பயந்தாங்கொள்ளிகள்........!


வங்கியில் சம்பளம்
வாங்கிய கையோடு
பேருந்தில் பயணித்து
நிறுத்தத்தில் இறங்கும்போது

திடீரென வந்தது மின்தடை
தடுமாறி நின்றது என்நடை

"தெருவில் தொடருமே நாய்ப்படை !
ஆரம்பிக்கிறதா எனக்குப் பீடை ?
மனிதனின் நிலை தெரியாமல்
மாதாந்திரப் பராமரிப்பா தேவை !

இருளில் நடக்கவேண்டும்
திருடர்களைக் கடக்கவேண்டும்
பதட்டம் மறைக்கவேண்டும்
பாதுகாப்பாய் இருக்கவேண்டும்
பத்திரமாய் வீடு போய்சேர்வதற்குள்
பாதி உயிர் போய்சேர்ந்துவிடும்"


உயிரைக் கையில் பிடித்து
தெருவில் இறங்கி நடக்கிறேன்

குட்டிச்சுவற்றில் நாலுபேர்
வெட்டியாய் அமர்ந்துகொண்டு
குத்துமதிப்பாய் என்னையே
உற்றுப் பார்த்துக்கொண்டு !

நுரையீரல் வெளியே துள்ளி
தரையில் வலிய விழுகிறது
தாண்டியபின் கவனிக்கிறேன் - அட
தெருவைத்தான் பார்தது இருக்கிறார்கள்

தூரத்திலிருந்து ஆளரவம் வேகமாய்
அருகே நெருங்கி வருகிறது
இருக்கும் இடத்திலிருந்து இதயம்
குதித்து நொறுங்கி விழுகிறது

வரிசையாய் என்னைச் சுற்றி
வியூகம் அமைக்கிறார்கள்
ஒருநொடியில் 'ஐஸ்பால்' சொல்லி
திரும்பிப் பறக்கிறார்கள்

*எதிரே கட்டியிருக்கும் எருமை
*என்னைச் சுற்றியிருக்கும் கருமை
*வேகமாய்த் துரத்தி ஓடும் நாய்
*வெகுதூரத்தில் ஊளையிடும் பேய்

உலகமே ஒன்றுகூடி என்
ஒருவனைத்தான் கவனிக்கிறது !
இருளிலும்கூட இது எனக்குத்
தெளிவாகவேப் புரிகிறது !!

பதைபதைக்கும் மனத்தையும்
பையிலிருக்கும் பணத்தையும்
தடவிக் கொடுத்தபடியே
வீதிக்குள் நுழைகிறேன்

வரும் வழியெல்லாம் தப்பி வந்தவன்
வீட்டுவாசலில் தடுக்கி விழுகிறேன்
திடுக்கிட்டுப் எழுகிறேன்


கால்களுக்கு இடையில் புகுந்து
கருப்பு உருவம் ஒன்று
அலறிக் கொண்டு ஓடுகிறது

"அப்பா வந்தாச்சு - இதோ
அப்பா வந்தாச்சு - இனி
பயமில்லை நமக்கு"


மீசையைத் திருக்கிக் கொண்டு
தரையைத் தடவிக் கொண்டே
தலை நிமிர்ந்து வீட்டுக்குள்

மெல்ல நுழையும்போது
மெதுவாய் முணுமுணுக்கிறேன்

"சரியான பயந்தாங்கொள்ளிகள்"

Tuesday, August 4, 2009

அற்பமாகவும் அற்புதமாகவும் நான்.....



என்னவளில்லாப் பொழுதில் அவளது நினைவில்
என்னைச் சுற்றியுள்ள அனைத்தும்
எனக்கு அற்பமாகவேத் தோன்றுகிறது !
என்னை அற்புதமாக உணர்கிறேன் !!

என்னவளுள்ள பொழுதில் அவளது நிழலில்
என்னைச் சுற்றியுள்ள அனைத்தும்
எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது ?
என்னை அற்பமாகவே உணர்கிறேன் ??

