Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Tuesday, March 8, 2011

14 : மகளிர் தினமாம்...மகளிர் தினம்...! ...தேவையா இது ...!!


ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....

தேவையா இதுபோன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!

தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்

வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்

படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்

வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்

உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்

ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்

எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்
.....

பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!

Wednesday, February 23, 2011

12.அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!

அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :

ஆம்.....

இன்றோடு....

நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்

நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்

அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...

எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...

என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...


எதற்கும் உண்டே எல்லை..

இன்றுடன் கதையை முடித்துவிட்டால்

இனியும் தொடராது இந்தத் தொல்லை...

பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்

பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை


வலதுகால் வைத்து விளக்கேற்றி

எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...

அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா

எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..


ஆம் இல்லை என்பதே

அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்

அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்

என்னை வேகவைக்கும் சாட்டைகள்


சைகையால் உரைப்பாள் சமயத்தில்

கண்சாடையால் உறைப்பாள் - நான்

சல்லி சில்லியாய் உடைவேன்

சுக்கல் சுக்கலாகி மடிவேன்


என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்

பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்

நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்

பக்கத்து மெத்தையையே அடைத்துவிடலாம்


ஒருவேளை இருக்கலாம்

ஏதாவதொரு பழைய மனச்சுமை...

அவளாக இறக்குவாளென

அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்

இன்று தலைக்குமேல் வெள்ளமாகி

பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது


இதோ..

வந்து நிற்கிறாள் அவள்..


திட்டமிட்டபடியே

காலணிகள் இடம்வலமாய் உதற

முன்னால் உள்ளதெல்லாம் சிதற

பாத்திரங்கள் உடைந்து நொறுங்க

பத்திரங்கள் நைந்து பறக்க.......


உருவம்தான் மாறவில்லையே தவிர

மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்


இன்றுதான் அவளது

உலகவாழ்க்கை வரலாற்றிலேயே

முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை

நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்

மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி

வாய்திறந்து பெரும்குரலெடுத்து

‘ஓவென அழ ஆரம்பிக்கிறாள் .


ஆகா...

இதற்குத்தானே காத்திருந்தேன்....


ஓடிச்சென்று கட்டியணைத்து

முதுகை வருடி தலையைத் தடவி

மெல்ல அவள் காதருகில்

செல்லமாய் கிசுகிசுக்கிறேன்

.உனக்கு பாடவும் தெரியுமா..?

முகாரி ராகம் இது ...!


சட்டென அழுகையை நிறுத்தி

சரேலென என்னை விலக்கி

விறுவிறுவென எதையோ தேடி

குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்


எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..

பொங்கும் வெட்கத்துடன்

இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி

அறையெங்கும் எதிரொலிக்க

அருவியாகச் சிரிகிறாள்

அடடா.... இது ஆனந்த பைரவி......!

கரு : மகாபாரதம் / கண்ணன்


Monday, February 21, 2011

11.பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!


























உச்சந்தலையில் விழுந்திருக்கிறது பல்லி...

இடிந்துபோய் முடங்கிக்கிடக்கிறாள் அவள்...


முன்பொருமுறை...

அப்பாவின்மேல் விழுந்ததற்கே

படபடத்து...பதறித்துடித்து

பூசையும் பரிகாரமுமாய்

ஊரையே கூட்டி...

வீட்டையும் இரண்டாக்கி...

தலைகீழாகப் புரட்டித்தான்

போட்டிருக்கிறாள் அம்மா ..


ஓ.....

இது உச்சந்தலை ....

நினைக்கும்பொழுதே உள்ளம்

வெடித்துச் சிதறுகிறது அவளுக்கு...


சோதிட...எண்கணித...வாஸ்து...

வல்லுனர்களைத் தேடியும்

பெயரியல்...ப்ரசன்ன...நவரத்தின...

நிபுணர்களை நாடியும்

வீதிவீதியாய் படபடப்புடன்

அலைந்து கொண்டிருக்கிறது பாதிக்குடும்பம்


அவளுக்கு விளங்கச் சொல்லி

துலங்கவைக்கும் வழிதெரியாமல்

பரிகாரமுறையும் சரியாகப்புரியாமல்

தொலைக்காட்சியின் முன்

விடைக்காகப் பதட்டத்துடன்

நகம்கடித்துக் காத்திருக்கிறது மீதிக்குடும்பம்


தனியே....

