
ஈழம் : 1) கைவசமிருந்த கண்ணாடி பொம்மையை உடைத்துவிட்டு , அசையாதிருந்த மண்குதிரையை சாய்த்துவிட்டு,
வென்றுவிட்டதாய் பெரும்புரளியைக் கிளப்பிவிட்டு,
வெற்றுப்பரணியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்
’வெட்டி’வீணருக்கு முதல் ஐந்தும் சமர்ப்பணம் :
ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை
ஈழம் உணர்த்தும் உமக்கு [01]
யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ’ஈழம்’.
பதரென்(று) அழித்தாய்; பதறாமல் அங்கே
புதருள் இருக்கும் புலி [02]
எதிர்ப்பே இல்லாமல் ,எல்லாம் வெறும் பதராக இருப்பதாய் மகி(ழ்)ந்தே , நல்ல வேட்டை என காட்டை அழித்துச் செல்கிறாய் ..உனக்குத் தெரியுமா? பதறாமல் அருகிலேயே புதருக்குள் உனக்காகக் காத்திருக்கலாம் ஒரு புலி
அகம்தவிர் உன்னுள்; எதிர்க்கும் நிகர்எதிரி
உண்டாம் எதற்கும் அறி [03]
தான் என்ற அகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாய் நீ .உனக்காக அன்றே நியூட்டன் சொன்ன சேதி ஒன்று இங்கு
’ எந்த ஒருவிசைக்கும் சமமான எதிர்விசை உலகில் உண்டு ‘
புதைத்ததாய் தற்பெருமை கொள்வோரே ; எல்லாம்
விதையென்(று) அறிவீரா நீர் [04]
சுத்தமாய் அழித்து , மொத்தமாய் மழித்துப் புதைத்ததாய் எண்ணி தற்பெருமைக் கொள்வோரே! உண்மை ஒன்றை அறிந்து கொள்ளவீரா? வென்றதாய் எண்ணி, வெறியில் புதைத்தது அத்தனையும் ’வீரிய’விதைகள் என்பதை.
ஈசலுக்கும் கூட இணையில்லார்; காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு [05]
போர்தர்மம் குலைத்து , குற்றங்கள் இழைத்து , பிறர் உதவியால் பிழைக்கும் உமது ’வ(வெ)ல்லரசு மாயத்தோற்றம்’ வெகுவிரைவில் கலையும்/குறையும்/கரையும்/.
2) கூட்டுச்சதியாலும் ,கோடாரிக் காம்புகளாலும்
கூட்டம் கூட்டமாய் ’கூட்டை’ இழந்து தவிக்கும் குலக்கொழுந்தினருக்கு…தொடர்வது அனைத்தும் சமர்ப்பணம் :
வலியினைத் தாங்கும் வழியை அறிவாய்;
வலியதாய் ஆகும் மனது [06]
தீயுள் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயில்
பழுத்துவிடும் தங்கம்போல் நாம் [07]
எளிதன்(று) எனமலைத்து நிற்கிறாய்; எல்லாம்
எளிதென்று வெல்வாய் உணர்ந்து [08]
ஆற்றல் அனைத்துமுண்டே ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை நமக்கு [09]
திலகம் அணிந்திடும் நாள்உண்டு; நம்பின்
உலகும் அணிதிரளும் அன்று [10]
மேலுள்ள எதற்கும்
விளக்கம் என்றெதுவும்
தேவையில்லை உனக்கு .
காலம்மும் கனியும் நமக்கு..
கலக்கம் தராதிரு மனதுக்கு....
உனைக்கண்டு மீண்டும் ‘அவர்கள்’
கலங்கும்நாள் ’வெகுவிரைவில் இருக்கு’ .......