Tuesday, April 13, 2010

முள்ளாய் .. ! வேலியாய்..!!




அதிகாலையில் எழுந்த உடன்
ஆதரவாய்த் தட்டி எழுப்பி
என்னுடன் குளிக்கக் கிளம்புகிறார்
என் அக்காவின் கணவர்

அடுக்களையில் இருக்கும்
அக்காவுக்குத் தெரியாமல்
எனக்குத் தலைவாரி சிரிக்கிறார்
என் அக்காவின் கணவர்

அக்காவுக்குக் கையசைத்தும்
கதவுக்குப் பின்னால் வந்து
எனக்கும் முத்தம் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்

மாலையில் திரும்பி வரும்போது
ஆசையாய் அக்காவுக்குப் பூவும்
எனக்கு அல்வாவும் வாங்கிவருகிறார்
என் அக்காவின் கணவர்

இருநூறு ரூபாயில் அக்காவுக்கும்
அறுநூறு ரூபாயில் எனக்கும்
புத்தாடை வாங்கிக் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்

பள்ளிக்கூடத்திற்கு சாயங்காலம்
பெற்றோர் சந்திப்பிற்கு வருவார்
எனது அப்பாவாய் வருவார்
என் அக்காவின் கணவர்



.

Monday, April 12, 2010

மணி என்ன ஆச்சு ???


பதட்டம்....
பதட்டம் ......

இரவு செல்லப்போகும்
இடம் நினைத்துத் தொற்றுகிறது
இப்போதே பதட்டம் எனக்குள்..

குறுகுறுக்கும் உள்ளத்தோடு
அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு
அவன் அழைத்தவுடன் ஒத்துக்கொண்டேன்
என்றாலும் பயமாகத்தான் இருக்கிறது ..

இதோ வழக்கம்போல்
இன்றைய நாளும் ஆரம்பம் ..
அவசரமாய்க் கிளம்பி
ஆறடி நடப்பதற்குள்
வழக்கம்போலவே
ஆளாளுக்கு கேட்டு
மிருகமாக்குகிறார்கள் என்னை

’’மணி என்ன ஆச்சு/’’

நடைபாதையை ஆக்கிரமிக்கும்
பிச்சைக்காரன்.................
பூங்காவில் பகல்முழுதும் படுத்து
பொழுதுபோக்குபவன்.................
முக்குக்கடை வாசலிலேயே
முழு நாளும் கழிப்பவன்.................

இப்போது மணி என்ன
ஆனால்தான் என்ன ?
தெரிந்தவுடன் இவர்களுக்கு
ஆவப்போவதும் என்ன ?

பதில் சொல்லியே எனக்கும்
பாதிநாள்ப் பாழாகிவிடும்


எதிர்பார்த்த இரவு...........

கண்சிமிட்டிச் சிரித்து
உள்ளே தள்ளிவிட்டு அவன்
வேறிடம் துணையுடன் செல்ல

உள்ளே கட்டிலில்
கைகளைப் பிசைந்தபடி
பதட்டமாய் அவளும்........

ஒருவேளை என்னைப்போலவே
இவளும் புதியவளோ ?

மெதுவாய் முன்னேறி
விளிம்பில் அமர்கிறேன்

மெல்ல நிமிர்ந்தவள்
எனது கண்களுக்குள்
எதையோ தேடியபடி
மெதுவாகக் கேட்கிறாள்

''மணி என்ன ஆச்சு ?''

எங்கோ.....
இவள்வரவுக்குக் காத்திருக்கும்
முகம் தெரியாத சீவன்களின்
தெளிவில்லாத முகங்கள் என்னுள்
தோன்றி மறைகிறது

முதன்முதலாய் அந்தக் கேள்வி
மனிதனாக்கியது என்னை .........

Friday, April 9, 2010

. . . . . .ஏன் . . . . . . . .?


அவனது நிறைகள் ஈர்க்க
என்மனம் அதனுள் லயிக்க
விரும்பி அவனை நோக்கி
நகர ஆரம்பித்த வேளையில்
நெருங்கி வந்திருந்தான் இவன்

இவனது அருகாமையில்
அவனது குறைகளும்
இவனது நிறைகளும்
பெரியதாய் உருவெடுக்க
இவன் இருக்கும் திசைக்கு
மாறியிருந்தேன் நான்

அருகே அமர்ந்து
அவனது குறைகளை
இவனிடம் எடுத்து
உரைக்கும் நேரத்தில்
உடைகிறது கவனம் எனக்கு

’அட....தொலைவில்
வடிவாய் யார்அது ?’


சிதறிய எண்ணம் உதறி
ஒரு நொடியில் மீண்டு
இவனிடத்தில் மீண்டும்
நெருங்கிய நான்
மறு நொடியில்
உறைந்துபோகிறேன்

மெதுவாக ......
அவனது சாயலுக்கு
மாறிக் கொண்டிருக்கிறான்
இவனும்..............!


