Showing posts with label விழித்தெழு. Show all posts
Showing posts with label விழித்தெழு. Show all posts

Thursday, April 7, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 2 : வான் மழையும் , வெண் சுண்ணாம்பும் ஒன்றா ?

வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு


அன்புப் பெரியோர்களே .......

திருக்குறளுக்கான விளக்கஉரையில், தவறான புரிதல் இருப்பதுபோலத் தோன்றும் இடங்களில் தெளிவு பெறுவதற்கான ஒரு முயற்சி இது

வழக்கு 2 :


பொருட்பால் :அங்க இயல்

அதிகாரம் : அவை அறிதல்

குறள் : 714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.


திரு மு.வரதராசனார் உரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

திரு மு.கருணாநிதி உரை :

அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

திரு சாலமன் பாப்பையா உரை :

தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.


திரு.பரிமேலழகர் உரை :

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார்.

மேலோட்டமாக ஒரு முதல் தகவல் அறிக்கை :

வெண் சுண்ணாம்பு, பால், வெள்ளை, வெண்மை என பல பெயர்கள் வந்துள்ளதே விளக்கவுரையில்....!. உவமைக்காக சுண்ணாம்பு பற்றி எல்லாமா அய்யன் சொல்லி இருப்பார்......?

வழக்கைத் தொடர்வோம் வாருங்கள் :

முக்கியமாக இடறுவது போலத் தோன்றும் இரண்டு சொற்களின் பொருளை ( ஒள்ளியர் , வான் சுதை ) முதலில் காண்போம்


ஒள்:

adj.பிரகாசமான;நல்ல; அழ குள்ள;அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc. , adj. bright, பிரகாசமான;


ஒள்ளி oḷḷi

, n. 1. Red gold; செம்பொன். 2. Šukra; சுக்கிரன்


சுதை cutai :

, n. < sudhā. Ambrosia; தேவாமிர்தம்.. Milk; பால்.

Whiteness; வெண்மை. (சூடா.) . Star; நட்சத்திரம். (அக. நி.) . Lightning; மின்னல். (சங். அக.), n. < sutā. Daughter; மகள். (பிங்.), n. Kicking cow; உதைகாற்பசு., n. < cyuta. Destruction; கேடு.

. சுதைக்குன்று cutai-k-kuṉṟu :, n. < சுதை¹ +. An artificial hillock plastered with chunam; சுண்ணாம்பு பூசிய செய்குன்று

கிடைத்த சான்றுகளில் இருந்து :

ஒள் = நல்ல ,அறிவுள்ள ,பிரகாசமான

ஒள்ளி = செம்பொன், தேவாமிர்தம் எனவும்

சுதை = அமுதம் , சுண்ணாம்பு

என்றிருந்தாலும்

வான்சுதை = வானமுதம்

= வானிலிருந்து வரும்அமுதம்

=மழை என்பதே பொருந்துவதால்......சுண்ணாம்பு விலக்கிக்கொள்ளப் படுகிறது

வான்சுதை வண்ணம் = மழை நீரின் வண்ணம்

=நிறமற்ற தன்மை என்பதுதான் பொருத்தமாக இருக்கும் .

வான்சுதை = வெண்சுண்ணாம்பு என்பதற்கான வாய்ப்பு இல்லை

வானமுதம் என்பது மழைதான் என்பதற்கான சான்றை அய்யனின் வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்தும் பெறலாம் .

அதிகாரம் 02 : வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [02:01]

விளக்கக் குறள் :

மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்

நல்லமுதம் என்றும் மழை

எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :

விளக்கவுரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக, மின்னும் பொன்போல் / தேவாமிர்தம்போல் நடந்து கொள்ள வேண்டும், பிறர் / அறிவில்லாதவர் முன் தாமும் வானமுதம்போல் / மழைநீர்போல் வண்ணமில்லாத் தன்மையுடன் அறிவில்லாதவர் போலிருக்க வேண்டும்.

எனது விளக்கக் குறள்:

அறிஞர்முன் மின்னும்பொன் போலிரு; மற்றோர்முன்

வான்மழைநீர் வண்ணம்கொள் வாய்



தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்

Tuesday, April 5, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 1 : வள்ளுவன் சொன்னது இதைதானா...?

