இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Monday, June 29, 2009
காதல் சா(சீ)க்காளன்...!
மெதுவாய் உயரும் மின்தூக்கியில்
மேல்தளத்துள் வெளியேறி வருகையில்
மேல்மூச்சு இறைக்கிறது எனக்கு ? - எங்கோ
மேடையில் படிஏறியிருப்பாள் அவள் !
குளுகுளுவென இருக்கும் எனது
குளிர்சாதன அறைக்குள்ளும் லேசாக
வியற்க ஆரம்பிக்கிறது எனக்கு ? - அங்கே
மின்தடையாய் இருக்கும் அவளிடத்தில் !
வாசனை மூக்கு துளைக்க
ரசனையோடு சாப்பிட அமர்ந்ததும்
பசி மறத்துப்போகிறது எனக்கு ? - முன்னமே
ருசியாய் சாப்பிட்டு முடித்திருப்பாள் அவள் !
இன்னும் வேலை மீதமிருக்க
இரவு கண் மூட நேரமிருக்க
கனவாய் வருகிறது எனக்கு ? - அப்போதே
நன்றாகத் தூங்கிப் போயிருப்பாள் அவள் !
பாதிகாலையில் முகம் கழுவாமல்
படுக்கையில் இருந்தபடியே சூடாய்
பானம் குடிக்கப்போகிறேன் ! - எப்படியும்
பல் விளக்கியிருப்பாள் அவள் !!
Thursday, June 25, 2009
முன்னேற்றமா? (அ) முட்டுக்கட்டையா?
கணினிக்குள் நுழைந்திருக்கிறான் அவன்
கண்ணிமைக்காமல் அமர்ந்திருக்கிறேன் நான்
அறிவியலின் முன்னேற்றம் பற்றி
அது செய்யும் மாயாசாலம் பற்றி
அது உருவாக்கும் வாய்ப்புகள் பற்றி
அதனால் உருவாகும் வசதிகள் பற்றி
கண்களைக் கணினிமேல் பதித்தபடி
கருத்தினைக் கண்டம்தாண்டி விதைத்தபடி
எதைஎதையோ இணையத்துள் தேடியபடி
இடையிடையே என்னிடன் பேசியபடி அவன்
"நமது ஊரின் வானிலை வேண்டுமா ?
நல்ல ஓசையில் வானொலி வேண்டுமா ?
அன்னைதேச நிலவரம் புரியவேண்டுமா ?
அண்டைதேச கலவரம் தெரியவேண்டுமா ?
இணையத்துக்குள் நுழைந்தால்
இப்போதே கிடைத்து விடும்
அன்னைக்கு அன்புமடல் - இங்கே
அமெரிக்காவிலிருந்து அனுப்பினால்
அரைநொடியில் அங்கு போகும்
அப்பாவின் கணக்கில்
இங்கே பணம் செலுத்தினால் - அங்கே
அரைமணியில் வங்கியில் சேரும்
அற்புதக் கணினி இல்லாத உலகமது
அதிகாலைக் கிழக்கு இருள் போல
அரைநொடியில் கலைந்து போகும் "
மிகத் தெளிவாக இருக்கிறான் அவன் !
ஏகக் குழப்பத்தில் இருக்கிறேன் நான் ?
அறிவியலோடு சேர்ந்து முன்னோட வேண்டும் - இதற்கு
மாற்றுக் கருத்து முன்மொழிய வேண்டாம் - அதற்காக
அதனுள் வீழ்ந்து மூழ்கிட முடியுமா ?
சன்னல் திறந்தாலே காற்றின் இதம்
உனக்கு வானிலை கூறாதா ?
சாலையில் நடந்தாலே சூரியனின் பதம்
உனக்கு வெப்பநிலைக் காட்டாதா ?
வானம் நோக்கினாலே நகரும் மேகம்
உனக்கு வரும்மழையினைச் சொல்லாதா ?
நால்வரோடு கலந்தால் தானே
நாட்டு நிலவரம் தெரியும் !?
நல்லவரோடு இணைந்தால் தானே
நல்லது கெட்டது புரியும் !?
'நண்பனே ,
அரைப் பக்கத்தில் கடிதம் எழுது
கரைத் தாண்டி சுமந்து செல்லுமது
உனது விலையில்லா பாசத்தையும்
உனது உயிரின் வாசத்தையும்
அன்புமகனின் மடல்தனை
வாசித்து அறிவோரைவிட
உச்சி முகர்ந்து உள்ளம் சேர்த்து
சுவாசித்து உணர்வோரே அதிகம்
உனது எழுத்தில்
உனது முகம் தெரியும்
அதிசயம் அங்கேதான் நிகழும்
அதுஇங்கே உனக்கெப்படிப் புரியும்'
மெதுவாய் விலகி நடக்கிறேன் வீட்டுக்கு
மெல்லத் தழுவிக் கடக்கும் குளிர்காற்று
அன்றைய வானிலையை எனக்கு
அழுத்தமாய்ச் சொல்லிச் செல்கிறது !
Wednesday, June 24, 2009
பாவப்பட்டோரின் வாழ்வு..?!
இரவில் இறுக்கும் மின்தடையில்
இருட்டு இருக்கும் தன்உடையில்
கருப்பையும் விரட்டும் இருட்டு
கருப்பையையும் மிரட்டும் கும்மிருட்டு
இறைவன் நோக்கிய தீவிர தவம்
இரு தீக்குச்சிகள்தான் கேட்க்கும் வரம்
இறுதியில் செயித்தது தவம்
ஒருவழியாய் கிடைத்தது வரம்
இருட்டை விரட்டும் பொருட்டு
ஒரு தீக்குச்சி தன்னையிழந்தது
தற்கொலைக்குத் தள்ளப்பட்டது - முடிவில்
தலைசுற்றி வெளியே வீசப்பட்டது
பற்றிக்கொண்டது தீ - தன் தலையில்
ஏற்றுக்கொண்டது மெழுகுவர்த்தி
இருட்டைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்தது
இருதயம் சுவாசிக்கும் வகைசெய்தது
வந்தது திடீரென மின்சாரம்
வந்துபாய்ந்தது ஒளி வெள்ளம்
கவிழ்ந்த பகட்டு வெளிச்சத்தில்
கவனிப்பாரின்றிக் காணாமல் போயிருந்தது
தற்கொலை செய்த தீக்குச்சியும்
தன்னையே உருக்கிய மெழுகுவர்த்தியும்
அற்புதமாய்த் தோன்றியது ஒருநொடியில்
அற்பமானதாய் மாறிப் போனது
மீண்டுமவை பரிவோடு தேடப்படும் - அங்கே
மறுமுறை மின்தடை வரும்போது
Tuesday, June 23, 2009
நல்லதொரு குடும்பம்...:)
ஒரேஒரு கேள்வி !
