Sunday, November 6, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 4

ச(ர்)க்கர :( இதுதான்யா சொர்க்கம் - 4)

என்ன செய்யலாம் ????

உச்சந்தலையைத் தடவிய படியே... வண்டி இருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன் ......

மனம்... ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் ஓர் உலக அதிசயம் ...

கண்மூடுவதற்காகவே காத்திருந்த்துபோல ...நொடியில் என்னை பின்னோக்கி 20ஆண்டுகள் கடத்திச் செல்கிறது அது.

#தூத்துக்குடி

“அம்மா ..தந்தி வந்திருக்கு

தந்தி – இந்த வார்த்தையைக் கேட்டவுடன் அம்மாவின் கைகாலெல்லாம் உதறலெடுக்க....

முகம் வெளிறத் தொடங்க ......

இதைப் பார்த்தவுடன் இப்போ தபால்கார்ருக்குப் பதட்டம் ஆரம்பிக்கிறது ..


“ஐய்ய்யோ...எம்மா .... கொஞ்சம் பொறுங்க ...நல்ல சேதிதான் .. நல்ல சேதிதான் “


“கட்டைல போறவனே.. இதை மொதல்லயே சொல்லித் தொலைகிறதுக்கு என்னாவாம் “ சேலை முந்தானையால் முகத்தைத் தொடைத்துக் கொண்டே அம்மா மெல்ல சிரிக்கிறாள் .. அவர்தான் எங்க ஏரியாவின் நிரந்தரப் ‘போஸ்ட்மேன்’ . எல்லாரிடமும் உள்வீட்டு ஆளப்போல பாசமாப் பழகுவார் ...


என்னத்த சொல்லவிட்டீய ...இப்போ மயக்கம் போட்டிருந்தீயன்னா எஞ்சோலியல்ல உங்க ஊட்டுக்காரரு முடிச்சிருப்பாரு ’’


சரிசரி ..என்னாவிசயமாம் ..இப்பயாச்சும் சொல்லு தம்பி


எம்மா ..மவராசி.. மொதல்ல எனக்குக் கொஞ்சம் நீச்சத்தண்ணியாச்சும் மோராச்சும் கொடுங்க ... போன உசிர திரும்ப வரவசுக்கிறேன் ..”

மெதுவாக தனக்குள் ”மொதல்ல இந்த ‘தந்தி’ கோண்டுபோற வேலைய விடணுமப்பா


உங்க ஊட்டய்யா தங்கச்சி மவா பெரியமனுசி ஆயிருக்குதாம் ...தாதன்குளத்துல கல்வூட்ல விசேசமாம் ..உடனே வரச்சொல்லி தந்தி கொடுத்திருக்காங்க ...

எங்கிட்டே திரும்பி ‘தொரே...உங்க அயித்த பொண்ணாம் ..ம்ம்ம் ..ஜமாய்என்கிறார்


ஓ..அம்மாவுக்குக் கொஞ்சம் சுதி எறங்கிப்போச்சு ...( அப்பா வீட்டு உறவுன்னா கொஞ்சம் அம்மாவுக்கு ஆகாது ... கலயாணமான புதுசுல ஏதோ பிரச்சினையாம் )


அப்பா வந்தவுடன் தடபுடலாய் டேப்ரெக்கார்டர்வச்ச வெள்ளை அம்பாஸ்ட்டர் கார் பிடிச்சு கெளம்பினோம் .


முக்கியமான ஒரு கேரக்டரை இங்கே அறிமுகப்படுத்தியே ஆகணும் .. என்னோட பிரண்டு ‘ராசாமணி .திருப்பூர்காரன் . ஸ்கூல்லீவுக்காக அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தவன்.. எங்களோடத் தொத்திக் கொண்டான் ...கொஞ்சமா வாய்மட்டும் ஜாஸ்தி ஆவனுக்கு...

