Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Tuesday, July 5, 2011

க(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........!


குருதட்சணை என்றபெயரால் குரூரமாய்க்

குறிவைத்து வெட்டி எறியப்படுகிறது

கட்டைவிரல் ஒன்று ........


கற்றுத்தர மறுத்த குருவின் தேவையை

நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறான்

விரலை வெட்டிக் கொடுத்தவன்...


தானே கற்றறிந்த மாணவனின் கலையை

வேரறுத்த களிப்பில் மிதக்கிறார்

விரலைக் கேட்டுப் பெற்றவர்...


குருதட்சணை கொடுப்பதற்காக

அந்தத் துரோணரினரின் கட்டைவிரலுக்குக்

குறிவைத்துக் காத்திருக்கிறேன்.....


ஏகலைவனை குருவாகக் கொண்டு

வித்தை பயின்று கொண்டிருக்கும்

நான்........



[நன்றி :- கரு: யாழி]

Monday, March 21, 2011

சில சிங்க(X) நாய்கள்................

அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் ...22/03/11....

(செய்தி :அன்னையின் அஸ்தி வங்கக்கடலில் கரைக்கப் படுகிறது)

சில நடுநிசி(X) நாய்கள் :

X-Files-01-june[1].gifxfiles.gifX-Files-01-june[1].gif

ட்ராய்(TROY)ன் போர்தர்மத்தை

நாய்களிடம் எதிர்பார்த்து

தாய்மணணில் பிடியை

தற்காலிகமாய் இழந்து

பொய்யாகிப் போனது போன்ற

மாயத் தோற்றத்தின்பின்

அரங்கேற மறைந்திருக்கிறது

பல்லாயிர ரத்த சரித்திரம்

நாளைய உலகம்

போற்றக் காத்திருக்கும்

நிகழ்கால யுத்த சரித்திரம் ....!


அதீத நம்பிக்கையோடு

வெற்றியை நிர்ணயித்து

தேதியை நிச்சயித்து

சேதியை அறிவித்தும்........

பெரும் கண்டங்கள் துணயோடு

வருங்கால வல்லரசுகள் இணையோடு

வான்வெளியை வளைத்துப் பிடித்தும்

கடற்பரப்பை வலைக்குள் அடைத்தும்.....


கைப்பற்ற வேண்டிய இலக்கு

காற்றில்கரைந்ததால் கலங்கி

கையிலிருந்த நகலை கசக்கி எறிந்து

அசலின் கதைமுடிந்ததாய் அறிவித்து

வெளியில் ஆட்டம் போட்டு

உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன

இலக்கின் இலக்காகிப்போன

சில சிங்க(X) நாய்கள்................


விலங்கிடமிருந்து காப்பதாய்

உலகுக்குக் காட்டிவிட்டு

அப்பாவிகளைப் பிடித்து

வேலிக்குள் அடைத்து

உலகை ரட்சிக்கும்

பெரியண்னன்கள் ரசித்திருக்க

வெறிகொண்டு வேட்டையாடி

ருசித்துக் களைத்திருக்கின்றன

சிங்கமென்ற நினைப்பில்

காவல் பொறுப்பிலிருக்கும்

சில சிங்க(X) நாய்கள்............


பசித்தவர் கஞ்சிக்கும் நீருக்கும்

வரிசையில் ஏங்கி நிற்க .....

‘புளிசாதம் என்றொரு குரல்

சன்னமாய்க் கேட்டு வைக்க....

தலைமுதல் கால்வரை கவசமும்

தளும்பத் தளும்ப ஆயுதமிருந்தும்

முள்வேலியைத் தாண்டி

தலைதெறிக்க பாய்ந்தோடி

பங்கருக்குள் பதுங்குகின்றன

முன்னர் மகி(ழ்)ந்த

சில சிங்க(X) நாய்கள்.......


உறுப்பிழந்தவரையும்

உள்ளம் பேதலித்தவரையும்

முள்வேலிக்குள் நெருக்கமாய்

அடைத்து வைத்திருப்பது

தலை நிமிர்ந்த வீரத்தால் அல்ல......

