Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Sunday, November 6, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 4

ச(ர்)க்கர :( இதுதான்யா சொர்க்கம் - 4)

என்ன செய்யலாம் ????

உச்சந்தலையைத் தடவிய படியே... வண்டி இருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன் ......

மனம்... ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் ஓர் உலக அதிசயம் ...

கண்மூடுவதற்காகவே காத்திருந்த்துபோல ...நொடியில் என்னை பின்னோக்கி 20ஆண்டுகள் கடத்திச் செல்கிறது அது.

#தூத்துக்குடி

“அம்மா ..தந்தி வந்திருக்கு

தந்தி – இந்த வார்த்தையைக் கேட்டவுடன் அம்மாவின் கைகாலெல்லாம் உதறலெடுக்க....

முகம் வெளிறத் தொடங்க ......

இதைப் பார்த்தவுடன் இப்போ தபால்கார்ருக்குப் பதட்டம் ஆரம்பிக்கிறது ..


“ஐய்ய்யோ...எம்மா .... கொஞ்சம் பொறுங்க ...நல்ல சேதிதான் .. நல்ல சேதிதான் “


“கட்டைல போறவனே.. இதை மொதல்லயே சொல்லித் தொலைகிறதுக்கு என்னாவாம் “ சேலை முந்தானையால் முகத்தைத் தொடைத்துக் கொண்டே அம்மா மெல்ல சிரிக்கிறாள் .. அவர்தான் எங்க ஏரியாவின் நிரந்தரப் ‘போஸ்ட்மேன்’ . எல்லாரிடமும் உள்வீட்டு ஆளப்போல பாசமாப் பழகுவார் ...


என்னத்த சொல்லவிட்டீய ...இப்போ மயக்கம் போட்டிருந்தீயன்னா எஞ்சோலியல்ல உங்க ஊட்டுக்காரரு முடிச்சிருப்பாரு ’’


சரிசரி ..என்னாவிசயமாம் ..இப்பயாச்சும் சொல்லு தம்பி


எம்மா ..மவராசி.. மொதல்ல எனக்குக் கொஞ்சம் நீச்சத்தண்ணியாச்சும் மோராச்சும் கொடுங்க ... போன உசிர திரும்ப வரவசுக்கிறேன் ..”

மெதுவாக தனக்குள் ”மொதல்ல இந்த ‘தந்தி’ கோண்டுபோற வேலைய விடணுமப்பா


உங்க ஊட்டய்யா தங்கச்சி மவா பெரியமனுசி ஆயிருக்குதாம் ...தாதன்குளத்துல கல்வூட்ல விசேசமாம் ..உடனே வரச்சொல்லி தந்தி கொடுத்திருக்காங்க ...

எங்கிட்டே திரும்பி ‘தொரே...உங்க அயித்த பொண்ணாம் ..ம்ம்ம் ..ஜமாய்என்கிறார்


ஓ..அம்மாவுக்குக் கொஞ்சம் சுதி எறங்கிப்போச்சு ...( அப்பா வீட்டு உறவுன்னா கொஞ்சம் அம்மாவுக்கு ஆகாது ... கலயாணமான புதுசுல ஏதோ பிரச்சினையாம் )


அப்பா வந்தவுடன் தடபுடலாய் டேப்ரெக்கார்டர்வச்ச வெள்ளை அம்பாஸ்ட்டர் கார் பிடிச்சு கெளம்பினோம் .


முக்கியமான ஒரு கேரக்டரை இங்கே அறிமுகப்படுத்தியே ஆகணும் .. என்னோட பிரண்டு ‘ராசாமணி .திருப்பூர்காரன் . ஸ்கூல்லீவுக்காக அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தவன்.. எங்களோடத் தொத்திக் கொண்டான் ...கொஞ்சமா வாய்மட்டும் ஜாஸ்தி ஆவனுக்கு...

அதான் மொதல்லயே அவன்கிட்டே சொல்லிவச்சுட்டேன்

எலேய் ..ஒங்கூரு மாதிரி இங்கே பேசிக்கிட்டிருக்காதே .... பாத்துக்கோ ...எல்லாப் பயலும் கத்தி வச்சிருப்பான்

பயந்துட்டேன் போல ... ரொம்ப அமைதியாகவே வந்தான் ...


#தாதன்குளம் :கிராமம்:

வண்டியில வந்த அலுப்புல..எல்லாரும் அடிச்சுப்போட்டாப்ல தூங்கீட்டோம் போல ..காலைல லேட்டாத்தான் எந்திரிச்சோம் நாங்க 2 பேரும் ... வீட்ல கொஞ்சம் பேருதான் இருக்காங்க .. வெளியே திண்ணைல பெரியாத்தா ... கூடத்துல புள்ளைங்க பல்லாங்குழி ,கலஞ்சி (தட்டாமாலை) வெள்ளாண்டுக்கிட்டு இருக்க ..பல்லுவெளக்காம நாங்க மட்டும்தான் போல ...


அம்மா ..காப்பி கொடு ந்னு சவுண்டு வுட்டுட்டு ( எப்படியும் அயித்த மகதான் கொண்டுவரப் போறாJ)

ராசாமணிகிட்டே கூச்சப்படாம கேட்டுவாங்கி சாப்பிடுல ந்னு சொன்னேன்..


நெனச்சாப்லயே அவதான் கொண்டுவந்தா...


காப்பியக் கையிலவாங்கி வாயிலவச்சவன் ..ஊருக்குள்ள வந்ததுல இருந்து மொதமொதலா வாயத் தொறந்தான்.

“எனக்கு சக்கர கம்மி .. கொஞ்சம் தாரீங்களா


திடீர்ன்னு அங்கே ஒரு அமானுஷ்ய அமைதி.......

அயித்தமக கைய ஒதறி வாயப்பொத்திக்கிட்டே உள்ளே ஓட.....

