Wednesday, July 29, 2009

விளக்கேற்றிய நண்பனுக்கு.....


வீட்டின் முகப்பில்
வரவேற்பு அறையில்
ஒருபுறம் எனது திருமணப்படம்.,
மறுபுறம் அவனது திருஉருவப்படம்.

'எனது உயிர் நண்பனவன்
என்னுடன் இருக்கும் வரையில்
எனக்கொரு கவலை இல்லை
இனியொரு உவலை இல்லை


கானல்வரியாய் தெரிந்த என்கனவை
நாணல்திரியாய் எரிந்த என்நினைவை
நிழலாய் மாறஇருந்த என்வாழ்வை
நிஜமாய் மாற்றிக் காட்டியவன் அவன்

மொய் எழுதி வாழ்த்தி விட்டு
பொய் முகத்தோடு ஏக்கம் சுமந்து
திரும்பும் எனக்கும் வாழ்க்கையில்
திருமணம் என்ற ஒன்றைத்
திருவிழாவாக நடத்தியவனுக்கு
என் வாழ்நநாள் முழுதும்
நன்றிக் கடன் பட்டிருப்பேன்

அன்று
பெண்பார்க்கும் படலத்தில்
மணமகனின் நண்பனாய்
மிக நெருக்கத்தில் அவன்

"மாப்பிள்ளை கருப்புதான்,
....ஆனாலும் பரவாயில்லை"

"மாப்பிள்ளை குட்டைதான்,
....ஆனலும் மட்டம் இல்லை"

"மாப்பிள்ளை ஒல்லிதான்,
....ஆனாலும் பல்லிபோல இலலை"

"சுறுசுறுப்பு கம்மிதான்,
....ஆனலும் துருதுருப்புதான்"

"பல்லு ரெண்டும் எடுப்புதான்
....ஆனாலும் பளபளப்புதான்"

அருகில் அவனும் சொங்கிபோல
....தூங்கிக் கொண்டே இருந்தான்
அதனால் நானும் - அங்கே
....தூக்கலாகவேத் தெரிந்தேன்

எந்த வில்லங்கமும் இன்றியே
எல்லா விவகாரமும் முடிந்ததினிதே'


பெருமையோடு நண்பன் அவனுக்கு
உரிமையோடு வணக்கம் வைக்கிறேன்.

Tuesday, July 28, 2009

வெட்டியானுக்கொரு வேண்டுகோள்...


நண்பனே !
விவசாயி மகனாய்ப் பிறந்து
வாழ்க்கக்ப் பூராம் ஏமாந்து
(வி)சாரிக்க ஆளில்லாம
சருகாகி உதுந்தவனே
வானத்துல கரைஞ்சவனே
வனத்துல தொலைஞ்சவனே
ஏ என்னோட நண்பனே !!

நாலுதெருவு தாண்டிப் போனாலும்
ஏழுதடவ சொல்லிட்டுப் போவியே
ஏழுலகம் தாண்டி போறப்போ
ஏங்கி நிக்கிறனே நானுமிங்கே
எங்கிட்ட சொல்லாமலே
ஏமாத்திப் போயிட்டியே
ஏ நட்ப்பை மறந்த நண்பனே !!!


மக்களே !
அறுபது ஆண்டுகாலமா மாடா
அடுத்தவனுக்கே உழைச்சவனோட
இறுதி ஊர்வலம் இங்கே
ஆறுபேரோட முடிஞ்சிடுச்சே
ஏ நன்றிகெட்ட மக்களே!!

ஊர்ப்பெரிசே !
உயிர்பாய்ச்சி பயிர்வளர்த்து
கதிர் புடிக்கக் காவலிருந்து
முதிர்ந்ததெல்லாம் சேர்த்துக்கட்டி
உதிர்ந்ததயும் சேத்துலக் கூட்டி

வயிறு வளக்க உம்முன்னால
கையக்கட்டிக் பாத்துநின்னானே
வாயப்பொத்தி உம்முன்னால
வாழ்க்கப்பூராக் காத்துநின்னானே
கரையேத்தி விடாம
கையக்கழுவி விட்டிட்டியே
ஏ சுயநல ஊர்ப்பெரிசே !!