எனக்குள் ஏனிந்த மாயம் :( -ஆனாலும்
எனக்கு வேண்டுமே நியாயம் !
பட்டியல் அதைப் பாருங்கள் - என்
பரிதாப நிலை நீக்குங்கள்

அன்பு கோரிக்கை வைக்கும்போது
...அவள் திருக்கும் என் நுனிச்சட்டை

வாகனத்தில் விரையும்போது
...இறுக்கிப் பிடிக்கும் கழுத்துப்பட்டை


கடல் நோக்கி அமரும்போது
...விரலுள் புதைந்திருக்கும் கைக்குட்டை

கால்நனைய நடக்கும்போது
...சங்குகால் தொட்டுப்போகும் மணல்திட்டை

இன்னும் இருக்கிறது...........!!

அவளது முத்தம்பல மொத்தமாகக்
...கிடைக்கும் சுட்ட சோளத்தட்டை

அவளது முத்துப்பல் மெத்தெனக்
...கூசிக்கடிக்கும் புளிப்பு மாங்கொட்டை

அவளது எச்சில் சுவைத்துப் பித்தாகி
...உருகி வழியும் பனிக்கட்டிப்பட்டை

என்னை இன்னும் அவையெல்லாம
ஏளனமாகவேப் பார்க்கின்றன - அந்தப்
பாக்கியம் வேண்டும் எனக்கும் !
பழிவாங்க வேண்டும் நானும் !!

Monday, August 3, 2009

சட்டம் தன் கடமையை.....


விளை நிலங்கள்
துண்டாடப்பட்டு
வீதிகளாய்....
வீட்டு மனைகளாய்....

ஏரி குளங்கள்
தூர்க்கப்பட்டு
கட்டிடங்களாய்....
குடியிறுப்புகளாய்....

விதிமீறல்களைத் தடுக்க
விரிவாக்கங்களை அகற்ற
எதற்கும் மடியாமல்
யாருக்கும் பணியாமல்

அரசு தன் நிலையில்
அழுத்தமாகவே இருக்கிறது !
சட்டமும் தன் கடமையில்
கடுமையாகவே இருக்கிறது !!

மழைநீர் சேகரிக்கும் தொட்டி
கட்டவில்லை என்றால்
கட்டிடத்திற்கான அனுமதி
கண்டிப்பாகக் கிடைக்காது !

குளத்துக்குள்ளே கும்மி....


வறண்டக் குளத்தில
...முங்கிக் குளிக்கையில
கெண்டையொன்னும்
... கெழுத்தியொன்னும்
வந்து சிக்கியது
...வசமா எங்கையில

சிண்டப் புடிச்சு
...யாரோ தூக்கிவிட்டாங்க
மண்டையில நாலு
...சாத்துப் போட்டாங்க
முதுகுலயும் நால
...சேத்துப் போட்டாங்க

கெண்டை மீனோட
...கையில நானிப்போ
மிரண்டு போய்
...மாட்டி நிக்கேன்

கரண்டக் கையில
...புடிச்சதப்போல - நா
வறண்டு போய்
...விக்கி நிக்கேன்

தெரண்டாலும் வழுவழுனு
...கெண்ட மீனெப்படி
உருண்டையா இப்படின்னு
...அப்பவே நெனச்சேனே ?????

கரண்டாக் கையில அடிச்சது
...சிலேப்பிக் கெண்டயுமில்ல
கெழுத்தி மீனுமில்ல - மக்கா !
....கொழுந்தியா அவளோட
கரண்டக் காலு மக்கா !
....கரண்டக் காலு அது!!!

Wednesday, July 29, 2009

விளக்கேற்றிய நண்பனுக்கு.....


வீட்டின் முகப்பில்
வரவேற்பு அறையில்
ஒருபுறம் எனது திருமணப்படம்.,
மறுபுறம் அவனது திருஉருவப்படம்.

