Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Sunday, December 27, 2009

மழைக்கு ஏங்கும் நிலம்போல....


வானம் பார்த்தே
வருடமெல்லாம் வாய்ப்பிளந்து
வறண்டு தகிக்கும் பொழுதில்
வராது வந்து சேர்ந்த
கோடைமழையின் சாரலில்
குளிர்ந்து குதூகலிக்கும் வேளையில்..

கலையத் துவங்கும் மேகம் கண்டு
கலங்கி மேலும் தகிக்கத்
துவங்கும் நிலமாய்………

விடுமுறை முடிந்து
விமானத்தில் ஏறி
சன்னல்வழி வெளியே
கைகாட்டும் பொழுது
தவித்துத் துடிக்கத்
துவங்கியது மனசு ........

.

Friday, May 29, 2009

அயலகத்தில்,குழப்பத்தில் நான்.......



வெள்ளைத் தலையோடு
துள்ளிவரும் குமரிகள் !
வெண்ணையாய் வழுக்கிவரும்
வெண்பஞ்சு வாகனங்கள் !!
அயலகம் என்பது தானா
பூலோகத்தின் நடமாடும் சொர்க்கம் !!!

ஆயிரம் பேருக்கு இடையே
அந்நிய நாட்டவன் எனக்கு
அலுவலத்தில் பதவிஉயர்வு

அயராத உழைப்பிற்கும்
தளராத கட்டுப்பாட்டிற்கும்
கடவுள் தந்தபரிசு தானிது

ஐந்து நட்சத்திர உணவகம்
அனைத்து நண்பர்களுக்கும்
அலுவலகத் தோழர்களுக்கும்
ஆரம்பமானது ஆர்ப்பாட்ட விருந்து

மிகுதியான மனநிறைவையும்
வசதியான பணயிருப்பையும்
நண்பர்களிடம் நான் காட்ட
நல்ல தருணம் தான் இது

எதிர்பாராத வேளையில் திடீரென
எனது தட்டின் உள்ளிருந்து
முள் கரண்டிமுனையில் சிக்கி
கையில் வந்த கறுப்புமுடி
கவனத்தைக் கலங்கவைக்கிறது
சிந்தையைச் சிதறவைக்கிறது

எனதுயர் கோபமறிந்த
எனதுயிர் நண்பர்கள்
நிகழப்போவதை நினைத்து
திகைத்துப்போய் நிற்கிறார்கள்

நானோ எனக்குள் நூறுகூறாய்
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்
எனைச்சுற்றி நிகழ்வதை மறந்து
எதற்குள்ளோ மூழ்கிக்கொண்டிருக்கிறேன்

முள்கரண்டியும் கறுப்புமயிரும் கூடி
முள்தூண்டிலும் நரம்புமாய் மாறி
ஆழ்மனதுக்குள் நங்கூரமாய் இறங்கி
ஆழப்பதிந்து நகர மறுக்கிறது

கறுங்கூந்தல் கடலில் நாளெல்லாம்
கண்மூடி மூழ்கிக்கிடந்த நினைவுகளை
கண்டம் கடந்து இழுத்து வருகிறது
கடந்த கனவுகளைக் கடத்தி வருகிறது

மனதுக்குள் வெளிறி
மெதுவாய் எழுந்து
மெல்ல வெளியேறி
மவுனமாய் நடக்கிறேன்

கோழியின் சிறகனைப்பில் சின்னக்குஞ்சுகள்
குஞ்சுகளுக்கு இரையூட்டும் சிட்டுக்குருவி
குட்டிகளோடு அலையும் வீட்டுப்பூனை
கூடி அலையும் அன்னப்பறவை
கூட்டமாய்த் திரியும் அண்டங்காக்கை

எதைப் பார்த்தாலும் எனக்குள்
என்னென்னவோ செய்கிறது மனதுக்குள்

என்ன ஆயிற்று எனக்கு??
என்ன செய்ய வேண்டும் நான்???

Wednesday, April 29, 2009

குட்டி ஆசைதான், நிறைவேறுமா....?


இரவு கடக்க ஈசலுக்கு ஆசை
இலவு பழுக்க கிளிக்கு ஆசை
நிலவு தாண்ட முகிலுக்கு ஆசை
எழுந்து நடக்க நிழலுக்கும் ஆசை

இருட்டை பார்க்க ஒளிக்கு ஆசை
வளையாமல் இறங்க மின்னலுக்கு ஆசை
உதிராமல் இருக்க மலருக்கு ஆசை
மதியம்வரை இருக்க பனித்துளிக்கும் ஆசை

காலையில் உதிக்க நிலவுக்கு ஆசை
தேய்ந்து வளர சூரியனுக்கு ஆசை
அமாவாசைப் பார்க்க சந்திரனுக்கு ஆசை
மாதமொரு விடுப்பெடுக்க கதிரவனுக்கும் ஆசை