வரட்டி பொறுக்க,வரப்பு பெருக்க
களை எடுக்க,கரை புடிக்க
குடும்பம் சுமக்க,குழந்தை வளர்க்கன்னு
அஞ்சு வயசுல குனிஞ்சவன்

அரைவயித்துக் கஞ்சிக்காக
ஆண்டே முன்னாடிக் குனிஞ்சவன்

பெண்டுகளக் கரைசேக்க
வந்தவங்க முன்னாடிக் குனிஞ்சவன்

குடும்பநலம் வேண்டி
கடவுள்முன்னாடிக் குனிஞ்சவன்

கடைசிவரைக்கும் நிமிரவேயில்லையே
கண்ணும் பகல்வானம் பாக்கவே இல்லையே

ஏ நல்ல வெட்டியானே !
எரியூட்டும்போது அவன்
நரம்பு முறுக்கேறி
விரைத்து எழுவான்
நிமிர்ந்து அமர்வான்
வீழ்த்திவிடாதே அவனை

எல்லாம் முடிந்தபின்
கடைசிக்கும் முன்னால்
வாழ்க்கைக்குப் பின்னால்
முதன்முதலாய் நிமிர்வான்

வீழ்த்திவிடாதே அவனை
அவனாகவே வீழும்வரை
வாழ்த்திவிடு அவனை
வானகம் வாழ்த்தும் உன்னை


ஏ நாலும் தெரிந்த வெட்டியானே !!
நானும் வருவேன் நல்ல வெட்டியானே !!!

Sunday, July 26, 2009

நான் இந்தியன்......


26-07-09 :
கார்கில் வெற்றி(யின்)வீரர்களின் நினைவுநாள் :

எனது வீரச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் :



கார்கில் - இங்கே

சூரியனும் பதுங்கியே
...சலனமின்றி பயணம் வரும்
சந்திரனும் பயந்துபோய்
...சந்தடியின்றி தவழ்ந்து வரும்

காற்றும் பயத்தோடு
...கலங்கியபடியே வீசும்
மரங்களும் தங்களுக்குள்
...மெளனமாகவே பேசும்

எதிரிக்கு எப்பவுமே
...இதன்மேல் நேசம்
எல்லையில் இப்பவுமே
...தொல்லையின் வாசம்

வெண்மையே விரவியிருக்கும்
...வண்ணமற்ற பிரதேசம்
வாழ வழியில்லாத
...வஞ்சிக்கப்பட்ட பிரதேசம்

ஆனாலும் என்ன
அது என் தாயின் தேசம்


அரைஜான் ஆக்கிரமிக்க எண்ணி
...அரையடி முன் வைத்தாலும்
அரைஞாண் அவிழும் வரை
...அடித்தே விரட்டிடுவேன்

அன்னை பூமியில்
...அந்நியன் ஒருவன்
அனுமதியின்றி புகுந்து
....அங்கே தேவையின்றி

உதிர்ந்து கிடக்கும் ஒரு - வீண்
...மயிரைக்கூடத் தொடவிடேன்
எதிரியைத் தடுக்க எனது - இன்
...உயிரையும்கூடத் தந்துமடிவேன்

நான் இந்தியன்..
நாம் இந்தியர்கள்...

வாழ்க எல்லைக் காப்பாளர்கள்....
வளர்க அவர்தம் குடும்பங்கள்......

Tuesday, July 21, 2009

இந்தியாவில் இரண்டு இமயம் ....!


ஜுலை 21
சிவாஜி அய்யாவின் நினைவு நாளில்
அவர் பாதங்களில் சமர்ப்பணம் :


இமயம் :


தூரமிருந்து பார்ப்போருக்கு
...கரும் புள்ளியாய்ப் புரியும்
அருகில் வருவோருக்கு அது
...வெறும் முக்கோணமாய்த் தெரியும்

நெருங்க ஆரம்பிக்கும்போது தான்
...அதன் பிரமாண்டம் கிட்டும்
ஒவ்வொரு திசையிலும் அது
...வெவ்வேறு பரிமாணம் காட்டும்

ஏறும் உங்களுக்குள் இதமாய்
...அதன் புனிதம் இறங்கும்
வெறுமையான மனதுக்குள்ளும்
...அதன் இனிமையை இறக்கும்

உச்சியை அடைய வேண்டாம்
...உணர்ந்தாலே போதும்
நவரச உலகத்தையே மெதுவாய்
...நமக்குள் உணர்த்திவிடும்

இமயம் _ அதுதான்
இமயம்

இந்தியாவில் உண்டு
இமயம் இரண்டு

வடக்கில் ஒன்று - இங்கே
தெற்கில் ஒன்று

Thursday, July 16, 2009

குடந்தையின் கதறல் கேட்டதா கோட்டைக்கு ..?


16-07-09
குடந்தை குழந்தைகளுக்கு
ஒரு கண்ணீர் அஞ்சலி :
:

"தளிரிலேயே கருகி
...காணாமப் போன பயிரே ,
உன்னாலேயே உருகி
...கறையுது என்னோட உயிரே....,

நாள் பார்த்து ஒலகம்
...ஒருநாளு மட்டும் நெனைக்கயிலே.,
நாதியத்த நாங்க இங்க
...ஒருநொடிகூட மறக்கலியே..

கண்ணுல தண்ணியும்
...கொஞ்சம்கூட கொறையலியே.,
கண்ணீரால நனைஞ்சும்
...நெஞ்சுக் கொதிப்பும் அடங்கலியே..