'எனது உயிர் நண்பனவன்
என்னுடன் இருக்கும் வரையில்
எனக்கொரு கவலை இல்லை
இனியொரு உவலை இல்லை


கானல்வரியாய் தெரிந்த என்கனவை
நாணல்திரியாய் எரிந்த என்நினைவை
நிழலாய் மாறஇருந்த என்வாழ்வை
நிஜமாய் மாற்றிக் காட்டியவன் அவன்

மொய் எழுதி வாழ்த்தி விட்டு
பொய் முகத்தோடு ஏக்கம் சுமந்து
திரும்பும் எனக்கும் வாழ்க்கையில்
திருமணம் என்ற ஒன்றைத்
திருவிழாவாக நடத்தியவனுக்கு
என் வாழ்நநாள் முழுதும்
நன்றிக் கடன் பட்டிருப்பேன்

அன்று
பெண்பார்க்கும் படலத்தில்
மணமகனின் நண்பனாய்
மிக நெருக்கத்தில் அவன்

"மாப்பிள்ளை கருப்புதான்,
....ஆனாலும் பரவாயில்லை"

"மாப்பிள்ளை குட்டைதான்,
....ஆனலும் மட்டம் இல்லை"

"மாப்பிள்ளை ஒல்லிதான்,
....ஆனாலும் பல்லிபோல இலலை"

"சுறுசுறுப்பு கம்மிதான்,
....ஆனலும் துருதுருப்புதான்"

"பல்லு ரெண்டும் எடுப்புதான்
....ஆனாலும் பளபளப்புதான்"

அருகில் அவனும் சொங்கிபோல
....தூங்கிக் கொண்டே இருந்தான்
அதனால் நானும் - அங்கே
....தூக்கலாகவேத் தெரிந்தேன்

எந்த வில்லங்கமும் இன்றியே
எல்லா விவகாரமும் முடிந்ததினிதே'


பெருமையோடு நண்பன் அவனுக்கு
உரிமையோடு வணக்கம் வைக்கிறேன்.

Tuesday, July 28, 2009

வெட்டியானுக்கொரு வேண்டுகோள்...


நண்பனே !
விவசாயி மகனாய்ப் பிறந்து
வாழ்க்கக்ப் பூராம் ஏமாந்து
(வி)சாரிக்க ஆளில்லாம
சருகாகி உதுந்தவனே
வானத்துல கரைஞ்சவனே
வனத்துல தொலைஞ்சவனே
ஏ என்னோட நண்பனே !!

நாலுதெருவு தாண்டிப் போனாலும்
ஏழுதடவ சொல்லிட்டுப் போவியே
ஏழுலகம் தாண்டி போறப்போ
ஏங்கி நிக்கிறனே நானுமிங்கே
எங்கிட்ட சொல்லாமலே
ஏமாத்திப் போயிட்டியே
ஏ நட்ப்பை மறந்த நண்பனே !!!


மக்களே !
அறுபது ஆண்டுகாலமா மாடா
அடுத்தவனுக்கே உழைச்சவனோட
இறுதி ஊர்வலம் இங்கே
ஆறுபேரோட முடிஞ்சிடுச்சே
ஏ நன்றிகெட்ட மக்களே!!

ஊர்ப்பெரிசே !
உயிர்பாய்ச்சி பயிர்வளர்த்து
கதிர் புடிக்கக் காவலிருந்து
முதிர்ந்ததெல்லாம் சேர்த்துக்கட்டி
உதிர்ந்ததயும் சேத்துலக் கூட்டி

வயிறு வளக்க உம்முன்னால
கையக்கட்டிக் பாத்துநின்னானே
வாயப்பொத்தி உம்முன்னால
வாழ்க்கப்பூராக் காத்துநின்னானே
கரையேத்தி விடாம
கையக்கழுவி விட்டிட்டியே
ஏ சுயநல ஊர்ப்பெரிசே !!