ஒருநாள் ஓய்வெடுக்க பூமிக்கு ஆசை
ஓடாமல் இருக்க ஓடைக்கு ஆசை
நனையாமல் இருக்க குடைக்கு ஆசை
நரைக்காமல் இருக்க முடிக்கும் ஆசை

வேலைமுடிக்க உழைப்பாளர் சிலைக்கு ஆசை
சாலைதாண்ட தலைவர் சிலைக்கு ஆசை
ஓயாமல் அடிக்க ஆலயமணிக்கு ஆசை
தேயாமல் இருக்க செருப்புக்கும் ஆசை


எனக்கும்......

காலைவரை கண்மூடாமல் தூங்க ஆசை
கனவுக்குள் இறங்கி கால்நனைக்க ஆசை
கூட்டுக் குடும்பத்தில் கூடிவாழ ஆசை
காடுவரை கூடவரும் சொந்தம்பார்க்கவும் ஆசை

நல்லதோர் தலைமை பார்க்க ஆசை
நல்லதேர்தல் பார்க்க நெடுநாள் ஆசை
நல்லதமிழ் கேட்க நரம்பெல்லாம் ஆசை
நிலைத்து நிற்கும் செல்வத்துக்கும் ஆசை

நினைத்தது நடக்க நாளெல்லாம் ஆசை
இப்படியே நானிருக்க இன்னும் ஆசை

Saturday, March 28, 2009

பெரியது எது? இரண்டயிரமா,இருநூறா??........


சனிக்கிழமை இன்று
சாயங்கால நேரம்

தனித்தனியாய் இருக்கும் நண்பர்கள்
இனிதாய் சந்தித்துக்கொள்ளும் நேரம்
சுழற்சி முறையில் நண்பர்களுக்காக
சும்மா செலவு செய்யும் நாள்

இதோ கிளம்புகிறேன் நான்
அதே கிழக்குகடற்கரைச் சாலை
மதிமயக்கும் மாலை விருந்தின்
மொத்தச் செலவும் என்னுடையது

அதிகமாய் இரண்டாயிரம் ஆகலாம்
ஆனாலும் அதுபற்றிக் கவலையில்லை

இரண்டு லட்சம் சம்பாதிக்கிறேன்
இதற்கென நண்பர்களுக்கென
இருபதாயிரம் செலவு செய்யலாம்
இருந்தாலும் அதிலொன்றும் தப்பேயில்லை

பளபளக்கும் புத்தம் புது
சலவை நோட்டுகளில் பத்தை
சட்டைப் பைக்குள் வைக்கிறேன்
சாவி எடுத்துக் கிளம்புகிறேன்

பணத்தைப் பூட்டி வைக்காமல்
பள்ளத்தில் பதுக்கி வைக்காமல்
புழக்கத்தில் பறக்க விடும்
பரோபகாரிகள் நாங்கள்

நண்பர்கள் படை சூழ
நெடுநேரம் கும்மாளமிட்டு
ஆள் தவறாமல் கும்மியடித்து
நல்லபடியாய் முடிந்தது விருந்து

ஒவ்வொருவராய்க் கிளம்பிச் செல்ல
ஒருவழியாய் வந்துசேருகிறது பட்டியல்
எதிர்பார்த்தபடியே இரண்டாயிரத்து சொச்சம்
எண்ணி முழுநோட்டுக்களை வைக்கிறேன்

மிச்சம் வரக் காத்திருக்கிறேன்
மீதிப் பணத்தையும் பட்டியலையும்
மேசைமேல் வைத்துச் செல்கிறார் அவர்
மனம்போல அன்பளிப்பு வைக்கிறேன்

அப்போதுதான் கவனிக்கிறேன்

மீதம் இருக்கவேண்டியதோ நூறு
முன்னால் இருப்பதோ முன்னூறு
சுற்றும் முற்றும் கணிக்கிறேன்
சுருட்டி பையில் வைக்கிறேன்

அவசரமாய்க் கிளம்புகிறேன்
அலுவலகம் வந்து சேர்கிறேன்
அதன்பின்தான் யோசிக்கிறேன்
ஏதோ தவறுதலாய் உணர்கிறேன்

எடுத்திருக்கக் கூடாதோ????
கொடுத்திருக்க வேண்டுமோ!!!!!

Wednesday, March 25, 2009

ஒரு கேள்விக்காவது விடை தெரிந்திருந்தால்......