என்ன செய்யப்போறேன்
...நீ இல்லாமல் தெரியலியே.,
எப்படி இருக்கப்போறேன்
...இனிமேலும் புரியலியே.. "

குடந்தைத் தாயின் கதறல்
...இப்பவாவது கேட்கிறதா கோட்டைக்கு ?
சட்டதிட்டமெல்லாம் நாளைக்கு
...மீண்டும் வந்திருமா விற்பனைக்கு ??

Tuesday, July 14, 2009

சென்னையில் தொலைத்(ந்)த......!



ஓடும் வாழ்க்கையில்
ஒருநாள் வசந்தமாய்

பாரம் இறக்கி
நேரம் ஒதுக்கி
சேரனில் துவங்கியது
சென்னைப் பயணம் - முக்கிய
நண்பன் திருமணம்

ஆளரவம் கேட்டு
கண்விழித்தேன் நடுஇரவில்!
தேவதை பார்த்து
திகைத்துப்போனேன் மறுநொடியில்!!

மின்னலாய்த் தோன்றினாள்
மனதினுள் ஊன்றினாள்
என்னெதிரே அமர்ந்தாள்
என்னுதிரம் கலந்தாள்

கண்களுள் நுழைந்தாள்
கருத்தினுள் இழைந்தாள்
தூக்கம் கலைத்தாள் - என்னுள்
ஏக்கம் விதைத்தாள்

என்கனவில் விடைத்தாள் - அவளே
என்கனவின் விடைத்தாள் - அட
நானானேன் வெறும்தாள்

அழகாய் இருக்கவில்லை - ஆனாலும்
ஆழப் பதிந்துவிட்டாள்!
நிமிர்ந்தே பார்க்கவில்லை - ஆனாலும்
நெஞ்சினுள் புதைந்துவிட்டாள்!!

கண்டவுடன் காதல்
கூடாது என்பவனைக்
கயவன் என்பேன்! - ஆம்
காதலில் விழுந்தேன்!!

இதயம் வெளியேவரத் துள்ள
இதழ்கள் வார்த்தையை மெள்ள
காதலை அவளிடம் சொல்ல - இதமாய்
கண் திறந்தேன் மெல்ல....

வேற்றுமுகம் கண்டேன் முன்னே,,
வெற்றிடம் உணர்ந்தேன் பின்னே,,,
வற்றியது உதிரம் உள்ளே - அவளை
உயிர் தேடியோடியது வெளியே

கண்ணியம் காக்கும் நோக்கத்தில்
கணநேரத் தாமதத்தின் தாக்கத்தில் - உடனே
காதலைச்சொல்ல மலைத்துவிட்டேன்
காதலியைத் தொலைத்து விட்டேன்

எப்படி எங்கே ஓடுவேன் ?
எங்கே எப்படித் தேடுவேன் ??
மிரட்டும் வாகனக் கடலில்..
மிதக்கும் வெகுசனத் திரளில்....

சுழலில் சிக்கிய துரும்பானேன்
ஆழியில் மாட்டிய எறும்பானேன்
ஆழ்கடல் மூழ்கும் இரும்பானேன்
ஆலையில் அரைபடும் கரும்பானேன்

திருமணம் இருப்பதையே மறந்து ..
தேவதையின் இருப்பையே உணர்ந்து..
திசையெல்லாம் தேடித் திரிந்து..
ஆசையெல்லாம் நொடியில் உலர்ந்து..

இரு உயிரை ஒரேநாளில்
பெருநகரில் தொலைத்து விட்டு
ஊர் வந்துசேர்ந்தேன் தோல்வியோடு
உயிர் இல்லா வெற்று உடம்போடு

நடைபிணத்தின் நிலைகாண
நண்பன் வந்தான் துணையோடு ,
இருமணம் இணைந்த - அவன்
திருமணத்தின் தொகுப்போடு .

புகைப்படத் தனித் தொகுப்பில்
புகையின் அணி வகுப்பில்
மணப்பெண் தோழியாய்
மனம் கவர்ந்த அவள் !

Sunday, July 12, 2009

வாய்தா(ன்) வாய்தான்....!



இல்லாத தாத்தாவுக்கு
இருதயத்தில் அடைப்பென்று
அலுவலகத்தில் அடித்துவிட்டு
அரைநாள் விடுப்புஎடுத்து
மேலாளரைத் தாண்டுவதற்குள்
மேல்மூச்சு வாங்குகிறது

நண்பர்களுடன் சந்திப்பு இன்று
மீன்பிடித்து சமையலுடன்
நல்ல விருந்துண்டு
நடுநடுவே மருந்துமுண்டு

அவசரமாய்க் கிளம்பும்போது
அறைவாசலின் குறுக்கே
தலைசொரிந்து நிற்கும்
நண்பனைப் பார்த்தவுடன்
நிலைமை புரிகிறது.
ஐநூறு கையிலெடுத்து

"ஐந்துகாசு இதற்குமேல்.."
சொல்லி முடிப்பதற்குள்
தட்டிப் பறிக்கிறான் .