.

Thursday, April 8, 2010

யாருக்கும் வெட்கமில்லை..!




எனக்கும் அந்த
இடைக்கும் நடுவில்
இடைவெளி என்றாலும்
இடையில் எந்தவித
இடையூறும் இல்லாததால்

தலையை சாய்த்தபடி
அரைக்கண் மூடியபடி
அமைதியாய் ரசித்தபடி
ஆனந்தமாய் நான்

அமைதியாய்ப் பக்கம் வந்து
அரைநொடி சுழற்றி அடித்து
நிலையைச் சாதகமாக்கி விட்டு
நில்லாமல் நகர்ந்தது காற்று

அதிரடியாய் அத்தனையும் விலகி
அங்கங்கே அங்கம் தெரிய

மணிவண்ண தேகத்தில்
பிறைநாபி பளீரென வெளிப்பட

மிஞ்சிய பாகத்தில்
மிச்சமுள்ள மச்சங்கள் மின்னிட

திருடனாய் நான் மட்டும்
திருவிழாவைத் தனியே ரசிக்க

அங்கங்கே அவசரமாய் ஓடி
அகப்படும் அங்கம் மறைத்து

நடப்பது தெரியாமல் இருக்கும்
வானத்தின் மானம் காக்க

துடித்துக் கொண்டிருக்கிறது
தன்னந்தனியாய் அந்த

மேகம்......


.

Tuesday, April 6, 2010

........3........(மூவர்) ..!


யார் ? :

கிண்ணத்தில் கொடுத்த
பால் முழுவதையும்
மொத்தமாய் எதுவும்
மிச்சம் வைக்காமல்
குடித்தக் குழந்தையை
வாரி அணைக்க..
பொங்கும் மகிழ்ச்சியில்
பாசமாய் அன்போடு
அழைக்கிறாள் அம்மா.....

கிண்ணத்தில் கொடுத்த
பால் முழுவதையும்
மொத்தமாய்க் குடிக்காமல்
மிச்சம் பாதி வைத்ததால்
அடிக்கக் கூப்பிடும்
அம்மாவை எண்ணி..
விஞ்சும் பயத்தில்
நடுங்கியபடி அடியெடுத்து
நுழைகிறாள் குழந்தை.....

இருவரையும் கவனித்தபடி
உள்ளுக்குள் சிரித்தபடி
பரணின்மேல் படுத்திருக்கிறது
பதட்டமில்லாமல் பூனை. :)

.

Sunday, April 4, 2010

........2........!


ஊருக்கு வெளியேத்
தள்ளியிருக்கு வீட்டுக்குள்
தாயும் குழந்தையுமென
உறுப்பினர்கள் இரண்டு

கூடத்தில் தொங்கிய
கடிகாரத்தில் சரியாக
மணி மதியம் இரண்டு

தோட்டத்து மரக்கிளையில்
சன்னல்வழியே வீட்டுக்குள்
குறுகுறுவெனக் கவனித்தபடி
சிட்டுக் குருவிகள் இரண்டு

வீட்டையே இரண்டாக்கி
சோற்றை அள்ளி விசிறி
அறையெங்கும் பரப்பியபின்
குழந்தை விழுங்கிய
உருண்டைகள் இரண்டு

ஊட்டி முடித்தபின்
சிதறியதை எல்லாம்
அலுப்போடு கூட்டியள்ளி
குப்பைப்பைக்குள் திணிக்கும்
அம்மாவையே இமைக்காமல்
சன்னலில் அமர்ந்து
பதறியபடி கவனிக்கும்
உதறும் இதயங்கள் இரண்டு

அங்கோ ...........
பசித்த வயிறோடு
பெற்றோரின் வரவுக்காகக்
காதுகளைக் கூராக்கிக்
கூட்டில் காத்திருக்கும்
குஞ்சுகள் இரண்டு

இங்கே .............
சிதறியதில்
பார்வையிலிருந்து பதுங்கி
துடைப்பத்திலிருந்து ஒதுங்கி
சன்னலுக்கு மிகஅருகே
சத்தமில்லாமல் சேர்ந்திருந்தது
பருக்கைகள் இரண்டு

.

Wednesday, March 31, 2010

எங்கே எனது சுவடுகள்......!



காலத்தோடு போட்டியிட்டக்
கடுமையான பயணத்தின் முடிவில்
களைப்படைந்த வேளையிலும்;
கடமைகளை முடித்துவிட்ட
கர்வத்துடன் தலைநிமிர்ந்தே
கடந்து வந்தபாதையில்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
கண்பதித்துத் தேடுகிறேன்; எனது
கடந்தகால சாதனையின்
காலடித் தடங்களை ...

கதிகலங்கிப் போகிறேன் .......

எங்குமே பதியவில்லை
எனது பாதத்தின் சுவடுகள்கூட ........