அறிமுகம் :


வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு

அன்புப் பெரியோர்களே ......

திருக்குறளின்மேல் ஓர் இனம்புரியாத பற்று உருவாகி , எளிய தமிழில், மரபிலக்கணம் மாறாமல், குறள்வெண்பா அமைப்பிலேயே விளக்கக் குறள்கள் படைக்கும் முயற்சியின் இடையில் தொடரமுடியாமல் பல தடங்கள்கள் ,தடைக்கற்கள்.......

தெளிவுபெற வேண்டி சான்றோரின் விளக்கவுரைகளைத் தேடி எடுத்து , என்னைச் சரி செய்து கொள்ள நினைத்த பல இடங்களில் ....

இதேக் குழப்பம் அன்றும் இருந்திருக்கிறதோ ? அல்லது அதை சரிசெய்யாமல் / கவனிக்காமல் இருந்திருப்பார்களோ ?

என்ற ஐயங்கள் தோன்றும் அளவுக்கு மொத்தம் 40 இடங்களுக்கும் மேல் இடறல்கள்....விளக்கக் குளறுபடிகள்.... இருப்பதாகத் தோன்றியது..

அய்யனின் வாக்குக்கும்...சான்றோர்கள் தந்த விளக்கத்துக்கும் என்னளவில் பெரிய மாறுதல்களை உணர்ந்தேன்...,

அகராதிகளின் துணையுடனும் , நான் அறிந்து கொண்ட வரையிலும், நடைமுறை( LOGIC) பார்வையுடனும், எனது விளக்கத்தை ஒருபக்கமாகவும் , சான்றோர்களின் விளக்கத்தை மறுபக்கமும் வைத்து உங்கள்முன் படைக்கிறேன் ....

(இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகத்தான் எனக்கேப் படுகிறது ...இருந்தாலும் தவறு எங்கிருந்தாலும் சரி செய்யப் படவேண்டும் என்று நக்கீரனின் சீடனாக உங்கள்முன் நிற்கிறேன். எனது வாதத்தில் தவறு இருக்கலாம்...இருக்கும் இடங்களில் உங்களின் மாணவனின் தவறாக நினைத்து மன்னித்து விடுங்கள் )

திருக்குறளிலிலிருந்து அவரவர் எண்ணங்களின் அளவுகோலுக்கு ஏற்ப புதுப்புது விளக்கங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதிலிருந்து குறளுக்கு ஒத்த அதிர்வுடைய பழுதில்லாத சிறந்த ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் விளைந்த தொடர்

இது ..

ஆதரவு அளியுங்கள் பெரியோர்களே ......

தங்களின் மேலான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்..

[பி.கு : இது திருக்குறளைப் பற்றிய விவாதத் தொடர் அல்ல....

திருக்குறளைப் புரிவதில் ஏதும்பிழை இருக்குமோ? என்ற ஐயமும் ,அதற்கான விளக்கமுமே இந்தத்தொடரில் தொடரும்..]


வழக்கு 1 :

பொருட்பால் : அங்க இயல் /
அதிகாரம் : குறிப்பறிதல் :
குறள் 701:


கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.


உரை 1:

ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.


உரை 2:

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்உலகத்திற்கே அணியாவான்.


உரை 3:

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்குஆபரணம் போன்றவன்.


உரை 4:

குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.


பார்வை :

அய்யன் வள்ளுவன் ஒரு செய்தி சொல்லும்பொழுது விளக்கத்திற்காக ஒரு உவமையும் சொல்லிச்செல்வார்.

இங்கே..........அமைதியான முகம்பார்த்து ஆழ்மனத்தின் குறிப்பை அறிபவன் , எதற்காக சம்பந்தமில்லாமல் வற்றாத/ஆழ்கடல் சூழ்ந்த உலகத்துக்கு அணிகலனாக வேண்டும் ?

உலகின் ஆபரணம் என்று சொல்லி இருக்கலாமே ?

தொடர்பில்லாமல் இங்கே எதற்காக கடல்பற்றிய குறிப்பு வருகிறது ??

எதையும் போகிறபோக்கில் சொல்லிச் செல்ல அய்யன் எதற்கு???


’மாறாநீர் வையக் கணி’. = ’வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.’ என்று தவறாகக் கணித்து விட்டோமோ?


