Monday, March 30, 2009

தெரியும்...! ஆனால் தெரியாது..!!


அமைச்சர்கள்வரும் அந்தத் தார்சாலை
அன்றுதான் போட்டதென்பது
அவர்களுக்குத் தெரியாதா?

சாலையோரம் தூவப்படும்
நோய்த் தடுப்பு மருந்துகள்
அன்று மட்டும்தான் என்பதும்
அவர்களுக்குத் தெரியாதா?

தெருவிளக்கு எரியாமல் கிடக்க
ஆடம்பர விளக்குகள் ஆயிரம்எரிவது
அன்று மட்டும்தான் என்பதும்
அவர்களுக்குத் தெரியாதா?

எங்களுக்குத் தெரியும் என்பதாவது
அவர்களுக்குத் தெரியுமா?தெரியாதா??

Saturday, March 28, 2009

பெரியது எது? இரண்டயிரமா,இருநூறா??........


சனிக்கிழமை இன்று
சாயங்கால நேரம்

தனித்தனியாய் இருக்கும் நண்பர்கள்
இனிதாய் சந்தித்துக்கொள்ளும் நேரம்
சுழற்சி முறையில் நண்பர்களுக்காக
சும்மா செலவு செய்யும் நாள்

இதோ கிளம்புகிறேன் நான்
அதே கிழக்குகடற்கரைச் சாலை
மதிமயக்கும் மாலை விருந்தின்
மொத்தச் செலவும் என்னுடையது

அதிகமாய் இரண்டாயிரம் ஆகலாம்
ஆனாலும் அதுபற்றிக் கவலையில்லை

இரண்டு லட்சம் சம்பாதிக்கிறேன்
இதற்கென நண்பர்களுக்கென
இருபதாயிரம் செலவு செய்யலாம்
இருந்தாலும் அதிலொன்றும் தப்பேயில்லை

பளபளக்கும் புத்தம் புது
சலவை நோட்டுகளில் பத்தை
சட்டைப் பைக்குள் வைக்கிறேன்
சாவி எடுத்துக் கிளம்புகிறேன்

பணத்தைப் பூட்டி வைக்காமல்
பள்ளத்தில் பதுக்கி வைக்காமல்
புழக்கத்தில் பறக்க விடும்
பரோபகாரிகள் நாங்கள்

நண்பர்கள் படை சூழ
நெடுநேரம் கும்மாளமிட்டு
ஆள் தவறாமல் கும்மியடித்து
நல்லபடியாய் முடிந்தது விருந்து

ஒவ்வொருவராய்க் கிளம்பிச் செல்ல
ஒருவழியாய் வந்துசேருகிறது பட்டியல்
எதிர்பார்த்தபடியே இரண்டாயிரத்து சொச்சம்
எண்ணி முழுநோட்டுக்களை வைக்கிறேன்

மிச்சம் வரக் காத்திருக்கிறேன்
மீதிப் பணத்தையும் பட்டியலையும்
மேசைமேல் வைத்துச் செல்கிறார் அவர்
மனம்போல அன்பளிப்பு வைக்கிறேன்

அப்போதுதான் கவனிக்கிறேன்

மீதம் இருக்கவேண்டியதோ நூறு
முன்னால் இருப்பதோ முன்னூறு
சுற்றும் முற்றும் கணிக்கிறேன்
சுருட்டி பையில் வைக்கிறேன்

அவசரமாய்க் கிளம்புகிறேன்
அலுவலகம் வந்து சேர்கிறேன்
அதன்பின்தான் யோசிக்கிறேன்
ஏதோ தவறுதலாய் உணர்கிறேன்

எடுத்திருக்கக் கூடாதோ????
கொடுத்திருக்க வேண்டுமோ!!!!!

Wednesday, March 25, 2009

ஒரு கேள்விக்காவது விடை தெரிந்திருந்தால்......