எதையும் விடாமல்
என்னுடனேயே
எடுத்து வந்திருக்கிறேன்
எனக்கேத் தெரியாமல்
எனது காலணிக்குள் தேக்கியே ......

.

Monday, March 29, 2010

இருக்குமோ ..??!!!!


அதிர்ந்துபோய் இருக்கிறேன்

அதிகாலையிலிருந்து நடப்பதெல்லாம்
அதிசயமாகவே இருக்கிறது

அவதியில் தொடங்கி
அசதியில் முடியும் நாள் இன்று ...
அற்புதமாய்த் தொடங்கி
அமர்களமாய் நடந்துகொண்டிருக்கிறது

ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேனா நான் ???

சரியான அளவில் எடைகாட்டிய
நியாயவிலைக்கடைத் தராசு

வரும்வரைக் காத்திருந்து
அலுவலக வாசலில் இறக்கிச்
சென்ற நகரப் பேருந்து

முகம்சுளிக்காமல் இருக்கும்
இடம்வரை வந்து
சில்லரை தந்த நடத்துனர்

தவறாய் சாலைகடந்த என்னை
புன்சிரிப்போடு கடந்துபோன
‘ஆட்டோ’ ஓட்டுனர்

வரும்வாகனம் நிறுத்தி என்னைக்
கடந்துபோகச் சொன்ன
போக்குவரத்துக் காவலர்

தாமதமத்தால் பயந்து
ஒதுங்கிய என்னை
தானே அழைத்து
வணக்கம் சொன்ன மேலாளர்

இடைவேளையில்
உணவகத்தில் பணம்கொடுத்த
பக்கமிருந்த கருமி நண்பன்

மாலையில் மேசைமேல்
காத்திருந்தது எதிரேபாராத
பதவி உயர்வு உத்தரவும்,
நெடு நாள் காத்திருந்த
கடனொப்புதல் ஆணையும்,

அதிர்ந்துபோய் இருக்கிறேன்....

என்ன ஆயிற்று எனக்கு ??
எப்படி இதெல்லாம் !!

நெற்றியை அழுத்தியபடி
உறைந்துபோய் இருக்கிறேன் ...

அப்போதுதான் கவனிக்கிறேன் ....
எனது மோதிர விரலில்
சுற்றியபடி இருந்தது
அவளின் உதிர்ந்த தலைமுடி ஒன்று ...

ஒருவேளை...............

இருக்குமோ !!!!!!!????????

Saturday, March 20, 2010

என்னை சோதிக்க எனக்கு உதவுங்கள் .....



அன்பு உள்ளங்களுக்கு,
உங்களின் ஆசியுடன் , கிடைத்த ஊக்கத்துடன் திருக்குறளுக்கு
விளக்கவுரையாக எளிய வெண்பாவில் 1330+ புதிய குறள்கள் அமைத்திருக்கிறேன் .
அதில் உள்ள குறைகளைக் களையவேண்டும் .
அதற்கு தங்களின் உதவி தேவை .

ஏதாவது ஒருகுறளுக்கு விளக்கம் கேளுங்கள் .
நான் தரும் விளக்கக் குறள் பொருந்திவருகிறதா எளிமையாக இருக்கிறதா என சரிபார்த்து , என்னை திருத்துங்கள் .

ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்

முடிந்த அளவுக்கு விளக்கம்தரவும் முயல்வேன்

காத்திருக்கிறேன் உங்களின் கணைகளுக்காக :)

Wednesday, March 17, 2010

சம்பந்தமில்லாத நான்.......


கடும் கோபத்தில்
கட்டுக்கடங்கா தேனீக்கள்
கூட்டமாய் என்னை நோக்கி....

நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........

நிகழ்ந்ததற்குக் காரணம்
நானில்லை....

ஆனாலும்

நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில்
நிகழப் போவதற்கு இலக்காகி
நிற்கப் போகிறேன் நான் .....

அமைதியான தேன்கூட்டை
ஆரவாரமாய்க் கலைத்துவிட்டு
அதிவேகமாய் வந்தென் பின்
பதுங்கிக் கொள்கிறான் ஒருவன்

வெகுண்டெழுந்த தேனீக்கள் முன்
நான் மட்டுமே நிற்கிறேன் .......

ஊட்டும் தேனைக் கொடுக்கும்
என்றாலும் அதற்கு....
கொட்டும் விசக் கொடுக்கும்
உண்டென்றுத் தெரியும் எனக்கு

தப்பிக்க வழியில்லை
அதற்கான காலமுமில்லை

கண்களை மூடியே
நிறைவேறாக் கனவுகளை
மனதுக்குள் ஓடவிட்டே
நடப்பதை ஏற்கத் தயாராகிறேன்

அதேவேளையில்....
நான் கவனிக்காத நிகழ்வாய்

எனது தலைக்கு
மேலுள்ள கிளையில்
வாசனையோடு பூக்கள்
பூக்கத் தொடங்கி இருந்தது .....


.