Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Monday, March 16, 2009

பரிதாபத்துக்குரியவனின் கடைசி ஆசை....


இன்று ஒருநாள் எப்படியும் தாண்டிவிட்டால்
இனிய பிறந்தநாள் கொண்டாடிவிடுவேன்
இனி அதற்கு வழியே இல்லை
இன்று தாங்குவேனோ தெரியவில்லை

என் நூறாவது பிறந்தநாள்
ஏன் நூலிழையில் தவறியது
என்ற கதையைக் கேளுங்கள்

வீட்டிற்கு வடகிழக்கு மூலையில்
வாகாய் வளர்ந்து நிற்கும்
வாகை மரம் நான்

ஆயிரம் பேர் தங்கிச்செல்ல
அருமைநிழல் கொடுத்த நான்
அங்கே ஆயிரம் கருசுமக்க
அகன்றகிளை கொடுத்த நான்

கொளுத்தும் வெயிலைத் தாங்கி
கடும் குளிரில் தூங்கி
அடிக்கும் மழையில் நனைந்து
துடிக்கும் புயலில் நெளிந்து

இயற்கையை இதுவரை வென்று
இன்றுவரை நிமிர்ந்து நிற்கும் நான்
இந்த மனிதனின் சூழ்ச்சிவலையில்
இதோ வசமாய்ச் சிக்கிக்கொண்டேன்

விதி எனக்கு வந்துசேர்ந்தது
விருந்தினர் என்ற வடிவத்தில்
ஆச்சரியமாய் பார்த்தார் என்னைச் சுற்றி
ஆர்வமாய் விசாரித்தார் என்னைப் பற்றி

"வாஸ்த்துவின்படி வடகிழக்கில் மரம்
வீட்டின் நலத்திற்கு அகாது-அதிலும்
வாகைமரம் ஆகவே ஆகாது"


மெதுவாக பற்ற வைத்துவிட்டு
சாதுவாகக் கிளம்பிச் சென்றுவிட்டார்

இதோ..........

என்னை வெட்டி சாய்க்க
எனது நிழலில் நின்றுகொண்டு
கூட்டம் கூட்டி அமர்ந்துகொண்டு
திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்

நாளை விடியும்போது
நான் விறகாகி இருப்பேன்
நீங்கள் மனது வைத்தால்
நான் உயிரோடு இருப்பேன்

இறந்தநாளா? பிறந்தநாளா??
இனி உங்கள் கையில் தான்!
இரக்க மனம் உள்ளோர்களே!!
யாராவது உதவி செய்வீர்களா?

Saturday, September 27, 2008

ஊருக்குத்தான் உபதேசம்


--"காடு அழிப்பவனை
காலன் கொண்டு போகணும்

மரம் அறுப்பவனின்
கரம் முறிஞ்சு போகணும்"

ஊருக்கு உபதேசித்தே என்
உறக்கம் குறைந்து போனது.

ஊஞ்சல் ஒண்ணு செய்யவேணும்
மஞ்சள் கடம்பா மரத்தில்

படுத்தவுடன் வருமாமே
பகலில்கூட உறக்கம் அதில்

Sunday, September 21, 2008

விதையின் பயணக் குறிப்பு.


விதையாய் தரை புகுந்து
தளிராய் தலை நிமிர்ந்து
கோடையில் கருகாமல்
வாடையில் மருகாமல்

கொத்து கொத்தாய்
கதிர் பிடித்து
அறுவடையில் உதிராமல்
கட்டு கட்டாய்
களம் புகுந்து
போரடிக்கையில்சிதறாமல்

வியாபாரத்தளம் கண்டு
உன் வீடு அடைக்கலம் கொண்டு
சோறாகி இலைக்கு வந்து
பிறவிப் பயன் அடைய இருக்கையில்

மிச்சமாகி
குப்பைக்குப் போனது
அந்த அரிசி