எனது அப்பா
எண்பது வயது அப்பா
நான் குழந்தையாய் இருக்கும்போது
கோமாவில் விழுந்தஅவர் இப்போது
என்குழந்தையைப் பார்க்க எழுந்திருக்கிறார்

நாற்பது வருட எதிர்பார்ப்பு அது
நான்கு நாட்களாகிறது விடியல் பிறந்து

தனக்குள் முழ்கி இருந்த அவர்
தன்னைச் சுற்றி நடப்பதை அறிய
ஆர்வக் கோளாரில் அவரோடு
நகர் வலம் கிளம்புகிறேன்

இருவரும் தெருவில்
இறங்கி நடக்கிறோம்


பொதி சுமக்கும் கழுதைபோல
ஆள் உயர பையைத் துக்கி
பள்ளி செல்லுகிறார்கள் குழந்தைகள் !
நாற்பது பக்க ஏட்டை
நான்காய் மடித்து அதை
காற்சட்டைக்குள் சொருகி
வெறும் கையை வீசி
கல்லூரி வருகிறார்கள் மாணவர்கள் !!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

வழிநெடுக முளைத்து நிற்கும்
குழந்தைகள் நல மருத்துவர்கள்
பிரசவக் கால மருத்துவமனைகள்
"பிறப்பு எல்லாமே எளிதாகி இருக்குமே?" என்கிறார்
"சுகப் பிரசவமே கிடையாது இப்போது!" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

கருப்புச் சட்டையணிந்து கன்னிச்சாமியார்கள்
கடவுளுக்கு விரதமிருந்து கோவிலுக்கு வருகிறார்கள்
கருப்புச் சட்டையணிந்து கட்சிசார்பானவர்கள்
கடவுளுக்கு விரோதமாக கோசமிட்டுச் செல்கிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"சுதந்திரதினம், விடுதலைதினம் போல
காதலர்தினம் கொண்டாடுகிறார்களே?
காதல்மனம் எதிர்ப்போர் குறைந்து போயினரா??
கலப்புமணம் மறுப்போர் மறைந்து போயினரா???"
என்கிறார்
"உலகம் மாறவில்லை இன்னமும்!" என்கிறேன்

பிறகு ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

குழம்பிப்போய் இருக்கிறார் அவர்
குதூகலமாய் மாற்ற அவரை
புதுத்திரைப்படம் கூட்டிச் செல்கிறேன்

ஆடல் காட்சியில் பனிப் பிரதேசத்தில்
ஆண்கள் அனைவரும் முழு ஆடையோடு
கம்பளியும் சேர்த்து அணிந்திருக்கிறார்கள்!
பெண்கள் வெறும் உள்ளாடையோடு
காலணிகூட இல்லாமல் ஆடுகிறார்கள்!!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

ஆண்கள் அனைவரும் பாடல் காட்சியில்
அவரவர் குரலில்அமைதியாகவேப் பாடுகிறார்கள்
பெண்கள் மட்டும் முக்கி திக்கித்திணறி
ஆண் குரலில் ஆர்ப்பாட்டமாய்ப் படுத்துகிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

விதியை நொந்து சோர்ந்துபோய் இருக்கிறார்
வீடு வந்து சேர்கிறோம் இருவரும்

"பங்காளி சொக்காரன் சொந்தங்களைவிட
பக்கத்து வீட்டுக்காரன் மிகமிகமுக்கியம்!
என்னை அறிமுகப்படுத்து அவர்களிடம்"
என்கிறார்
"எனக்கே அறிமுகமில்லை இன்னமும்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"குழந்தை குட்டியுள்ள வீடெனில்
குயில் கூவும் தோட்டம்போல
ஆரவாரமாய் இருக்கவேண்டுமே!
ஆனால் இங்கே என்ன இது
கல்லறைத் தோட்டம்போல
அமைதியாய் இருக்கிறதே?"
என்கிறார்
"தொலைக்காட்சி பார்ப்பதால்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"அரசே மதுபானக்கடை நடத்துகிறதா?
அங்கே மதுவும் ஊற்றிக் கொடுக்கிறதா??

கணக்கில் வராத கள்ளப்பணத்திற்கு
காந்திக்கணக்கு என்ற பெயரா?

மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்
மிதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறதே?"


கேள்விகள்? கேள்விகள்?? கேள்விகள்???
கேட்டுக் கொண்டே இருக்கிறார்.........
கொஞ்ச நேரத்தில் யாரையும் கேட்க்காமலேயே
குழம்பிப் போன மனத்தோடும் முகத்தோடும்
கோமாவுக்குள் சென்றுவிடுகிறார் மறுபடியும்

நாற்பது வருடங்கள் நலமாய் இருந்தவர்
நான்கே நாட்கள் திரும்ப வந்து
இதுவரை இருந்த நிம்மதியையும்
இங்கே தொலைத்து சென்றுவிட்டார்

அவர் அப்படியே இறந்திருக்கலாமோ?
மறுபடியும் இங்கே
வராமலேயே இருந்திருக்கலாமோ????