எனது அப்பா
எண்பது வயது அப்பா
நான் குழந்தையாய் இருக்கும்போது
கோமாவில் விழுந்தஅவர் இப்போது
என்குழந்தையைப் பார்க்க எழுந்திருக்கிறார்

நாற்பது வருட எதிர்பார்ப்பு அது
நான்கு நாட்களாகிறது விடியல் பிறந்து

தனக்குள் முழ்கி இருந்த அவர்
தன்னைச் சுற்றி நடப்பதை அறிய
ஆர்வக் கோளாரில் அவரோடு
நகர் வலம் கிளம்புகிறேன்

இருவரும் தெருவில்
இறங்கி நடக்கிறோம்


பொதி சுமக்கும் கழுதைபோல
ஆள் உயர பையைத் துக்கி
பள்ளி செல்லுகிறார்கள் குழந்தைகள் !
நாற்பது பக்க ஏட்டை
நான்காய் மடித்து அதை
காற்சட்டைக்குள் சொருகி
வெறும் கையை வீசி
கல்லூரி வருகிறார்கள் மாணவர்கள் !!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

வழிநெடுக முளைத்து நிற்கும்
குழந்தைகள் நல மருத்துவர்கள்
பிரசவக் கால மருத்துவமனைகள்
"பிறப்பு எல்லாமே எளிதாகி இருக்குமே?" என்கிறார்
"சுகப் பிரசவமே கிடையாது இப்போது!" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

கருப்புச் சட்டையணிந்து கன்னிச்சாமியார்கள்
கடவுளுக்கு விரதமிருந்து கோவிலுக்கு வருகிறார்கள்
கருப்புச் சட்டையணிந்து கட்சிசார்பானவர்கள்
கடவுளுக்கு விரோதமாக கோசமிட்டுச் செல்கிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"சுதந்திரதினம், விடுதலைதினம் போல
காதலர்தினம் கொண்டாடுகிறார்களே?
காதல்மனம் எதிர்ப்போர் குறைந்து போயினரா??
கலப்புமணம் மறுப்போர் மறைந்து போயினரா???"
என்கிறார்
"உலகம் மாறவில்லை இன்னமும்!" என்கிறேன்

பிறகு ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

குழம்பிப்போய் இருக்கிறார் அவர்
குதூகலமாய் மாற்ற அவரை
புதுத்திரைப்படம் கூட்டிச் செல்கிறேன்

ஆடல் காட்சியில் பனிப் பிரதேசத்தில்
ஆண்கள் அனைவரும் முழு ஆடையோடு
கம்பளியும் சேர்த்து அணிந்திருக்கிறார்கள்!
பெண்கள் வெறும் உள்ளாடையோடு
காலணிகூட இல்லாமல் ஆடுகிறார்கள்!!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

ஆண்கள் அனைவரும் பாடல் காட்சியில்
அவரவர் குரலில்அமைதியாகவேப் பாடுகிறார்கள்
பெண்கள் மட்டும் முக்கி திக்கித்திணறி
ஆண் குரலில் ஆர்ப்பாட்டமாய்ப் படுத்துகிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

விதியை நொந்து சோர்ந்துபோய் இருக்கிறார்
வீடு வந்து சேர்கிறோம் இருவரும்

"பங்காளி சொக்காரன் சொந்தங்களைவிட
பக்கத்து வீட்டுக்காரன் மிகமிகமுக்கியம்!
என்னை அறிமுகப்படுத்து அவர்களிடம்"
என்கிறார்
"எனக்கே அறிமுகமில்லை இன்னமும்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"குழந்தை குட்டியுள்ள வீடெனில்
குயில் கூவும் தோட்டம்போல
ஆரவாரமாய் இருக்கவேண்டுமே!
ஆனால் இங்கே என்ன இது
கல்லறைத் தோட்டம்போல
அமைதியாய் இருக்கிறதே?"
என்கிறார்
"தொலைக்காட்சி பார்ப்பதால்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"அரசே மதுபானக்கடை நடத்துகிறதா?
அங்கே மதுவும் ஊற்றிக் கொடுக்கிறதா??

கணக்கில் வராத கள்ளப்பணத்திற்கு
காந்திக்கணக்கு என்ற பெயரா?

மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்
மிதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறதே?"


கேள்விகள்? கேள்விகள்?? கேள்விகள்???
கேட்டுக் கொண்டே இருக்கிறார்.........
கொஞ்ச நேரத்தில் யாரையும் கேட்க்காமலேயே
குழம்பிப் போன மனத்தோடும் முகத்தோடும்
கோமாவுக்குள் சென்றுவிடுகிறார் மறுபடியும்

நாற்பது வருடங்கள் நலமாய் இருந்தவர்
நான்கே நாட்கள் திரும்ப வந்து
இதுவரை இருந்த நிம்மதியையும்
இங்கே தொலைத்து சென்றுவிட்டார்

அவர் அப்படியே இறந்திருக்கலாமோ?
மறுபடியும் இங்கே
வராமலேயே இருந்திருக்கலாமோ????