"ஐம்பது கேக்கவந்த ஆசாமிக்கு
ஐநூறு அள்ளித்தந்த சாமி நீ"

சொல்லிப் பறக்கிறான்
???????????????????????

சாலை சந்திப்பில்
கையேந்திய பெண்ணிடம்
"உடம்பு நல்லாத்தானே
உனக்கு இருக்கு ?
நல்லா வேலை செய்தால்
நாலுகாசு தானா கிடைக்குமே!"

கேள்வியாய்த் தொடுக்கிறான்.
"நல்ல அறிவுரைக்கு
நான்தரும் பரிசு இது"

ஐந்துரூபாய் நாணயத்தை
அவன்முன் வைத்துவிட்டு
அடுத்த இடம் நாடுகிறாள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

போக்குக்காட்டி ஓட்டியும்
போக்குவரத்துக் காவலரிடம்
மாட்டிக் கொள்கிறான்.
இருக்கும் ஆவனம் காட்டி
இல்லாத ஆனவம் பேசுகிறான்.

ஒருநாளில் முடிவதை
ஒன்பதுநாள் அலையும்படி
வழக்குபதிவு செய்து
வழிவிட்டு நிற்கிறார் காவலர்
??????????????????????????????

தூண்டிலை வீசிவிட்டு
காத்திருக்கிறான் அவன்.,
வரப்போகும் நண்பருக்காகவும்
விழப்போகும் மீன்களுக்காகவும்.
கவனம் சிதறவைக்க
அலைபேசி அலறுகிறது
"சீக்கிரம் வாங்கப்பா !
சீரழிஞ்சு வந்திருக்கேன் !
அரைநாள் விடுப்புக்கு
ஆயிரம்பொய் சொல்லியிருக்கேன் !"

எதிர்முனையில் மெளனம் ?
அதன்பிறகே கவனிக்கிறான்
அது மேலாளரின் அழைப்பு !!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

துண்டிலில் சிக்கி
துள்ளியது மீனொன்று.
எடுத்துப் பார்த்தவன்
ஏளனமாய்ச் சிரிக்கிறான்
"வாயை மூடிக்கிட்டு இருந்தால்
வருமா இந்தநிலை உனக்கு"


அந்தமீனும் அவனைப்
பாவமாய் பார்க்கிறது !
ஏளனமாய்ச் சிரிக்கிறது !!

Friday, July 10, 2009

'சில்லு'ன்னு ஒரு பொண்ணு ...!!


சகோதரி உமா மஹேஸ்வரிக்கு
( சில்லுக்கருப்பட்டி / RJ ., 106.4 FM )
இன்று 10-07-09 நிச்சயதார்த்தம்.
வாழ்த்துக்களுடன்......

'சில்லு'ன்னு ஒரு பொண்ணு ...!!


எங்க வீட்டுப் பொண்ணுக்கு
...இன்னிக்கு நிச்சயம் பண்ணனும்
எசப்பாட்டுக்கு மாப்புள்ள
...இனிமேதான் வந்து சேரணும்

வெரசலா வாங்க
...மாப்பிள்ள நீங்க - உங்க
வீரத்தக் காமிங்க இங்க - பாக்க
...காத்திருக்கோமே நாங்க

அடக்க ஒடுக்கமா அவளும்
...எவ்வளவு நேரமாத்தான்
அமைதியாவே இருப்பா இங்க - அட
...சீக்கிரமாத்தான் வாங்க

அதோ...

வந்து சேந்துட்டாரு நல்லா
...வெவரமான மவராசன்
வெடவெடப்பா இருக்காரு சும்மா
...செவசெவன்னு யுவராசன்

"நாங்க சொல்லுறோம்
...மொதல்ல பொண்ணப் பத்தி.,
நீங்களும் தெரிஞ்சுக்குவீங்க
...அப்புறமா அவளச் சுத்தி"

"கேட்டுக்கோங்க மாப்புள்ளேய்"

"மைக்கப் புடிச்சா அவ
...பேசர விதமே தனி
மாப்பு உம்மையும் சேத்து
...அசர வைப்பா இனி

தென் மாவட்டத்தையே
...கலங்கவைக்கும் அவ ராசி
தெனம் மாவாட்டவும்
...கலங்கமாட்டா மவராசி

எட்டுப்பட்டியும் அவ பேச்ச
...முட்டிப்போட்டு கேக்கும்
எங்கவீட்டுப் பொண்ணுன்னு ஊரே
...மொறபோட்டுப் பாக்கும்

வாயத் தொறந்தா பச்ச
...புள்ளப்போலவே இருப்பா
சீமத் தொரைபோல உங்களயும்
...பொத்திப்பொத்திப் பாப்பா

சொல்லிப்புட்டோம் நாங்க - இனிமே
சோதனய பண்ணிக்கோங்க நீங்க "