சளசளன்னு சளம்பிக்கிட்டிருந்து பொடுசுக எல்லாம் கப்புன்னு வாயமூடீட்டு ..அவன ஒருமாதிரியா குறுகுறுன்னு பாத்துட்டு..

அய்ய்ய்ய..ஆத்தா...இந்த அண்ணன் ஆயிஆயியாப் பேசுதுன்னு ஆத்தாகிட்டே கோத்துவுட்டுட்டு ... கத்திக்கீட்டே வெளியே ஓடுதுக


திண்ணைல இருந்து ஒரு கும்பா ராசாமணியப் பாத்து பறந்துவந்த்து முன்னே ...

பெரியாத்தா ஆவேசமா வந்தாள் பின்னே ....


“எடு வெளக்குமாற .. பொண்டுபுள்ளங்க இருக்குற எடத்துல யார்ல அவன் ..வாயப்பாரு ...ஏலே மாரி ..ஓடியால ..இந்தப்பயலப் புடிச்சுக் கட்டுல புளியமரத்துல.. பத்தலையாமுல்ல ...அந்தப் படுக்காளிப் பயலுக்கு கொஞ்சம்நஞ்சம் இருக்குறதையும் இழுத்துவச்சு ஒட்ட நறுக்கி காக்காய்க்குப் போடு“


ஈரத்துண்டால மூடிப்போட்ட கோழியப்போல நாடிநரம்பெல்லாம் ஒடுங்கிப்போச்சு அவனுக்கு ..........

மெதுவா என்கையைச் சொரண்டி டேய் ..என்னாடா நடக்குது இங்கே ... என்னை ஏண்டா இந்த்த் திட்டு திட்டுது .... நான் என்னடா பண்ணேன்...எதையோ அறுக்க வேற சொல்லுது பாட்டி ?


எலேய் ..கொஞ்சம் சும்மாத்தான் இறேன் ... அதான் ஒரே வார்த்தைல ஒருமாசத்துக்கு சனியன இழுத்திட்டீயே


ஏண்டா..உங்க ஊர்ல சக்கரைக் கேட்டாத் தப்பாடா,,கம்மியா இருக்கப்போயிதானடா கேட்டேன்


இங்கே சக்கரன்னா வேற அர்த்தம் மக்கா ...


அய்யோ ..எனக்குத் தெரியாதே ..அப்படீன்னா என்னடா


விடு விடு..இப்போ வேணாம் ..பொறவு சொல்றேன் ..


டேய் ...சொல்லுடா... எனக்கு இப்பவேத் தெரிஞ்சாகணும் ..


ம்ம்ம்...நீ சாவணுமுன்னு முடிவு பண்ணீட்டே ...நான் என்ன செய்ய ..சக்கரன்னா இங்கே குஞ்சுமணின்னு அர்தமுடியோய்.. ... அந்தப்புள்ள கீட்டே பத்தலன்னு நீ கேட்டது அதைத்தான்


இப்போ நான் சொன்னதக் கேட்டதும் நாக்கு மேலன்னத்தில் ஒட்ட...கண் சொருக ஆரம்பித்தது அவனுக்கு ...


நல்லவேளயா அப்பாவும் அந்தநேரத்துல அங்கே வர அவன் தப்பிச்சான் .


என்ன! ..ஆத்தாவச் சமாதானம் பண்னத்தான் நேரமாகிப் போச்சுது ........


20வருடங்கள் ஆகிவிட்டன ...

ராசாமணி இன்னும் சமாதானமாகவில்லை.. எப்போ சந்தித்தாலும் அவனோட மொதக்கேள்வி இதுதான் ...

டேய் ..உங்க பெரியாத்தா அன்னிக்கு எதையோ இழுத்துவச்சு அறுக்கணுமுன்னு சொன்னாங்களே ..அது என்னடா “


‘ நாக்கைத்தான் அவங்க சொன்னாங்கன்னு எத்தனை தடவைதான் உங்கிட்டே சொல்றது


அவன்தான் இன்னும் இன்றுவரையிலும் என்னை நம்பியதுபோலத் தெரியவில்லை ..

நீங்களாவது நம்புறீங்களா ????

(போய்க்கிட்டே இருப்போமா ............)

Tuesday, November 1, 2011

பெரியாத்தா : -- இதுதான்யா சொர்க்கம் -3

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....:3


வேப்பம்பழம் பொறுக்கி, கொட்டை எடுத்துக் கொண்டிருக்கும் ஆத்தா
தூரத்தில் ஓட்டுவீடுகள் தெரிய ஆரம்பிக்கின்றன .. ஆங்காங்கே சில மட்டப்பா வீடுகளும்....

என்வண்டியைத் தாண்டி சைடு எடுத்துச் சென்ற டிவிஎஸ் 50 ஒன்று சட்டென ப்ரேகடித்து நின்றது .
(TVS 50 - எனது கனவுவாகனம் ... இப்போதுக்கூட யாராவது என்னிடம் அந்த வண்டிக்கு எனது காரை எக்ஸ்சேஞ்ச் தர ஒப்புக்கொண்டால் உடனே தரும் மன நிலையில்தான் இருக்கிறேன் ... )

அவசரமா ஸ்டாண்டுபோட்டு என்னைப்பார்த்து ஓடிவரும் அது ...அட ...எசக்கி

‘’எண்ணே.....பாத்து எம்புட்டு நாளாச்சு .... இதாம் புள்ளைங்களா...’’
என்று கேட்டபடியே கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு
வூட்டம்மாவைப்பார்த்து ’‘கும்புடறேன் தாயி ‘’ என்றான் ....

சின்னவயசுல எனக்கு அவந்தான் ‘பாடிகார்டு’ ... (3 அடு உயரத்துல நான்....ஒரு 2 அடி உயரம்தான் அவன் இருப்பான் ) ..ஆளுதான் வளந்திருக்கான் ...முகம் இன்னும் மாறவே இல்லை

அவனை தோள்சேர்த்து பற்றிக்கொண்டேன் ...ம்ம்ம் .. தோட்டத்திலிருந்து வருகிறான் போலும் ...மண்வாசம் ...