Tuesday, March 24, 2009

கடவுளே ஆனாலும் காத்திருக்க வேண்டும் !....


ஒரு 'SPLIT PERSONALITY' யாக என்னை உருவகம் செய்து கொள்ளுங்கள்:
------------------------------------------------------

பிஞ்சபாய சுருட்டி மூலைல வச்சுட்டு
கரையுர காக்காவ சேலையால வெரட்டிட்டு
அரை இருட்டுல குளிச்சு முடிச்சிட்டு
கெடச்ச கஞ்சிய குடிச்சி தொடச்சிட்டு

ஆட்டையும் குட்டியையும் பத்திக்கிட்டு
மாட்டையும் கன்னையும் கூட்டிக்கிட்டு
எருமைய குட்டையில எறக்கி விட்டுட்டு
எல்லாத்தையும் மொத்தமா மேச்சுகிட்டு

வெறகு சுள்ளிய சேர்த்துகிட்டு
காட்டு வேலைய முடிச்சிட்டு
வீட்டப் பாக்க வந்து சேர்ந்துட்டேன்

புண்ணாக்க எடுத்துப் போட்டுட்டு
கழனித் தண்ணிய கலக்கி விட்டுட்டு
மூஞ்சி மோரைய நல்லா கழுவிட்டு
கைய காலயும் கொஞ்சமா அலசிட்டு

ஆத்தா மொகத்த அன்னாந்து பார்த்துகிட்டே
முத்தத்தில வந்து உக்காந்து இருக்கேன்

கைல கெடச்சத அள்ளி சேத்து
கொஞ்சமா தண்ணியயும் அதுல ஊத்தி
தட்ட என்முன்னால தரையில
தள்ளி வச்சிட்டுப் போறா என்ஆத்தா

தெளிஞ்ச தண்ணிக்கு உள்ளார
குனிஞ்சு நல்லா பாத்தேன் பாரு
ஒத்த ஒத்தப் பருக்கையா
முத்து முத்தாத் தெரியுது சோறு

"உத்து உத்துப் பாக்காத புள்ள
உள்ளே என்ன இருக்கும்ன்னு
அள்ளிப்போட்ட எனக்குத் தெரியும்
உள்ளத குடிச்சிட்டுப் போய்த் தூங்கு"

முடிய அள்ளிச் சொருவிக் கிட்டு
முனங்கிக் கிட்டே போறா ஆத்தா

என்னுள் இருந்த அவள்
கொஞ்சம் புரண்டு படுக்கிறாள்


"இரு கொஞ்சம் பொறு
இருட்டு நல்லா விலகட்டும்
முரட்டு மேகமும் களையட்டும்"


"கஞ்சியக் குடிக்கச் சொன்னா
கண்டதையும் பேசுதே இந்தக்
கிறுக்குப் பய புள்ள"

குறுகுறுவென பாத்திட்டே போறா ஆத்தா

காத்திருக்கிறேன் கண்கொட்டாமல்
கலைந்தது அந்த மேகக் கூட்டம்
கணநொடிக்குள் நிகழ்ந்தது மாற்றம்
எனக்கு உள்ளும்,புறமும்

எனக்குள் அவள் எழுந்து நிற்கிறாள்
எனது தட்டுக்குள் இப்போது
எல்லாமே வந்து சேர்ந்துவிட்டன
"வானத்து பால் நிலாவும்
வண்ண வண்ண வின்மீன்களும்
சிதறிக் கிடந்தன என்
சின்னஞ்சிறியத் தட்டுக்குள் !

இரவு உணவுக்கு இதோ
பால் சோறும்! மீன் கூட்டும்!
இதற்கு மேல் என்ன வேண்டும் !!
கடவுளும் கூட இதற்காகக்
காத்திருக்கத்தான் வேண்டும்!!!"


எல்லாம் முடிந்து விட்டது
எனக்குள் அவள் தூங்கிவிட்டாள்

பாய ஒதறி போட்டுட்டு
படுக்கப் போறப்போ மெதுவா
பயந்துகிட்டே சொல்லுதேன்
"நாளைக்காவது ஒருவேளைக்கு
நல்ல சோறு தா ஆத்தா"

Monday, March 23, 2009

ஆடை இருந்தும் அம்மணமாய்.....!