வரட்டி பொறுக்க,வரப்பு பெருக்க
களை எடுக்க,கரை புடிக்க
குடும்பம் சுமக்க,குழந்தை வளர்க்கன்னு
அஞ்சு வயசுல குனிஞ்சவன்

அரைவயித்துக் கஞ்சிக்காக
ஆண்டே முன்னாடிக் குனிஞ்சவன்

பெண்டுகளக் கரைசேக்க
வந்தவங்க முன்னாடிக் குனிஞ்சவன்

குடும்பநலம் வேண்டி
கடவுள்முன்னாடிக் குனிஞ்சவன்

கடைசிவரைக்கும் நிமிரவேயில்லையே
கண்ணும் பகல்வானம் பாக்கவே இல்லையே

ஏ நல்ல வெட்டியானே !
எரியூட்டும்போது அவன்
நரம்பு முறுக்கேறி
விரைத்து எழுவான்
நிமிர்ந்து அமர்வான்
வீழ்த்திவிடாதே அவனை

எல்லாம் முடிந்தபின்
கடைசிக்கும் முன்னால்
வாழ்க்கைக்குப் பின்னால்
முதன்முதலாய் நிமிர்வான்

வீழ்த்திவிடாதே அவனை
அவனாகவே வீழும்வரை
வாழ்த்திவிடு அவனை
வானகம் வாழ்த்தும் உன்னை


ஏ நாலும் தெரிந்த வெட்டியானே !!
நானும் வருவேன் நல்ல வெட்டியானே !!!

Sunday, July 26, 2009

நான் இந்தியன்......


26-07-09 :
கார்கில் வெற்றி(யின்)வீரர்களின் நினைவுநாள் :

எனது வீரச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் :



கார்கில் - இங்கே

சூரியனும் பதுங்கியே
...சலனமின்றி பயணம் வரும்
சந்திரனும் பயந்துபோய்
...சந்தடியின்றி தவழ்ந்து வரும்

காற்றும் பயத்தோடு
...கலங்கியபடியே வீசும்
மரங்களும் தங்களுக்குள்
...மெளனமாகவே பேசும்

எதிரிக்கு எப்பவுமே
...இதன்மேல் நேசம்
எல்லையில் இப்பவுமே
...தொல்லையின் வாசம்

வெண்மையே விரவியிருக்கும்
...வண்ணமற்ற பிரதேசம்
வாழ வழியில்லாத
...வஞ்சிக்கப்பட்ட பிரதேசம்

ஆனாலும் என்ன
அது என் தாயின் தேசம்


அரைஜான் ஆக்கிரமிக்க எண்ணி
...அரையடி முன் வைத்தாலும்
அரைஞாண் அவிழும் வரை
...அடித்தே விரட்டிடுவேன்

அன்னை பூமியில்
...அந்நியன் ஒருவன்
அனுமதியின்றி புகுந்து
....அங்கே தேவையின்றி

உதிர்ந்து கிடக்கும் ஒரு - வீண்
...மயிரைக்கூடத் தொடவிடேன்
எதிரியைத் தடுக்க எனது - இன்
...உயிரையும்கூடத் தந்துமடிவேன்

நான் இந்தியன்..
நாம் இந்தியர்கள்...

வாழ்க எல்லைக் காப்பாளர்கள்....
வளர்க அவர்தம் குடும்பங்கள்......

Tuesday, July 21, 2009

இந்தியாவில் இரண்டு இமயம் ....!


ஜுலை 21
சிவாஜி அய்யாவின் நினைவு நாளில்
அவர் பாதங்களில் சமர்ப்பணம் :


இமயம் :


தூரமிருந்து பார்ப்போருக்கு
...கரும் புள்ளியாய்ப் புரியும்
அருகில் வருவோருக்கு அது
...வெறும் முக்கோணமாய்த் தெரியும்

நெருங்க ஆரம்பிக்கும்போது தான்
...அதன் பிரமாண்டம் கிட்டும்
ஒவ்வொரு திசையிலும் அது
...வெவ்வேறு பரிமாணம் காட்டும்

ஏறும் உங்களுக்குள் இதமாய்
...அதன் புனிதம் இறங்கும்
வெறுமையான மனதுக்குள்ளும்
...அதன் இனிமையை இறக்கும்

உச்சியை அடைய வேண்டாம்
...உணர்ந்தாலே போதும்
நவரச உலகத்தையே மெதுவாய்
...நமக்குள் உணர்த்திவிடும்

இமயம் _ அதுதான்
இமயம்

இந்தியாவில் உண்டு
இமயம் இரண்டு

வடக்கில் ஒன்று - இங்கே
தெற்கில் ஒன்று

Thursday, July 16, 2009

குடந்தையின் கதறல் கேட்டதா கோட்டைக்கு ..?