தன்னுயிர் பற்றிய பயத்தால் என்பதை

உலகறியச் செய்து கொண்டிருப்பதும்

அதே முள்வேலி தான் என்பதை

இன்னும் உணராமல் இருக்கிறார்கள்

சில சிங்க(X) நாய்கள்...............


பீனிக்ஸ் பற்றிய கற்பனையில்

பற்றிய பயம் தொற்றிக் கொள்ள

சிதையைச் சிதைத்து

புழுதியில் கலப்பதாய் நினைத்து

எம்தலைக் கிழவியின் சாம்பலை

எம்மண்ணிலேயே விதைத்து

ஏங்கிப் புதைந்திருக்கும்

எம்குல வித்துக்களுக்கு

தம்மையும் அறியாமல்

உரம் இட்டுச் சென்றிருக்கிறார்கள்

சில நடு நிசி நாய்கள்

..........சிங்க(X) நாய்கள்


இப்போதைய எகிப்தும்

துனிசியாவும் லிபியாவும்

உரத்துச் சொல்லும்

நாளைய வரலாறு ஒன்றை

இன்றைய உலகுக்கு..................


பூஜ்ஜியத்துகுள் இருந்து

பொங்கி வந்தவர்கள் பொடியன்கள்........

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.....


Saturday, November 13, 2010

ஆயிரத்தில் ஒன்றல்ல நான் .....!

எனது பார்வையில் .....

சிறப்புத் திறனாளிகளுக்கு

சமர்ப்பணம் )


கண்வழியே தெரிந்து

நீங்கள் அறிந்த யானை

உங்கள் அருகிருக்கும்

ஆயிரம் பேருக்கும்

அப்படியேத்தான் தெரியும்


செவிவழி அறிந்து

உணர்வினால் புரிந்து

எனக்குள் படிந்திருக்கும்

யானையின் வடிவம்

எனக்கு மட்டுமே சொந்தமென்பது

யாருக்காவது தெரியுமா !


எனக்குள் கருவாகி இருக்கும்

இந்த உலகின் உருவத்தை

எந்தவகைக் கருவியாலும்..

எந்தவித அறிவியலாலும்...

அறிந்து கொள்ள இயலாதென்பது

உங்களுக்குத் தெரியுமா !!


எனக்கான உலகை..

நான் உணரும் உலகை..

மற்றொருவர் உணருவதற்கான

வாய்ப்பெதுவும் இனிமேலும்

வாய்க்கப் போவதுமில்லை ...

இது எனக்கானது ....

எனக்கே எனக்கானது ....


கடலின் அலையைப் போல்

விரலின் ரேகையைப் போல்

நெருப்பின் சுடரைப் போல்

தனித்திறன் கொண்டவன் நான்...


உங்களைப் போல நான்

ஆயிரத்தில் ஒன்றல்ல ...


அறிந்துகொள்ளுங்கள் ...


நான்...

ஆயிரத்து ஒன்று ...!

Thursday, October 14, 2010

ஒர் அதிகாரத்திற்கான சாட்சியாய் .......!





ஈழம் :







1) கைவசமிருந்த கண்ணாடி பொம்மையை உடைத்துவிட்டு , அசையாதிருந்த மண்குதிரையை சாய்த்துவிட்டு,

வென்றுவிட்டதாய் பெரும்புரளியைக் கிளப்பிவிட்டு,

வெற்றுப்பரணியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்

வெட்டிவீணருக்கு முதல் ஐந்தும் சமர்ப்பணம் :

ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை

ஈழம் உணர்த்தும் உமக்கு [01]

யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ஈழம்.