’’ஏண்ணே ... கொடைக்கு வந்தியா ..பெரியாத்தா விசயம் தெரியுமா உனக்கு’’

லேசான அதிர்ச்சி எனக்கு ...
”என்னல ஆச்சு ” எதையோ மறைத்திருக்கிறார்கள் ...

பெரியாத்தா .... அப்பாவின் அம்மாவோட அம்மா .... 100வயசு தாண்டி ஒரு மாமாங்கம் ஆகிஇருக்கும் ..

ஒருவாரமா சோறுதண்ணீ எறங்கலண்ணே ... உசுறு வாய்க்கும் தொண்டைக்குமா இழுத்துக்கிட்டு கெடக்கு...
ஏதோ நெனப்புலத்தான் உசிறு இன்னும் ஒட்டிக்கிட்டு கெடக்குது .... உன்னைப் பாத்தான்னா ஒடனே போய்ச் சேந்திருவாண்ணே “

’ஓ .... என்னை கைகுள்ளேயே வச்சு பொத்திப் பொத்தி வளர்த்தவள் அவள் ..
வேகமாக வண்டியில் ஏற ஓட எத்தனிக்க ..எசக்கி என்கையைப் பிடிச்சு தடுக்கிறான் ...

“அண்ணே ...உடனே போய் பார்த்திறத... ரெண்டுநாள்ல கொடை இருக்கு... முடியட்டும் ...இப்போ உன்னைப் பாத்தவுடன் ஆத்தா புட்டுக்கிச்சுன்னா ... தேரு வெளியேவராது ...கொடை நின்னுபோவும்...12 வருசம் கழிச்சு நடக்குற கொடைக்காவ வெளுயூருல இருந்து ஊருசனாமெல்லாம் வந்திருக்காங்க ... நெறையா ஏற்பாடெல்லாம் நடந்திட்டிருக்கு...எல்லாம் உன்னால கெட்டுப் போச்சுன்னு பின்னால யாரும் சொல்லீரக் கூடாதுண்ணே “

உண்மை உறைக்க ஆரம்பிக்கிறது எனக்கு ...
மெதுவாக பாக்கெட்டைத் தடவிப் பார்க்கிறது எனது கை ...
உள்ளே இருக்கும் இரண்டு ‘சுகர் ஃப்ரீ டாப்லெட்’ பாக்கெட்டுகள் என்னைப்பார்த்து சிரிக்கின்றன ...

இந்தக் கிராமத்தைவிட்டு நான்வெளியேறும் முன்னால்... என்றோ ஒருநாள்
‘ எய்யா .. பெரியவனே ...எனக்கு ஏதோ சுகராம்..இவளுவோ கருப்பட்டிய என்கண்ணுலயே காட்ட மாட்டக்காளுவ.. என்னமோ இனிப்பு மாத்தரன்னு இருக்காமே அது எனக்கு கொஞ்சம் வாங்கித் தாரியா ???’

கருப்பட்டியும் , வெல்லமுமாய் காய்ச்சி ஊருக்கெல்லாம் கொடுத்தவள் ...இனிப்புக்காக ஏங்கி என்னிடம் கேட்டது மங்கலாக இன்னும் மனக்கண்முன்னால் ஓட ..........

என்ன செய்யப் போகிறேன் நான் ...????????????

(என்ன செய்யலாம் சொல்லுங்க மக்களே ...ஊருக்குள் நுழையாமல் தூரத்தில் தெரியும் அந்தக் கல்வீட்டை பார்த்தபடியே உடைந்துபோய் காத்திருக்கேன் )

Saturday, October 29, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 2

2 . ஊருணி :

வண்டி ஊரை நெருங்க நெருங்க எனக்குள் ஒரு பதட்டம் தடதடவென அதிர ஆரம்பிக்கிறது .
மிக நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த மிக நெருங்கிய உறவொன்றை சந்திக்கப்ப்போகிறேன் ...
அதோ தொலைவில் புள்ளியாகத் தெரிய ஆரம்பித்த...... அட !..என்ன இது ??? ...முட்செடிகளின் நடுவே ...அருகில் நெருங்கக் கூட பாதையின்றி பராமரிப்பின்றி பரிதாபமாக அந்தக் கிணறு ...

வேகமாக வண்டியை முட்செடிக்குள் திருப்புகிறேன் ....
இருபக்கமும் ‘க்ரீச், க்ரீச்’ எனக் கோடுகள் விழும் சப்தம் கேட்க , குழந்தைகளும் , வீட்டம்மாவும் என்னை ஒரு சித்தம் கலங்கியவனைப் பார்ப்பது போல பார்க்க ஆரம்பிக்கிறார்கள் .( வண்டியில் யாராவது சாய்ந்து நின்றாலே ஓடிவந்து துடைத்துவிட்டு ...சத்தம் போடுவேன் நான் ).

பதைபதைப்போடு இறங்கி ஓடிச் சென்று பார்க்கிறேன் ....
அந்தக்கிணறா ? அளவில் பாதியாக ... அன்று சதுரமாக , பாறை விளிம்புகளோடு அங்கங்கே உக்கார, தொங்கி ஏற வசதியாக இருந்தது ..இன்று சிமெண்ட் வைத்து ..வட்டமாக மொழுமொழுவென்று ..சுருங்கிப்போய்...கிளவியை அலங்கரித்ததுபோல :(((




aqw (164).gif#அன்னிக்கு ரெட்டைக் கெணறு உண்டு எங்கூருல
பகலில் சாப்பாட்டு நேரம்போக எங்க குடியிறுப்பே இங்குதான் ...

ஒண்ணு குடிதண்ணிக்கு , இன்னொண்ணு குளிச்சுக் கும்மாளமடிக்க ....