தனியாப் பேசனுமுன்னு சொன்னவரு - கொஞ்சம்
தலை சுத்தி வெளியே வந்தாரு

பாடச்சொன்ன பெரியமாமனாரு - நெஞ்சம்
பதறிப் போயித்தான் நின்னாரு

ஆடத் தெரியுமான்னு கேட்டவங்க - வேர்வைய
தொடச்சிக்கிட்டேதான் நின்னாங்க

சமையல சோதன செஞ்சவங்க - மையலாகி
கையக் கழுவவே மறந்தாங்க

நிச்சயமா இதுதாம் பொண்ணுன்னு
...உச்ச ஊணி நின்னாங்க
நிச்சயதார்த்தம் முடிஞ்சி நெறைவா
...ஊரப்பாத்துக் கெளம்புனாங்க

எதிர்பாராம ஒருசிக்கலு
...எம்முன்னால வந்து நிக்கிது !

எல்லாம் முடிஞ்சும் - மாப்புள்ள
...எந்திரிச்சிபோக மாட்டேங்கிறாரு !!
எப்போ கலியாணமாமுன்னு - ரகசியமா
...எங்கிட்ட கேட்டுட்டு முழிக்கிறாரு !!!

Thursday, July 9, 2009

இல்லத்தரசியாம்..?????


திடுக்கிட்டுப் பதறி எழுகிறாள்
தடுமாறி நேரம் பார்க்கிறாள்

சுவரில் கடிகாரம்
ஆறு மணி - மாலை
ஆறுமணியைத் தாண்டி விட்டது


அறக்க பறக்க எழுந்து
அடுக்களை நாடுகிறாள்
திரிந்த பால்கொதித்து
தரையெல்லாம் சிதறியபடி

அப்போதுதான் அவள்
அறைக்குள் கவனிக்கிறாள்
கண்ணயர்ந்த பொழுதில்
தாண்டிப் போயிருக்கிறான்

இறுகிய முகத்தோடு
இருக்கிறான் அவன்
பதுக்கிய கோபத்தோடு
படுக்கையில் அவன்

குழந்தையை படிக்கவைத்து
கிழவியை படுக்கவைத்து
கூடத்தைக் கூட்டிமுடித்து
கதவடைத்து வரும்பொழுது

தூங்கிப்போயிருக்கிறான் கணவன் - அவளின்
ஏங்கிப்போயிருக்கும் கனவுகளுடன்


அதிகாலை விழித்து
அரைகுறையாய்க் குளித்து
வாசல்கூட்டித் தெளித்து
வந்தகோலம் அமைத்து

சமையல் முடித்து
சட்டியில் அடைத்து
பள்ளிக்குப் பிள்ளையை
பதட்டத்தோடு அனுப்பி

உடுப்பு மடித்து
செருப்புத் துடைத்து
தண்ணீர்குடித்துக் களைப்போடு
தலை நிமிர்ந்தால்

எதிரே.......
எதிரியாய்.......
எகிரிப் பாயத்தயாராய் அவன்
எதிர் பார்க்கவில்லை அவள்

தள்ளி விடப்படும் காலித்தட்டும்
முகத்தில் அடைக்கப்படும் வாசல்கதவும்
முற்றத்தில் கலைக்கப்படும் புள்ளிக்கோலமும்
மிதிவாங்கி அலரும் இருசக்கர வாகனமும்

நெற்றிப்பொட்டில் அறைந்து -அவளுக்கு
நிம்மதியைக் கலைத்து உணர்த்துகிறது
நேற்றைய கோபம் உறைந்ததையும் - இன்றும்
முற்றிப்போய்த் தொடர்வதையும்

மதிய உணவு எடுத்து
மயக்கும் வெயிலில் நடந்து
பள்ளியில் கொணடு சேர்த்து
மரத்தின் அடியில் ஓய்ந்து

மல்லி பறித்து
மாலை தொடுத்து
விளக்கேற்றி வைத்து
வீட்டுவேலை முடித்து

அளவுப்பால் வாங்கி
அடுப்பினில் வைத்து
மிஞ்சும் சோர்வோடு
ஊஞ்சலில் அமரும்போது

தன்னையும் அறியாமல்
கண்ணயர ஆரம்பிக்கிறது

சத்தமில்லாமல் நுழைந்து
பக்கம்தாண்டிச் செல்கிறான் அவன்
மெல்ல அக்கம் பார்த்து
மெதுவாய்ப் பத்தவைக்கிறாள் கிழவி

"விளக்குவைக்கவும் துங்குவா அய்யா !
இப்படியிருந்தா வெளங்குமா அய்யா ?
வேலை எதுவும் செய்யாம பொய்யா.,
வெட்டியாவே இருக்கா அய்யா !!"