வழக்குத் தொடர்வோம் வாருங்கள் :

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு (கடலுக்கு மட்டும் 100 வகையான பெயர்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன் .....

கீழுள்ள சாட்சிகள் ...தேடலில் இருந்து கிடைக்கப் பெற்றவை

  • மாறாநீர் māṟā-nīr =. Sea, ocean; கடல்.
  • வையம் vaiyam : (page 3856) =தொழுக (புறநா. 8). 2. Chariot drawn by horses; குதிரை பூண்டிழுக்கும் இரதம் (சிலப். 6, 120.) (பிங்.) 3. Covered cart; கூடாரவண்டி. மானமர் நோக்கி யும் வைய மேறி (சிலப். 6, 120). 4. Palanquin; சிவிகை. (சூடா.) 5. Conveyance; ஊர்தி. (பிங்.) 6. Bullock; எருது. (பிங்.) 7. The 4th nakatra. See உரோகிணி. (பிங்.) 8.cf.வையம் (p. 902) [ vaiyam ] , s. the earth பூமி; 2. the 4th lunar mansion, உரோகிணி; 3. a palankeen, பல்லக்கு; 4. a car, தேர்; 5. a carriage, வண்டி; 6. a bullock-cart, மாட்டுவண்டி; 7. a conveyance in general, வாகனம்.
  • அணி³ ai = ஆபரணம் ., Array of an army; படைவகுப்பு. 2. Forepart of a vessel, stem, prow; கப்பலின் முன்பக்கம்.


இதிலிருந்து

  • மாறா நீர் = கடல்
  • வையம் = ஊர்தி /வாகனம் எனவும் கொண்டால்
  • மாறாநீர் வையம் = கடல் ஊர்தி /வாகனம் = கப்பல் / படகு எனக் கொள்ளலாம்
  • அணி = கப்பலின் முன்பக்கம் எனக் கொள்வோம் (முன்இரண்டு வார்த்தைகளுடன் [மாறாநீர் வையம்] தொடர்பு இல்லாமையால் ஆபரணமும் ,அணிவகுப்பும் இங்கே பொறுந்தாது )


மொத்தமாக

மாறாநீர் வையக் கணி = ஆழ்கடலைக் கிழித்துச் செல்லும்/ வெல்லும் படகின் முன்பாகம் .


எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :


விளக்கவுரை :

முகத்தைப் பார்த்தே ஆழ்மனதைக் கிழித்து உள்ளிருக்கும் குறிப்பை அறிபவன் , ஆழ்கடலைக் கிழித்து வெல்லும் படகின் முன்பகுதிக்கு ஒப்பானவன்

( இங்கு உவமை பொறுந்தி வருவதாக எனக்குப் படுகிறது )


எனது விளக்கக் குறள் :

முகக்குறிப்பால் உண்மை உணர்ந்துகொள்வோர்; ஆழ்கடல்

நீர்க்கிழித்து வெல்லும் படகு


பெரியவர்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் .....


Thursday, August 5, 2010

என்ன செய்யப் போகிறோம் நாம்........?


என்ன செய்யப் போகிறோம் நாம் ??

அன்பு உள்ளங்களே
சில சின்னச் சின்ன செய்திகளை முதலில் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் . அவைகளுக்கிடையே தொடர்பில்லாமல் இருந்தாலும் எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கித் தொடர்ந்து வாருங்கள்
செய்தி 1 :
'' நான் கோவைக்கு டிரான்ஸ்பர் ஆகியிருந்த நேரம். என் பொண்ணுக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. அவசரமா ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப்போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா பாருங்க ...சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
மாவட்டத்தின் மிகஉயர்ந்த பதவியில் இருந்த ஒரு அரசு ஊழியரின் பரிதாப வாக்குமூலம் இது .....