இருவேறு பதில்கள் ?
குழம்பிப்போய் நிற்கிறாள் குழந்தை
குழப்பிவிட்டவர்கள் பெற்றவர்கள்
'மனிதப் பிறப்பின் ரகசியம்' என்னவென்று
மனப்பாடம் செய்யவேண்டும் இன்று
அம்மாவிடம்
ஆசையாய் கேட்கிறாள்
"ஆண்டவன் படைத்தான்
ஆதமையும் ஏவாளையும்
மண்ணில் அவர்கள் உருவாக்கினர்
மனிதர்கள் நம் அனைவரையும்"
அப்பாவிடமும்
ஆர்வமாய்க் கேட்கிறாள்
"குரங்கிலிருந்து பிறந்தான்
கூடிக்காடுகளில் வாழ்ந்தான்
நாகரீகம் கற்றான்
நாட்டுக்குள் வந்தான்
தன்நலம் கற்றான்
தனித்தனியே வாழ்கிறான்"
தெளிவில்லாத பதில்களால்
தலை சுற்றுகிறது அவளுக்கு
அம்மாவை நாடுகிறாள் மீண்டும்
அப்பாவின் கூற்றைக் கூறுகிறாள்
ஒருநொடி தாமதிக்கவில்லை அம்மா
இரண்டடியில் தீர்வைச் சொல்லுகிறார்
"அவரும் சரியாய்தான் சொல்லியிருக்கிறார்-ஆனால்
அவரது 'குடும்பம்' பற்றி சொல்லியிருக்கிறார் !"
சந்தேகம் நீங்கி துள்ளியபடி - குழந்தை
சந்தோசமாய் விரைகிறாள் பள்ளிநாடி
நன்றி :கரு / கு.த.ந
Sunday, June 21, 2009
எனக்குள் 32 (அ) 32 க்குள் நான்
எனது அன்பின் அக்கா
திருமதி .பூங்குழலி /மருத்துவர்
அன்பான குடும்பத்தில் 9 மாதம் மூத்தவர்
அடுத்தவரை முன்னிருத்துவதில் முதன்மையாய் இருப்பவர்
என்னை இந்தப் பதிவுக்காக முன்மொழிந்தவர்
- அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்களுடன் ஆரம்பிக்கிறேன் !
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
#)எனது பெற்றோருக்கு மிகநீண்ட காத்திருத்தலுக்குப்பின் (6 ஆண்டுகள்), தொடர்ந்து 3முறை குலதெய்வத்தின் பெயர் வைப்பதாக வேண்டிக்கொண்டபின் பிறந்ததால் எனக்கு குலதெய்வம் பெயர் சேர்த்து உச்சிமகாளி துரை என்று பெயர்சூட்டப்பட்டது. அடுத்து தம்பிக்கும் அதே பெயர்.அப்பொழுது "வசந்த மாளிகை" தாக்கம் இருந்த நேரம்.கூப்பிடும் வசதிக்காக நான் 'பெரிய துரை' ஆனேன்,தம்பி 'சின்ன துரை'ஆனான்.
#)'துரை 'பிடிக்ககாம இருக்குமா !
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
#)எனக்குத் தெரிந்து ஒரேஒருமுறை - எனது தந்தையின் மரணத்தில்.
எனது குழந்தை பருவத்தில்,ஏழ்மை நிலையில் எங்களுக்காகவே உழைத்து,உழைப்பையே சுவாசித்து,உழைப்பை மட்டுமே அனுபவித்தவர்.அவர்பிறந்த கிராமத்து மண் மீது அதிக பிடிமானம் உள்ளவர்.அவருக்காக கிராமத்தில் பண்ணைவீடு, சுற்றிலும் தோட்டம் எனற எனது கனவு திட்டத்தில் மிக உறுதியாக இருந்தேன்.நான் சம்பாதிக்க ஆரம்பித்து,வீட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கும் தருணத்தில் திடீரென மறைந்துபோனார், எதையுமே அனுபவிக்காத எனது அப்பா ...
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
#)ஆமாம்.எனக்கு மிகவும் பிடிக்கும்.எனது ஆங்கில எழுத்து அந்தக்கால மைக்குடுவை/மயிலிறகால் எழுதுவார்களே ! கிட்டத்தட்ட அதுபோல இருக்கும் (இதற்காகவே பேனா வாங்கியவுடன் நிப்பை சிறிது சாய்த்துவைத்து, தரையில் மெதுவாக தேய்த்து,பட்டையாக எழுதுவதற்கு தயார் செய்வேன்.எப்படியும் ஒரு நாள் ஆகிவிடும் ).
இதில் ஒரு தவிர்க்கமுடியாத சிக்கலும் உண்டு.இன்றுவரை (எனது,அக்கா,தங்கை)குழந்தைகளுக்கும் புத்தகமுகப்பு எழுதுவதில் ஆரம்பித்து,அட்டைபோடும்வேலைவரை மெதுவாக என்தலையில் ஏற்றிவிட்டுவிட்டார்கள்
#)எனது கையெழுத்து (signatute) பார்ப்பதற்கு கொக்கு ஒற்றைக்காலில் தவம் நிற்பது போலிருக்கும் :)
4. பிடித்த மதிய உணவு என்ன?
#)இதுதான் எனக்கு சரியாகக் கிடைப்பதில்லை.பயணத்திலேயே அதிக நேரம் இருப்பதால் பெரும்பாலும் வெளியே கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன்.எவ்வளவு நேரம் ஆனாலும் வீடுபோய் சேர்ந்தபிறகுதான்/என்னவாக இருந்தாலும்.
5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
#)எனக்கும் ஆசைதான்.ஆனால் முதல்சந்திப்பு பெரும்பாலும் அறிமுகத்துடனேயே முடிந்து விடுகிறது.(பயம்/மரியாதை).ஆனால் தொடர்ந்தது எல்லாமே இதுவரை தொடர்ந்துகொண்டேதான் .....