மாமியார் 'அவரின்'
மகனிடம் சொல்லிய
தகவலதைக் கேட்கிறாள்
திடுக்கிட்டு எழுகிறாள்

திகைத்துப்போய் அழுகிறாள்
தனக்குத் தானே அமைகிறாள் - பின்
அடுக்களைக்குள் நுழைகிறாள்
அடுத்தவேலைக்குத் தயாராகிறாள்


சுவரில் கடிகாரம்
இன்றும் ஒடிக்கொண்டிருக்கிறது
தொடர்ந்து ஒடிக்கொண்டே..............
........................................
............................................

Wednesday, July 8, 2009

இது என்னக் கொடுமை..!?


சிரபுஞ்சியில் என்னைச் சுற்றி
....கடும்வெயில் அடிக்கிறது
சஹாராவில் எனக்கு மட்டும்
....சாரல்மழை பெய்கிறது
சிம்லாவில் என்னைச் சுற்றி
....வெக்கையாய் இருக்கிறது

தலைக்கனம் பிடித்துத் திமிராய்
தன்னையே சுற்றிக் கொள்ளும்
பூமி இப்போதெல்லாம்
என்னவோ தெரியவில்லை
என்னையே சுற்றி வருகிறது

நெருப்பு பனியாய்க் குளிர்கிறது
நீரும் அனலாய்ச் சுடுகிறது
இரவு வெளிச்சமாய் இருக்கிறது
பகல் இருண்டுபோய்க் கிடக்கிறது

வெறும் காற்றில் உறைகிறேன்
கொட்டும் மழையில் உலர்கிறேன்
கடும் பனியில் உருகுகிறேன்
சுடும் வெயிலில் நனைகிறேன்

ஏனோ தெரியவில்லை
என்னவென்று புரியவில்லை
என்னைச் சுற்றிலும் எல்லாமே
எதிர்மறையாகவே நடக்கிறது

வா வா என எந்தன்
வாழ்க்கையின் வசந்தம் அவளை
வாழ்க்கைக்குள் வரவேற்க
வாய்நிறைய ஆசைதான் எனக்கும்

ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில்
அதற்கான வழிதான் ஏதுமில்லை
பெரியோரே புரிந்துகொள்ளுங்கள்
அறியோரே அறிந்துகொள்ளுங்கள்

அடுத்து வரும் வரவேற்புக்காக
அடியேனை மன்னித்தருளுங்கள்
அவளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்
ஆனவரை சமாதானம் செய்யுங்கள்

"வராதே வசந்தமே !
நீ வரவே வராதே !!
என் வாழ்க்கைக்குள் வரவே வராதே !!!"

Tuesday, July 7, 2009

கடப்பாரை ஊசி ....!


ஆலமரத்தடி திண்ணைக்கு
ஆயாவோட மருத்துவரும்
அம்மைத் தடுப்பூசி போட
அமர்க்களமாய் வந்து இறங்கினார்

"திருக்கூசி டாக்டரு டோய் !
தெருவில நிக்கான் டோய் !!
தப்பிச்சு போயிருங்க டோய் !!!
தனியா மாட்டீராதீங்க டோய் !!!!"


சத்தம் கேட்ட மறுநொடியில
சந்து பொந்துல நொழஞ்சோமே !
வேட்டு கேட்ட கொக்கப்போல
எட்டு திக்குல பறந்தோமே !!

எப்படி எல்லாம் ஒடுனோமுன்னும்
எங்கே எங்கே ஒழிஞ்சோமுன்னும்
எதுக்குள்ள பதுங்குனோமுன்னும்
எங்களுக்கே கூடத் தெரியாதே !!

பரணு தட்டிக்கு மேலே......
பலக கட்டிலுக்குக் கீழே.....
குதிலு பானைக்கு உள்ளே.....
மதிலு படலுக்கு வெளியே.....ன்னும்

ஆலமரத்து மேலே ஒண்ணு....
அய்யனாருக்கு கீழே ஒண்ணு....
கொளத்துக் கரையில ஒண்ணு....
கெணத்து உறையில ஒண்ணு....ன்னும்

ஒண்ணொன்னா இழுத்துப் புடிச்சி
ஒட்டுமொத்தமா போட்டு முடிக்க
ஒருநாப் பொழுதும் அங்கே
ஒருவழியா முடிஞ்சே போச்சுதே !

பத்து வயசு வரைக்கும் ஊசிய
பக்கத்தில கூட பாக்காததால
பதட்டத்துல வந்த குளுரும்
பயத்தில வந்த காய்ச்சலும்

அஞ்சுநாளாகியும் பயபுள்ளைங்களுக்கு
கொஞ்சங்கூட அடங்கலியே அன்னிக்கு !
அந்தஊசிக்கு அப்பொறமா எனக்கு
எந்தஊசியும் போடலியே உண்மைக்கும் !!

ஊசியக் காமிச்சாதான இன்னிக்கு
கொழந்த கூட பொறக்குது !
ஊசியிலும் மருந்திலும் தான - இப்போ
ஒலகமே இங்க இயங்குது !!