அதான் மொதல்லயே அவன்கிட்டே சொல்லிவச்சுட்டேன்

எலேய் ..ஒங்கூரு மாதிரி இங்கே பேசிக்கிட்டிருக்காதே .... பாத்துக்கோ ...எல்லாப் பயலும் கத்தி வச்சிருப்பான்

பயந்துட்டேன் போல ... ரொம்ப அமைதியாகவே வந்தான் ...


#தாதன்குளம் :கிராமம்:

வண்டியில வந்த அலுப்புல..எல்லாரும் அடிச்சுப்போட்டாப்ல தூங்கீட்டோம் போல ..காலைல லேட்டாத்தான் எந்திரிச்சோம் நாங்க 2 பேரும் ... வீட்ல கொஞ்சம் பேருதான் இருக்காங்க .. வெளியே திண்ணைல பெரியாத்தா ... கூடத்துல புள்ளைங்க பல்லாங்குழி ,கலஞ்சி (தட்டாமாலை) வெள்ளாண்டுக்கிட்டு இருக்க ..பல்லுவெளக்காம நாங்க மட்டும்தான் போல ...


அம்மா ..காப்பி கொடு ந்னு சவுண்டு வுட்டுட்டு ( எப்படியும் அயித்த மகதான் கொண்டுவரப் போறாJ)

ராசாமணிகிட்டே கூச்சப்படாம கேட்டுவாங்கி சாப்பிடுல ந்னு சொன்னேன்..


நெனச்சாப்லயே அவதான் கொண்டுவந்தா...


காப்பியக் கையிலவாங்கி வாயிலவச்சவன் ..ஊருக்குள்ள வந்ததுல இருந்து மொதமொதலா வாயத் தொறந்தான்.

“எனக்கு சக்கர கம்மி .. கொஞ்சம் தாரீங்களா


திடீர்ன்னு அங்கே ஒரு அமானுஷ்ய அமைதி.......

அயித்தமக கைய ஒதறி வாயப்பொத்திக்கிட்டே உள்ளே ஓட.....

சளசளன்னு சளம்பிக்கிட்டிருந்து பொடுசுக எல்லாம் கப்புன்னு வாயமூடீட்டு ..அவன ஒருமாதிரியா குறுகுறுன்னு பாத்துட்டு..

அய்ய்ய்ய..ஆத்தா...இந்த அண்ணன் ஆயிஆயியாப் பேசுதுன்னு ஆத்தாகிட்டே கோத்துவுட்டுட்டு ... கத்திக்கீட்டே வெளியே ஓடுதுக


திண்ணைல இருந்து ஒரு கும்பா ராசாமணியப் பாத்து பறந்துவந்த்து முன்னே ...

பெரியாத்தா ஆவேசமா வந்தாள் பின்னே ....


“எடு வெளக்குமாற .. பொண்டுபுள்ளங்க இருக்குற எடத்துல யார்ல அவன் ..வாயப்பாரு ...ஏலே மாரி ..ஓடியால ..இந்தப்பயலப் புடிச்சுக் கட்டுல புளியமரத்துல.. பத்தலையாமுல்ல ...அந்தப் படுக்காளிப் பயலுக்கு கொஞ்சம்நஞ்சம் இருக்குறதையும் இழுத்துவச்சு ஒட்ட நறுக்கி காக்காய்க்குப் போடு“


ஈரத்துண்டால மூடிப்போட்ட கோழியப்போல நாடிநரம்பெல்லாம் ஒடுங்கிப்போச்சு அவனுக்கு ..........

மெதுவா என்கையைச் சொரண்டி டேய் ..என்னாடா நடக்குது இங்கே ... என்னை ஏண்டா இந்த்த் திட்டு திட்டுது .... நான் என்னடா பண்ணேன்...எதையோ அறுக்க வேற சொல்லுது பாட்டி ?