பதரென்(று) அழித்தாய்; பதறாமல் அங்கே

புதருள் இருக்கும் புலி [02]

எதிர்ப்பே இல்லாமல் ,எல்லாம் வெறும் பதராக இருப்பதாய் மகி(ழ்)ந்தே , நல்ல வேட்டை என காட்டை அழித்துச் செல்கிறாய் ..உனக்குத் தெரியுமா? பதறாமல் அருகிலேயே புதருக்குள் உனக்காகக் காத்திருக்கலாம் ஒரு புலி

அகம்தவிர் உன்னுள்; எதிர்க்கும் நிகர்எதிரி

உண்டாம் எதற்கும் அறி [03]

தான் என்ற அகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாய் நீ .உனக்காக அன்றே நியூட்டன் சொன்ன சேதி ஒன்று இங்கு

எந்த ஒருவிசைக்கும் சமமான எதிர்விசை உலகில் உண்டு

புதைத்ததாய் தற்பெருமை கொள்வோரே ; எல்லாம்

விதையென்(று) அறிவீரா நீர் [04]

சுத்தமாய் அழித்து , மொத்தமாய் மழித்துப் புதைத்ததாய் எண்ணி தற்பெருமைக் கொள்வோரே! உண்மை ஒன்றை அறிந்து கொள்ளவீரா? வென்றதாய் எண்ணி, வெறியில் புதைத்தது அத்தனையும் வீரியவிதைகள் என்பதை.

ஈசலுக்கும் கூட இணையில்லார்; காட்டுவார்

ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு [05]

போர்தர்மம் குலைத்து , குற்றங்கள் இழைத்து , பிறர் உதவியால் பிழைக்கும் உமது வ(வெ)ல்லரசு மாயத்தோற்றம் வெகுவிரைவில் கலையும்/குறையும்/கரையும்/.

2) கூட்டுச்சதியாலும் ,கோடாரிக் காம்புகளாலும்

கூட்டம் கூட்டமாய் கூட்டை இழந்து தவிக்கும் குலக்கொழுந்தினருக்குதொடர்வது அனைத்தும் சமர்ப்பணம் :

வலியினைத் தாங்கும் வழியை அறிவாய்;

வலியதாய் ஆகும் மனது [06]

தீயுள் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயில்

பழுத்துவிடும் தங்கம்போல் நாம் [07]

எளிதன்(று) எனமலைத்து நிற்கிறாய்; எல்லாம்

எளிதென்று வெல்வாய் உணர்ந்து [08]

ஆற்றல் அனைத்துமுண்டே ஆள்வதற்கு; தேவையா

ஆறுதல் வார்த்தை நமக்கு [09]

திலகம் அணிந்திடும் நாள்உண்டு; நம்பின்

உலகும் அணிதிரளும் அன்று [10]

மேலுள்ள எதற்கும்

விளக்கம் என்றெதுவும்

தேவையில்லை உனக்கு .

காலம்மும் கனியும் நமக்கு..

கலக்கம் தராதிரு மனதுக்கு....

உனைக்கண்டு மீண்டும் ‘அவர்கள்

கலங்கும்நாள் வெகுவிரைவில் இருக்கு .......

Wednesday, September 8, 2010

பதிவுகள்(2) : வாழும் வழிகாட்டி




14.04. 2000 :

தாதன்குளம் , தூத்துக்குடி மாவட்டம் . ஒரு பள்ளிக் கூடம கட்டும்வேலை சம்பந்தமாக எனக்கு ஒரு அழைப்பு . 13மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர் , தமிழகத்தின் குறிப்பிடத்தக்கப் பெரியவர்களுள் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே பெரும் மகிழ்வைத் தந்தது . ஒரு கார்ப்பொரேட் அலுவலகம் , ரிசப்சனிஸ்ட் , நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் என சில எதிர்பார்ப்புகள் / ஒத்திகைகளுடன் கிளம்பிச் சென்றேன் .

தோட்டத்து பண்ணைவீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒருசிலரைத் தவிர நான் எதிர்பார்த்த பரபரப்பு ஏதுமில்லை . கதர்துணியில் தைக்கப்பட்ட பனியன் , பழைய நைந்துபோன தேங்காய்ப்பூத்துண்டுடன் ஒரு பெரியவர் , வந்திருந்த யாரையோ கார் கதவைத் திறந்துவிட்டு , வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.

வாசலில் நின்றுகொண்டிருந்தேன் . காத்திருந்த வேளையில் மெலிதான பதட்டம் . கைகள் பக்கதிலுள்ள வேப்பமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக கிள்ளிக் கொண்டிருந்தது .