மிருகக்காட்சிசாலை அது

கூண்டுக்குள் காட்சிப்பொருளாய்
கூச்சத்தோடு மிருகங்கள்
வரிசையில் ஆர்வமாய்
வந்துசெல்லும் மனிதர்கள்

சிங்கம்
சுற்றத்தை அடக்கி ஆளும் - அதன்
சொந்தங்களை சேர்த்து வாழும்

நரி
அண்டி ஒண்டிப் பிழைக்கும் - கூடவே
இருந்து குழியும் பறிக்கும்

பாம்பு
பார்த்தால் பயந்ததுபோல ஓடும் - அதன்
நாக்கினில் விசமும் இருக்கும்

நாய்
நன்றியோடு இருக்கும் - சமயத்தில்
நல்லவரையும் கடிக்கும்

குயில்
சொந்த வீடில்லாத ஏக்கத்தை -அதன்
சோகக் குரலில் காட்டும்

யானை
எளிமையாய் இருக்கும் - ஆனாலும்
அதற்கு மதமும் பிடிக்கும்

குரங்கு
குட்டிச் சேட்டைகள் செய்யும் _ அசந்தால்
இருப்பதைப் பிடுங்கித் திண்ணும்

பூனை
கண்களை மூடிக்கொள்ளும் _ உலகமே
இருண்டதாய் எண்ணிக்கொள்ளும்

நெருப்புக்கோழி
தரைக்குள் தலை நுழைக்கும் _ தான்மட்டும்
தப்பியதாய் நினைத்துக்கொள்ளும்

ஐந்தறிவு விலங்குகள் ஒவ்வொன்றிற்கும்
அதற்கென தனித்தனியே சிறப்புக்குணங்கள்

ஆறறிவு மனிதன் நம்மிடம்
அப்படி என்ன சிறப்பு குணம்?

அட,ஆச்சரியமாய் உணர்கிறேன்!
அனைத்து குணங்களும் என்னிடமும்
அப்படியே மாறாமல் இருக்கின்றன!!


ஒருநிமிடம் எனக்குள் யோசிக்கிறேன்
மறுநிமிடம் அதிர்ச்சியாகி நிற்கிறேன்
"மிருகங்களின் மொத்த கலவையா நான்!
குறிப்பிட்டுச் சொல்ல எனக்கென
சிறப்புக்க்குணம் ஏதும் இல்லையா?"


கட்டணம்கட்டி வந்தேன் மிருகக்காட்சிசாலை!
நட்டநடுவில் காட்சிப்பொருளாய் நிற்கிறேன்!!
அனைத்து மிருகங்களும் பார்த்துகொண்டிருக்கின்றன
என்னை இப்போது இலவசமாக!!!

அத்தனைக் கண்களுக்கும் முன்னால்
ஆடையோடு இருந்தாலும் நான்
அம்மணமாய் உணர்கிறேன்

Saturday, March 14, 2009

அவனை விடக் கேவலமாய்....


அதிகாலைப் பொழுது
ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் நான்
அவனும் தயாராகி இருப்பான்
ஆரம்பமாகப் போகிறது எங்கள் ஊர்வலம்

தெருவுக்கு வந்து விட்டேன் நான்
தூரத்தில் காத்திருக்கிறான் அவன்
பெருமையோடு முன்னே நடக்கிறேன் நான்
பின் தொடர்ந்து வருகிறான் அவன்

இதோ ஆரம்பம் எங்கள் பயணம்
இனிவரும் ஒருமணி நேரம்
என் அருகில் எனக்கு எதிரில்
என் நிழலின் அருகில் கூட
எவரும் நெருங்கி வரமுடியாது

வாசல்வரை கொண்டு சேர்த்தபின் அவன்
விலகித் தன்வழிப் போய்விடுவான்
பத்து வருடமாய் தொடரும் நட்புக்கு
பதிலுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்

இத்தனை நன்றி காட்ட நான்
இவனுக்கு என்னதான் செய்துவிட்டேன்

முன்னம் ஒருநாள் இரவில்
சின்னஞ்சிறிய தாள் அளவில்
ரொட்டித் துண்டை வீசியதிலிருந்து
ஒட்டிக் கொண்டான் அன்றிலிருந்து

வீட்டிலும் வளர்க்கிறேன் நாய் ஒன்றை
வாசலைத்தாண்டி நான் வந்தவுடன்
வாலை லேசாய் ஆட்டி
காலை வாகாய் நீட்டி
கண்ணை லேசாய் சிமிட்டி
கவிழ்ந்து படுத்துக்கொள்ளும்

திடீரெனத் தடைபட்டது என் சிந்தனை ஓட்டம்
தெரு முனையில் அவனின் அலறல் சத்தம்
சுறுக்கு வலையில் சிக்கி அவன்
சுற்றிலும் நாய் பிடிக்கும் ஊழியர்கள்
ஒன்பதுபேர் இருந்தாலும் கூட
ஒருவராலும் நெருங்க முடியவில்லை

என்னைப் பார்த்தவுடன்
எப்படியும் காப்பேன்
என்ற எதிர்பார்ப்போடு
எதிர்த்து போராடாமல்
ஏக்கத்தோடு நிற்கிறான்

அமைதியாய் நிற்கிறேன் நானும்
அடுத்து என்ன செய்யவேண்டும்


அமைதியான அவனை அப்படியே
அடித்துத் தூக்கி கூண்டிற்க்குள் அடைக்கும்
அவர்களிடம் விடச் சொல்லிக் கேட்கலாமா?
அல்லது அப்படியே விட்டு விடலாமா?
இந்தப் பெரிய மனுசனுக்கும் தெரு நாய்க்கும்
இது என்னய்யா தொடர்பு என
ஏளனமாய்ப் பேசிவிடுவார்களோ?
என்வீடுவரை சொல்லிவிடுவார்களோ?

