Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Tuesday, March 8, 2011

14 : மகளிர் தினமாம்...மகளிர் தினம்...! ...தேவையா இது ...!!


ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....

தேவையா இதுபோன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!

தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்

வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்

படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்

வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்

உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்

ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்

எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்
.....

பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!

Monday, February 14, 2011

10 : தினமும் தான் போராட்டம்....!சூரியனுக்கே வெற்றி இன்று ...!!

bhgtw (387).gifbhgtw (364).gif

வேருக்கு நீரில்லாப் பருவத்தில்

கருகாமல் உயிர் பெருக்க

தருவெல்லாம் பசிபொறுத்து

இரவெல்லாம் காத்திருக்க...


வாழ்வளிக்க வானிலிருந்து

துகள்துகளாய் தவழ்ந்திறங்கி

துளியாய் ஒன்றாகி உருவாகி

இலைகளைத் தொட்டவுடன் தங்கி

தலைவழி உணவாகியது போக

மீதமிருந்தது தேங்கி இருந்தது

புல்லின் நுனியின் முனையிலும்....

தாமரையின் இலையின் நடுவிலும்....


கிரீடம் கிடைத்த கர்வத்தில்

புல்தன் நிலையில் நிமிர்ந்திருக்க...

தன்னிலைதான் பெருமையென்று

தாமரை இலையும் மிதந்திருக்க...


புல்லின் கர்வத்தைத்

தட்டிப் பறித்திட

காற்றும் திட்டமிட...

இலையைக் கவிழ்க்கும்

அலையை எழுப்ப

கலங்கிய குளமும் முயல...


நடப்புகளைக் கவனித்தபடி

நிகழ்வுகளைக் கணித்தபடி

வெற்றிச் சிரிப்பூடன்

ஏற்கனவே பனித்துளியை

பருகத் தொடங்கி இருந்தான்

அதிகாலைச் சூரியன்......

tyhjui (64).gif
[ நன்றி :பாலாஜி ராமானுஜம்,தேசிங்கு ராஜா/ அண்ணாமலை]

Wednesday, January 12, 2011

பயம் கொல்வேன்..பதறாமல் வெல்வேன்.....!

சுற்றிலும் வியூகம் அமைத்துச்

சூழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்....


இடுப்பிலிருக்கும் கத்தியின்உறையை

ஒருகையால் இறுக்கியபடி..........

உருவுவதற்குத் தயாராய்

உறையின் முனையில்

மறுகையை இறக்கியபடி............

வருவது எதுவென்றாலும்

எதிர்கொள்ளும் எண்ணத்துடன்

எதிர்த்துக் கொல்லும் திண்ணத்துடன்.......

கண்கள் சிவக்க

உதடுகள் துடிக்க

தசைகள் உருள

தோள்கள் திரள

தன்னந் தனியனாய்

திறமாய் நிற்கிறேன் நான்........


துளியும்

அசையாமலிருக்கும்

எனது கைகளின் மேல்

மொத்த கவனத்தையும்

இமைக்காமல் குவித்தபடி...


இதுவரை

உருவப்படாதிருக்கும்

கத்தியின் உருவத்தையும்...


வெளியே வந்தபின் அது

சொருகப்போகும் வேகத்தையும்

உதிரப்போகும் உதிரத்தையும்

கருகப்போகும் உயிர்களையும்

சருகாகப்போகும் உடல்களையும்

மனதுக்குள் உருவகப் படுத்தியபடி....


பயத்தை மறைத்து

பாதுகாப்பாய் மறைந்தபடி...

தமது வாள்களைத்

தொடர்ந்து கூர்தீட்டியபடியே

இருக்கிறார்கள் அவர்கள்........


குறையத் தொடங்கியிருந்த

அவர்களது வாளின் அளவு...

தொடர் தீட்டுதலில்

திடம் குலைந்து

மேலும் கரைந்து

கைப்பிடிகள் மட்டுமே

மீதமாகும் வரையிலும்...


நிலை நிறுத்தியிருக்கும்

எனது பிம்பத்தை

கலைக்கப் போவதில்லை நான்


இடையிடையே

சூழ்நிலையை புரியாமல்.....


எனது இடையிலிருந்தபடி

என்னைக் கேலிசெய்த படியே

கத்திச் சிரித்துக் கொண்டிருக்கிறது...