20 -30 அடி ஆழத்துல பளிங்குத்தண்ணீ ...
அதுக்கும் கீழே 20 அடிக்கும் பளப்பளான்னு தெரியும் செதில்செதிலான பாறைத்தரை...
பெரிய மீசையோடு கெளுத்திகல் , திட்டீர்னு சாய்ந்து கண்ல லைட் அடிக்கும் கெண்டைகள் ...
ஆழத்தில் ஓட்டையிலிருந்து தலையை அப்பப்போ நீட்டும் தண்ணிப் பாம்புகளோடு ..
நாங்களும் தண்ணி மட்டத்துல கெணத்துக்குள்ள உக்காந்து மேலே பாத்திருக்க ..

அங்கே கைப்பிடிச் சுவருக்கெ மேலே நீட்டிக்கிட்டு இருக்கும் மரக்கிளைல கையத்தூக்கி கும்பிட்ட போஸ்ல அசையாம நிக்கிறான் அவன் ....

ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் திடீரெனக் கிளம்புகிறான் ..
காலுக்குக் கீழே பூமி நழுவ ..
(ஒரு பாலே நடனக்காரரின் திறமையோடு) கால்கட்டைவிரல் தண்ணீரில் முதலில் நுழைய ....
மிகச்சிறிய தண்ணீர் சிதறல்களோடு... வெண்ணைக்குள் கத்தி இறங்குவதுபோல ...
விசுக்கென(ஒரு 5* சாய்மானத்தில்) (ஒலிம்பிக் ‘ஃப்ரீபோர்டு டைவிங் போல)
தரையைத் தொட்டு , காலால் உடல் எடையைத்தாங்கி.. கொஞ்சம் கால் மடக்கி...
உந்தி மேலே தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வெற்றிக் களிப்போடு வெளியே வர .....

( இதுக்குப் பேரு கடப்பாரை சொர்க் . .. ‘ மக்கா ..ஒரு சொர்க் அடிடா ‘ )

ஆரவாரத்தோடு ’எலேய் .. மக்கா ..சித்தப்பூ, மாமோய்...’ என கேலியும் கிண்டலும்மாய் பாசத்தால் நிரம்பி இருந்தது அந்தக் கிணறு அன்று ..........

இன்றும் நிரம்பித்தான் இருக்கிறது கிணறு ....கவனிப்பாரின்றி ....பச்சைக் கறைபடிந்து..... ’பாச’த்தால்
-- வாரீங்களா ..வாரீங்களா ???

Friday, October 28, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன்


”ஏவுலா. .... எனக்கு நம்ம சாதிசனத்தையெல்லாம் பாக்கணும் போல இருக்கே ........!”
வீட்டுப் பெரிசு முகத்தைச் சுருக்கிக்கிட்டு....
லேசா நெஞ்சைத் தடவியபடியே மெதுவா கெளவிகிட்டேசொல்லி வைக்க ......

திகுதிகுகென பத்திக் கொண்டது அது ...

எலேய்....மக்கா....
கெடாவப் பிடிச்சுக் கெட்டிப்போடு ......
கோயில் கொடக்காலை நட்ட ஓடு ........

கொலசாமிக்கு கொடைய கொடுத்த மாதிரியும் ஆச்சு...
எல்லா பயபுள்ளையையும் பாத்தமாதிரியும் ஆச்சு “

ஒண்ணு கூட விட்டுப்போகாம எல்லா வளவுக்கும் போனைப் போடு.........”


அடுத்து அங்கே ஒருமாசத்துக்குத் திருவிழாதான் ....

விவசாயத்துல மானமும் பூமியும் சேர்ந்து ஏமாத்துன பின்னால , சோர்ந்துபோயிருந்த பெரிசுகளே துள்ளிக் கெளம்பீருமுன்னா எளசுகளைக் கேக்கணுமா என்ன ?

கடனவொடன வாங்கியாவது .....வீட்டுக்கு வெள்ளையடிச்சு , புது டீப்லைட்டு மாட்டி , எட்டடி கூடத்துல முடிஞ்சா பேனையும் மாட்டி , புல்லட்டுக்கும் , ட்ராக்டருக்கும் பெயிண்ட் அடிச்சு, சைக்கிளுக்கு டயர்டீப்பு மாத்தி, புதுத்துணியும் , செருப்புமா சொந்தங்களை எதிர்பார்த்து ( முக்கியமா அத்தப் பொண்ணு, மாமன் பையன் :) அமர்களமான வாழ்க்கை ஆரம்பமாகும்.

‘ஆமால்ல..என்ன இருந்தாலும் நம்ம பவுச வுட்டுக் கொடுக்கமுடியாதுல்ல ’

சுருக்குப்பை முடிச்சை அவுத்து , சேகரிப்பை கையிலக் கொட்டி , கொழுந்துவெத்தல / கொட்டப்பாக்கு/ கொஞ்சம் போயல/சன்னமா சுண்ணாம்பும் சேர்த்து, பொக்கைவாய் அம்மாயி/ பல்லுபோன அப்பத்தாக்களின் கைக்குள்ளே இடிஉரல் முழங்கத் தொடங்க , செவந்த இடிவெத்திலைக்கு சின்னஞ்சிறுசுகள் வரிசையில் நிக்க....

சீரியல்பல்ப்பும் , சிரிப்பும் கும்மாளமுமாய்..............


வணக்கம் உறவுகளே .....
நகரமேல்த்தட்டு மக்களின் கெட்டுகெதர் போல,
கோவில் திருவிழா / கொடை விழா - இதுதான் கிராமத்துமக்கள் ஒண்ணுமண்ணா தங்களுக்குள் கலந்து கொள்ளும் ஒரு சடங்கு /வைபவம்/ நிகழ்ச்சி ...எப்படி வேணா எடுத்துக்கலாம் :)

இதுதான் நாம் மறந்து/துறந்து வரும் நமது உண்மையான பூலோகச் சொர்க்கம்....
இது எங்கோ மிகத் தொலைவில் எல்லாம் இல்லை .. நமக்கு அருகிலேயே தானிருக்கிறது ....தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது .......