அமைதியாய் கூண்டுக்குள் நிற்கிறான் அவனும்
ஆயிரம் அதிர்ச்சி தெரிக்கிறது அவன் முகத்தில்

பலவருடம் பாதுகாத்த அவனுக்காக
சில நொடிகூட போராடாத என்முகத்தில்
இன்னும் எதையோ எதிர்பார்த்து
இமைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறான்

வண்டி அவனோடு மெல்ல நகர்ந்து
சின்னப் புள்ளியாகித் தொடர்ந்து
கண்ணிலிருந்து மறைந்ததே போனது

அவன் பார்வையிலிருந்தும் நான்
அர்த்தமில்லாத ஒற்றை புள்ளியாகி
அசிங்கமாகி மறைந்தே போய் இருப்பேன்

Tuesday, January 27, 2009

என்ன நினைத்திருப்பான்..?


விபத்து !
அப்போதுதான் நடந்திருக்கிறது!!
சிதறியப் பொருட்களால் அந்த இடமே
பதறிப் போய் இருக்கிறது!!!

இரண்டு வாலிபர்கள்
இருசக்கர வாகனத்தில்
நேருக்கு நேர் மோதி
இறந்து போய் கிடக்கிறார்கள்

அரசு மருத்துவமனையில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
முதலுதவிப் பகுதியில்
முதன்மை மருத்துவன் நான்

ஆயிரம் பிணங்களை நான்
அறுத்ததுத் தைத்திருக்கிறேன்
மரத்துப் போயிருக்கிறேன்ஆனாலும்

கண்முன்னே நேரடியாய்க் களத்தில்
காண்பது இதுவே முதல் முறை
என்றாலும் எனக்கு கலவரமாய்
எதுவும் தோன்றவும் இல்லை

தலைக் கவசமும் இடாமல்
தடம் மாறி வந்திருக்கிறான் இவன்
அலைபேசியில் பேசியபடி
அதி வேகமாகவும் வந்திருக்கிறான் அவன்

சாலை விதிகள் மயிராய் மதிக்கப்படதனால்
விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது

நின்று நிதானமாய் நான்
நிலமையை கணிக்கிறேன்
இறப்பதற்கு முன்னால் இருவருமே
எதற்காகவோ முயன்றிருக்கிறார்கள்

முதலாமவனைச் சுற்றிலும்
சிதறிய பணத்தைச் சேகரிக்க
முயற்சி செய்து பார்த்திருக்கிறான்
முடியாமல் இறந்து போயிருக்கிறான்

"என்னமாதிரியான உலகம்!
என்றுதான் ஒழியும் பணமோகம்?!"

எனக்குள்ளேயே யோசித்த நான்
எதிர் திசையில் கவனிக்கிறேன்

மற்றவனின் உறைந்த பார்வை
சேர்ந்த இடம் பார்த்த நான்
வாழ்க்கையில்யே முதன்முறையாக
வாய் பேச முடியாமல்
செயல் இழந்து போகிறேன்
கல்லாய் இறுகி இருந்த நான்
மெல்லக் கரைந்து போகிறேன்

"என்ன நினைத்திருப்பான் இவன்?
எங்கே போய்க்கொண்டிருந்தான் இவன்?"

கேள்விகளை கேலி செய்துகொண்டு
கண்முன்னால் சிதறிக் கிடக்கிறது

விரிந்து கிடக்கும் விபூதிப் பொட்டலமும்
திறந்து கிடக்கும் பால் புட்டியும்

Thursday, January 15, 2009

மனம் ஒரு...!!!


இரக்கம் கொஞ்சம் கூட இல்லாத
இறைச்சிக் கடையின் முன்னால் நான்

ஒன்பதுக்கு மட்டுமேயான கோழிக்கூண்டில்
எண்பதை கூட்டி அடைத்திருக்கிறார்கள்
பட்டினியாகத்தான் இருக்கவேண்டும்
பரிதாபமாய் அத்தனை உயிர்களும்

"உணவேதும் போட்டீர்களா?"