பல்லி விழுந்த

மரப்பாச்சி பொம்மையின்

தலையைத் தடவியபடியே

தேம்பலுடன் விரல்சப்பி

தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்...


திருதிருவென விழித்தபடி...

அருகிலேயே இருக்கிறது

அந்த ரப்பர் பல்லியும்.........

Wednesday, February 2, 2011

ஆண்மையின் ரகசியம் இதுவாகவும் இருக்கக்கூடும்......!

வெளியே.....

அலுவலக ஆளுமையால்

வெளியுலக அடக்குமுறையால்

வாழ்க்கை நடைமுறையால்

தலைதூக்க வழியின்றி

அழுத்தப்பட்ட ஆண்மை.....


உள்ளே....

சாதகச் சூழலில்

சூழ்ந்திருக்கும் வெற்றிடத்தில்

எதிர்ப்பில்லா மனையாளிடம்

ஏதுமறியாக் குழந்தையிடம்

வெடித்துக் கிளம்புகிறது....

மீசையைத் திருக்கியபடி

விசுவரூபம் எடுக்கிறது .....


நிமிர்ந்த மீசையின் நிழலில்

மறைந்த அடர்ந்த ஆழத்தில்

புதைக்கப் பட்டிருக்கக்கூடும்

தேங்கிய வலிகளும்

ஏங்கிய சோகங்களும்

பொங்கிவழியும் ஏமாற்றங்களும்.........


வாய்ப்பிருக்கும்

இந்த உண்மையை

நாமும் ஏற்றுக்கொள்வோமே....


பாவம்.....!

இதைத் தன்மையாய்

அவர்க்கும் புரியவைப்போமே....


ஆமாம்......!!

’அந்த’ ஆண்மையை

மன்னித்து விட்டுவிடுவோமே......

Saturday, January 29, 2011

யாத்தே.....! என்ன செய்யப் போறேன்....!!



வீதியெங்கும் பரபரப்பு

விடிந்தால் தீபாவளி...

விதியை நொந்தபடி நான்....


பதறிப் போயிருக்கிறேன்

கையிருப்பும் காலியாகி இருந்தது...


யாத்தே......

என்ன செய்வேன்..?

எப்படி சமாளிப்பேன்..??

இதுதான் கடைசியும் கூட...........


வெறுமையால் நிறைந்திருக்கும்

அந்தக் குடிசையின் தரையில்

படுத்திருக்கிறார்கள் அவர்கள்


ஏதோ புரிந்ததால் கண்ணைமூடி

தூங்கியதுபோல நடிக்கிறது மூத்தது...

எதுவும் புரியாததால்

கேள்விகளால் துளைத்தபடி

புரண்டுக்கொண்டே இருக்கிறது சின்னது...


அம்மா...இது வடை தானே ??


பதட்டத்தை மறைத்தபடி

காதிலெதுவும் கேட்க்காததுபோல

இடையில் நிறுத்தாமல்

தொடர்ந்தபடி இருக்கிறேன் நான்...


அப்போ அந்த ராசா முன்னால

தொம்முன்னு குதிச்சதாம் ஒரு..........


சூழ்ந்திருக்கும் வீடுகளிலிருந்து

சூழ்ச்சி மணத்துடன் எழுந்து

கள்ளத்தனமாய்த் தவழ்ந்து

கூரையைப் பிளந்து நுழைந்து

குழந்தைகளின்முன் உருண்டு

குட்டிக்கரணம் அடித்தபடியே

என்னைக் கேலிசெய்து கொண்டிருக்கிறது...

விதவிதமாய் தாளிக்கும் சப்தமும்

வகைவகையான பண்டங்களின் வாசமும்....