செய்தி 2:

வங்கி சேமிப்பு = 7,172 ரூபாய்

எல்.ஐ.சி. ஹவுஸிங் லோனில் வீடு = மதிப்பு ஒன்பது லட்சம்

இது பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மொத்த சொத்தின் மதிப்பு

செய்தி 3 :

லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் தவிர்த்து




இதனை தனது உயிர்மூச்சாகக் கொண்டு , அலுவலக நுழைவாயிலும், தனது தலைக்கு மேலும் அனைவரின் பார்வையிலும் படும்படியாக எழுதி வைத்துக்கொண்டு,. (மரத்தாலான பள்ளிக்கூட மேசை, ’S’ டைப் / வலைபின்னிய இரும்பு நாற்காலி .அதில் ஒரு வெள்ளைத் துண்டு விரிப்பு –இதுதான் அலுவலக அமைப்பு) நிமிர்ந்தபடி உழைத்துக் கொண்டிருக்கிறார் அவர்

செய்தி 4 :
தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு, இது வரை தனது அலுவலக வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகளுக்கு உயிர்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிருவனங்கள் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில், கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு வைத்து பராமரிக்கும் மரங்களின் எண்ணிக்கை இதுவரையிலும்.... மொத்தம் 25 லட்சத்திற்கும் மேல் ...........ஒரு அரசு ஊழியரின் நனவாகிக்கொண்டிருக்கும் கனவு இது.....

செய்தி 5 :

விவசாயிகளே நம் நாட்டின் ஜீவன் - முதுகெலும்பு
எனவே விவசாயிகளை கௌரவிப்போம் !
விவசாயிகளுக்கு நம் அலுவலகத்தில்
முன்னுரிமை அளிப்போம் !!

அவரது அலுவலகத்தில் அனைவர் பார்வையும் படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு இது

செய்தி 6 :


விவசாய மக்களின் வேலைப் பளுவினைக் கருத்தில் கொண்டு

’குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள்’ என தன் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில்சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்துவைக்க , திடீரெனத் தேர்ந்தெடுத்து ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து, முடிந்த அளவுக்கு அங்கேயே தீர்த்தும் வருகிறார் அவர்

செய்தி 7 :


ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதியினர் தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ’தான் வந்திருக்கும் செய்தி அறிந்தும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை’ கொள்வதாகக் கூறி அவர்களோடு புகைப்படம் எடுத்து அதைத் தனது அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார் அவர்

செய்தி 8 :

கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்குள் அறிவிப்பின்றி நுழைந்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்தும் , பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களுடன் நேரடியாக அவர்களுடன் கடிதத் தொடர்பும் கொள்கிறார் அவர்.

செய்தி 9 :
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிகள், கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் உழவர் சந்தைகள் ஓரளவு விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,

'விளையும் பொருட்களை அப்படியே விற்பதோடு நின்றுவிடாமல், மதிப்புக் கூட்டி விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்குமே'

என்ற மாற்றுச் சிந்தனையில் உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்' என்பதைத் தொடங்கினார் . காலையில் காய்கறி விற்பனை, மாலையில் உணவகம் என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது உழவர் சந்தை. வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகள், மிகவும் குறைந்த விலையில் இங்கே கிடைக்கும் என்பதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பே. கம்புதோசை, தினைப் பாயாசம், தினைஉப்புமா, முருங்கைசூப், ராகி இட்லி, ராகிதோசை, வெஜிடபிள் சூப், காளான் சூப், மிளகுத்தக்காளி சூப், சோளக் குழிபனியாரம் என விதவிதமான உணவுகளை ருசி பார்த்த மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

இங்கே உணவகம் நடத்த விரும்பும் விவசாயிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழஙகப்படுகிறது. சுற்றுவட்டார விவசாயிகளில் ஒருவரான எர்ணாபுரம் வெண்ணிலா, ''தினமும் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வியாபாரமாகுது. தினசரி 500 ரூபாய் வரைக்கும் லாபமா கிடைக்குது. கடைக்குத் தேவையான பொருளுங்களை தினமும் எங்க ஊர்ல இருந்து வாடகைக்கு ஆட்டோ பிடிச்சுதான் கொண்டு வந்துகிட்டிருந்தேன். வாடகை மட்டுமே மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய். இப்ப, இதுக்காகவே சொந்தமா ஒரு மாருதி கார் வாங்கியிருக்கேன். எல்லாம் இந்த உணவகத்துல சம்பாதிச்ச காசுலதான்'' என்றவரின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. “விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டியப் பொருளாக மாற்றினால்தான் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் உணவகம். இங்கு மொத்தம் 15 கடைகள் இருக்கிறது. ஆரம்பித்து ஐந்து மாதத்தில் 52 லட்சம் ரூபாய் வரை இங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று தொடங்கினால் விவசாயிகள் வேலையும், நல்ல வருமானமும் பெறுவார்கள்'' என்று புதிய சிந்தனையை விதைத்திருக்கிறார் அவர்