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
#)கடல் குளியல் பிடிக்கும்.கடல்சார்ந்த ஊரில் இருப்பதால் இது எளிதாகவும் கிடைக்கும்
அருவியில் குளிக்க மிகவும் ஆசை.நாளிதழில் ஆர்ப்பரிக்கும் அருவியின் (குற்றாலம்) படம் பார்த்து,உடனடியாக அவசரத்திட்டம் போட்டு ,ஆர்ப்பாட்டமாய் அங்கேபோய் நின்றால் எல்லோரும் எண்ணையில் குளித்துவிட்டு சொம்பு வைத்து தண்ணீர்பிடிக்க வரிசையில் காத்திருப்பார்கள் :(.ஆறுதலுக்காக தாமிரபரணியில் (திருநெல்வேலி)குளித்துவிட்டு வருவோம் !
7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
#)அவர் என்னிடம் என்ன கவனிக்கிறார் என்பதை
8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
#)பிடித்தது - எது நடந்தாலும் நல்லதே என ஏற்றுக்கொள்வேன்
(சில சமயங்களில் மனது சங்கடத்துடன்)
#)பிடிக்காதது - நான் விழிக்கும் முன் சூரியன் உதிப்பது :(
9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?
#)பிடித்தது - எனக்கு பாதி இடம் கொடுத்தது (50%)
#)பிடிக்காதது - பாதி கொடுத்துவிட்டு முழுவதுமாய் ஆக்கிரமித்தது (100%)
10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
#)அப்பா
11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
வெள்ளை பனியன்/நீலநிற கட்டம்போட்ட கைலி (வீட்டில் இருக்கிறேன் !)
12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
இல்லை.ஹாலில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருக்கிறது :(
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
#)பச்சை
14. பிடித்த மணம்?
#)சமையல் அறையிலிருந்து வெளியே 'வரும்' என்னவளின் வாசம்
15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
#)சீனா
#)கிம
#)நாகரா
#)தமிழன்
#)நடராஜன்
#)ராஜா
ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள்
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
#)அவரின் எல்லா பதிவும் பிடித்தவைதான்.அனைத்துமே சம்பந்தப்பட்டவரை முன்னழைத்துச் செல்லுவதாகவே இருக்கும்
17. பிடித்த விளையாட்டு?
#)குழந்தைகளை ஏமாற்றி விளையாடுவது
18. கண்ணாடி அணிபவரா?
#)இல்லை
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
#)இயற்கை சார்ந்த (காட் மஸ்ட் பி க்ரேஸி,அபோகலிப்டா)
அறிவியல் சார்ந்த (ரிட்டன் ஆப் த ஜெடாய்,ஈ.டி,ஏலியன்/ப்ரிடேட்டர்)
உளவியல் சார்ந்த (அன்பே சிவம்,அஞ்சலி)
படங்கள் அத்தனையும்
20. கடைசியாகப் பார்த்த படம்?
#)பசங்க- அந்த 'குஞ்சுமணி' என்னை மிகவும் கவர்ந்தது :)
21. பிடித்த பருவகாலம் எது?
#)இப்போ இருக்கும் ( 8x8ல் 5ம் பாகம் ie 32 - 40 ) காலம்தான் !
#)மழை(க்காலமும்) ரொம்பப் பிடிக்கும் !!
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
#)கணிதம் (பசங்க சந்தேகம் தீர்ப்பதற்காக . தெரியவில்லை என்று சொன்னால் கிண்டல் செய்கிறார்கள்!!!!!)
23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
#)கணக்கு வைத்துக்கொள்வதில்லை
24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
#)பிடித்தது :மிஸ்டு கால் - வீட்டிலிருந்து வருவது :)
#)பிடிக்காதது :மிஸ்டு கால் - மற்றவரிடம் இருந்து வருவது :(
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
#)மன ரீதியாக இதுவரை இல்லை
உடல் ரீதியாக டெல்லி,மும்பை
26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
#)உங்களை இதை படிக்கவைத்திருக்கிறேன் :)
27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
#)பொய்,பொய் மட்டுமே
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
#)காலைநேரத் தூக்கம்/சோம்பல்
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
#)என் வீடு தான்
30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
#)இப்படியே
31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
#)ஆகா !
கடைசியில் ஒரு நாரதர் கேள்வி !!
இட ஒதுக்கீட்டில் என்நிலை (100%) மிக மோசமான நிலையில் இருப்பதால் அப்படி ஏதாவது செய்தாலும் தெரிந்துவிடும் :(
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
#)கிடைத்ததோடு மனமொன்றி வாழுங்கள் - இதுவரை
கிடைக்காததெல்லாம் கேட்காமலேயே கிடைக்கும்.
என்றும் அன்புடன்
-துரை.ந.உ
Saturday, June 20, 2009
சமஉரிமை என்பது......
"மிருகவதை செய்யும் மனிதர்களை
மாறுகை மாறுகால் வாங்குவோம்
பறவைகளை கூண்டில் வளர்க்கும்
கயவர்களை கூண்டில் அடைப்போம்"
கடையின்முன் மறியல் செய்து
கூட்டமாய்க்கூடி ஆர்ப்பாட்டம் செய்து
கூடுகளை உடைத்து பறவைகளை
கூண்டோடு பறக்க விட்டோம்
கிளியும் மைனாவும் திசைக்கொன்றாய்
களிப்புடனே பறந்து மறைந்துபோயின
கைதட்டி ஆரவாரமாய் ஆர்ப்பரித்தோம்
புறாவெல்லாம் கூட்டமாய்ப் பறந்து
திறந்துவிட்டக் கூட்டுக்கேத் திரும்பிவந்தன
திறந்தவாய் மூடாமல் திகைத்து நின்றோம்
குருவிகள் சிலநொடி நேரத்திலேயே
பருந்திடம் சிக்கி பரதேசம் போயின
இருண்ட முகத்துடன் உறைந்து நின்றோம்
காதல்பறவைகள் கண்முன்னாலேயே
கழுகிடம் மாட்டி சிதைந்தே போயின
அதிர்ந்துபோய் முழுதும் மூர்ச்சையாகி நின்றோம்
நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த
நடுநிலையாளர் மெதுவாய்ச் சொன்னார் :
"கூண்டிலாவது அது உயிரோடிருந்திருக்கும்"
தலைகுனிந்து அத்தனைபேரும்
நிலைகுலைந்து கலைந்து சென்றோம்
"எல்லோருக்கும் சமமான அளவுகோல்
எல்லாசமயத்திலும் சரியாய் வராதோ ?