Tuesday, March 24, 2009

கடவுளே ஆனாலும் காத்திருக்க வேண்டும் !....


ஒரு 'SPLIT PERSONALITY' யாக என்னை உருவகம் செய்து கொள்ளுங்கள்:
------------------------------------------------------

பிஞ்சபாய சுருட்டி மூலைல வச்சுட்டு
கரையுர காக்காவ சேலையால வெரட்டிட்டு
அரை இருட்டுல குளிச்சு முடிச்சிட்டு
கெடச்ச கஞ்சிய குடிச்சி தொடச்சிட்டு

ஆட்டையும் குட்டியையும் பத்திக்கிட்டு
மாட்டையும் கன்னையும் கூட்டிக்கிட்டு
எருமைய குட்டையில எறக்கி விட்டுட்டு
எல்லாத்தையும் மொத்தமா மேச்சுகிட்டு

வெறகு சுள்ளிய சேர்த்துகிட்டு
காட்டு வேலைய முடிச்சிட்டு
வீட்டப் பாக்க வந்து சேர்ந்துட்டேன்

புண்ணாக்க எடுத்துப் போட்டுட்டு
கழனித் தண்ணிய கலக்கி விட்டுட்டு
மூஞ்சி மோரைய நல்லா கழுவிட்டு
கைய காலயும் கொஞ்சமா அலசிட்டு

ஆத்தா மொகத்த அன்னாந்து பார்த்துகிட்டே
முத்தத்தில வந்து உக்காந்து இருக்கேன்

கைல கெடச்சத அள்ளி சேத்து
கொஞ்சமா தண்ணியயும் அதுல ஊத்தி
தட்ட என்முன்னால தரையில
தள்ளி வச்சிட்டுப் போறா என்ஆத்தா

தெளிஞ்ச தண்ணிக்கு உள்ளார
குனிஞ்சு நல்லா பாத்தேன் பாரு
ஒத்த ஒத்தப் பருக்கையா
முத்து முத்தாத் தெரியுது சோறு

"உத்து உத்துப் பாக்காத புள்ள
உள்ளே என்ன இருக்கும்ன்னு
அள்ளிப்போட்ட எனக்குத் தெரியும்
உள்ளத குடிச்சிட்டுப் போய்த் தூங்கு"

முடிய அள்ளிச் சொருவிக் கிட்டு
முனங்கிக் கிட்டே போறா ஆத்தா

என்னுள் இருந்த அவள்
கொஞ்சம் புரண்டு படுக்கிறாள்


"இரு கொஞ்சம் பொறு
இருட்டு நல்லா விலகட்டும்
முரட்டு மேகமும் களையட்டும்"


"கஞ்சியக் குடிக்கச் சொன்னா
கண்டதையும் பேசுதே இந்தக்
கிறுக்குப் பய புள்ள"

குறுகுறுவென பாத்திட்டே போறா ஆத்தா

காத்திருக்கிறேன் கண்கொட்டாமல்
கலைந்தது அந்த மேகக் கூட்டம்
கணநொடிக்குள் நிகழ்ந்தது மாற்றம்
எனக்கு உள்ளும்,புறமும்

எனக்குள் அவள் எழுந்து நிற்கிறாள்
எனது தட்டுக்குள் இப்போது
எல்லாமே வந்து சேர்ந்துவிட்டன
"வானத்து பால் நிலாவும்
வண்ண வண்ண வின்மீன்களும்
சிதறிக் கிடந்தன என்
சின்னஞ்சிறியத் தட்டுக்குள் !

இரவு உணவுக்கு இதோ
பால் சோறும்! மீன் கூட்டும்!
இதற்கு மேல் என்ன வேண்டும் !!
கடவுளும் கூட இதற்காகக்
காத்திருக்கத்தான் வேண்டும்!!!"


