Monday, January 18, 2010

நவ( நாகரீக) கலியுகம்...!


நுனி நாக்கில்
குழைவாய் பசப்பலாய்
நளினமாய் நாசுக்காய் வலைவீசி
எதிரியையும்
சுண்டிஇழுக்கும்
வண்ணம்; வண்ணம் பூசிய
வசீகரிக்கும் வார்த்தைகள்..

பகலுக்கே கண்கூசும்படி
பகட்டு தெரிக்கும்
நவீனத்தில் மூழ்கிய
நவ நாகரீக ஆடைகள்...

எதிர்க்கண்கள்
கவனிக்காத பொழுதில்
அவசரகதியில் அத்துமீறி
கண்ட இடங்களைத்
தொட்டுத் திரும்பும்
பசிகொண்ட பார்வைகள்....

நூற்றாண்டுகள் கடந்தும்
உள்ளே ஆழ்மனம்
கற்கால மனிதன்போல
ஆடையில்லாமல்
இன்னும் அம்மணமாய்.....


.

Wednesday, January 13, 2010

நான் ..! எனது திருநாளில் ......! / துரை. ந. உ


1) பொங்கல் விருந்து :
======================

வரும்விருந்தைப் போற்றி வரவேற்று பொங்கல்
விருந்தோம்பப் பேராசை உள்ளே எனக்கு;
விதைப்பை சிறுத்துதான் உள்ளே இருக்கு;
விதைப்பை நிறுத்து அதுக்கு

[அமைப்பு : வெண்பா/ இன்னிசை/ ஈரடி மடக்கு(யமகம்)]


வரும்விருந்தைப் போற்றி வரவேற்று வாழ்த்தி
விருந்தோம்ப உள்ளம் இருக்கு – தரவே
விதைப்பை அளவேநெல் மீதம் இருக்கு
விதைப்பை நிறுத்து அதுக்கு

[அமைப்பு : வெண்பா/ நேரிசை/ ஈரடி மடக்கு(யமகம்)
விதைப்பை = விதையிருக்கும் பை
விதைப்பை = விதையிடுதலை ]





2) வீரமுன்னா ...!
------------------

வாழையை வெட்டியே வீழ்த்தி; இளம்குரும்
பாளையைச் சீவியே வீரமென்பார் - காளைக்கு
திட்டிவா சல்கதவின் பக்கம் பதறாமல்
எட்டுநொடி நீநின்று காட்டு.....


[அமைப்பு : வெண்பா/ நேரிசை]

Sunday, January 10, 2010

உருவமும் உள்ளமும்......



ஒருவாய் பழைய சோறு
இல்லையென மறுத்து
அறைந்து பூட்டியது
ஆளுயர வாசல்க் கதவு

பாதிப் பசியாற்ற
யாருக்கும் தெரியாமல்
சூடான சாதத்தின்
வாசத்தை வாசலுக்குக்
கொண்டு வந்து சேர்த்தது
கொஞ்சமே திறந்திருந்த
குட்டிச் சன்னல் ஒன்று

உருவமும் உள்ளமும்
ஒன்றாய் இருப்பதில்லை
எப்போதும்
.

Thursday, January 7, 2010

கவனம் குவி / காரியம் கூடும்


கவனம் குவி / ஒரு நிலைப் படுத்து :

கோவில் திருவிழா...

அலையலையாய் சனத்திரள்
ஒலிபெருக்கியின் அலறல்
செவிகிழிக்கும் பலகுரல்...

யானைபுகுந்த
பாத்திரக்கடையின் கூக்குரலும்கூட
கடலில் கரைந்தக் காயமாய்ப்
காணாமல் போகுமதந்த பேரிரைச்சலுள்

ஓரமாய் அமர்ந்திருந்த
பார்வையற்ற அவனின்
இதழோரம் தோன்றியதோர்
கீற்றுப் புன்னகை…….

சுற்றியுள்ள எல்லாம் ஒதுக்கி
தட்டில் விழும் நாணயத்தின்
மெல்லிய ஒலிக்காக
மட்டுமே காத்திருக்கும்
அவனது செவிகள்
சொன்ன சேதிகேட்டு …………..