வகைப் படுத்திப் பார்ப்பதுதான்
வாழ்க்கைக்கு உதவும் பாடமோ ??"
Friday, June 19, 2009
அருக்காணிக் காதல்...!
"நார் இல்லாமல் மலர் _ ஆரம் ஆகுமா ?
வேர் இல்லாமல் மரம் _ மலர் கொடுக்குமா ?
நீர் இல்லாமல் உரம் _மரம் சேருமா ?
நீர் இல்லாமல் வேர் _மரம் வளர்க்குமா ?
நீர் இல்லாமல் மோர் _தனியே இருக்குமா ?
நீர் இல்லாமல் பார் _தாகம் தணிக்குமா ?
நீர் தராமல் வானகம் _தூங்கி இருக்குமா ?
நீர் இல்லாமல் கானகம் _ஓங்கி வளருமா ?
நீர் இல்லாமல் என்காதல் _ .................... !!"
ஆகா சொல்லிப்புட்டேனே !!!!!!!!!!!!!!.............
அவசரத்தில சொல்லிபுட்டேனே !
அவருகிட்டேயே சொல்லிப்புட்டேனே !
என் காதல சொல்லிப்புட்டேனே !
எதிர்பாக்காம சொல்லிபுட்டேனே !
என் காதல் கண்டிருப்பாரோ - என்மேல்
எதிர்காதல் கொண்டிருப்பாரோ ?
ஆசையா இருக்கேன் நான் அவருமேலே !
அடக்க முடியுமா இனியும் என்னால ?
காத்திருக்கும் சேதியச் சொல்லுங்க அவுகளுக்கு
கோயில் கட்டியேக் கும்புடுதேன் உங்களுக்கு
Monday, June 15, 2009
இணைப்பு இருந்தால் இல்லாள் விடுவாளா...!
"கண்ணு முன்னால நாங்க
கண்டுக்கவே இல்ல நீங்க
நாங்கஇங்க உன்னைத்தானே நம்பியுள்ளோம்
எங்கெங்கோ அலையுதே உன்னோட உள்ளம்"
'' இப்போ என்ன நடந்................''
''குத்துக்கல்லப் போல உக்காந்துகிட்டு
உத்தஉத்துப் எதையோப் பாத்துக்கிட்டு
இல்லாத ஆளுகிட்டே நாள்கணக்கா
நல்லாத்தான் பேசுதீங்க''
'' அப்படி எல்லாம் ஒன்...........''
''தன்னந்தனியா சிரிச்சுக்கிறீங்க
தனக்குள்ள என்னவோ பேசிக்கிறீங்க
இஞ்சிதின்னக் கொரங்காட்டம் இளிக்கிறீங்க
மஞ்சதெளிச்ச ஆடாட்டம் முழிக்கிறீங்க''
'' இல்லாதத எல்லாம் சொல்லக்..........''
''தொடுப்பு அதை விரைவிலேயே
எடுத்துவிட்டே ஆகணும் - அப்பத்தான்
அடுத்தவேலையப் போய்ப் பாப்பீங்க
எடுத்த வேலையயும் முடிப்பீங்க''
'' இதெல்லாம் ரொம்ப அதிக.........''
''இண்டர்நெட்டே வேணாம் நமக்கு
இன்றேவெட்டு வேணும் அதுக்கு
அது இருந்தா நாங்க எதுக்கு
எதுவேணும் இப்போ உமக்கு''
"...............?!?!?!?!................"
இதுஎப்படி இருக்கு நண்பா உனக்கு ?
இதுக்குத்தான் இந்தப்பாட்டு எனக்கு !
எதுசொன்னாலும் ஏறமாட்டேங்குதே
ஏறின கோவமும் இறங்கமாட்டேங்குதே
என்ன செஞ்சி சமாளிக்கலாம் ?
எது சொல்லி சமாதானப்படுத்தலாம் ?
பரிசா நகை எடுத்துப் கொடுக்கலாமா ?
பெரிசாக கதை எடுத்து விடலாமா ?
??????????????????????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????!
@#$%^&*()^%$ஃஃ***&(()))*&%!!#@$@@@#@!^
"படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கேன் இங்கே
படிச்சுப் போட்டு சிரிக்கிறீங்க அங்கே
கடவுள மாதிரித்தானே நீங்க
காப்பாத்த இங்க உடனே வாங்க
எங்கே இருந்து வாரீங்கன்னு
இங்கே வந்து சொல்லீராதீங்க
உங்களையும்தான் சேத்துத் தேடுறாங்க
தன்னால வாயக்கொடுத்து மாட்டீறாதீங்க"
Sunday, June 14, 2009
குழந்தைத் தொழில் - போராடினால் மட்டும்..!?!?
ஆறு மணிக்கே எந்திருச்சி குளிச்சி
அறக்கப்பறக்கக் கெளம்புறான் நம்ம குமாரு
"எட்டரை மைலு சைக்கிளு மிதிக்கணும்
எட்டு மணிக்கு கேட்டுக்குள்ளப் போகணும்
வாசலக் கூட்டித் தெளிக்கணும்
வத்தி கொளுத்தி வைக்கணும்
கக்க்கூச நல்லாக் கழுவணும்
கறை போகத் தேய்க்கணும்
அய்யா ரூம்பக் கூட்டணும்
ஆபீசு ரூம்பப் பெருக்கணும்
தேறுறப் பேப்பரை வகுக்கணும்
தேவையில்லாதத கழிக்கணும்
காரைக் கழுவித் தொடைக்கணும்
ஏரை நல்லாப் புடிக்கணும்
காப்பி வாங்கிக் கொடுக்கணும்
க்ளாசும் அலசி வைக்கணும்
பைல அடுக்கி வைக்கணும் -- அந்த
பயலயும் வேலை வாங்கணும்
தூசி தட்டி அடுக்கணும் -- பேப்பரு
ஓசி வாங்கிக் கொடுக்கணும்
இன்னிக்கு ஒருநாள் ஓட்டி(OT) பாக்கணும்
நாளைக்கு அரைநாள் ஓடி(OD) கேக்கணும்
பள்ளிக்கூடம் தொறந்தாச்சு
பாடப்பொஸ்தகம் வாங்குறதுக்கு
எட்டாங்கிளாசில அக்காவ
எட்டுமணிக்கே கொண்டு விடணும்
அப்புறமா
ஓட்ட டவுசர தைக்கணும்
ஓட்டப் பல்ல மறைக்கணும்
அந்துபோன செருப்பத் தைக்கணும்
ஆத்துலயும் முடிஞ்சாக் குளிக்கணும் "
"குழந்தைத் தொழில் ஒழிப்போம்"
கேட்டுக்கு வந்திட்டாரு நம்ம குமாரு
கவனமாக் கேக்காரு நம்ம குமாரு
கூட்டமாக் கத்திக்கிட்டிருக்கிற நம்மள
கேவலமா பாக்காரு நம்ம குமாரு
"குழந்தைத் தொழில் ஒழிப்போம்"
நல்லவழி காட்டப் போராடுர
நம்ம சொல்லெதுவும் கேக்காம
நம்மளத் தாண்டிக் கேட்டுக்குள்ள
நிக்காமப் போய்ட்டாரு நம்ம குமாரு
"குழந்தைத் தொழில் ஒழிப்போம்"
எதுவோ சரியில்லயே !