எல்லாம் முடிந்து விட்டது
எனக்குள் அவள் தூங்கிவிட்டாள்

பாய ஒதறி போட்டுட்டு
படுக்கப் போறப்போ மெதுவா
பயந்துகிட்டே சொல்லுதேன்
"நாளைக்காவது ஒருவேளைக்கு
நல்ல சோறு தா ஆத்தா"

Monday, March 23, 2009

ஆடை இருந்தும் அம்மணமாய்.....!


மிருகக்காட்சிசாலை அது

கூண்டுக்குள் காட்சிப்பொருளாய்
கூச்சத்தோடு மிருகங்கள்
வரிசையில் ஆர்வமாய்
வந்துசெல்லும் மனிதர்கள்

சிங்கம்
சுற்றத்தை அடக்கி ஆளும் - அதன்
சொந்தங்களை சேர்த்து வாழும்

நரி
அண்டி ஒண்டிப் பிழைக்கும் - கூடவே
இருந்து குழியும் பறிக்கும்

பாம்பு
பார்த்தால் பயந்ததுபோல ஓடும் - அதன்
நாக்கினில் விசமும் இருக்கும்

நாய்
நன்றியோடு இருக்கும் - சமயத்தில்
நல்லவரையும் கடிக்கும்

குயில்
சொந்த வீடில்லாத ஏக்கத்தை -அதன்
சோகக் குரலில் காட்டும்

யானை
எளிமையாய் இருக்கும் - ஆனாலும்
அதற்கு மதமும் பிடிக்கும்

குரங்கு
குட்டிச் சேட்டைகள் செய்யும் _ அசந்தால்
இருப்பதைப் பிடுங்கித் திண்ணும்

பூனை
கண்களை மூடிக்கொள்ளும் _ உலகமே
இருண்டதாய் எண்ணிக்கொள்ளும்

நெருப்புக்கோழி
தரைக்குள் தலை நுழைக்கும் _ தான்மட்டும்
தப்பியதாய் நினைத்துக்கொள்ளும்

ஐந்தறிவு விலங்குகள் ஒவ்வொன்றிற்கும்
அதற்கென தனித்தனியே சிறப்புக்குணங்கள்

ஆறறிவு மனிதன் நம்மிடம்
அப்படி என்ன சிறப்பு குணம்?

அட,ஆச்சரியமாய் உணர்கிறேன்!
அனைத்து குணங்களும் என்னிடமும்
அப்படியே மாறாமல் இருக்கின்றன!!


ஒருநிமிடம் எனக்குள் யோசிக்கிறேன்
மறுநிமிடம் அதிர்ச்சியாகி நிற்கிறேன்
"மிருகங்களின் மொத்த கலவையா நான்!
குறிப்பிட்டுச் சொல்ல எனக்கென
சிறப்புக்க்குணம் ஏதும் இல்லையா?"


கட்டணம்கட்டி வந்தேன் மிருகக்காட்சிசாலை!
நட்டநடுவில் காட்சிப்பொருளாய் நிற்கிறேன்!!
அனைத்து மிருகங்களும் பார்த்துகொண்டிருக்கின்றன
என்னை இப்போது இலவசமாக!!!

அத்தனைக் கண்களுக்கும் முன்னால்
ஆடையோடு இருந்தாலும் நான்
அம்மணமாய் உணர்கிறேன்

Monday, March 16, 2009

பரிதாபத்துக்குரியவனின் கடைசி ஆசை....


இன்று ஒருநாள் எப்படியும் தாண்டிவிட்டால்
இனிய பிறந்தநாள் கொண்டாடிவிடுவேன்
இனி அதற்கு வழியே இல்லை
இன்று தாங்குவேனோ தெரியவில்லை

என் நூறாவது பிறந்தநாள்
ஏன் நூலிழையில் தவறியது
என்ற கதையைக் கேளுங்கள்

வீட்டிற்கு வடகிழக்கு மூலையில்
வாகாய் வளர்ந்து நிற்கும்
வாகை மரம் நான்

ஆயிரம் பேர் தங்கிச்செல்ல
அருமைநிழல் கொடுத்த நான்
அங்கே ஆயிரம் கருசுமக்க
அகன்றகிளை கொடுத்த நான்

கொளுத்தும் வெயிலைத் தாங்கி
கடும் குளிரில் தூங்கி
அடிக்கும் மழையில் நனைந்து
துடிக்கும் புயலில் நெளிந்து