'கத்தி' இல்லாத

அந்த வெற்று உறை.......


[நன்றி : கரு; ப்ராங்க்ளின்குமார்]

Monday, January 10, 2011

யுகம் கடந்தும் இருக்கிறான் உயிரோடு..........




உள்காமம் மறைத்து

கிடைக்கும் இடைவெளியில்

வசரகதியில் அத்துமீறி

கண்ட பாகங்களில் பாய்ந்து

மேய்ந்து திரும்பும் கண்கள்....


குறுநகைப் போர்வையுள்

குதறும் வாய்ப்புக்காக

மறைந்து காத்திருக்கும்

வெறிகொண்ட பற்கள்....


நம்பவைக்கும் நோக்கில்

நாசுக்காய் வலைவீசி

எண்ணியதை சாதிக்கும்

வண்ணம் பூசிய வார்த்தைகள்....


தம்மில் சிறியோரை

தலை நிமிரவிடாது

தட்டியபடியே இருக்க

பரபரக்கும் கைகள்.....


ம்ம்ம்..............


யுகங்கள் கடந்தும்

ஆழ்மனதின் அடியில்

அடர்இருளின் மடியில்

தற்பொழுதும் உயிரோடு

மிச்சமிருக்கத்தான் செய்கிறது....

அந்த.......

கற்கால மனிதனின் எச்சம்...........

.

Thursday, January 6, 2011

புலம் பெயர்ந்ததோர் உடலின் புலம்பல்


அது ஒரு

ஐப்பசியின் மழைக் காலம்….

தூங்கும் நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி நீ..

உன்னைத் தொங்கியபடி நான்


உலகமே ஒரு நொடியில்

எனது காலடிக்கும் கீழாகிப்போனது


என்னை மறந்தேன் நான்..மிதந்தே

எங்கெங்கோ பறந்தேன் நான்


இது ஒரு

வளைகுடாவின் பனிக்காலம்...

ஏங்கியபடி நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி அங்கே நீ..

உன்னைத் தொங்கியபடி எனது நினைவுகள்..

அவற்றைத் தூக்கியபடி இங்கே நான்..


ஏனோ ஒரு நொடியில்

எல்லாமே தலைகீழாகிப்போனது


எனதுலகை இழந்திருக்கிறேன்.. இங்கே

ஏதோ இருக்கிறேன்...........

Monday, January 3, 2011

நேரான பாதையை விட்டு விலகியும்....

திரும்பிப் பார்க்கிறேன் :

நிதானமாய்ச் செல்லும்

நேரான பாதையைத் தவிர்த்து...

சுற்றிச் சுழலும்

மாற்றுப் பாதையைத் தேர்ந்து...


சீரற்ற வேகத்தில்

சரேலென வளைந்து...

இடமும் வலமுமாய்

திடீரென நுழைந்து...

குறுக்கும் நெடுக்குமாய்

வேகத்துடன் விரைந்து...

திகைக்கவைக்கும் திருப்பங்களுடன்

திசையெல்லாம் பயணித்து.........


முடியுமிடத்தில் இருந்து

திரும்பிப் பார்க்கிறேன்


அழகாய்

உருவாகி இருந்தது

கோலம் ஒன்று ............!

Sunday, January 2, 2011

முயல்.......!

ஊடே விழுந்து வழிமறிக்கும்

கூட இருந்தே குழிபறிக்கும்

உலகின் தரம்பார்த்து

உடைந்து கலங்காமல்

நிமிர்ந்தே

ஒருமுறை

களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....


நிலவும் உன்கையில் கிட்டும்...

உலவும் மேகமும் முன்வந்து கைகட்டும்...

மின்னும் நட்சத்திரங்களும் உனக்கு எட்டும்...

இன்னும் முயன்றுபார் அந்த

விண்ணும் உன்தலையில் தட்டும்.......


Sunday, December 26, 2010

அறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...

என்னவள்

தாய்மையுடன் சென்றிருக்கிறாள்


அவளது தாய்வீட்டுக்கு நேற்று..


வெள்ளி இல்லாமல்

துடைத்து விடப்பட்ட

நேற்றைய வானம் போலவே

ஒரேநாளில் அனைத்தும்

அணைந்து போனது எனக்குள்...


அட....

இன்றும் வானில்

நேற்றைப் போலவே....