என்னான்னு புரியலியே !!
கோசத்தில தப்பிருக்கா இங்க ?
குழம்பிப்போய் நின்னோம் நாங்க .
அப்பத்தானே தெரிஞ்சது
அந்த உண்மையது புரிஞ்சது !
நம்ம நாயகரு குமாரு
நிக்காமப் போனது நமக்கு
உண்ம நிலையத உரைச்சது - அந்த
உண்ம நிலவரம் உறைச்சது
குழந்தைத் தொழில் ஒழித்துவிட்டால்
குடிக்கும் கூழுக்கவன் என்ன செய்வான் ?!
அடுத்தவேளை சோற்றுக்கு
அவன் வீட்டில் அடுப்பெரிய
ஆவன செய்தால் தானே
அவன் தொழிலை நிறுத்துவான்
அந்தவேளை உடனே வரவேண்டும்
அரசாணையும் நிறைவேறவேண்டும் !
அவன் வாழ்வும் வளம்பெறவேண்டும் !!
அதற்கு யார் மனசு வைக்கவேண்டும் ?
அரசியல்வாதியா -- இல்லை
அந்த ஆண்டவனா !?!?!
ஜுன் 13
குழந்தைத் தொழில் ஒழிப்பு தினம் !
ஜுன் 13
அடுத்த ஆண்டும் உண்டு !?
Wednesday, June 10, 2009
சொன்னா நான் இருப்பேனா....!
அன்பே உருவான தலாய்லாமா
தன்னைக் காக்க தலைமறைவாய் இருக்கிறார்
அன்பைப் போதிக்கும் போப்பாண்டவர்
குண்டுதுளைக்காத வாகனத்தில் வருகிறார்
விடுதலைப் போராட்டத் தியாகி
விதியைநொந்து வீதியில் நடக்கிறார்
பொதுநலச் சேவை செய்பவர்
படிக்கட்டுப் பயணம் செய்கிறார்
கந்து வட்டி வசூலிப்பவர்
கல்வித் தந்தையாக இருக்கிறார்
கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்
கடவுள் போலவே காட்சி தருகிறார்
நல்லவன் நாணயமானவன் நாயாய்
நடுத்தெருவில் அலைகிறான்
தடி எடுத்தவன் எல்லாம்
தலைவனாகிக் கொண்டிருக்கிறான்
தட்டிக்கேட்கவேண்டிய இந்நாட்டு மன்னர்கள்
தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கிறார்கள்
"கடமை கண்ணியமுன்னு பாக்கிறவன்
கஞ்சிக்கே வழியில்லாம வாரான்
களவானிப்பயலுவ காலிப்பயலுவ
காப்பிக்குடிக்க கனடாவுக்கே போறான்
இதச் சொன்னதுக்கே உயிரு போயிரும்போல
இதுக்கும்மேல இன்னும் என்னாத்தச் சொல்ல
ஆத்தாடி அம்புட்டுதேன்
இப்போதைக்கு அம்புட்டுதேன் !"
Monday, June 8, 2009
அறுபதானாலும் ஆண்டவன் கூடவே இருப்பார்..!
பெற்றபிள்ளைகளின் ஆசையையும்
பேரப்பிள்ளைகளின் இம்சையையும்
சுற்றங்களின் யோசனையையும்
தவிர்க்க முடியவில்லை
அறுபதாம் கல்யாணம் முடிந்து
அன்று இரவு முதலிரவுபோல்
அமர்க்களமான ஏற்பாடு
எதிர்க்க முடியவில்லை
அந்தவயதிலும் வெட்கப்படும்
அவள்முகம் பார்க்க ஆசையாய்
அறைக் கதவினைத் திறந்தவன்
அப்படியே அதிர்ந்து நிற்கிறேன்
எதிரே நிலைமை சரில்லை
கலைந்து கிடக்கிறது எனது
கடந்தகால நாட்குறிப்பேடுகள்
தலை கவிழ்ந்திருக்கும் அதுபோலவே
நிலைகுலைந்து இருக்கிறேன்
எதிர்பார்க்கவே இல்லை
அவள் கைகளில் விரிந்தநிலையில்
அந்த கருப்புவெள்ளைப் புகைப்படம்
நான்காக மடிக்கப்பட்டிருந்த படம்
நன்றாக சிறகுகள் விரித்து எழுந்து
என்மனப் பறவையோடு சேர்ந்து
பின்னோக்கிப் பறக்கிறது
பல்லாண்டுகள் கடக்கிறது
பன்னிரண்டு வயதினில்
பள்ளி செல்லுகையில்
பாதையினில் கண்டெடுத்தேன்
கோதையவளின் புகைப்படம்
கலையான முகம்பார்த்து
களையானது என்மனது
மலைத்து நின்ற எனக்குள்
கலைந்துவிட்ட மனதுக்குள்
கலைத்துவிட்டவள் எளிதாய்
நுழைந்து இடம் பிடித்துவிட்டாள்
சிலையாய் தடம் பதித்துவிட்டாள்
நிலையாய் இன்றுவரை இருந்துவிட்டாள்
அன்னாளில் மனதில்அவள் நுழைந்ததநாளே
பின்னாளில் எனது மணநாளாகிப்போனது
மணநாளெல்லாம் என்மனது உடைந்து
ரணகளமாகிப் போயிருக்கும்
நிழலைக் காதலித்து வருவதும்
நிஜத்திடம் மறைத்து வாழ்வதும்
மடத்தனமென அறிவுக்குத் தெரிந்தாலும்
மறந்துவிட மனதுக்கு முடியவில்லை
தன்னிரு கைக்குள் புதைந்திருந்த
புகைப்படத்துக்குள் மூழ்கியிருந்தவள் முன்
தண்டனையை ஏற்கத் தயாராக
மண்டியிட்டு தலைகுனிந்து நான்
"எனது குழந்தைப்பருவப் படம்
எப்படி கிடைத்தது உங்களுக்கு ?!"