திடீரெனத் துள்ளி எழுந்த ‘சின்னது

பிரகாசிக்கும் கண்களுடன்

மூச்சை இழுத்து விட்டு


ம்ம்ம்ம்......இது முறுக்கு...! என்றதும்

ஈரக்குலை அறுந்தது எனக்கு


கையைப் பிடித்து இழுத்து

முகத்தை அடிமடிக்குள் புதைத்து

உரத்த குரலில் ஆரம்பிக்கிறேன்

தெரியவில்லை என்றாலும்

புதிய கதையொன்றை ..............


ஒரே ஒரு ஊருல ..................

.

( நன்றி : கரு : ப்ராங்க்ளின் குமார்)

Thursday, January 6, 2011

புலம் பெயர்ந்ததோர் உடலின் புலம்பல்


அது ஒரு

ஐப்பசியின் மழைக் காலம்….

தூங்கும் நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி நீ..

உன்னைத் தொங்கியபடி நான்


உலகமே ஒரு நொடியில்

எனது காலடிக்கும் கீழாகிப்போனது


என்னை மறந்தேன் நான்..மிதந்தே

எங்கெங்கோ பறந்தேன் நான்


இது ஒரு

வளைகுடாவின் பனிக்காலம்...

ஏங்கியபடி நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி அங்கே நீ..

உன்னைத் தொங்கியபடி எனது நினைவுகள்..

அவற்றைத் தூக்கியபடி இங்கே நான்..


ஏனோ ஒரு நொடியில்

எல்லாமே தலைகீழாகிப்போனது


எனதுலகை இழந்திருக்கிறேன்.. இங்கே

ஏதோ இருக்கிறேன்...........

Wednesday, November 24, 2010

இதுவும் ஒரு தொடர்கதையாகக் கூடும்..........!


ஊரடங்கிய நடுஇரவில்

முகம்தெரியாத நள்ளிருளில்

தலையணையுள் முகம்புதைத்து

அழுகையுள் அமிழ்ந்து

கொண்டிருக்கிறேன் நான்...


எதிர்பாராத வேளையில்

என்முதுகைத் தடவிவிட்டு

தலையை வருடிவிட்டு.......


துக்கம் கரைந்தபின்


ஏன் ? என்று கேட்ப்பாள்

எனநான் எதிர்பார்த்த வேளையில்

கைகளை மடித்து

தலைக்கு வைத்து

தூங்கிப்போகிறாள் அம்மா...


ஆச்சரியமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


கொதிக்கும் ஆவியில்

வேகும் இட்டிலியை

ஆள்க்காட்டி விரலால்

குத்தி சோதித்து

வெறும் கையால் எடுத்து

எனது தட்டில் வைக்கிறாள் அம்மா


ஆச்சரிமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


தட்டிலதை

துண்டாக்கும் வேளையில்.....

விரல்களைத் தாக்கிய சூட்டில்

கைகளை உதறி பதறியதைத்

தவறவிட்ட அந்த நொடியில்....

உச்சியில் அடித்தார்போல ஒன்று

நச்சென்று உறைக்கிறது எனக்குள்......


அதுவரையிலும்

ஆச்சரியமாகவே தெரிந்த

அமைதியான அம்மாவை.......

இப்போது முதல்

அதிர்ச்சியோடு

பார்க்கத் துவங்குகிறேன் நான்....


"காயங்களால்

உள்ளும் புறமும் காய்த்து

எல்லாமும்

மரத்துப் போயிருக்கிறாளோ

அம்மா..........?!"


( நன்றி : கரு:- ப்ராங்ளின்குமார், நாணற்காடன்)

.

Monday, November 22, 2010

ஏன்?..எதற்கு??....எப்படி???


அனைவரும் கிளம்பியபின்

அத்தனையும் அணைத்து

அலுவலகம் முடித்துக் கிளம்ப

எப்படியும் அரைமணி ஆகிவிடும் ....


ம்ம்ம்ம்....


பாப்பாவின் பத்தாவது

பிறந்த நாள் கொண்டாட்டம்

பரபரப்பாய் முடிந்திருக்கும் ....


இப்போதே பத்தாகப் போகிறது

அரக்கப் பரக்க விரைந்தாலும்

இன்னும் அரைமணி தாண்டிவிடும்


பதட்டமாய் இருக்கிறது எனக்கு...


ஏங்கிப் போயிருப்பள் அவள்.....