இயற்கையை இதுவரை வென்று
இன்றுவரை நிமிர்ந்து நிற்கும் நான்
இந்த மனிதனின் சூழ்ச்சிவலையில்
இதோ வசமாய்ச் சிக்கிக்கொண்டேன்

விதி எனக்கு வந்துசேர்ந்தது
விருந்தினர் என்ற வடிவத்தில்
ஆச்சரியமாய் பார்த்தார் என்னைச் சுற்றி
ஆர்வமாய் விசாரித்தார் என்னைப் பற்றி

"வாஸ்த்துவின்படி வடகிழக்கில் மரம்
வீட்டின் நலத்திற்கு அகாது-அதிலும்
வாகைமரம் ஆகவே ஆகாது"


மெதுவாக பற்ற வைத்துவிட்டு
சாதுவாகக் கிளம்பிச் சென்றுவிட்டார்

இதோ..........

என்னை வெட்டி சாய்க்க
எனது நிழலில் நின்றுகொண்டு
கூட்டம் கூட்டி அமர்ந்துகொண்டு
திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்

நாளை விடியும்போது
நான் விறகாகி இருப்பேன்
நீங்கள் மனது வைத்தால்
நான் உயிரோடு இருப்பேன்

இறந்தநாளா? பிறந்தநாளா??
இனி உங்கள் கையில் தான்!
இரக்க மனம் உள்ளோர்களே!!
யாராவது உதவி செய்வீர்களா?

Saturday, March 14, 2009

அவனை விடக் கேவலமாய்....


அதிகாலைப் பொழுது
ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் நான்
அவனும் தயாராகி இருப்பான்
ஆரம்பமாகப் போகிறது எங்கள் ஊர்வலம்

தெருவுக்கு வந்து விட்டேன் நான்
தூரத்தில் காத்திருக்கிறான் அவன்
பெருமையோடு முன்னே நடக்கிறேன் நான்
பின் தொடர்ந்து வருகிறான் அவன்

இதோ ஆரம்பம் எங்கள் பயணம்
இனிவரும் ஒருமணி நேரம்
என் அருகில் எனக்கு எதிரில்
என் நிழலின் அருகில் கூட
எவரும் நெருங்கி வரமுடியாது

வாசல்வரை கொண்டு சேர்த்தபின் அவன்
விலகித் தன்வழிப் போய்விடுவான்
பத்து வருடமாய் தொடரும் நட்புக்கு
பதிலுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்

இத்தனை நன்றி காட்ட நான்
இவனுக்கு என்னதான் செய்துவிட்டேன்

முன்னம் ஒருநாள் இரவில்
சின்னஞ்சிறிய தாள் அளவில்
ரொட்டித் துண்டை வீசியதிலிருந்து
ஒட்டிக் கொண்டான் அன்றிலிருந்து

வீட்டிலும் வளர்க்கிறேன் நாய் ஒன்றை
வாசலைத்தாண்டி நான் வந்தவுடன்
வாலை லேசாய் ஆட்டி
காலை வாகாய் நீட்டி
கண்ணை லேசாய் சிமிட்டி
கவிழ்ந்து படுத்துக்கொள்ளும்

திடீரெனத் தடைபட்டது என் சிந்தனை ஓட்டம்
தெரு முனையில் அவனின் அலறல் சத்தம்
சுறுக்கு வலையில் சிக்கி அவன்
சுற்றிலும் நாய் பிடிக்கும் ஊழியர்கள்
ஒன்பதுபேர் இருந்தாலும் கூட
ஒருவராலும் நெருங்க முடியவில்லை

என்னைப் பார்த்தவுடன்
எப்படியும் காப்பேன்
என்ற எதிர்பார்ப்போடு
எதிர்த்து போராடாமல்
ஏக்கத்தோடு நிற்கிறான்

அமைதியாய் நிற்கிறேன் நானும்
அடுத்து என்ன செய்யவேண்டும்


அமைதியான அவனை அப்படியே
அடித்துத் தூக்கி கூண்டிற்க்குள் அடைக்கும்
அவர்களிடம் விடச் சொல்லிக் கேட்கலாமா?
அல்லது அப்படியே விட்டு விடலாமா?
இந்தப் பெரிய மனுசனுக்கும் தெரு நாய்க்கும்
இது என்னய்யா தொடர்பு என
ஏளனமாய்ப் பேசிவிடுவார்களோ?
என்வீடுவரை சொல்லிவிடுவார்களோ?