ஒரேயொரு கேள்வி வந்துது அவளிடமிருந்து
ஓராயிரம் விடைகள் கிடைத்தது அதிலிருந்து
ஒருநொடியில் வெடித்துவந்தேன் தெளிவாய்
மறுபடியும் பிறந்துவிட்டேன் புதியதாய்
நிழல் இங்கே நிஜமாகிப்போனது !
நிழலும் நிஜமும் ஒன்றாகிப்போனது !
உண்மைக்காதலுக்கு என்றென்றும்
ஆண்டவன் அவனின் துணை இருக்கும் !!
அந்தம் முன் அதுதான் செயிக்கும் !!!
முதன்முதலாய் வெட்கத்தோடு நான் !
முதலிரவும் இன்றுதான் எங்களுக்கு !!
நன்றி:கரு/sms நண்பர்கள்
Sunday, June 7, 2009
நெனப்புதான் இப்போ பொழப்ப...!
ஊரே காத்திருக்கிறது அவளின்
ஓரவிழிப் பார்வைக்கு - அவளோ
ஆற்றங்கரைக்கு வரச்சொல்லி
ஆள் அனுப்பியிருக்கிறாள் எனக்கு
விடுமுறையை கழிக்கவந்த இடத்தில்
விருந்துண்டு களிக்க வாய்ப்பா !
கரும்பைக் கையில் கொடுத்து
கருத்தும் கேட்டு வைப்பார்களா !!
தரைத் தொட்டநாளில் அவளால்
தரை தட்டிப்போனதென் உதயம்
தரை தட்டிப்போன நாள்முதலாய்
கரை தாண்டத்துடிக்குதென் இதயம்
இரவில் கனவில்வந்த அவளால்
பகலில் உணர்வில் உயிரில்லை
பகலிரவு பேதம் தெரியவில்லை - இது
யாகமா யோகமா புரியவில்லை
வரச்சொல்லி இருக்கிறாளே !
வரமெதுவும் தருவாளா ?
விரும்புவதாய்ச் சொல்வாளா ??
வேண்டுகோளாய் விடுப்பாளா ???
காதலைக் கொடுப்பாளா -அல்லது
கண்டுகொள்ளாமல் இருப்பாளா ????
"ஆற்றின் வாசம் உணர்ந்தது மனசு
அதிரத் தொடங்கியதென் உசுரு
தடுமாறத் தொடங்கியதென் கையும்காலும்
தடம்மாறாமல் போய்ச்சேரணுமே நானும்"
இதோ வந்துசேர்ந்துவிட்டேன் இக்கரையில்
அதோ அவள்மட்டும் தனியே அக்கரையில்
ஆழமான நீரில் முழுவதுமாய்
மூழ்கிக் கொண்டிருக்கிறாள் அவள் !
தாமதமான என்வரவால்
தவறான முடிவுக்கு போகிறாளா ?
அதுவரை இருந்தநிலை மறந்து
அரைகுறை நீச்சலில் விரைந்து
அக்கரை நோக்கிப் பறக்கிறேன் !
அவளைக் காக்கத் துடிக்கிறேன் !!
அரைநொடி இடைவெளியில்
மறைந்துவிட்டாள் கண்ணிலிருந்து
உதிரம் முழுதும் ஒருநொடியில்
உலர்ந்துவிட்டது உடலிலிருந்து
இனிநான் இருந்தென்ன செய்ய
இதற்குத்தானா இத்தனை நா............
.....................................
அடடா !
அப்போதுதான் அதைக் கவனிக்கிறேன்
அக்கரையில் தலை துவட்டியபடி
அவள் தெளிவாய்த்தான் இருக்கிறாள் !!
அடச்சே !!
தண்ணீருக்கு நடுவில் நான்
தவிட்டுக் கோழிபோல நிற்கிறேன் !
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேனே !!
Saturday, June 6, 2009
சுபயோக சுபதினத்தில்....!
அரங்கம் முழுதும் நிரம்பிப்போய் இருக்கிறது
அனைவர் முகமும் குழம்பிப்போய் இருக்கிறது
பதட்டமாய் இருக்கிறார்கள் இருவீட்டாரும்
பலதிட்டம் தீட்டியிருக்கிறார்கள் இதுவரையும்
வழிமேல் விழிவைத்து
வாசல்நோக்கிப் பாத்திருக்கிறார்கள்
நல்லசேதி வருமென்று
நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்
நல்லநேரம் இதோ முடியப்போகிறது
நாற்பது நொடிதான் மிச்சமுமிருக்கிறது
மங்களகரமான 1184ம் ஆண்டு
சர்வதாரி வருடம்
சித்திரைமாதம் 19ம் தேதி
(ஏப்ரல்மாதம் 1ம் தேதி)
ஞாயிற்றுக்கிழமை அன்று
அமிர்தயோகமும்
ரேவதி நட்ச்சத்திரமும் கூடிய
சுபயோக சுபதினத்தில்
காலை 11.00 -- 12.00 மணிக்குள்
மேச லக்கனத்தில்
இருவீட்டார் சம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது இது
சிலநாள் தள்ளிவைக்க வாய்ப்புகள் இருந்தும்
நல்லஅரங்கம் கிடைக்காத காரணத்தால்
அமைந்த அரங்கில் நடத்திக்கொள்ள
அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது இது
வருபவர்களுக்கு வசதியாக
விடுமுறைநாளில் நிச்சயிக்கப்பட்டது இது
மாலை விருந்துக்கும் மதிய உணவுக்கும்
மலை அளவுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது
நல்லநேரம் தாண்டிவிடுமோ? தொடரும்
நிகழ்ச்சிகள் யாவும் தடைபட்டுவிடுமோ??