எங்கும் காணவில்லை

மின்னும் அந்த நட்சத்திரங்களை....


எதிரே..

வரண்டு போன

பளிங்குத் தரையைப் போல

வெறுமையாய் வெளிர்வானம்..


திடீரென வீசத்துவங்கியது

மண் வாசம்...

கடும் கோடையிலும்

மழையின் வாசம்...


என்வீட்டு முற்றத்தில் மட்டும்

மேகங்கள் திரண்டொரு

மழைக்கான முன்னேற்பாடு...


வாசலில் இருந்த

கோலத்தின் கோடுகளை

அழிக்கும் முயற்சியில்

மும்முரமாய் இருக்கிறது மழை...


அட

அப்போதுதான் கவனிக்கிறேன்


அதுவொன்றும் சராசரி மழையன்று...

இதுவொரு மீட்புப் போராட்டமென்று.....


இரண்டு நாட்களுக்கு முன்

என்னவள் வரைந்து......இன்னமும்

அழியாத கோலத்தின்

வளைவுகளுக்குள் சிக்கி

தரையெங்கும் இறைந்து

அடைபட்டுக் கிடக்கின்றன

அந்த நட்சத்திரங்கள்

புள்ளிகளாக ...................!

.

Thursday, December 9, 2010

எங்கே போனது மனிதம்.......?


தாண்டிச் செல்வோரெல்லாம்

சொல்லிவைத்தார்ப் போன்று

கவனிக்காதது போல தவிர்த்துவிட...


சாலையைக் கடக்க

வழியற்ற நிலையில்

விழியற்ற ஒருவர்..........


ஒருகரம் கொடுத்தால்

மறுபுரம் சென்றிடுவாரே நொடியில்...!


ஒருமணி நேரமாகியும்

ஓராயிரம்பேர் கடந்தும் - அதில்

ஒருமனிதன் கூட வரவில்லையே...?


என்னாயிற்று மனித நேயம் ??


விடையைக்

கணிக்க இயலாமல்

நிகழ்வைக்

கவனித்து கொண்டிருக்கிறேன்


நான் எனது

சன்னலின் வழியே ........

.

Sunday, November 28, 2010

உங்களுக்கும் தெரியாத ஒன்று....! உங்களின் காலடியில்......!!


தண்ணீரில்லா அந்தக்

கிணற்றிலிருந்து

மீடகப் படுகிறது

ஒரு உப்பிய உடல்.......


சுற்றிலும் சுற்றங்கள்....

கண்ணீர் தேங்கிய கண்கள் ...

கவலை தோய்ந்த கணங்கள்...


எல்லாம் முடிந்து

எங்கோ.....

அது எரியூட்டப்பட்டு

காற்றில் கரைந்தபின்பும்


இங்கே......

வெறுமையால் நிறைந்த

அந்தப் பாழும் கிணற்றின்

கைப்பிடி சுவரையும் தாண்டி


கவனிப்பாரில்லாக் கவலையுடன்

பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........

‘அதோடு

சேர்ந்து விழுந்த

கரைசேராத சோகங்களும்..

அவிழாத முடிச்சுகளும்...


கொஞ்சம் கவனியுங்கள்...


உங்களின் காலடியிலும்

இருக்கக்கூடும்

இதுபோல

ஏதாவது ஒன்று ......!

Friday, November 26, 2010

தேவையொரு உடனடித் தீர்வு.......!


அரித்த முதுகினைச்

சொறிந்த விரல்களின்

நகக் கண்களில் சேர்ந்திருந்த

அழுக்கினைக் கண்ணுற்ற உடன்...


அகம் கலங்கியதனை

எனக்கு நேர்ந்த மிகப்பெரிய

இழுக்கெனவேக் கருதுகிறேன் நான்....


எப்படியிதுவரை கணிக்காமல் இருந்தேன்?

எதனாலிதை கவனிக்க மறந்தேன்?


குற்ற உணர்வென்னைக்

விடாமல் குதறியெடுக்க


நடந்த தவறை இனியொருமுறை

நிகழாமல் தடுக்கும்

முயற்சியில் என்னை

முழுமூச்சில் இறக்குகிறேன்......


இதோ

தேடி எடுத்துவிட்டேன்...


தொலைந்துபோன அந்த

நகவெட்டியை....


.