உண்மை அறிய கேட்ட கேள்விக்கு
உதாசீனமாகவே வந்தது பதிலும் கேள்வியாகவே

"விரைவில் சாகப்போகும் அதற்கு
வீணாய் உணவெல்லாம் எதற்கு?"


கூண்டிற்குள் இருந்து
ஒன்றைத் தேர்ந்தெடுத்து
மற்றவையின் கண்முன்னாலேயே
கொடூரமாய்க் கொலைசெய்து
உயிர் போகும் முன்னரே
மயிர் பறித்து தோலுறித்து
........................
........................
தராசிலிருந்து இறக்கி
துண்டுகளாக்கி முடிக்கும் வரை
துடித்துக்கொண்டே இருக்கிறது
தரையில் விழுந்த
இரண்டு இதயங்கள்

"ஒரு உயிரின் கண் முன்னே
மற்றதை கொல்லக்கூடாது
சட்டப்படி குற்றச் செயல் அது
கூடியவரை தவிர்க்கவேண்டும் அதை"


ஓங்கி ஒலித்தது எனது குரல்
ஓரவிழியால் பார்க்கிறான் கடைக்காரன்
என் முகத்திலிருந்து அவன்
எதையோ வித்தியாசமாய் உணர்கிறான்
அவசரமாய் பொட்டலம் கட்டி
அடுத்த நொடி கையில் திணிக்கிறான்

'ஆகா! எடை குறைவாகத் தெரிகிறதே?
அளவில் ஏதும் ஏமாற்றியிருப்பானோ!
ஏதேதோ நினைப்பில் நானும்
எடைகல்லை பார்க்க மறந்து போணேனே!!'

Wednesday, January 7, 2009

அறுபதாண்டுக் கனவு..!


கார் வாங்கி இருக்கிறேன்..
கார் வாங்கி இருக்கிறேன்...
கார் வாங்கி இருக்கிறேன்....
குளிர் சாதன வசதியுடனான
குளுகுளு குட்டிக் கார் அது

அறுபதாண்டுக் கனவு
ஆறு வயதில் எதிர்வீட்டு மிதிவண்டி மீது
அன்று ஆரம்பமான ஏக்கம் அது
இருபது வயதில் கார் மீது வந்து நின்றது

கோழி பக்கத்தில் வந்தாலும்
கோழியின் இறகு பட்டு
கோடு ஏதும் விழுந்திருக்குமோ என்று
குனிந்து தடவிப் பார்க்கிறேன்
காகம் தாண்டிப் போனலும்
கறை ஏதும் பட்டிருக்குமோ என்று
கவலையோடு கவனித்துப் பார்க்கிறேன்

பேரக் குழந்தைகள் ஆசையோடு
பாய்ந்து வந்து ஏறும்போது
"பாத்து,பாத்து" எனக் கத்தியே
பதறி தவித்துப் போகிறேன்

பழைய நண்பன் ஒருவன்
பக்கத்து தெரு போய்வரக் கேட்டதற்கு
"பையனுக்கே இன்னும் கொடுக்கவில்லை
பரதேசி உனக்கு இப்போது எதற்கு"
என
பதில் கூறிவிட்டு விரைகிறேன்

போக்குவரத்து நெரிசல் இருந்தாலும்
பத்தடி இடைவெளி சுற்றிலும்
சுத்தமாய் இருக்க பார்த்துக் கொள்கிறேன்
பாதுகாப்பாய் ஓட்டிச் செல்கிறேன்

கிண்டலும் கேலியும் என்னைச் சுற்றி
கண்டுகொள்ளவே இல்லை நான் அதனைப் பற்றி
கோழிதானே அறியும் முட்டையிடும் எரிச்சல் பற்றி

இன்று வெளியூர் பயணம்
இரவே வண்டியை எடுத்து
அங்குலம் அங்குலமாய் அலசி
அத்தனையும் துடைத்து
பள பளவென இழைத்து
பளிங்கு போலாக்கி நிறுத்தியிருக்கிறேன்

ஒருவரையும் தொடவிடாமல்
ஒவ்வொரு கதவாய் நானே திறந்து
ஒழுங்காய் அமரவைத்து
ஒருவழியாய்க் கிளம்புகிறோம்

சாலை சந்திப்பு. உச்சி வெயில்.
சன்னலைச் சுற்றி மொய்க்கும்
பிச்சை எடுக்கும் குழந்தைகள்
பார்த்தவுடன் மனது பதறிப் போகிறது
தொட்டு கோடிட்டு விடுவார்களோ?
முட்டிக்கொண்டு வந்த கோபம்
மூக்கின் மேல் நிற்கிறது

அப்போது தான் கவனிக்கிறேன்
அந்தக் குட்டிக் குழந்தை
எனது பக்க சன்னல் கண்ணாடியில்
தனது கன்னம் ஆழப் பதித்து
சில்லிடும் குளிர்சாதனத்தின்
சிலிர்ப்பூட்டும் குளிர்ச்சியை
உள் வாங்கிக் கொண்டு
உலகையே மறந்து நின்றுகொண்டிருக்கிறது