எலேய் ..கொஞ்சம் சும்மாத்தான் இறேன் ... அதான் ஒரே வார்த்தைல ஒருமாசத்துக்கு சனியன இழுத்திட்டீயே


ஏண்டா..உங்க ஊர்ல சக்கரைக் கேட்டாத் தப்பாடா,,கம்மியா இருக்கப்போயிதானடா கேட்டேன்


இங்கே சக்கரன்னா வேற அர்த்தம் மக்கா ...


அய்யோ ..எனக்குத் தெரியாதே ..அப்படீன்னா என்னடா


விடு விடு..இப்போ வேணாம் ..பொறவு சொல்றேன் ..


டேய் ...சொல்லுடா... எனக்கு இப்பவேத் தெரிஞ்சாகணும் ..


ம்ம்ம்...நீ சாவணுமுன்னு முடிவு பண்ணீட்டே ...நான் என்ன செய்ய ..சக்கரன்னா இங்கே குஞ்சுமணின்னு அர்தமுடியோய்.. ... அந்தப்புள்ள கீட்டே பத்தலன்னு நீ கேட்டது அதைத்தான்


இப்போ நான் சொன்னதக் கேட்டதும் நாக்கு மேலன்னத்தில் ஒட்ட...கண் சொருக ஆரம்பித்தது அவனுக்கு ...


நல்லவேளயா அப்பாவும் அந்தநேரத்துல அங்கே வர அவன் தப்பிச்சான் .


என்ன! ..ஆத்தாவச் சமாதானம் பண்னத்தான் நேரமாகிப் போச்சுது ........


20வருடங்கள் ஆகிவிட்டன ...

ராசாமணி இன்னும் சமாதானமாகவில்லை.. எப்போ சந்தித்தாலும் அவனோட மொதக்கேள்வி இதுதான் ...

டேய் ..உங்க பெரியாத்தா அன்னிக்கு எதையோ இழுத்துவச்சு அறுக்கணுமுன்னு சொன்னாங்களே ..அது என்னடா “


‘ நாக்கைத்தான் அவங்க சொன்னாங்கன்னு எத்தனை தடவைதான் உங்கிட்டே சொல்றது


அவன்தான் இன்னும் இன்றுவரையிலும் என்னை நம்பியதுபோலத் தெரியவில்லை ..

நீங்களாவது நம்புறீங்களா ????

(போய்க்கிட்டே இருப்போமா ............)

Tuesday, November 1, 2011

பெரியாத்தா : -- இதுதான்யா சொர்க்கம் -3

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....:3


வேப்பம்பழம் பொறுக்கி, கொட்டை எடுத்துக் கொண்டிருக்கும் ஆத்தா
தூரத்தில் ஓட்டுவீடுகள் தெரிய ஆரம்பிக்கின்றன .. ஆங்காங்கே சில மட்டப்பா வீடுகளும்....

என்வண்டியைத் தாண்டி சைடு எடுத்துச் சென்ற டிவிஎஸ் 50 ஒன்று சட்டென ப்ரேகடித்து நின்றது .
(TVS 50 - எனது கனவுவாகனம் ... இப்போதுக்கூட யாராவது என்னிடம் அந்த வண்டிக்கு எனது காரை எக்ஸ்சேஞ்ச் தர ஒப்புக்கொண்டால் உடனே தரும் மன நிலையில்தான் இருக்கிறேன் ... )

அவசரமா ஸ்டாண்டுபோட்டு என்னைப்பார்த்து ஓடிவரும் அது ...அட ...எசக்கி

‘’எண்ணே.....பாத்து எம்புட்டு நாளாச்சு .... இதாம் புள்ளைங்களா...’’
என்று கேட்டபடியே கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு
வூட்டம்மாவைப்பார்த்து ’‘கும்புடறேன் தாயி ‘’ என்றான் ....