சிறிது அமைதி . பின்னாலிருந்து எனது தலையில் செல்லமாக ஒரு குட்டு விழுந்தது . அதே பெரியவர் பின்னால் நின்றிருந்தார் .

’’அந்த மரம் உங்களை என்ன பண்ணுச்சு கண்ணு ’’

தீர்க்கமாக எனது கண்களுக்குள் பார்த்துவிட்டு

“தம்பிக்கு சாப்பிடக் கொடுங்க”


எனச் சொல்லிவிட்டு உள் நோக்கி சென்றுவிட்டார் .மரம்தானே , இலைதானே என சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அந்தக் கேள்வி சம்மட்டி அடியாய் விழுந்தது . ஏதோ தவறாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரியத் தொடங்கியது அந்த நொடியில் .

உள்ளே சென்றேன் . வெளிமுற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவர் .

‘எங்கே போனாலும் இவருதான் இருக்காரு ,யாராய் இருக்கும் ?’


மேற்கொண்டு விசாரிக்க அருகில் யாரும் இல்லை . மெதுவாக அவரிடமே விசாரிக்க முடிவு செய்தேன் .

”இங்கே சேர்மன்.குப்புசாமி சார் அவர்களை பார்க்கணும்”


”சொல்லுங்க கண்ணு , நான் தான் குப்பன்”

இடி இறங்கியது போல உணர்ந்தேன் . எனது கணிப்புகள் / எதிர்பார்ப்புகள் எல்லாம் குலைந்து நொடியில் பாலையில் ஒருபிடி மண்ணைப்போல என்னை உணர்ந்தேன் .

இந்த அளவுக்கு எளிமையாய் நான் இதுவரையில் யாரையும் சந்தித்ததில்லை .அப்போதைக்கு இருசக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாறி இருந்தைதையே நான் உலக சாதனைபோல எண்ணியிருந்தது அப்போதுதான் எனக்கு உறைத்தது . அய்யாவின் சந்திப்பு வாழ்க்கையில் புதிய மாற்றத்தை எனக்குள் உரைத்தது .
எனக்கான போதிமரம் அங்கே இருந்தது .

நான் வந்து சேர்ந்த இடம் பற்றி தெரியத் தொடங்கியது எனக்கு. உழைப்பின் பொருள் புரிய ஆரம்பித்தது எனக்கும் . புதியதாய் ஒரு உலகம் விரிய ஆரம்பித்தது எனக்குள்.

அவர்
ஆர்.வி.எஸ்.கல்வி அறக்கட்டளையின் தலைவர் .
திரு.கே.வி. குப்புசாமி அய்யா .அவர்கள்
. 69 வயதிலும் அரை நொடி ஓயாமல் அனைத்து இடங்களிலும் சுழன்று வருகிறார் . கல்வித்துறையில் மிகப் பெரிய சாதனையாளர் . இங்கே அவருக்குள் மறைந்திருக்கும் விவசாயியையும் , மனித நேயத்தையும் வெளியுலகப் பார்வைக்கு எடுத்து வைப்பதே கட்டுரையின் முதன்மை நோக்கம் .

திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் புதிய செயல் முறைகளுக்குச் சொந்தக்காரர் அவர். திட்டங்களை விளையாட்டாய் ஆரம்பித்து ,வித்தியாசமாய்த் தொடர்ந்து , விதிமுறைகளைக் கடந்து , விசுவரூபமாக்கிக் காட்டுவார்.

( ஏடுத்துக் காட்டாக
: மாலை ஆறுமணி . செம்மண்சரல் அடித்து நிரப்பப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி மைதானத்தில் வந்து அமர்ந்தார் . மெதுவாக சில கற்கலைப் பொறுக்க ஆரம்பித்தார் . நாங்களும் தொடர்ந்தோம் . அந்த வழி வந்தவர்களும் தொடர்ந்தார்கள் .மூன்றே நாட்கள் .. விளையாட்டாக அந்த மைதானமே குழந்தைகள விழுந்து விளையாடும் அளவுக்கு சுத்தமாகி இருந்தது )