தூங்கிப் போகும்முன் முன்நின்று

சிரிக்க வைத்துவிட வேண்டும்...

நெற்றியில் முத்தமிட்டுவிட வேண்டும்


மிகவும் பதட்டமாய் இருக்கிறது எனக்கு....


வேகவேகமாய்க் கதவடைத்து

அவசர அவசரமாய் படிஇறங்கத்

தொடங்குகிறேன் நான்....


எதிர் கீழே

மெல்லிய இருளில்

மங்கிய உருவில்

கலங்கிய முகத்துடன்

ஒரு நிமிடம் நிற்க

சொல்லி கெஞ்சலாய்

சைகை செய்த படியே

கீழ்ப் படியிலிருந்து

மேலேறத் தொடங்குகிறாள் அவள்


பலநாள் பழகிய முகம்.......

மிகமிக அறிமுகமான உருவம்.......


இவர் யாராய் இருக்கும் ?

இங்கே யாரைப் பார்க்க ??

இந்த நேரத்தில் எப்படி ???


உள்ளே கேள்விகள்

வளையமிடும் வேளையில்

பாப்பாவின் நினைவுகள் தூண்டிலிட.....


குடையாய் சுருங்கிய புருவங்களுடன்

அவசரமாய் அவளைக் கடக்கிறேன்


அந்த நொடியில்

திடுக்கிட்டுப்போய் நிற்கிறேன்


வாசம் ....

அக்காவின் வாசம் ...

பத்தில் பறந்துபோன

பாசமிகு அக்காவின் வாசம்....


இந்த வயதிலிருந்தால்

இப்படித்தான் இருப்பாள் அவள்


அதிர்ந்து திரும்புகிறேன் ...


அங்கே யாரும் இல்லை

அருகில் ஒருவரும் இல்லை


ஒருவேளை மேலேறிச் சென்றிருக்கலாம் ?

அல்லது வெறும் பிரம்மையாய் இருக்கலாம் ??


ஆராய நேரமின்றி

ஒரு நொடி தாமதித்து

என்னையே தேற்றிக் கொண்டு

தாவி இறங்கி தரையைத் தொடுகிறேன் ....


ஒரு நொடியின்

நூறில் ஒருபங்கு

நேர இடைவெளியில்

என்னையும் முந்திக்கொண்டு

எனது இருசக்கர வாகனத்தின்


மேலேறி........

நகராமல் நிற்கிறது

நகரப் பேருந்து ஒன்று ......!

.

Wednesday, October 13, 2010

சர..சர..அவசர.......!


அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய்க் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் நுழைந்து

அவசரமாய் அமர்ந்து

அவசரமாய் எழுதி

அவசரமாய்க் கூட்டி

அவசரமாய்க் கழித்து

அவசரமாய்த் திட்டமிட்டு

அவசரமாய் வெளியிட்டு

அவசரமாய்த் திட்டுவாங்கி

அவசரமாய் மறந்து

அவசரமாய் மூடி

அவசரமாய் வெளியேறி

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் ஓய்வெடுத்து

அவசரமாய் சொல்லிக் கொடுத்து

அவசரமாய் உணவெடுத்து

அவசரமாய்த் தூங்கவைத்து

அவசரமாய்ப் படுத்து

அவசரமாய்ப் படித்து

அவசரமாய் முடித்து

அவசரமாய்க் கண்மூடி சயனித்து

அவசரமாய்க் கனவில் பயணித்து

..........................

அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவச......................


சே.... என்ன இது ?

என்னதான் வாழ்க்கை இது !

ஒரு நொடியில் உறைகிறேன்

மறு நொடியில் சரிகிறேன்

சன்னலைத் தாண்டி எங்கோ

சூனியத்தில் வெறிக்கிறேன்


அருகிருந்த கிளையில்

நிதானமாய்

நகர்ந்து கொண்டிருக்கிறது

நத்தை ஒன்று


.

Tuesday, August 3, 2010

வளையல் சத்தம் ........!


கண்ணாடி
வளையல் சத்தம்......

முற்றத்தில் மரநிழலில்
கயிற்றுக் கட்டிலில் நான்...
உள்ளம் கண்டபடி
கொந்தளித்தபடி இருக்கிறேன்..