16-07-09
குடந்தை குழந்தைகளுக்கு
ஒரு கண்ணீர் அஞ்சலி :
:

"தளிரிலேயே கருகி
...காணாமப் போன பயிரே ,
உன்னாலேயே உருகி
...கறையுது என்னோட உயிரே....,

நாள் பார்த்து ஒலகம்
...ஒருநாளு மட்டும் நெனைக்கயிலே.,
நாதியத்த நாங்க இங்க
...ஒருநொடிகூட மறக்கலியே..

கண்ணுல தண்ணியும்
...கொஞ்சம்கூட கொறையலியே.,
கண்ணீரால நனைஞ்சும்
...நெஞ்சுக் கொதிப்பும் அடங்கலியே..

என்ன செய்யப்போறேன்
...நீ இல்லாமல் தெரியலியே.,
எப்படி இருக்கப்போறேன்
...இனிமேலும் புரியலியே.. "

குடந்தைத் தாயின் கதறல்
...இப்பவாவது கேட்கிறதா கோட்டைக்கு ?
சட்டதிட்டமெல்லாம் நாளைக்கு
...மீண்டும் வந்திருமா விற்பனைக்கு ??

Tuesday, July 14, 2009

சென்னையில் தொலைத்(ந்)த......!



ஓடும் வாழ்க்கையில்
ஒருநாள் வசந்தமாய்

பாரம் இறக்கி
நேரம் ஒதுக்கி
சேரனில் துவங்கியது
சென்னைப் பயணம் - முக்கிய
நண்பன் திருமணம்

ஆளரவம் கேட்டு
கண்விழித்தேன் நடுஇரவில்!
தேவதை பார்த்து
திகைத்துப்போனேன் மறுநொடியில்!!

மின்னலாய்த் தோன்றினாள்
மனதினுள் ஊன்றினாள்
என்னெதிரே அமர்ந்தாள்
என்னுதிரம் கலந்தாள்

கண்களுள் நுழைந்தாள்
கருத்தினுள் இழைந்தாள்
தூக்கம் கலைத்தாள் - என்னுள்
ஏக்கம் விதைத்தாள்

என்கனவில் விடைத்தாள் - அவளே
என்கனவின் விடைத்தாள் - அட
நானானேன் வெறும்தாள்

அழகாய் இருக்கவில்லை - ஆனாலும்
ஆழப் பதிந்துவிட்டாள்!
நிமிர்ந்தே பார்க்கவில்லை - ஆனாலும்
நெஞ்சினுள் புதைந்துவிட்டாள்!!

கண்டவுடன் காதல்
கூடாது என்பவனைக்
கயவன் என்பேன்! - ஆம்
காதலில் விழுந்தேன்!!

இதயம் வெளியேவரத் துள்ள
இதழ்கள் வார்த்தையை மெள்ள
காதலை அவளிடம் சொல்ல - இதமாய்
கண் திறந்தேன் மெல்ல....

வேற்றுமுகம் கண்டேன் முன்னே,,
வெற்றிடம் உணர்ந்தேன் பின்னே,,,
வற்றியது உதிரம் உள்ளே - அவளை
உயிர் தேடியோடியது வெளியே

கண்ணியம் காக்கும் நோக்கத்தில்
கணநேரத் தாமதத்தின் தாக்கத்தில் - உடனே
காதலைச்சொல்ல மலைத்துவிட்டேன்
காதலியைத் தொலைத்து விட்டேன்

எப்படி எங்கே ஓடுவேன் ?
எங்கே எப்படித் தேடுவேன் ??
மிரட்டும் வாகனக் கடலில்..
மிதக்கும் வெகுசனத் திரளில்....

சுழலில் சிக்கிய துரும்பானேன்
ஆழியில் மாட்டிய எறும்பானேன்
ஆழ்கடல் மூழ்கும் இரும்பானேன்
ஆலையில் அரைபடும் கரும்பானேன்

திருமணம் இருப்பதையே மறந்து ..
தேவதையின் இருப்பையே உணர்ந்து..
திசையெல்லாம் தேடித் திரிந்து..
ஆசையெல்லாம் நொடியில் உலர்ந்து..