நாம்தான் முகவரியைத் தொலைத்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு ... எதையும் தொடராமல்/தொடாமல் விலகி/விலக்கி வருகிறோம்
நாளடைவில் இந்த சொர்க்கம் இருந்ததற்கான தடம்கூட நமதுகுழந்தைகளுக்கு தெரியாமல் போகக் கூடும்

சிறிது நேரம் ஒதுக்கி என்னோடு வாருங்கள் ..என்னால் முடிந்த அளவுக்கு உங்களை அங்கே அழைத்துச் செல்ல முயல்கிறேன் ...

1.சொர்க்கத்தின் நுழைவாயில் :
இந்த இடம் வந்தவுடன் அம்மா/அப்பா கையை உதறிவிட்டு இறங்கி ஓடுவோம் .. தண்ணீதேங்கி இருக்கும் அந்த ஓடையைத் தாண்டும் முன் கால்முழுக்க களிமண் அப்பிக்கொண்டு ‘சகதி சூ’ ஓட்டுக்கும் ...:))
விரல் இடுக்கெல்லாம் நுழைந்து கால் 4 மடங்கு பெருதாக , யானைக்கால் போல காலைத்தூக்கிவச்சு நடப்போம். காலைச் சரியாக்க ,சகதியை உதற ..அது அப்பா / பக்கத்துல உள்லவங்க சட்டை வேட்டியெல்லாம் தெறிக்க ....
அப்பா முறைக்க , அந்த நாளின் ஆரம்பமே ‘முதுகில் டின்’ னோடத்தான் தொடங்கும் :))

(இன்று காரில் அந்த இடத்தைக் கடக்கும் போது எதையோ இழந்ததுபோல உணர்ந்தேன் ...
எனது குழந்தைகளுக்கு இந்த ‘சகதிச் செருப்பு’ என்றால் என்னவென்பதே தெரியாமல் போனது )

.
எங்கூட வருவீங்களா ? மாட்டீங்களா.....................?

Thursday, April 14, 2011

எனக்குள் இருப்பவன்...தேடிப்பாருங்கள் ...உங்களுக்குள்ளும் இருப்பான் ......!

ஒரு பயணத்தின் முடிவில்..........

தூத்துக்குடி.....
மூன்றுபக்கமும் தொழிற்சாலைகளாலும் , ஒருபக்கம் துறைமுகத்தாலும் சூழப்பட்ட தொழில் நகரம் ....
’மால்கள் , காம்ப்ளக்ஸ்கள்’ என அல்ட்ராமாடர்ன் சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் நகரம் ...

வெளியூர் சுற்றுப்பயணம் முடித்து காலையில்தான் வீடுவந்து சேர்ந்திருந்தேன் ..அம்மா ஒரு திருமண அழைப்பிதழோடு வந்தார் .

“தம்பி ..(என்னை தம்பி என்றுதான் அழைப்பார் ) ...ஒரு முக்கியமான கல்யாணம் ... போயிட்டு வந்திரலாம்” என்றார் .

எனக்கு சிறிது அசதியாக இருந்தாலும் சரி எனக் குளித்துக் கிளம்பினேன் .
காரில் ஏறும்பொழுது மெல்ல ”குலசாமி கோயில்ல கல்யாணம் .கார் கோயில் பக்கம் வரைக்கும் போக வழி கிடையாது “ என்றார் ...
”ஓ! ... நடக்கணுமா??? .. அப்போ என்னால வரமுடியாது .... நீங்க போய்ட்டுவாங்க ”என்று இறங்க ஆரம்பித்தேன் .

சட்டென என் கையைப் பிடித்து உக்கார வைத்தார்

” கண்டிப்பா போகணும் ...அப்பா வழியில் பையன் நெருங்குன சொந்தம் ..சென்னைல இருந்து இங்கே வந்திருக்காங்க ...பொண்ணு உங்க தாத்தா வழி (அம்மா வழிச் சொந்தம் ) ...கயத்தாறில் இருந்து வந்திருக்காங்க .....இங்கே கோயில்லதான் செய்யணுமுன்னு வேண்டுதலாம்... நமக்கும் தலைக்கட்டு உண்டு....சீக்கிரமா போய்ட்டு வந்திடலாம் “ என்றார் ....

தட்டமுடியவில்லை எனக்கு ....அரை மனதோடு கிளம்பினேன் அவர்களோடு
”அரைமணி நேரத்துக்கு மேலே இருக்க மாட்டேன் .எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்குது .இப்போவே சொல்லீட்டேன்” என்ற கண்டிசனோடு

15 நிமிடப் பயணம்தான் ..இடம் வந்துவிட்டது
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம்.. இந்த இடம் பற்றிக் கேள்விதான் பட்டிருக்கிறேன் ...நேரில் இதுவரைக்கும் வந்ததில்லை....
மாடிவீடுகளுக்கு நடுவே ....ஒரு சிறிய பாதை..முடிவில் ஒரு வாழைத் தோரணத்துடன் ஒரு சின்ன அலங்கார வளைவு வரவேற்றது ...
இருவர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழையுமளவுக்கு சின்ன வாயில் ......

உள்ளே நுழைந்த எனக்கு ஆரம்ப அதிர்ச்சி காத்திருந்தது ...

அட....ஊருக்கு நடுவில் இப்படி ஒரு இடமா ???? உள்ளே சிறிய பூடத்துடன் கூடிய சுடலைசாமி கோவில்...முன்னால் பரந்து விரிந்த மரங்கள் அடர்ந்த தோட்டம் போன்ற அமைப்பு ..... பக்கத்தில் இருப்பவர் பேசுவது கேட்காத அளவுக்கு பலவிதமான பறவைகளின் குரல்கள் .......அவ்வப்போது விழுந்து சிதறும் எச்சம்....
முகம் சுழித்தபடியே உக்காரும் இடைத்தைத் துடைத்துவிட்டு அமர்ந்தேன்..