உள்ளே
அவள் எதையோ
மெதுவாய் கோபமாய்
தாளித்துக் கொண்டிருக்கிறாள்....


’நேற்றுவரை அமுதமாய்
இப்போதோ அமிலமாய்...’
இங்கேவரையிலும்
அந்த வளையல்சத்தம்
வந்து வதைத்துக்
கொண்டிருக்கிறது என்னை....


’கலியாணக் கறுக்கே
இன்னும் கொறையலியே
அதுக்குள்ளார
குடிசைக்குக் குறுக்கால
கோட்டைப் போட்டிருவாளோ ?

அதுக்குள்ள இதுக்குள்ளே
என்னதான் குறைச்சலாம் அவளுக்கு ?
எங்கேயும் அமையுமா
இப்படியொரு கூட்டுக் குடும்பம் !

பத்துக்குப் பத்துதான் வீடுன்னாலும்
பக்கத்தல இருந்து பாத்துக்கும் மாமியாரு
வெக்கத்துல திரும்பி நிக்கும் கொழுந்தனாரு
காலுக்குள்ள சுத்திவரும் நாத்தனாரு
காதுக்குள்ள வந்துபேசும் பூட்டனாரு

என்னதான் குறைச்சலாம் அவளுக்கு ??’


வளையல் சத்தம் நெருங்க
வந்துவிட்டாள் மிகவும் அருகே

வெட்க்கத்தைக் கொன்றுவிட்டு
வேகமாகத்தான் வந்து நிற்கிறாள்

”போகணும்
தனியேப் போகணும்”


ஒரு நொடியில்
எனக்கு உயிரே போனது

”நீங்க மட்டும் போகணும்
சந்தைக்கு சட்டுன்னுப் போகணும்”


சடுதியில் பாதியில்
போன உயிர் தொங்கியே
கேள்வியோடு நின்றது

”வாங்கி வரணும்
உடனே வாங்கி வரணும்
’ரப்பர்’ வளையல் வாங்கி வரணும்”



இப்போதுதான் கவனிக்கிறேன்

வெட்கம்தான் அவளைத்
தின்று கொண்டிருக்கிறது .

.

Monday, December 21, 2009

விதைத்ததே விளையும்..



மெல்லியப் பூக்களைப் பறித்து
சாலையில் வெயிலில் விரித்து
அதன்மேல் நடந்தாலும்
அவள்பாதம் நோகுமென்று
என்பாதத்தின் மேலேற்றித்
தொடர்ந்தேன் பயணம்.......

காலத்தின் ஓட்டத்தில்
பாதையும் , ஓரமும்
கல்லும் முள்ளுமாய் மாற
நான் பழக்கிவிட்ட அந்தப்
பயணமுறை மட்டும்
மாறாமல் தொடர்கிறது......

குருதி தோய்ந்த எனது
காலடித் தடங்களை பார்த்து
கேலிசெய்து கொண்டிருக்கின்றன

பாதையின் ஓரத்தில்
சருகாய்க் காய்ந்து கிடந்த
அந்தப்பூக்கள் .

.

Wednesday, December 16, 2009

ஒற்றைப் புத்தக நூலகம்..!


(1=1)

நாளெல்லாம் திட்டமிடுகிறேன்
மனதுக்குள் ஒத்திகைப் பார்க்கிறேன்

வாய்த்தப் பொழுதில்...
ஆயிரம் பக்கங்களை முழுதுமாய்
நிமிடத்தில் படித்து முடிக்கிறேன்

சமயத்தில்...
ஒருவார்த்தைக்கு அர்த்தம் புரியாமல்
ஓராயிரம்முறைப் புரட்டிப் பார்க்கிறேன்

எல்லாம் படித்தத் திருப்தியில்
ஒருநொடியில் மூழ்கிப் போகிறேன்

விழித்து எழுந்தபின் எனக்குள்
அனைத்துமே அணைந்துபோய் ,
படித்ததெல்லாம் மறந்துபோய்,
எல்லாமே புதியதாய்த் தோன்ற
மீண்டும் தயாராகிறேன்.....