Monday, July 6, 2009

காட்டுக்குள் காத்திருக்கும் கரும்புலி ....!


06-07-09
--------

காட்டுக்குள்...
--------------
வரிப்புலியென்றால்
வலுவிருக்கும் உறுதியில்,
உயிர் எடுக்கும் காட்டில்
உறவுகாக்க மறைந்திருந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் இறுதியில்

கரும்புலியென்றால்
கடும் சினமிருக்கும் உறுதியில்,
உயிர் கொடுத்துப் போரில்
உறவு காக்க வெளியே வந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் சடுதியில்

நீண்ட போராட்டத்தின் இறுக்கத்தில்
உண்டான மயக்கத்தின் கிரக்கத்தில்
சோர்ந்து கிடக்கும் புலியைச்சுற்றி

சேர்த்து மூடிவிட்டனர் வலைக்குள் - கொண்டாட
சார்ந்தோர் மூழ்கிவிட்டனர் போதைக்குள்

ஆம்.,

சிலந்திகளால் பிண்ணி முடிக்கப்பட
சிலுசிலு பகட்டு வலைகள் அவை

புலி விழித்து மீண்டும்
வாலசைந்தாலே சிதைந்துபோகும் - அந்த
வலுவில்லாத வலைகளும்
வலைபிண்ணிய சிலந்திகளும்

கரும்புக்குக் கூலியா? என
கானகம் அழித்துச் செல்லும்
காடையருக்குத் தெரியாது - உள்ளே
கரும்புலி காத்திருக்கும் சேதி

Sunday, July 5, 2009

வெடித்து வா என் இளைஞனே.....!



இன்று (ஜுலை,4),
சுவாமி விவேகானந்தரின் நினைவுநாளில்,
அவரது பாதங்களில் சமர்ப்பணம் :



துவண்டு கிடக்கும் இளைஞனே - நீ
துடித்துக் கிளம்பும் நேரமிது !

விரிந்த வானத்துக்கு அடியில் - இந்த
பரந்த பூமியின் வெளியில் - உனக்கும்
கிழக்கு திசையுண்டு - அங்கே
விடியல் என்பது தினமும் உண்டு

நீருக்குள் திணறும் மீனும் உண்டா ?
தண்ணீருக்குள் மூழ்கும் தாமரை உண்டா ?
தரைநோக்கி எரியும் நெருப்பு உண்டா ?
தன்நிலை உணர நீ ஏன் மறுக்கிறாய் !

பல லட்ச அணுக்களை நீ
பந்தயத்தில் செயித்ததனால் தான்
பாரினில் பிறந்து இருக்கிறாய் !
வெற்றிக் கணக்கில்தானே உன்
வாழ்வையே தெடங்கி இருக்கிறாய் !!

கடந்தகால நினைவுகள் ஏமாற்றம் தரும்
எதிர்கால எண்ணங்கள் ஏக்கம் தரும்
நிகழ்காலம் மட்டுமே உனக்கு ஏற்றம் தரும்

கடந்தகால பாடத்தோடு
எதிர்காலத் திட்டத்தோடு
நிகழ்காலத்தில் நடை போடு
நாளைய கனவு மெய்ப்படும்-அந்த
வானம் உனது வசப்படும்


வாசல் மூடி உள்ளே இருக்கும்வரை
உனக்கு இங்கு வானமே இல்லை
கதவு திறந்து வெளியே வந்துபார்
உனக்கு அந்த வானமே எல்லை

'இனியொரு விதி செய்வோம்'
சொல்லிக் கடந்தது ஒரு நூறாண்டு
வெடித்து வா வெளியே - நாம்
இணைந்து இனியாவது செய்வோம் !

Thursday, July 2, 2009

தேவதை அவளைக் காண......


காலம் கனிந்து விட்டது
கனவு பலித்து விட்டது
ஒலியின் வீச்சையும் தாண்டி
ஒளியின் வேகத்தையும் தூண்டி

காற்றாய் விரைந்து கொண்டிருக்கிறேன் !

கண்ணாமூச்சி ஆடிய அவளை
கனவில் கண்ட கனவு அவளை
கண்முன்னால் காணப் போகிறேன்
கைகளில் தூக்கிக் கொஞ்சப் போகிறேன்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

குட்டிச் சுவற்றில் அமர்ந்துகொண்டு
வெட்டியாய் சுற்றி வந்தவனை
பொறுப்பு அதனை உணர்த்தி - என்னை
திருத்த வந்த தேவதை அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

சல்லிப் பயலென என்னை
சொல்லிக் கழித்த அனைவரும் வந்து
வெட்கி மகுடம் சூட்டி - என்னை
தட்டிக் கொடுக்க வைக்கப்போகிறாள் அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

திண்ணையின் ஓரம் வந்தாலே
திட்டி ஒதுக்கும் சொந்தங்களிடையே
நடுக் கூடத்தில் அமரவைத்து -எனக்கு
நல்மரியாதை வாங்கித் தரப்போகிறாள் அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

உனது மூச்சுபடக் காத்திருக்கிறது
எனது நுரையீரல் மூச்சடக்கி !
உனது மூச்சாசுடக் காத்திருக்கிறது
எனது முழுஉடல் சூடாகி !!