இரு உயிரை ஒரேநாளில்
பெருநகரில் தொலைத்து விட்டு
ஊர் வந்துசேர்ந்தேன் தோல்வியோடு
உயிர் இல்லா வெற்று உடம்போடு

நடைபிணத்தின் நிலைகாண
நண்பன் வந்தான் துணையோடு ,
இருமணம் இணைந்த - அவன்
திருமணத்தின் தொகுப்போடு .

புகைப்படத் தனித் தொகுப்பில்
புகையின் அணி வகுப்பில்
மணப்பெண் தோழியாய்
மனம் கவர்ந்த அவள் !

Sunday, July 12, 2009

வாய்தா(ன்) வாய்தான்....!



இல்லாத தாத்தாவுக்கு
இருதயத்தில் அடைப்பென்று
அலுவலகத்தில் அடித்துவிட்டு
அரைநாள் விடுப்புஎடுத்து
மேலாளரைத் தாண்டுவதற்குள்
மேல்மூச்சு வாங்குகிறது

நண்பர்களுடன் சந்திப்பு இன்று
மீன்பிடித்து சமையலுடன்
நல்ல விருந்துண்டு
நடுநடுவே மருந்துமுண்டு

அவசரமாய்க் கிளம்பும்போது
அறைவாசலின் குறுக்கே
தலைசொரிந்து நிற்கும்
நண்பனைப் பார்த்தவுடன்
நிலைமை புரிகிறது.
ஐநூறு கையிலெடுத்து

"ஐந்துகாசு இதற்குமேல்.."
சொல்லி முடிப்பதற்குள்
தட்டிப் பறிக்கிறான் .

"ஐம்பது கேக்கவந்த ஆசாமிக்கு
ஐநூறு அள்ளித்தந்த சாமி நீ"

சொல்லிப் பறக்கிறான்
???????????????????????

சாலை சந்திப்பில்
கையேந்திய பெண்ணிடம்
"உடம்பு நல்லாத்தானே
உனக்கு இருக்கு ?
நல்லா வேலை செய்தால்
நாலுகாசு தானா கிடைக்குமே!"

கேள்வியாய்த் தொடுக்கிறான்.
"நல்ல அறிவுரைக்கு
நான்தரும் பரிசு இது"

ஐந்துரூபாய் நாணயத்தை
அவன்முன் வைத்துவிட்டு
அடுத்த இடம் நாடுகிறாள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

போக்குக்காட்டி ஓட்டியும்
போக்குவரத்துக் காவலரிடம்
மாட்டிக் கொள்கிறான்.
இருக்கும் ஆவனம் காட்டி
இல்லாத ஆனவம் பேசுகிறான்.

ஒருநாளில் முடிவதை
ஒன்பதுநாள் அலையும்படி
வழக்குபதிவு செய்து
வழிவிட்டு நிற்கிறார் காவலர்
??????????????????????????????

தூண்டிலை வீசிவிட்டு
காத்திருக்கிறான் அவன்.,
வரப்போகும் நண்பருக்காகவும்
விழப்போகும் மீன்களுக்காகவும்.
கவனம் சிதறவைக்க
அலைபேசி அலறுகிறது
"சீக்கிரம் வாங்கப்பா !
சீரழிஞ்சு வந்திருக்கேன் !
அரைநாள் விடுப்புக்கு
ஆயிரம்பொய் சொல்லியிருக்கேன் !"

எதிர்முனையில் மெளனம் ?
அதன்பிறகே கவனிக்கிறான்
அது மேலாளரின் அழைப்பு !!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

துண்டிலில் சிக்கி
துள்ளியது மீனொன்று.
எடுத்துப் பார்த்தவன்
ஏளனமாய்ச் சிரிக்கிறான்
"வாயை மூடிக்கிட்டு இருந்தால்
வருமா இந்தநிலை உனக்கு"


அந்தமீனும் அவனைப்
பாவமாய் பார்க்கிறது !
ஏளனமாய்ச் சிரிக்கிறது !!