செய்தி 10 :

தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அவர்

--எனக்குத் தெரிந்த குட்டிச் செய்திகள் ( ஒரு நாள் அறிமுகத்தில் அறிந்து கொண்டது) இத்துடன் நிறைவு பெறுகிறது
’பெயரில் என்ன இருக்கிறது ?’என்று கேட்டான் அறிஞன் ஒருவன்

என்னைக்கேட்டால் ”பெயரிலும் எல்லாம் இருக்கிறது..!” என்றுதான் சொல்வேன்

ஆம்....

சகாயம்

உ.சகாயம் ஐ.ஏ.எஸ்

மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டம்

(ஊர் : புதுக்கோட்டை. ;தந்தை : உபகாரம் பிள்ளை. தாயார் : சவேரியம்மாள்.)



மேலேயுள்ள செய்திகளின் நாயகர். ஏழை எளியவர்கள் சகாயம் அடைய நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர் அவர் .

அவரது ஒரு நாள் செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பினைப் பெற்றதே எனக்குக்கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் . ஆம் .

‘ நான்’ என்று எனக்குள் இருக்கும் ’தற்பெருமையை’ பல சமயங்களில் / இடங்களில் /கிடைத்த பாடங்களால் செப்பனிட்டிருக்கிறேன் , சரி செய்திருக்கிறேன் . ஆனால் அதன் பெரும்பகுதியை அழித்தது நாமக்கல் ஆட்சியரின் அலுவலக வளாகத்தில்தான் .

நான் இங்கே எது சொன்னாலும் அவரது புகழ்பாடுவது போலவேத் தோன்றும் . ஆனாலும் இங்கெ இதைப் பதிவு செய்தே ஆகவேண்டும் .

அவரைப்போலவே சுற்றமும் !

ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதற்கான சாட்சியம் அவரது வீடு . குறை சொல்ல வந்த ஒரு கிராமத்து விவசாயியின் 2வயசுக் குழந்தையை கலெக்டர் வீட்டம்மா தூக்கிக் கொண்டு போய் (காலைலயே வந்துட்டாங்க போல ...மதியம் 2 மணி ஆகி விட்டதால் ) சாப்பாடு ஊட்டி, ஒன்னுக்குத் தொடைச்சு , ஒழுகிய மூக்கை சுத்தம் செய்து ...

’’’’’’’’’’’’’’’’’

சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு இதுபோன்ற பணிவிடை செய்ய எப்படி மனது வரும் ???? இதெல்லாம் எப்படி சாத்தியம் ??

நினைக்கும் போதெல்லாம் என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை .

ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் அவருக்கு............

என்ன ஒரு எளிமை !!

( அதிக விளக்கம் தேவை இல்லை .இணைப்புப் படத்தில் அவரது சட்டையின் [காலர்]கழுத்துப்பட்டையின் நிறமே இதற்குச் சான்று :)

தமிழக இளைஞர்களுக்கு அப்துல்கலாம் அய்யாவுக்கு அடுத்து , வாழும் வழிகாட்டியாக உருவாகிக்கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அய்யா .சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் என்றால் அது மிகையாகாது

‘நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக தண்டனை தரணுமுன்னா ,தாராளமாப் பண்ணிக்கோங்க'
ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது இப்படிப் பேசுகிறார்

( தொலைபேசியில் , நேரில் )

ஆலமரம் அதன் கடமையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறது
தன்னலமின்றி மேல் நோக்கி விரியும் கிளைகளை உரிய நேரத்தில் இறங்கித் தாங்க வேண்டியது விழுதுகளின் கடமை ! . நமது கடமை !!
வேர்களை வழுவாக்க விழுதுகள் கீழ் நோக்கி விழவேண்டும்
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