Sunday, October 24, 2010

வந்ததொரு வாய்ப்பு


ஓட்டைகளால் வேயப்பட்ட

ஓலைக் குடிசையில்

சமையலை மறந்து

ஊமையாகிப் போன பாத்திரங்கள்....


அடைத்த செவியோடும்

ஒட்டிய வயிறோடும்

ஒரு ‘கொதிக்கும் கானம்

கேட்கத் தவமிருக்கிறேன் நான்.....


எதிர்பாராமல்

வந்ததோர் வாய்ப்பு.....


அவசர அவசரமாய்

பாத்திரங்களை எடுத்துப்

பரப்பி வைக்கிறேன் ...........


தாள லயத்தோடு

ஆரம்பமாகிறது கச்சேரி


ஏற்கனவே பெய்யத்

தொடங்கி இருந்தது மழை............!

.

ஏதோ புரிய ஆரம்பிக்கிறது எனக்கு ...!


























காலை வேளையில் கடுமையாய்

கலவரப் படுத்துகிறது மேகம்....


அடிக்கும் காற்றில் தடுமாறி

கூட்டுக்குள் அடைகிறது காகம்....


நடுஇரவுப் பொழுதைப் போல்

திரண்டு நிற்கிறது இருட்டு.....


தரையில் தஞ்சம் புகுந்திட

தயாராகிக் கொண்டிருக்கிறது மழை...


நிலையைத் தாண்டிய பின்னரும்

நிலையில்லாமல் தத்தளிக்கிறது மனம்...


ஒரு நாள் மட்டும் தானே...

விடுப்பு எடுத்தால் என்ன..!

குடியா முழுகி விடும் ?

ஒருசில திட்டங்களோடு

ஓய்வெடுக்க முடிவெடுத்து

கதவைத் திறக்கக் கைவைக்கிறேன்


உணவைத் தேடியபடி

கதவின் இடுக்கின் ஊடாக

வீட்டின் உள்ளிருந்து

வெளியேறிக் கொண்டிருக்கின்றன

வரிசையாய் எறும்புகள்...........

.

அவரவர் பார்வையில்....!


அடர்பச்சைப் புதராய்

படர்ந்திருக்கிறது கொடி.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அசைந்து கொண்டிருக்கின்றன

அழகழகாய்ப் பழங்கள்........


அடர்பச்சை நிறத்தில்

வந்தமர்கின்றன கிளிகள்.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அழைத்துக் கொண்டிருக்கின்றன

அதனழகு அலகுகள்.....


புதரும் பறவையும்

வண்ணத்தில் ஒன்றாகி

எண்ணத்தை வென்றேகி

என்னுள் கலக்க......

என்னை நான் மறந்தே

படைப்பின் விந்தையை எண்ணி....

சிந்தை கலங்கி நிற்கிறேன்.


அங்கே....

விரித்த வலையின் சுருக்கை

சரிசெய்து கொண்டிருக்கிறான்

புதருக்குள் இருக்கும் அவன் .....

.

Wednesday, October 13, 2010

சர..சர..அவசர.......!


அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய்க் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் நுழைந்து

அவசரமாய் அமர்ந்து

அவசரமாய் எழுதி

அவசரமாய்க் கூட்டி

அவசரமாய்க் கழித்து

அவசரமாய்த் திட்டமிட்டு

அவசரமாய் வெளியிட்டு

அவசரமாய்த் திட்டுவாங்கி

அவசரமாய் மறந்து

அவசரமாய் மூடி

அவசரமாய் வெளியேறி

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் ஓய்வெடுத்து

அவசரமாய் சொல்லிக் கொடுத்து

அவசரமாய் உணவெடுத்து

அவசரமாய்த் தூங்கவைத்து

அவசரமாய்ப் படுத்து

அவசரமாய்ப் படித்து

அவசரமாய் முடித்து

அவசரமாய்க் கண்மூடி சயனித்து

அவசரமாய்க் கனவில் பயணித்து

..........................

அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவச......................


சே.... என்ன இது ?

என்னதான் வாழ்க்கை இது !

ஒரு நொடியில் உறைகிறேன்

மறு நொடியில் சரிகிறேன்

சன்னலைத் தாண்டி எங்கோ

சூனியத்தில் வெறிக்கிறேன்


அருகிருந்த கிளையில்

நிதானமாய்

நகர்ந்து கொண்டிருக்கிறது

நத்தை ஒன்று


.