சின்னவயசுல எனக்கு அவந்தான் ‘பாடிகார்டு’ ... (3 அடு உயரத்துல நான்....ஒரு 2 அடி உயரம்தான் அவன் இருப்பான் ) ..ஆளுதான் வளந்திருக்கான் ...முகம் இன்னும் மாறவே இல்லை

அவனை தோள்சேர்த்து பற்றிக்கொண்டேன் ...ம்ம்ம் .. தோட்டத்திலிருந்து வருகிறான் போலும் ...மண்வாசம் ...

’’ஏண்ணே ... கொடைக்கு வந்தியா ..பெரியாத்தா விசயம் தெரியுமா உனக்கு’’

லேசான அதிர்ச்சி எனக்கு ...
”என்னல ஆச்சு ” எதையோ மறைத்திருக்கிறார்கள் ...

பெரியாத்தா .... அப்பாவின் அம்மாவோட அம்மா .... 100வயசு தாண்டி ஒரு மாமாங்கம் ஆகிஇருக்கும் ..

ஒருவாரமா சோறுதண்ணீ எறங்கலண்ணே ... உசுறு வாய்க்கும் தொண்டைக்குமா இழுத்துக்கிட்டு கெடக்கு...
ஏதோ நெனப்புலத்தான் உசிறு இன்னும் ஒட்டிக்கிட்டு கெடக்குது .... உன்னைப் பாத்தான்னா ஒடனே போய்ச் சேந்திருவாண்ணே “

’ஓ .... என்னை கைகுள்ளேயே வச்சு பொத்திப் பொத்தி வளர்த்தவள் அவள் ..
வேகமாக வண்டியில் ஏற ஓட எத்தனிக்க ..எசக்கி என்கையைப் பிடிச்சு தடுக்கிறான் ...

“அண்ணே ...உடனே போய் பார்த்திறத... ரெண்டுநாள்ல கொடை இருக்கு... முடியட்டும் ...இப்போ உன்னைப் பாத்தவுடன் ஆத்தா புட்டுக்கிச்சுன்னா ... தேரு வெளியேவராது ...கொடை நின்னுபோவும்...12 வருசம் கழிச்சு நடக்குற கொடைக்காவ வெளுயூருல இருந்து ஊருசனாமெல்லாம் வந்திருக்காங்க ... நெறையா ஏற்பாடெல்லாம் நடந்திட்டிருக்கு...எல்லாம் உன்னால கெட்டுப் போச்சுன்னு பின்னால யாரும் சொல்லீரக் கூடாதுண்ணே “

உண்மை உறைக்க ஆரம்பிக்கிறது எனக்கு ...
மெதுவாக பாக்கெட்டைத் தடவிப் பார்க்கிறது எனது கை ...
உள்ளே இருக்கும் இரண்டு ‘சுகர் ஃப்ரீ டாப்லெட்’ பாக்கெட்டுகள் என்னைப்பார்த்து சிரிக்கின்றன ...

இந்தக் கிராமத்தைவிட்டு நான்வெளியேறும் முன்னால்... என்றோ ஒருநாள்
‘ எய்யா .. பெரியவனே ...எனக்கு ஏதோ சுகராம்..இவளுவோ கருப்பட்டிய என்கண்ணுலயே காட்ட மாட்டக்காளுவ.. என்னமோ இனிப்பு மாத்தரன்னு இருக்காமே அது எனக்கு கொஞ்சம் வாங்கித் தாரியா ???’

கருப்பட்டியும் , வெல்லமுமாய் காய்ச்சி ஊருக்கெல்லாம் கொடுத்தவள் ...இனிப்புக்காக ஏங்கி என்னிடம் கேட்டது மங்கலாக இன்னும் மனக்கண்முன்னால் ஓட ..........

என்ன செய்யப் போகிறேன் நான் ...????????????

(என்ன செய்யலாம் சொல்லுங்க மக்களே ...ஊருக்குள் நுழையாமல் தூரத்தில் தெரியும் அந்தக் கல்வீட்டை பார்த்தபடியே உடைந்துபோய் காத்திருக்கேன் )