அடுத்தத் திட்டத்துக்கும்
அதற்கான ஒத்திகைக்கும்....

அங்கே........
சளைக்காமல் ஆர்வமாய்
சலிக்காமல் காத்திருக்கிறது
எனக்காக நூலகம்...

ஒரேஒரு புத்தகம் கொண்ட
எனக்கான நூலகம் ......

Tuesday, October 27, 2009

முடிவில் ஆரம்பமாகும் பயணங்கள் ........


ஒட்டு மொத்த குடும்பமும்
ஒரு தோளின் மேல்.
தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
தலைமகன் நான்.

சன்னல் கதவுக்கு ஒன்று
வாசல் காலுக்கு இரண்டென
வீட்டுக்கே மூச்சுத் திணறும்
கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்

மணம் முடித்த அவளுடன்
மனம் விடுத்துப் பேசவே...
வந்தவளுடன் தனிமையில்
தொந்தரவின்றிப் பேசவே...
வாரம் ஒன்று முழுதாய் ஆனது

மண வாழ்வைத் தெடங்கவே
மாதம் மூன்றுக்கும் மேலானது

இயந்திர உலகில் கரையேற
இயந்திரம் போல் இயக்கம்..........

தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
திருமணம் , புகுந்தவீடு பயணம்........

தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........

பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
பராமரிப்பு , கடைசிப் பயணம்...........

குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
திருமணம் ,வெளிநாடுப் பயணம்.......


பயணம்,பயணம்,பயணம்............
பயணத்தைத் தொடர்ந்து
பயணிக்க வைக்க எனக்கும்
சயனம் இல்லாத பயணம்.........


எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
வந்துசேர்ந்தது பணி ஓய்வும்

இதோ.....

சுற்றியிருந்த உறவெல்லாம்
விட்டுச் சென்ற பிறகு நான்...
தலையணை தேடும் மனதுடன் !
தனிமையில் தொடரும் அவளுடன் !!

கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..

அடடா,,,, !!!!!!!!!!

உண்மையது எனக்கு அப்போதுதான்
உறைக்கத் தொடங்கியது .....!

உதறிச் சென்றொருக்கெல்லாம்
விரட்டித் தேடி செய்தேனே !
எனை நம்பி வந்தவளை
நினைக்க மறந்தே போனேனே !!

என்னவளின் எண்ணங்களை
எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
கடமையின் நெரிசலில் அவளின்
ஆசைகள் எதையும் அறியவியில்லையே

குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
குனிந்த படியே இருக்கிறேன்....
நேருக்கு நேராக அவளை
நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....

என்முகத்தை தனக்குள் அணைத்து
தன்மூச்சை எனக்குள் அழுத்தி

இச்சென முத்தம் ஒன்றை
உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
மெதுவாய் கையிலிருந்த உணவை
ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,

மெல்லத் திரும்பி நடக்கிறாள்
மெளனமாய் சிரித்து விட்டு !
’ நானிருக்கிறேன் ‘ என்ற சேதியை
நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!

ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !

என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
எங்கோ முடியப் போகும் தருணத்தில்
இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
எங்களின் மன வாழ்க்கை புதிதாய் !!

Monday, August 10, 2009

அவனது சிரிப்பின் ரகசியம்


நெடுநாளைக்குப்பின் விழாவில்
குடும்பத்துடன் சந்திக்கிறோம்

நண்பனவன் இல்லாள் அங்கு
பம்பரமாய்ச் சுழல்கிறாள்

வருபவர்கள் யார் என்றாலும்
வாய்நிறைய வரவேற்கிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”அப்படித்தான்” என்கிறான்
”கொடுத்து வைத்தவன்” என்கிறேன்

குழந்தைகளுக்குத் துடைத்து எடுத்து
கால்கழுவி விடுகிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”எப்பவுமே அப்படித்தான்” என்கிறான்
”யோகம் அமைந்தவன்” என்கிறேன்

விழாவின் வேலைகளெல்லாம்
விழுந்து விழுந்து செய்கிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய்ச் சிரிக்கிறான்
”அவள் எப்பவுமே
...அப்படித்தான்”
என்கிறான்
”சொர்க்கத்தோடு வசிக்கிறாய்” என்கிறேன்

வயதானவர்கள் காலில் விழுந்து
வாழ்த்துப் பெறுகிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”வெளியே அவள்
.....எப்பவுமே அப்படித்தான்”
என்கிறான்
”கடவுள் உன்னுட........”