வாசல் திறந்து வருகிறார் மருத்துவர்
"ஆண்குழந்தை" என்கிறார்
நல்ல நேரம் தாண்டும் முன்
நல்லசேதி சொல்லிவிட்டார்
எங்கள் வீட்டு வசந்தத்தை
எங்களுக்கு வசதியான நாளில்
எங்கள் வீட்டுக்கு வரவழைத்துவிட்டோம் !
"எங்கே இனிப்பு ?!,இங்கே வாருங்கள் !!"
Friday, June 5, 2009
இதுவும் வரதட்சணை கொடுமை....?!
நின்றே போய்விட்டது எனது
நிச்சயதார்த்தமும் திருமணமும்
சாதகம் பாதகம் பார்த்து
சாதகப் பொருத்தமும் பார்த்து
'சரூராக' நடந்த நிச்சயதார்த்தம்
சட்டென நின்று போனது
வரதட்சணையென பெண்வீட்டாரிடம்
வைத்தஒரு கோரிக்கையால்
நட்டநடுக் கூடத்தில் நானே
காட்சிப்பொருளாக ஆகிப்போனேன்
புயலின் சுழல்மையத்தில் நான்
பரிதவித்துப்போய் இருக்கிறேன்
சுற்றிலும் சுழற்றி அடித்துகொண்டிருக்கிறது
வார்த்தைகள் சுடும் சூறாவளியாய்
"மாப்பு நல்லாத்தானே இருக்காரு ?
"மப்பா'' என்னன்னவோ சொல்லுதாரு !"
"நிச்சயத்துக்கு முன்னாடி பையனப்பத்தி
அக்கம்பக்கம் ஏதாவது விசாரீச்சீயளா?????"
"சம்பந்தம் இதெல்லாம் இனிமே
சரிப்பட்டு வராப்ல தெரியலியே !"
"தொடுப்பு எதையும் வச்சிருப்பான்யா !
குடியும் கூத்தையும் மறைச்சிருப்பான்யா !!"
"எதையோ ஒளிக்கிறாங்கடே !
தெசையத் திருப்புராங்கடே !!"
"கண்ணுல குறை இருக்குமோ ?
நெஞ்சில தடை இருக்குமோ ??"
"வீட்டுக்குள்ள ஏதோ வழுக்கல் இருக்கும்போல !
குடும்பத்துல ஏதோ சிக்கல் இருக்கும்போல !!"
சாட்டையாய் நாவினால் விளாசுகிறார்கள்
சாடையாய் அள்ளி வீசுகிறார்கள்
"@#$%^&*()
அட ஆண்டவனே !
அப்படி என்னதான் நான்
அதிகப்படியாய்க் கேட்டுவிட்டேன் !!
வரதட்சணை வேண்டாம் என்றதற்கேன்
வானம்வரைக் குதிக்கிறார்கள் ?!!!"
என்நிலை எனக்கு
இன்னும் புரியவில்லை...........?!?!?!
நண்பா உனக்கு ?
Wednesday, June 3, 2009
ரெண்டு தடவ கரண்டு போகணும் சாமி...
கரண்டு எப்போ போவும்..........?
--------------------------------
என் வீட்டுக் கூடத்துல
என்னென்னெவோ நடக்குது
நட்ட நடுவீடு இப்போ
நாசமாகிப்போய்க் கெடக்குது
"விடிஞ்சும் விடியாதப்பவே ஒருத்தன்
விபூதித் தட்டோட வாறான்!
கடவுளே இல்லேன்னு அடுத்தவன்
கத்திக்கிட்டே போறான்!!
மாமியாரும் மருமகளும்
மோதிக்கிட்டே இருக்காங்க !
மருமகனும் மச்சினரும்
மொறச்சிக்கிட்டேத் திறியறாங்க !!
வரதட்சணயக் கேட்டு
வந்தவள உருட்டுறாங்க !
வந்த எடத்துல பெரியவங்கள
வாய்க்குவந்தபடி மெரட்டுறாங்க !!
பெருசுகள சத்தமில்லாம வெளியேத்த
பெருசா பாதபோட்டுத் தாராங்க !
சொத்த மொத்தமா சேத்துப்புடுங்க
திட்டம் போட்டுப் போறாங்க !!
அரகொறயா சுத்துறானுங்க !
அவுத்துப்போட்டு அளைறாளுங்க !!
நாலுபேரா சேந்து புகைப்பிடிக்காங்க !!!
நடுவீட்டுல வந்து தண்ணியடிக்காங்க !!!!
களவாணிபயலுவ ஒண்ணா சேந்து
கொள்ளை அடிக்க வாறான் !
கொலைகாரன் பயமே இல்லாம
கொன்னு போட்டுட்டு போறான் !!
வாய மூடியேப் பேசச் சொல்லுதான் !
வார்த்தய சாச்சி எழுதச் சொல்லுதான் !!
செங்கலவச்சு சாதகமும் சொல்லுதான் !!!
செவப்புக்கல்லு பாதகமுன்னு சொல்லுதான்!!!!"
கண்டவங்களயும் பாத்துக்கிட்டே
கஞ்சி தண்ணிக்கூட தரமாட்டாங்க
டீவிப்பொட்டி அதுவா அணஞ்சாத்தான்
பாவி என்னயக்கொஞ்சமாவது கவனிப்பாங்க
திண்ணயில இருக்கிற எனக்கு
தெனமும் இதே ரோதணைதான்
கரண்டு எப்போ போகுமுன்னு
கடவுள வேண்டிக்கிட்டே இருப்பேன்
அந்த நூத்திசொச்ச நிமிசம்
அதுதான் எனக்கிங்கே சொருக்கம் !
" 'ஏஞ்சாமி' உங்கிட்டதான்
எனக்காக அந்த வரம் கேக்கேன் !
சொருக்கம் ரெண்டுமொற வந்துபோக
சுறுக்கா ஒருவழி செய்ய மாட்டீயா ?"