அமைதியாய் கூண்டுக்குள் நிற்கிறான் அவனும்
ஆயிரம் அதிர்ச்சி தெரிக்கிறது அவன் முகத்தில்

பலவருடம் பாதுகாத்த அவனுக்காக
சில நொடிகூட போராடாத என்முகத்தில்
இன்னும் எதையோ எதிர்பார்த்து
இமைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறான்

வண்டி அவனோடு மெல்ல நகர்ந்து
சின்னப் புள்ளியாகித் தொடர்ந்து
கண்ணிலிருந்து மறைந்ததே போனது

அவன் பார்வையிலிருந்தும் நான்
அர்த்தமில்லாத ஒற்றை புள்ளியாகி
அசிங்கமாகி மறைந்தே போய் இருப்பேன்

Saturday, March 7, 2009

அவன்,அவள்,நான்.......


கையில் விஷத்தோடும்
கண்களில் கலவரத்தோடும்
கையும் களவுமாய்
தலை குனிந்து அவன்
தரை பார்த்து நிற்கிறான்

தற்கொலை முயற்சி அது
தடைபட்ட வருத்தத்தில் அவன்
தலைவிறிக் கோலத்தில் அவள்

அண்ணன் என்றும் பாராமல்
அவள் அனலை வாரி வீசுகிறாள்

"சாகவேண்டும் என முடிவெடுத்தபின்
சாதிக்க வாய்ப்பு இருந்த போதும்
அமைதிச் சாவுதான் வேண்டுமெனில்
ஆணாய் பிறந்ததன் அர்த்தமென்ன ?

உன் சாவு சந்தேகத்தோடுதானே
உரசப்படும் இந்த உலகத்தால் !

எதனால் இது நிகழ்ந்தது ?
எப்படி இது நடந்தது ?
மருந்து குடித்தாலா ?
மாரடைப்பு வந்ததாலா ?
பயம் பிடித்ததாலா ?
பாசம் மிகுந்தலா ?
நோய் நொடியாலா ?
நொந்து போனதாலா ?

ஆளாளுக்கு ஒன்று கூறி
அசிங்கத்தின் ஒட்டு மொத்த
அடையாளமாகவே நீ
ஆக்கப் பட்டுவிடுவாயே!

மறந்து விட்டாயா அல்லது
மன்னித்து விட்டாயா ?

அம்மாவையும்
அப்பாவையும்
பொறுக்கி எடுத்து
எரியூட்டி முடித்து
எட்டுநாள் தானே ஆகிறது

அக்காவும் மாமாவும்
அவளது குழந்தையும்
சென்ற இடம் பற்றிய விபரம்
இன்றுவரைத் தெரியவில்லை!
உயிரோடாவது இருக்கிறார்களா ?
உண்மை இன்னும் புரியவில்லை!

எட்டத்தில் உள்ள சொந்தங்கள்
என்னவானார்கள் எனப் புரியவில்லை
பக்கத்தில் உள்ள பந்தங்கள்
பதுங்கிய இடம் தெரியவில்லை

உன்னால் முடியும்!
உண்மை உணர்!!

காயம்பட்ட இதயங்களுக்கு
களிம்பு தடவ முயற்சி செய்!
ஆயிரத்துக்குள் ஒன்றாய் இருந்துவிடாமல்
ஆயிரத்து ஒன்றாய் தனித்து நில்!

மண்ணோடு புதைந்த பின்னும்
உன்னோடு முடிந்து விடாமல்
உன்னுடய தடம் பதித்து செல்!
எதிரியின் மனதில் ஆழமாய்
என்றும் மறையா பயம் விதைத்து செல்!

வாழ்த்தி உன்னை நானே
வழி அனுப்பி வைப்பேன்"


வயதுக்கு மீறிய ஆவேசத்தோடு
வார்த்தைகளைக் கொட்டி விட்டு
இடுப்பில் கட்டியிருந்த என்னையும்
இடை மறைவிலிருந்த பொத்தானையும்
இதமாய் வருடிக்கொடுத்து விட்டு

ஏதோ முடிவோடு
எங்கோ கிளம்புகிறாள் அவள்