எனது வார்த்தை பாதியில் உடைந்துபோனது
அது வரும் பாதையில் உறைந்துபோனது

வார்த்தையது செய்தியை உரக்கசொன்னது
அவனது சிரிப்பின் ரகசியம் விளக்கிச்சென்றது

அவனும் வெளியே மட்டுமே சிரிக்கிறான்’

Tuesday, April 21, 2009

எப்படி இருக்கும்???.....


யாருமே எழுதாத கவிதை
எவருமே எடுக்காத புகைப்படம்

மண்ணில் வந்துவிழும்
மழையின் முதல் துளி

கடலின் கால்நனைக்கும்
கதிரவனின் முதல் ஒளி

மொட்டு மலராக
இதழ் திறக்கும் நேரம்

கானகக் கருங்குயில்
கானத்தின் ராகம்

வெள்ளை மேகம் ஒன்றுசேர்ந்து
இருட்டாகும் ரகசியம்

இருட்டிலிருந்து வெளிச்சமாய் மின்னல்
வெளியாகும் அதிசயம்

காற்றிலிருந்து காலைப் பனித்துளி
உருவாகும் தருணம்

தொட்டுத் தடவிச் செல்லும்
தென்றலின் உருவம்

என்னவளின் கருவில்
எட்டுமாத உருவிலிருக்கும்
எங்கள் இருவரின் ஓருயிர்

எப்படி இருக்கும் ?
ஏங்கிப்போய் இருக்கிறேன் !
யாருக்காவது தெரியுமா ?

Monday, February 16, 2009

எங்கே ஆரம்பமானது...?


"கம்பங்கூழும் நீச்ச தண்ணியும்
கஞ்சிச் சோறும் கடிக்க மிளகாயும்
கேப்பை களியும் சோள தோசையும்
கருவாடோடு முந்தாநாளு கூட்டிவச்ச
கறிக் குழம்பும் கொடிக் கறியும்
சகட்டுமேனிக்கு சாப்பிட்ட தாத்தா

நூறுவயசத் தாண்டிய பின்னாலும்
மருந்துக்குக் கூட மருந்து வாங்க
மருத்துவமனை வாசல மிதிச்சதில்லை
மலை போல இன்னும் இருக்கிறார்"


குக்கர் சாதமும் பீசா ரொட்டியும்
உடனடிக் குழம்பும் தடாலடி உணவும்
சத்து மாவும் சக்தியூட்டும் பானமும்
திட்டமிட்டு தினமும் சாப்பிடும் அப்பா

மறந்துபோய் நூறுநாள் தாண்டியும்
மருந்து வாங்க மருத்துவம் பார்க்க
மருத்துவமனை வாசல் மிதிக்காவிட்டால்
தடுமாறித் திணறிப்போய் விடுகிறார்

"சாதாரணமாய் சாப்பிட்ட தாத்தா நல்லா
சம்முன்னுதானே இருக்காரு
கணக்குப் பண்ணி சாப்பிடும் அப்பா ஏன்
கசங்கிப் போயி கிடக்காரு"


தவறு எங்கே நிகழ்ந்தது?
தடம் எப்போது மாறியது?
ஆரம்ப புள்ளியாய் அது
ஆரம்பித்த இடம் எது?

Tuesday, January 13, 2009

ஊரான் பிள்ளையை...!!!