Monday, June 1, 2009
கொஞ்சம் திரும்பிப்பார் 26/11
அந்நிய மண்ணில் திட்டமிட்டு
இந்தியாவை திடுக்கிட வைத்து
தீவிரவாதிகள் நடத்தி முடித்த
அதிதீவிரவாதத் தாக்குதல் அது
உயர் அதிகாரிகளை வரவழைத்து
உயிர்பறித்த தாக்குதல் அது
அப்பாவிப் பொதுமக்கள் மீதான
அடாவடி வெறித்தாக்குதல் அது
இதுவரை இந்தியா சந்தித்ததில்லை
இது போன்றதொரு தாக்குதலை
உலகமும் இதுவரை பார்த்திருக்கமுடியாது
இனி நடக்கப் போகும் வேடிக்கையை
கதாநாயகன்
கசாப்பை கூண்டிலடைத்து
வெற்றிகரமாய் தாண்டிவிட்டது
200 நாட்கள் மொத்தமாய்
200 உயிர்களை மொத்தமாய் இழந்தோம்
2000 வாழ்க்கை முழுமையாய் கேள்வியானது
100 கோடி மனம் தவித்துப்போய் நின்றது
கண்ணால் பார்த்த சாட்சிகள் உண்டு
காணொளித் தடயங்கள் உண்டு
களத்திலிருந்து உயிர்கொடுத்து
கைதுசெய்த காவலர்கள் உண்டு
உடனடி நீதிதான் 'அவர்களுக்கு'
உறுதியான செய்தி கொண்டு சேர்க்கும்
தாமதமாகும் தீர்ப்புகள் எல்லாம்
மறுக்கப்பட நீதிக்கு சமமாகிவிடும்
ஆனால் இங்கே நிகழ்வதென்ன ?
அங்கிருந்து 30 கேள்வி கேட்க்கிறார்கள் !
இங்கிருந்து 28 பதில் சொல்கிறார்கள் !!
தாக்கியவன் கேள்விகளை
தெனாவெட்டாய்க் கேட்க்கிறான்
அடிபட்டவன் பதில்களை
அடக்கமாய் சொல்லிகொண்டிருக்கிறான்
அதோ நீதிக்காக அவர்களும்
இதோ நீதிகாக்க இவர்களும்
இந்திய சட்டப் பிரிவுகளோடு
இங்கே தயாராக இருக்கிறார்கள்
நீதி மன்றக்காட்சிகள் இனி
தேதி தவறாமல் நடந்தேரும்
திட்டம் போட்டுத் தடுத்தாலும்
தலைமுறை பல கடந்தாலும்
சட்டம் கடமையை செய்தேதீரும்
ஆரம்பமாகிவிட்டது !
வக்கீல் அவனுக்காக
வாதாட வந்திருக்கிறார்
காப்பாற்றுவேன் கசாப்பை என்கிறார்
காப்பேன் தொழில்தர்மம் என்கிறார்
அவனைப் பச்சைக் குழந்தை என்கிறார்
பால்குடி மறக்கவில்லை என்கிறார்
வயதுக்கு வரவில்லை என்கிறார்
இந்தியாவின் நீதிமுறை பற்றியும்
இங்கேயுள்ள நடைமுறை பற்றியும்
அத்தனையும் முழுமையாக
அவனுக்குத் தெரிந்திருக்கிறது
இப்போதுதான் அவனும் ஆரம்பித்திருக்கிறான்
நான் சின்னப்பையன் என்கிறான்
சிறுவர் நீதிமன்றம் வேண்டும் என்கிறான்
குற்றப் பத்திரிக்கை முழுவதும்
பெற்றவள் மொழியில் வேண்டும் என்கிறான்
இனிமேல்தான் இன்னும் தொடருவான்
உள்ளே இருந்தே சட்டம் படிப்பான்
உடல் நலம் காட்டி மருத்துவமனை சேர்வான்
குளிர்சாதன வசதி கேட்ப்பான்
குளிக்க பன்னீர் கேட்ப்பான்
நீதிபதியை மாற்றச் சொல்வான்
அதிபரிடம் பேச அனுமதி கேட்ப்பான்
கருணைமனு கோரிக்கை வைப்பான்
காலம் கடந்துவிட்டதென நீதியும் கேட்ப்பான்
விலக்குகள் கேட்டுக்கொண்டே இருப்பான்
விளக்கங்கள் தந்துகொண்டே இருப்பார்கள்
வழககும் நடந்துகொண்டேதான் இருக்கும்
அதற்குள்
அடுத்த உலகக்கோப்பை தொடங்கி இருக்கும்
அடுத்த தேர்தல்வசூல் ஆரம்பமாகி இருக்கும்
அடுத்தடுத்து நாமும் பரபரப்பாகி இருப்போம்
வாழ்க சனநாயகம் !
வாழ்க் வாழ்க சனஞாபகம் !!
வாழ்க வாழ்க வாழ்க சனநாயகம் !
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சனஞாபகம் !!
நண்பனா?, காதலனா??,,,,,
அம்மன்கோவில் அழகுச் சிலைபோல
அங்கேதான் அவள் நிற்கிறாள்
அதேகோவில் பலியாடு போல
அவள்முன் நான் நிற்கிறேன்
இருவருடத்தின் நட்பை அவளிடம்
ஒருநிமிடத்தில் காதலாய்ச் சொல்லி
பின்விளைவுகள் தெரியாமல்
தன்னிலை குலைந்து நிற்கிறேன்
சிறுத்த தையின் கண்களில்
சிறுத்தையின் சினம் காண்கிறேன்
வெண்புறா முகம் அதனில்
வண்புலியின் வேகம் பார்க்கிறேன்
வடிவு அவள் சொல்லப்போகும்
முடிவு மெள்ளக் காத்திருக்கிறேன்
கோதையவள் வாய் திறந்தவுடன்
கோடையிடி இறங்கப்போகிறது என்மேல்
"திறந்த என்மனம் புரிந்தறியும்
திறம் இல்லையா உனக்கு !
இதை என்னிடம் வந்துசொல்ல
இத்தனை நாளானதா மக்கு ?"
மெதுவாய்ச் சொல்லிவிட்டு
மெல்லத் திரும்பி நடக்கிறாள்
பயத்தில் காதடைதிருந்த எனக்கவளின்
வாயசைந்தது மட்டும்தான் தெரிந்தது
அய்யோ.............!
என்னவோ சொன்னாளே அவள் ?
ஏன்மிக மெதுவாக நடக்கிறாள் ??
ஏன்திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள் !
எதுவோ என்னிடம் எதிர்பார்க்கிறாள் ?!
தெரிந்த சேதி ஏதுமுண்டா உங்களிடம் ??
அறிவிக்க இயலுமா உடன் என்னிடம் ???
Subscribe to:
Posts (Atom)