மயான அமைதி வண்டிக்குள்
மறு நிமிடம் நிகழப்போவதை
எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல்
என்ன நடக்கும் என்றும் தெரியாமல்
உள்ளம் உறைந்துபோய் என்னையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

இதுவரை உறைந்துபோயிருந்த நான்
இப்போதுதான் உருகத்தொடங்கி இருக்கிறேன்
அன்று குழந்தையாய் நான் கொண்ட ஏக்கம்
இந்தக் குழந்தையின் முகத்தில் பார்க்கிறேன்
அறுபது வயது உடல் உள்ளே இருந்தாலும்
ஆறு வயது மனதுடன் வெளியே உணர்கிறேன்

பச்சை விளக்கு ஒளிர்கிறது
பின்னாலுள்ள வாகனங்களின்
ஒலிப்பானின் ஓசை
ஒன்றாய் சேர்ந்து ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது............
......................................
......................................

Saturday, November 8, 2008

பத்தே பைசாதான் !


'அய்யா' என்ற அவலக்குரல்
அவசரமாய் வாசல் வந்தேன்

கையில் குழந்தையோடும்
கண்கள் நிறைய பசியோடும்
தட்டு நிறைய எதிபார்ப்போடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
எட்டுவயது சிறுமி பிச்சை கேட்டு

"போ!போ!!" என உறைத்து
புறங்கையால் இல்லையென மறுத்து
உறத்து கதவடைத்து
உள்ளே திரும்பினேன்
உள்ளம் அதிர திடுக்கிட்டேன்

மூடிய கையில் பத்துபைச்சாவுடனும்
திறந்த கண்ணில் அதிர்ச்சியோடும்
எதுசரி என்ற குழப்பத்தோடும்
என்முகத்தில் எதையோ தேடியபடி
எதிரே என் குட்டிக் குழந்தை

ஒருநொடியில் உறைந்துபோனேன்
மறுநொடியே உடைந்தும் போனேன்
நல்ல அப்பா என் உருவத்தை
நானே கலைத்துவிட்டேனா?

குற்ற உணர்வில் மூழ்கிப்போனேன்
குழந்தைமுகம் பார்க்கவே இல்லை

பலவற்றை இழந்திருக்கிறேன்
வாழ்க்கையில்
பதறியதே இல்லை

பத்தே பைசாதான்
பல நாள்
தூங்கவே இல்லை.

Sunday, October 12, 2008

ஏன்?


நேற்று போட்ட
தார்சாலை
நாளை மழைக்குத்
தாங்காது என்றாலும்
இன்று தோரணம் கட்ட
யாரோ தோண்டும்போது
வலிக்கிறதே
மனதில்.

Saturday, October 4, 2008

சிக்னலில் தெரிந்த கறுப்பு நிறம்


பச்சை விளக்குக்காக சந்திப்பில்
பல நினைவோடு காத்திருக்கையில்

'அண்ணா' என்ற தங்கையின்
அவலக்குரல் கேட்டு

உலகமே நொடியில்
ஊஞ்சலில் சுற்றியதுபோல்

முன்னால் உள்ளதெல்லாம்
மஞ்சளாய்த் தெரிய

திடுக்கிட்டுத் தடுமாறி
திரும்பிப் பார்த்தால்

பிச்சைக் கேட்டு கை நீட்டி
பச்சிளங்குழந்தையோடு சிறுமி

நல்லவேளை அது தங்கையில்லை
நிம்மதியாய் மூச்சுவிட்டு

'இந்த சமூகத்தின்
இன்றைய நிலையை மாற்றி

ஒருநாள் ஏழ்மையை
ஒழித்தே தீரவேண்டும்' என்ற

சிவப்பு சிந்தனையோடு
சில்லரையைத் தேடும்போது

கையில் பட்டது
பையில் உள்ள பணமும்

பின்னால் உள்ள தர
இடமில்லாத கறுப்பு மனமும்.

Sunday, September 21, 2008

என் ஜன்னல் வழியே..



அதிகாலைப் பயணம்.
ஜன்னலுக்கு வெளியே
வெகு தூரத்தில்
புள்ளியாய் கையசைக்கும்
குட்டிக் குழந்தைகள்.

நொடிப்பொழுதில் நானும்
குழந்தையாய் மாறி,
எழுந்து நின்று,
கையசைக்க நினைத்து,

சுற்றம் பார்த்து,
முற்றும் உறைந்து,
பார்வையையே பதிலாக்கி
உள்ளே சகலமும்

முடங்கிப் போன
நான்