மகப்பேறு மருத்துவமனையின் உள்ளே
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
அறுவை மருத்துவப் பகுதியின் வெளியே

உடல் சோர்ந்துபோய் ஓய்ந்திருக்க
உள்ளம் ஏங்கிப்போய் வாசலில் தவமிருக்கிறது

பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர்
அவசரமாய் ஏதோ பெயர் எழுதி
அவன் கையில் திணிக்கிறார்
"காலம் கடந்து விட்டது ஆனாலும்
கடைசியாய் ஒரு முயற்சி
கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
கருணை அவன் வைத்துவிட்டால்
இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்"


மருத்துவமனையில் இல்லாத
மிக முக்கியமான மருந்தாம்
தொலைவில் தான் கிடைக்குமாம்
தலை தெறிக்க ஓடுகிறான்

இருசக்கர வாகனம் எடுத்து
நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான்
நினைவுகள் அவனைப் புறம் தள்ளி
நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது

பத்து வருடக் கனவு
பாதியிலேயே கலைந்து விடுமா?
கூடும் இடத்தில் ஏளனம்
குடும்பத்திற்குள்ளும் அவமானம்
மலடி என்ற மறைமுகப் பேச்சையும்
முடியாதவன் என்ற மனம் வேகும் ஏச்சையும்
மாற்றி அமைக்க வந்த மாமருந்து
முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா?

திடீர் குறுக்கீட்டால்
தொடர்பு தடைபட்டு
தடாலென நிறுத்துகிறான்
நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க
நடுங்கிப்போய் நிற்கிறான்

மிரண்ட பார்வையோடு
மேலும் தொடர வழி தெரியாமல்
குட்டி பூனை ஒன்று
குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது

ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல்
இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது

"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!"
"சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!"
"உன் அப்பன் ஊட்டு ரோடா இது !"
"பெரிய கடவுள்னுதான் நெனப்பு!"


ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும்
எதுவும் அவன் காதில் விழவில்லை
'அங்கீகரிக்க அவசியமில்லை
ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும்
அவமானப்படுத்தாமல் இருக்கலாமே'


வேதனையைத் தாங்கிக்கொண்டு
பூனையையும் தூக்கிக்கொண்டு
மன வருத்தத்தோடு அங்கிருந்து
மருந்து வாங்கக் கிளம்புகிறான்

அதே நேரம் அங்கீகாரம்
அவனுக்கு அங்கே கிடைத்துவிட்டது
தலை தப்பிய சுகப்பிரசவம்
தாயும் சேயும் நலம்

Wednesday, December 10, 2008

என் நிலை என்ன..?


சூறாவளியின் மையத்தில் நான்
சுனாமியின் சுழற்சிக்குள் நான்

என் கரு சுமப்பவள்
என்னை கருவில் சுமந்தவள்
இடையில் ஏதும் புரியாமல் நான்

தன் நிலை காக்க ஒருவள்
தன்னை நிலை நாட்ட மற்றவள்
என் நிலை தெரியாமல் நடுவில் நான்

இறுகும் சுருக்கு கயிறு கழுத்தில்
இரண்டு கத்தியின் மேல் நிற்கிறேன்
பிரச்சினையை நிறுத்த
பேசியே ஆக வேண்டும் நான்

எனக்குத் தெரிந்ததை அவர்களிடம்
எடுத்துச் சொல்லி அறிவுரித்தி
வேகமாகக் கோபத்தோடு
வெளியேறிப்போகிறேன் நான்

அந்திசாயும் நேரம்
அமைதியாய் உள் நுழைகிறேன்
ஆரவாரம் ஏதும் இல்லை
ஆள் அரவமும் இல்லை

அந்த அமைதி எனக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது
என்னவோ நடந்திருக்கிறது
எதுவோ நடக்கவும் போகிறது

இருவரும் ஒன்றாய் சேர்ந்து
இருதுருவமும் ஒருசேர இணைந்து
எனக்கு எதிரே நிற்கிறார்கள்
எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது

எற்கனவே சமாதனம் ஆகிவிட்டது
ஏதோ உடன்படிக்கையும் முடிந்துவிட்டது

"எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்
உங்களை யார் இடையில் வரச் சொன்னது?"
முகத்துக்கு நேரே கேட்டுவிட்டு
முகம் திருப்பி உள்சென்று விட்டார்கள்

எதிர் எதிரே
எதிரியாய் நின்றவர்களுக்கு
எதிர்பாராமல் நான் இப்போது
எதிரியாய் ஆகிப்போனேன்

திருதிருவென விழித்துக்கொண்டு
தன்னந்தனியே நான்
என் நிலை என்னவென்று
எனக்கு இப்போதும் புரியவில்லை