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

தங்கையவள் தாயாகி இருக்கிறாள் - என்னைத்
தாய்மாமன் ஆக்கி இருக்கிறாள் - எனது
மருமகள் அவளைப் பார்க்க மாமன் - புள்ளி
மானாக விரைந்து கொண்டிருக்கிறேன்

இதோ........!!!!!

Wednesday, July 1, 2009

உள்ளூரிலிருந்து உலகம்வரை ...!


தெரிந்துகொள்வோமா சனநாயகம் ?
================================
உள்ளூர் :
----------------

மரத்தடியில் ஒரேமேடையில் சாதியொழிக்கப் பேசுகிறான்
மய்யாவாடியில் சாதிக்கொருமேடையில் பிணம் எரிக்கிறான்

முதல்நாள் சாதிஒழிப்புப் போராட்டம் என்கிறான்
மறுநாள் உள்ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம் செய்கிறான்

சாமானியனுக்கு உதவிட மானியம் என்கிறான்
சாமானியனோ என்னவென்றே தெரியாமல் முழிக்கிறான்


தமிழ் நாடு :
--------------------
காலையில் சாகும்வரை உண்ணாவிரதம் என்கிறான்
மாலையில் சர்ப்பத்தை குடித்து முடித்துக்கொள்கிறான்

களையப்படும் இனம்காக்க புறப்படுவோம் என்கிறான்
கடையடைத்து வீட்டில் போய்ப் படுத்துக்கொள்கிறான்

மாலையில் அய்யாவிடம் அடிபணிந்து நிற்கிறான்
காலையில் அன்புச்சகோதரியின் ஆணையே போதுமென்கிறான்

ஒருமுறை போரென்றால் சாவுதான்வரும் என்கிறார்
மறுமுறை போராடினால்தான் தனிநாடுவரும் என்கிறார்

இந்தியா :
-----------------

அழிவைத் தடுக்க ஆனதைச்செய்வோம் என்கிறான்
அறிக்கை விடுவதோடு அமுங்கிப்போய் விடுகிறான்

இங்கிருந்து குடிக்கத் தண்ணீர் கொடு என்கிறான்
அங்கிருந்து கூட்டு குடிநீர் கூடாது என்கிறான்

தேவையா இந்தக் கூட்டணி மாற்றம் என்றால்
தேர்தலுக்குப்பின் மீண்டும் மாறிடலாம் என்கிறான்

மும்பை பணக்காரர்களுக்கு பாதுகாப்பு தருகிறான்
மன்னார் மீனவர்களை மயிராய்த்தான் மதிக்கிறான்

அண்ட நாடுகள் :
----------------------------

உயிரிழக்கிறார்கள் உண்ண உணவின்றி என்றால்
உயர் மருத்துவம் கொடுக்கிறோம் என்கிறான்

உயிர்பிழைக்க வருவோரை கொல்கிறாயே என்றால்
உள்ளே யாராவது போராளிஇருப்பான் என்கிறான்

பாதுகாப்பு வலையத்துக்குள்ளும் படுபாதகம் செய்கிறான்
பதுங்கு குழிகளுக்குள்ளும் பலவகைக்குண்டு வீசுகிறான்

மும்பை தாக்குதலுக்கு பதில் என்னாச்சு என்றால்
லாகூர் தாக்குதல் அதில் சரியாப்போச்சு என்கிறான்

போராடினால் சட்டம்தன் கடமையை செய்யுமென்கிறான்
ஆர்ப்பாட்டம் செய்தால்தானே அடங்கிப்போய் விடுகிறான்

திருட்டு வழக்கிலிருந்து விடுதலை ஆகிக்கொள்கிறான்
தலைமை ஏற்று வழிநடத்தும் நீதிமானாகிவிடுகிறான்

உலகம் :
----------------------

அணுகுண்டு சோதித்தாலே அழித்துவிடுவேன் என்கிறான்
ஆயிரம் அணுகுண்டு அவனிடமே வைத்திருக்கிறான்

தீவிரவாதியை ஒழிக்க தொடர்நடவடிக்கை என்கிறான்
தீவிரவாத நாட்டுக்கு தொடருதவி செய்துவருகிறான்

உலக நாடுகளுக்குள் உற்றுஉற்றுப் பார்க்கிறான்
உள்நாட்டுக்குள் உள்ளநிலை தெரியாமல் தவிக்கிறான்

அட
அவசரத்தில் சொல்லமறந்து போனேனே
இதற்குப் பெயர்தான் இங்கே சனநாயகமாம்