2010 :பத்தாண்டுகளில் மழைமறைவுப் பிரதேசங்களாக இருந்த , மேய்ச்சல் நிலங்களாக , காலடித்தடமே படாத வறண்ட இடங்களில் மழையின் நேசம் , மண்வாசம் வீசத்துவங்கி இருக்கிறது

தரிசாகக் கிடந்த இடங்களை சோலைகளாக்கி , மரங்களுக்கு நடுவில் மழை நீரை சேகரிக்க ஒரு குளம் வெட்டி , வறண்ட் பூமிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவைத்து , தன்னை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வு உயரவும் வழி செய்திருக்கிறார் .

ஒரு தனிமனித முயற்சியில் ,பத்தாண்டுகளில் இது சாத்தியமென்றால் , ஆள்வோரும் ,அதிகாரவர்க்கமும் அய்யாவின் பாதையில் தொடர மனம்வைத்தாலே போதும் ., தமிழகம் சொர்க்கமாகும் காலம் வெகுதொலைவில் இருக்காது .


அசோகர் மரம் நட்டினார் ,கரிகாலன் குளம் வெட்டினார் என்று பள்ளிப்பாடங்களில் வரலாறாகப் படித்தை நேரில் காணும் வாய்ப்பும் , அந்நிகழ்வில் பங்குபெறும் பாக்கியமும் பெற்றதே எனது பிறவிப் பயனாகும் .

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பரந்து விரிந்த மிகப் பெரியக் கூட்டுக் குடும்பம் இவருடையதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது . குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சங்களுக்கும் மேல் . ஆம் அவர் தனது குழந்தைகளாக பராமரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை இது . ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனி கவனிப்பு முறைகள் , வளர்ச்சிக் குறிப்புகள் , சொட்டு நீர்ப்பாசன வசதிகள் , இயற்கை உரங்கள் .

எங்கோ ஒரிடத்தில் ஒருமரத்தின் கிளை முறிந்தாலும் உடனடியாக செய்தி அவரை வந்து சேரும் அளவுக்கு மிகப்பெரிய அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். மரங்களின் மேல் பாசம் கொண்ட ஒரு தனி மனிதச் சாதனையாகும் இது .


அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் பல கட்டிடங்கள் நேர்கோட்டில் இல்லாமல் சில இடங்களில் விலக்கிக் கட்டப் பட்டிருக்கும் . சிறிது கூர்ந்து கவனித்தால்தான் தெரியும் .அது பொறியாள்ர்கள் தவறல்ல என்பதும் ,அவை மரங்களுக்காக தனது நேர்த்தியை விட்டுக்கொடுத்து ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன என்பதும் .இங்கே கட்டிடமே முதன்மை என்றாலும் , ஏதாவது ஒரு மரத்தின் ஒரு கிளை கூட இதனால் ஊனமாக அவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ள் மாட்டார்

மரம் வளர்த்து ,மண்ணுயிர் போற்றி , வரும்காலம் காக்கும் மாமனிதரின் அருகில் குடியிருக்க ஆண்டவனும் விரும்புவார் . விரும்புகிறார் .

ஆம் .... அய்யா இருக்கும் கோவை , சூலூரில் அவரது அயராத உழைப்பில் ,தமிழகத்தின் ஆறுபடை முருகனும், ஆந்திரத்தில் இருந்து பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருப்பதியும்
எற்கனவே குடிகொண்டு விட்டார்கள் .

12.09.10ல் கேரளத்தில் இருந்து பகவதி அம்மனும் குடியேறுகிறார்

உழைப்புக்கு ஒர் உண்மையான எடுத்துக்காட்டு .
உலகைக் காக்கும் மரம் வளர்ப்புக்கு ஒரு வாழும் வழிகாட்டி .

பலன் எதிர்பாராமல் பாரம் சுமந்து கொண்டிருக்கிறார். அதையும் கடமையாய் செய்து கொண்டிருக்கிறார் .