அடுத்து.........
கையைப் பிடித்துக் கொண்டு ”அப்பா போலவே இருக்கியே ராசா” என கண்ணத்தைப் பிடித்து இழுத்து உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்த பாட்டிகள்......
எல ...இவனப்பாருல ... டவுனுக்குள்ள இருந்துக்கிட்டு நம்மூருப் பயமாதிரியே திரியறான் ‘ ( பெரிய மீசை வைத்திருக்கிறேனாம் !!) என கையைப் பிடித்துக் கொண்டு கிண்ண்டலடிக்கும் தாத்தாக்கள் ,பெரிசுகள்......

’ஏவுலா... ஆத்தா...அப்பத்தா....பூட்டி...கொளுந்தியா....மச்சான்...’என காதைச் சுற்றிலும் உறவுமுறைகள் துள்ளிவிளையாடும் நாகரீகம் துளியும் கலக்காத வெள்ளந்திப் பேச்சுவார்த்தைகள் ......

என்னை அப்படியே வேரோடு புடுங்கி ...எங்கோ நாடுகடத்தி.....ஏதோ ஒரு கிராமத்துக்குள் நட்டு வைத்ததைப் போல உணர்ந்தேன்...எனக்குள் எங்கோ புதைந்துகிடந்த ஏதோ ஒன்று பொங்கி எங்கும் பரவுவதையும் நன்றாகவே உணர்ந்தேன் ........

நகர வாழ்க்கையில் சுத்தம் ,சுகாதாரம், நாகரீகம் என்று பெயரால் அண்டை மனிதர்களிடம் இருந்து விலகியே பழக்கப் பட்டுவிட்டேன் ...இப்பொழுது இந்த பாசமான வருடல்களும் , கைப்பிடித்தல்களும், தாங்கல்களும் எனக்கு ஒரு புதிய உலகினைக் காட்டிக் கொண்டிருந்தது ....... நான் இது நாள் வரையில் ஒர் உன்னதமான வாழ்க்கைமுறையை மிகவும் இழந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது .......

மிக எளிமையாய் திறந்த வெளியில் திருமணம்... மணமக்கள் முன்னிலையிலேயே சாப்பாடு ....
சாப்பாடு முடிந்து பழைய நினைவுகளை அசைபோட்டபடியே பெரிசுகள்..எனது முன்னோர்களைப் பற்றி கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்க .......ஒரு வார்த்தை சொல்லாமால் அத்தனையையும் திறந்த வாய் மூடாமால் கேட்டுக் கொண்டிருந்தேன் ..அவர்களுக்குள் ஒன்றிப் போயிருந்தேன் ....

நான்கு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை ........
அம்மா மெதுவாக வந்து ‘‘ தம்பி போவோமா ? “ எனக் கேட்டார் ....

மெல்ல சிரித்து ...’’என்ன அவசரம் ...இருங்கம்மா ..போகலாம் ’‘என்றேன் .....

அனைத்து சடங்குகளும் முடிந்து , அனைவரையும் வழியணுப்பிவைத்துவிட்டுக் கிளம்பி வீடு வந்து சேரும் போது மணி மாலை 5 ....

எதையோ இழந்தது போல மனம் கனக்க வண்டியிலிருந்து இறங்கினேன் ...
குழந்தைகள் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு என்னைப் பார்த்து கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் ....

எதுவும் புரியாமல் கண் சுருக்கிஎன்ன என்பதுபோல அவர்களிப் பார்க்க

கடைக்குட்டி “அப்பா ...சட்டைல காக்கா ஆயி “ என சத்தமாகச் சொல்ல ..(தோள்பட்டையில் ஏதோ ஒரு பறவையின் எச்சம் )....அதைக்கேட்ட மற்ற குட்டிப் பிசாசுகள் அனைத்தும் திசைக்கொன்றாகப் பறந்தன ...
நான் தொட்டுவிடக் கூடாதாம் ..தொட்டால் அவர்கள் குளிக்க வேண்டுமாம் .......

மற்ற நேரமென்றால் பதறி உடனே அந்தச் சட்டையைக் கழற்றி வீசி இருப்பேன் ....
அன்றென்னவோ தெரியவில்லை.....சட்டையைக் கழட்ட எனக்கு மனமே வரவில்லை........
அப்படியே நின்று கொண்டிருக்கிறேன்..............

ஏன் எனவும் புரியவில்லை!!!!!
என்னவாயிற்று எனக்கு ?????

உங்களுக்காவது தெரியுமா ????


இணைப்பு :
சில அலைபேசிப் படங்கள் :

வரவேற்ற (மறைந்துபோன) ஒலி பெருக்கி ....................தெய்வமாகிப் போன மரம் (வரலாறு இருக்கும்)
24032011(039)a.jpg 24032011(013)a.jpg

மணமக்கள் .(திறந்தவெளி மேடை )..............................திறந்தவெளி சாப்பாட்டுப் பந்தி
24032011(002)a.jpg 24032011(006)a.jpg

எளிய உணவு................................................................... நலம் விசாரிப்பு
24032011(007)a.jpg 24032011(016)a.jpg

கிண்டல் பேச்சுகள்....................
24032011(020)a.jpg 24032011(015)a.jpg

100 ஆண்டுகள் கடந்த நுரைக்கல் கிணறு......................கொடுக்காப்புளி ( நான் நிறைய பொறுக்கி சாப்பிட்டேன் :))
24032011(012)a.jpg 24032011(025)a.jpg

அடர்ந்த தோப்பு ...............................................................குழந்தைகளின் வழக்கமான சேட்டை :))
24032011(017)a.jpg 24032011(024)a.jpg

தலைமுறை.......................................................................மணமக்கள்
24032011(033)a.jpg 24032011(038)a.jpg

Monday, November 23, 2009

நான் ! மிகப்பெரியவன் நான் !!


