Sunday, October 24, 2010

என்னிலை அறிக்கை...!


அழுகையில் கரையும் இரவுகளோடும்

ஆளுமையில் இறுக்கும் உறவுகளோடும்..

வரப்போகும் தருணம் ஒன்றிற்காக

வரம் வேண்டித் தவமிருக்கிறேன்....


அன்பென்ற பெயர்சொல்லி

ஆக்கிரமித்து எழுவான் அவன்...

அவனைப் பின்தொடர

அயர்ச்சியோடு கை நீட்டி

ஆதரவு கேட்பேன் நான்....

அலட்சியப் பார்வையால் ஒதுக்கி

அங்கிருந்து விலகுவான் அவன்....

தன்னையவன் உலர்த்த

நினைக்கும் பொழுதெல்லாம்

ஈரமாகிக் கொண்டிருக்கிறேன் நான்....


உரிமை என்ற உத்திரவாதத்துடன்

அவனது சுற்றத்தாரின்

அழுத்தும் தாக்கத்தாலும்

கொழுத்தும் வெப்பத்தாலும்

உருகிக் கொண்டிருக்கிறேன் நான்.....


என்னில்

கை நனைத்து

கால் அலம்பி

முகம் கழுவி

முதுகு தேய்த்து

தாகமும் தணித்து

மிதப்பாய் இருக்கிறார்கள் அவர்கள்....


எதற்கும் தயாராய் இருக்கச்

சொல்லி வையுங்கள் அவர்களிடம்....


அவர்கள் எதிர்பாராத தருணத்தில....

வரக்கூடும் ஒரு

காட்டாற்று வெள்ளம்............!

1 comment:

நிலாமதி said...

கவிதை அழகாய் அருமையாய் வந்திருகிறது பாராட்டுக்கள்.