வெளிப்பார்வைக்கு சிங்கம் அரசாண்டு கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது . கூர்ந்து கவனித்தால்தான் தெரிகிறது . சிங்கத்தின் பாதையில் காத்திருக்கும் புதைகுழிகளும் , குள்ள நரிகளும் , தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளும் ,குறிவைத்து மறைந்திருக்கு அம்புகளும் .
உண்மையில் சிங்கம் ஒன்றும் அரியணையில் அமர்ந்திருக்கவில்லை .
கூரான கத்திமேல் நின்று கொண்டிருக்கிறது
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

’’நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!''
- தடதடக்கும் அவரது வார்த்தைகளில் வெட்ட வெளிச்சமாகிறது நடப்பு நிலவரம்
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

.’’ வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடுதான் ஓய்வு பெறணும்னு மட்டும்முடிவு பண்ணுனேன்’’ ஏக்கத்தோடு வெளிப்படு இந்த குறைந்த பட்ச ஆசையை நிறைவேற்ற
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.
பாதுகாக்கப் பட வேண்டியவர்கள் இவர்களைப் போன்றோர்தான்.
இவர்களில் வெளி உலகின் பார்வைக்குத் தெரிபவர்கள் 1 சதத்துக்கும் கீழ்தான்.
மற்றவர்களின் இருப்பையும் தேடிப் பதிவுசெய்ய வேண்டும். அவர்களும் கவனிக்கப் படுகிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப் படுத்தவேண்டும்

முடியுமா....!?

நம்மால் முடியும் !!!

அதற்காக ..... அடுத்து

என்ன செய்யப்போகிறோம் நாம் ?





தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று-பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ ?



வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் , ஒரு நிமிடம் ஒதுக்கி மேலுள்ள வரிகளை மீண்டும் ஒரு முறை , மெதுவாகப் படித்து உள்வாங்குங்கள் ...

’என்ன செய்யப் போகிறோம் ??’ என்ற கேள்வி
‘ நம்மால் எதுவும் செய்ய முடியும் .. !!’ என்று மாறும் .

மாறும் இதயங்களுக்காகக் காத்திருக்கிறேன் ...
வாருங்கள் உறவுகளே .......


நன்றி : செய்திகளுக்காக /
திரு.ஆல்பர்ட் பெர்ணாண்டோ , திரு. நிஜாமுதீன் , ஆனந்தவிகடன் , பசுமை விகடன், தமிழ்த் தென்றல் மின்னிதழ் .

--
என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Monday, January 4, 2010

மிக முக்கிய அறிவிப்பு / உங்களுக்கும் செய்தி உண்டு இதில்...



மரணம்.....
மனம் பதற வைத்த
அகால மரணம்......
யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்த
மாரடைப்பு மரணம்.....

அவனுக்கு முப்பது தான்
தாண்டி இருக்கும்....

அங்கே.....
நிலைமையின் தீவிரம் தெரியாமல்
அவன் காலைச் சுற்றிவிளையாடும்
குட்டிக் குட்டிக் குழந்தைகள் .

எதிர்பாராத வேளையில்
எதிர்காலமே இருண்டுபோய்
உணர்ச்சியெல்லாம் உறைந்துபோய்
தலைமாட்டில் விழுந்துகிடக்கும்
வெளி உலகம் தெரியாத மனைவி

கரையேறும்காலத்தில்
கரையேற்றுவான் என
நம்பியிருந்த ஒரேமகனை
கரையேற்றும் கட்டாயத்தால்
கலங்கிப் போயிருக்க்கும்
தளர்ந்துபோன பெற்றோர்

இழப்பின் தீவிரம் அறிந்து
இதயம் துடித்து ஓடிவந்து
சுற்றி நிற்கும் சுற்றத்தார்


இன்றிலிருந்து
அதிகாலை வேளையில்
எப்படியும் தொடர்ந்து
ஒருமாத காலத்திற்காவது
கூட்டத்திற்குக் குறைவிருக்காது

’எங்க ஊரு
நடைப்பயிற்சி மைதானத்தில்’

[ இந்த ஆண்டின் முதல்மடல். உடற்பயிற்சியின் தேவையை உணர்த்துவதற்காக இதுபோல ஆரம்பித்துவிட்டேன் . மன்னிக்கவும் . இதனால் ஒருவர் பயிற்சி செய்ய முடிவெடுத்தாலும் / தொடர்ந்தாலும் எனக்கு வெற்றியே ]