சமூகத்தில் உயர்ந்த நிலையில் நான்

சான்றோர் நிறைந்த சபையில்
மேடையில் தலைமை தாங்கியிருக்கிறேன்
நிறைவு உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்

திடீரெனத் தடைபடுகிறது எனதுபேச்சு
தாமதமாக விடைபெறுகிறது எனதுமூச்சு

கீழேக் குழுமியிருக்கும் கூட்டத்தில்
தள்ளிக்கொண்டு என்னை நோக்கித்
தாவிவர முயல்கிறார் ஒருபெரியவர்

கலைந்த தலையும்
கசங்கிய உடையுமாய்,
மடித்துக்கட்டிய வேட்டியும்
மழிக்காத தாடியும் ,
மஞ்சள்ப்பை கக்கத்திலுமாய்....

எங்கோ பார்த்த முகம்? - ஆம்!
எங்கள் கிராமத்துக்காரர் அவர்
பால்ய வயதில் எங்கள்
பக்கத்து வீட்டுக்காரர் அவர்..

வரும் வேகம் பார்த்தால்
விவகாரமாகத்தான் படுகிறது

என்னவோ கேட்கப்போகிறார்
என்னிடம் என்னவோ கேட்கப்போகிறார்

பணமாகக் கேட்டால் பதுங்கிவிட வேண்டும்
உதவியாகக் கேட்டால் உதறிவிட வேண்டும்
கடனாகக் கேட்டாலும் கைகழுவி விடவேண்டும்

சிபாரிசு ஏதும்கேட்டு
சிக்கலில் மாட்டி விடுவாரா
கட்டிப்பிடித்து கூட்டத்தில்
கேவலப்படுத்தி விடுவாரோ

என்னவாக இருக்கும்
எனக்குள் ஏனிந்த இறுக்கம்

உரையைப் பாதியில் முடித்து
வேறு பாதையில் கிளம்புகிறேன்

கடவுளே !
இதோ இங்கேயும் வந்துவிட்டார்
வேறுவழி இல்லை
சந்தித்தேதான் ஆகவேண்டும்
சமாளித்துதான் ஆகவேண்டும்

”தம்பி !
நல்லா இருக்கீங்களா ?
வீட்டுல ஆத்தா , தாயீ
புள்ளக் குட்டியெல்லாம்
சொகமா இருக்குதா ?

பருவத்துல ஏஞ்சேக்காளிய
பாத்தது போலவே இருக்கீங்க !
உங்க அப்பாவை அச்சுல
வாத்தது போலவே இருக்கீங்க !!

இன்னும் பழசெல்லாம்
இந்தப் பாவிப்பயலோட

மொடங்கிப்போன நெஞ்சுக்குள்ள
முங்கிப் போயித்தான் கெடக்கு !

தம்பி .....
அதான் சொர்க்கம் ‘’


சொல்லி முடித்துவிட்டு
கண்களைத் துடைத்துக்கொண்டு
தனக்குள் ஏதோபேசிக்கொண்டே

வந்தவழியில் திரும்பி
இலக்கில்லாமல் நடக்கிறார் அவர்

ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு
மறைந்துபோய் விட்டார் அவர்
ஒருவார்த்தைப் பேசமுடியாமல்
உறைந்துபோய் நிற்கிறேன் நான்

அவர் தான் பெரியமனிதர் !

நான் ?????

.

Friday, August 28, 2009

மனமும் சேர்ந்தே விலைபோகும் இங்கே ...!


அது...
மனிதர்கள் பேரம் பேசும்..
மாடுகள் இடம் பெயரும்...
பெரும் பணம் கைமாறும்....
பெரிய மாட்டுச் சந்தை

இங்கே....
பொத்தி பொத்தி வளர்த்து
பெயர் வைத்து அழைத்து
குழந்தைபோல பாதுகாத்து
குடும்பத்துள் இணைத்து

வளமாய் வாழ்ந்து பின்
வஞ்சிக்கப்பட்ட மனிதரின்
வயிற்றுப் பிழைப்புக்காக
விலை பேசப்படும் மாடுகள்

முடிந்தபின்...
பணம் நிறைந்து இருக்கும் பைகளில்
மனம் நிறைந்து இருக்கும் வெறுமையில்
கட்டியிருந்த கயிறு மட்டும் கைகளில் - வீதியில்
கேட்டபடியே இருக்கும் மணியோசை காதுகளில்

"நல்ல வெலைக்குப் போச்சுது
நெறையப் பணமும் கெடைச்சது"

வெளியே சந்தோசமாய் சிரிக்கும்
வெளிச்ச முகமூடி மாட்டியபடி

'நல்ல இடத்துல சேருமா - இல்ல
அடி மாடாப் போயிருமோ'

கதறி உள்ளே அழும்
சிதறிய ஊமை உள்ளங்கள் .

ஓரமாய் ஆணியில் தொங்கும்
காற்றில் மெதுவாய் அசையும்
கழுத்து மணியின் ஓசை
ஆலய மணியின் அலறலாய்
அடிமனதுள் இறங்கும்.

தொடரும் வாரங்களிலும்
தொடர்ந்து வலம் வரும்
தொடர் அவலம் இங்கே !

அதே சந்தைதான்..
அதே வறுமைதான் !
வேறு மனிதர்களோடு..
வேறு மாடுகளோடு !!

Sunday, January 18, 2009

ரெய்ன்,ரெய்ன் கோ அவே...!!