அவரது அயராத உழைப்பினை உணர்ந்து கொண்டுள்ளோம் எனபதை அவருக்குத் தெரியப் படுத்துவோம் . உற்சாகம் அளிப்போம் . [அய்யாவின் அலைபேசி எண் : 9443169333 , 9842288333]

அய்யா அவர்களின் வழி தொடர்வோம். வருங்காலம் காப்போம் !


எனக்கு முடிந்த அளவில்
அய்யாவுக்கு ஓரு குறள் அதிகாரம் :


உலகத்தைக் காக்க மரம்வளர்ப்போர் சுற்றி
உலவ விரும்பும் இறை...........................[01]

மரம்வளர்த்து மண்ணுயிர் காப்போர் அருகில்
குடியிருக்க எண்ணும் இறை.......................[02]

இரங்கும் மனம்கொண்டு இல்லாதோர் போற்று;
இறங்கும் உனக்குள் இறை........................[03]

செந்தமிழால் வாழ்த்துவார்; வந்தாரைப் போற்றுவார்
கந்தனே சாமி அவர்க்கு...........................[04]


ஐயன் அருகிருந்தால் ஐயம் தெளியும்;
வாய்க்கும் சிறந்தநல் வாழ்வு......................[05]

எட்டு திசையும் எடுத்துரைப்போம்; அய்யனென்றால்
நட்பென்றும் ஓர்பொருள் உண்டு...................[06]

எங்கிருந்து வந்தாலும் நல்அபயம் வாய்த்திடும்;
கொங்கில் கிடைத்திடும் வாழ்வு....................[07]

எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு.....................[08]

வாழ்த்த வயதில்லை; வானுயர் அய்யாவின்
வாழ்க்கைத் தடம்தொடர் வோம்...................[09]

காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்
வானமும் நம்வசப்ப டும்.........................[10]


என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Wednesday, August 26, 2009

திரும்பி வருவேன் ........!


நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

உன்னைப்போல நானல்ல !

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

உன்னைப்போல நானல்ல !

காலமது கூடுமே - அதுவரை
காத்திருப்பேன் நானுமே !

ஒருநாள் நானாவேன்...

திமிரும் நாணாவேன்...!
நிமிரும் நாணலாவேன்...!!

திலகம்சூட்டி வருவேன் நானுமே - அன்று
முகம்பொத்தி உலகமே நாணுமே !

Wednesday, February 25, 2009

ரஹ்மான் உணர்த்தும் உண்மை......



Aது யாR ரஹ்மான்?
அவரு என்ன சாதிச்சாரு????
இது உலகில் நேற்று வரை

AR ரஹ்மான்!!!!
அட அவரைத் தெரியாதா!!!
இது உலகின் இன்றைய நிலை

இரண்டு ஆஸ்கார் மூலம்
இருண்ட கிடந்ததுபோல் தோன்றிய
இந்தியக் கலை உலகத்தினை
உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறான்
உலக நாயகன் எங்கள் ரஹ்மான்

இருங்கள்,கொஞ்சம் இருங்கள்
இதற்கே இப்படி என்றால்
இனியும் தொடர்ந்து பாருங்கள்

விருது கிடைத்த மகிழ்ச்சியில்
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காமல்
உண்மை நிலையை கொஞ்சம்
உரசிப் பார்க்கலாம் வாருங்கள்

ரோஜாவின் தமிழா தமிழா_வை விடவா
பம்பாய்_ன் உயிரே உயிரே_யை விடவா
ஸ்லம் டாக்_ன் ஜெய் ஹோ சிறந்தது??????????????

ஒரு அந்நிய நாட்டுப் படத்தின் மூலமே
ஒரு ஆந்நிய மொழிப் படத்தின் மூலமே
ஒரு அற்புதக் கலைஞன் அவன்
ஒருவழியாய் அடையாளம் காணப்பட்டிருக்கிறான்

ஏன் இந்த அவல நிலை??
என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்???
ஒரு இந்தியப் படைப்பாளியாய்
ஒரு இந்தியக் கலைஞனாய்
ஆஸ்கார் களத்தில் தடம் பதிக்க
ஆவன செய்ய முடியாதா????

இங்கே வழி நடத்த ஆள் இல்லையா?
இல்லை வழிதான் தெரியவில்லையா??
இல்லை வழியாரும் தரவில்லயா???

தாமதமான அங்கீகாரம் என்றுமே
மறுக்கப்பட்ட நீதிக்கு சமமல்லவா!
சரியாக மேலே உள்ளவர்கள் வழிநடத்தி இருந்தால்
சாதித்திருப்பார்களே நம்மவர்களும்
சரிக்கு சரியாய்! சாரி சாரியாய்!!

உண்மையை உணர்ந்தால்
உலகமே நம் காலடியில்!

Monday, January 5, 2009

மாற்றி யோசி...!


சந்திரயான்-1 மூலம்
சந்திரனில் கால் பதித்து
வானியல் வல்லரசுகளின்
வரிசையில் நிலைத்துவிட்டோம் !

முன்னூற்று எண்பது கோடி செலவில்
மூவர்ணக் கொடியின் தடத்தை
முழு நிலவில் விதைத்துவிட்டோம் !
அறிஞர்களின் அறுபதாண்டு கால
அர்ப்பணிப்பில் சாதித்துவிட்டோம் !!

அந்த நிலவு போலவே
இது இந்தியாவின் வெளிச்சப் பக்கம்.
இனி அறிந்துகொள்வோமா
இருண்ட அதன் வேறு பக்கம்


காலையில் கழிப்பறை தொடங்கி
கடைசியில் மயானம் போகும்வரை
அலைபேசியில் மாதத்துக்கு
ஆயிரம் கோடிக்கு பேசி முடிக்கிறோம்

ஐநூறுகோடி செலவில் ஆண்டுக்கு
ஐம்பதுக்குமேல் அரைவேக்காடு
அதிரடித் திரைப்படங்கள் வெளியிட்டு
அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறோம்

இருநூறுகோடி விலையில் ஆண்டுக்கு
இருபதுக்கும் மேல் ஆடம்பரவாகனங்கள்
இந்த ஏழை விவசாய நாட்டுக்குள்
இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்

ஆயிரம் கோடி வருமானம் என
ஆட்சியில் இல்லாத கட்சி கூட
ஆணித்தரமாய் கணக்கு காட்டும்
அதிசயமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

இந்த அரசியல்வாதிகளின்
இல்லாத பெயர்களில்
வெளிநாட்டு வங்கிகளில்
வெளியே தெரியாமல் முடங்கும் பணம்
இந்திய வரவு செலவைவிட
இருமடங்குக்கும் மேல்
அதிகம் இருக்கும்
அற்புதமும் நடந்து கொண்டிருக்கிறது

இலவசம் எனற பெயரில்
செலவு செய்யும் பணம்
பல்லாயிரம் கோடியைத் தாண்டி
பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது

இன்னும்......
இன்னும்........
இன்னும்..........

முன்னூறு கோடி செலவிலேயே
முன்னணிக்கு வந்துவிட்டோமே!
முடிந்தவர்கள் மனது வைத்தால்
முதல் இடம் அடைந்துவிட மாட்டோமா ???

Sunday, October 19, 2008

கலாம் !


மூழ்காதே உனக்குள்
முளைத்து வா வெளியே
புதிய உலகம் படைக்கலாம்

காத்திராமல் காலையில்
கிழக்கு நோக்கி நடந்து பார்
உலகின் முதல் சூரியன்
உனக்காக அங்கே காத்திருக்கலாம்

குட்டக் குட்டக் குனியாமல்
தடைப்பட்ட உரிமைகளை
தாழ்மையோடு கேட்டுப்பார்க்கலாம்

கிடைக்கவில்லையா கவலையில்லை
தலைநிமிர்த்தி தைரியமாய்
தடையுடைக்க போட்டுப்பார்க்கலாம்

அக்னிக்குஞ்சே உன் சிறகுகளை
அடக்கிவைக்காமல் விறித்து வா
முட்புதராய் மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை எரிக்கலாம்

கைபிடித்து அழைத்துச்செல்ல
நல்லவற்றை எடுத்துச்சொல்ல
தலைதட்டி நடத்திச்செல்ல
காத்திருக்கிறார் கலாம்