மாரி மழை பொய்த்து விட்டது
மானாவாரியும் ஏய்த்து விட்டது
வயல் வரப்புக்குள் எங்கும் நிறைந்து
வெறுமையே வியாபித்திருக்கிறது

ஏழை எங்கள் பிழைப்பு எல்லாமே
மழையை நம்பித்தானே இருக்கிறது
வானம் பார்த்த பூமியெல்லாம்
தினம் ஏங்கும் எங்க மனம்போல
வரண்டுபோய்த் தான் கிடக்கிறது
இருண்டுபோய்த் தான் இருக்கிறது

வீட்டிற்குள் இன்றும் இடி மின்னல்
வீதியில் நின்று சத்தமிடுகிறாள்
விதியை நொந்து சமாளிக்கிறேன்

"ஒரு மழை வந்தாலே போதுமே
இரு போகம் நல்லாவே வெளஞ்சிருமே
கொஞ்சம் பொறுமை காத்தா
மிஞ்சும் காசு பாத்திரலாம்
கொஞ்சம் பொறு ஆத்தா"

கெஞ்சி அவள் முன் நிற்கிறேன்

ஆசைமகனை அடுத்த ஊர்
ஆங்கிலப் பள்ளீயில் சேர்க்க
அவதாரமெடுத்து ஆடுகிறாள்

"போதுமே ஒங்க ஒழப்பு
இதுவுமா ஒரு பொளப்பு
என்னன்னுதான் படிச்சீங்க
என்னத்தப் பண்ணி கிழிச்சீங்க"


விசத்தை வார்த்தையாக்கி
வாய்வழியே கொட்டுகிறாள்

"வெசயம் தெரியாம பேசாதீங்க
வெவசாயமே வேணாமுங்கிறேன்
உழவு மாடு மட்டுமெதுக்கு
உடனே வித்திட்டு வந்து சேருங்க"


எளியவன் சொல் எதுவும்
ஏறவில்லை அம்பலத்தில்
எல்லாம் முடிந்துவிட்டது
மாடு விற்ற பணப்பையோடும்
மறு கையில் பையனோடும்
பள்ளி நோக்கி செல்கிறேன்

உச்சிவேளைப் பொழுதில்
உச்சந்தலையின் நடுவில்
நச்சென விழுகிறது ஒரு துளி
உள்ளே சோர்ந்து போயிருந்த
உயிர் உறக்க விழிக்கிறது
மழையோ என எதிர்பார்த்து
மேலே நிமிர்ந்து பார்க்கிறேன்
கறைபடுத்தி விட்டு காகம் ஒன்று
கடந்து போய்க் கொண்டிருக்கிறது
சொர்ப்ப நேரமானாலும்
சொர்க்கத்தைக் காட்டிய
காக்கையிடம் நான்
கடவுளையே உணர்கிறேன்

பள்ளியினுள் நுழைகிறேன்
பாடம் நடந்து கொண்டிருக்கிறது
மொத்தமாய் சேர்ந்து குழந்தைகள்
சத்தமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

"ரெய்ன் ரெய்ன் கோ அவே..
ரெய்ன் ரெய்ன் கோ அவே ..."


என்ன நிகழ்ந்தாலும் சரி
எந்த விளைவுக்கும் தயாராகிறேன்
வந்த வழியே திரும்புகிறேன்
இந்தப் படிப்புமட்டும் என் குழந்தைக்கு
வேண்டவே வேண்டாம்

Thursday, January 8, 2009

மண் வாசம்..!!


அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்
அனுமதி இல்லை பிறருக்கு

இயற்கை விவசாயம் செய்துகொண்டு
இல்லாதோர்க்கு உதவிக் கொண்டு
இயங்கிக்கொண்டிருந்தார் முடிந்த மட்டும்

இன்று இயந்திரங்களின் உதவி கொண்டு
இறுதி மூச்சைப் பிடித்துக் கொண்டு
இயங்கிக் கொண்டிருக்கிறது உடல் மட்டும்

உள்ளே செயல் இழந்த நிலையில் பெரியவர்
வெளியே செய்திக்காக காத்திருக்கும் உரியவர்

அங்கும் இங்குமாய் பதட்டத்தோடு
அலைந்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பல திட்டத்தோடு
அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்

அவசரமான நகர வாழ்க்கை
அவரவர் கவலை அவரவருக்கு

"சொத்து பிரிச்சு கொடுக்காம பெரிசு
செத்துப் போயிசேந்திருமோ?"

"மருந்துக்கு செலவு செஞ்சே கை
இருப்பு கரஞ்சுக்கிட்டே வருதே?"

"இன்னும் எத்தன நாளு தான்
இங்கே காத்துக் கெடக்க வேணுமோ?"

"விடுமுறை முடியப்போகிறதே
விடுதலை எப்பத்தான் கிடைக்கும்?"

"புள்ள குட்டிய விட்டுட்டு வந்திருக்கோமே
மெல்ல ஒரு எட்டு பாத்திட்டு வந்திருவோமா?"


பலதரப்பட்ட மனிதர்கள்
பலவகையான கவலைகள்

மெல்ல வெளியேவந்த மருத்துவர்
மொத்தமாய் கையை விரிக்கிறார்
"ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்
ஒருமணிக்குள் முடிந்துவிடும்"


அனைவரும் மொத்தமாய்
அவர்முன் கூடி நிற்கிறார்கள்
கசிந்த செய்தி கேள்விப்பட்டு
கதறலோடு வந்து சேருகிறான்
கடைக்குட்டி அவன் கிராமத்திலிருந்து

அவன் உள்ளே நுழைந்ததும்
அங்கே சூழலே மாறிப்போய் விடுகிறது
அனைவரும் முகம் சுழிக்கிறார்கள்
அவனைப் பார்த்து முறைக்கிறார்கள்

சுற்றிலும் சூழ்ந்து நிற்கிறது
சுத்தமான மண் வாசம்
களத்திலிருந்து நேராய்
கிளம்பி வந்திருக்கிறான்

அப்போதுதான் அது நிகழ்ந்தது!
அய்யாவின் கைவிரல் அசைந்தது!!

Sunday, October 12, 2008

கோழி இறகு-சொர்க்கத்தின் சாவி


பலநாள் யோசித்து
பதுங்கி இருந்து
திட்டம் போட்டு
தேர்வு செய்து
விரட்டிப் பிடித்து
இறகு பறித்து
தேவை இல்லாத
பாகம் விடுத்து
ஓரம் அமர்ந்து
காது நுழைத்தால்
அட! அட!!
தெரியுதே சொர்க்கம்!!!