.

Monday, January 4, 2010

மிக முக்கிய அறிவிப்பு / உங்களுக்கும் செய்தி உண்டு இதில்...



மரணம்.....
மனம் பதற வைத்த
அகால மரணம்......
யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்த
மாரடைப்பு மரணம்.....

அவனுக்கு முப்பது தான்
தாண்டி இருக்கும்....

அங்கே.....
நிலைமையின் தீவிரம் தெரியாமல்
அவன் காலைச் சுற்றிவிளையாடும்
குட்டிக் குட்டிக் குழந்தைகள் .

எதிர்பாராத வேளையில்
எதிர்காலமே இருண்டுபோய்
உணர்ச்சியெல்லாம் உறைந்துபோய்
தலைமாட்டில் விழுந்துகிடக்கும்
வெளி உலகம் தெரியாத மனைவி

கரையேறும்காலத்தில்
கரையேற்றுவான் என
நம்பியிருந்த ஒரேமகனை
கரையேற்றும் கட்டாயத்தால்
கலங்கிப் போயிருக்க்கும்
தளர்ந்துபோன பெற்றோர்

இழப்பின் தீவிரம் அறிந்து
இதயம் துடித்து ஓடிவந்து
சுற்றி நிற்கும் சுற்றத்தார்


இன்றிலிருந்து
அதிகாலை வேளையில்
எப்படியும் தொடர்ந்து
ஒருமாத காலத்திற்காவது
கூட்டத்திற்குக் குறைவிருக்காது

’எங்க ஊரு
நடைப்பயிற்சி மைதானத்தில்’

[ இந்த ஆண்டின் முதல்மடல். உடற்பயிற்சியின் தேவையை உணர்த்துவதற்காக இதுபோல ஆரம்பித்துவிட்டேன் . மன்னிக்கவும் . இதனால் ஒருவர் பயிற்சி செய்ய முடிவெடுத்தாலும் / தொடர்ந்தாலும் எனக்கு வெற்றியே ]

Thursday, December 31, 2009

இந்த ஆண்டே உனக்குள் வெடிக்க வாழ்த்துகள்


பெருவெடிப்பு/திருப்புமுனை:

சிறுமீன்கள் ஒற்றைக்
காலைச் சுற்றிவர,
பெரும் கெண்டைக்காக
மறுகாலைத் தூக்கித்
தவமிருக்கும் கொக்காய்....

முயல்கள் முன்னே
துள்ளி விளையாட
புள்ளி மானுக்காகப்
பதுங்கியிருக்கும் புலியாய்....

வந்ததை எல்லாம் விழுங்கி
தனக்கான எழுத்துக்காகக்
தன்னையேத் துடைத்து
எதிர்பார்த்திருக்கும் கரும்பலகையாய்....

காத்திருக்கிறேன் நான் .......
எனது வாழ்வின்
பெருவெடிப்புக்காக (பிக் பாங்க்)
.......................................................

நிகழ்வும் ,தகவும் சந்திக்கும்
அந்தப் புள்ளியே நிர்ணயிக்கும்

நான்
புத்தனாய் ஆவதையும்
சித்தார்த்தனாய்த் தொடர்வதையும்
……………


இனிய உள்ளங்களே....
இந்த வெடிப்பு உங்களுக்குள்
இந்த ஆண்டே நிகழ
இனிய வாழ்த்துகள் ,,,

Sunday, December 27, 2009

மழைக்கு ஏங்கும் நிலம்போல....


வானம் பார்த்தே
வருடமெல்லாம் வாய்ப்பிளந்து
வறண்டு தகிக்கும் பொழுதில்
வராது வந்து சேர்ந்த
கோடைமழையின் சாரலில்
குளிர்ந்து குதூகலிக்கும் வேளையில்..

கலையத் துவங்கும் மேகம் கண்டு
கலங்கி மேலும் தகிக்கத்
துவங்கும் நிலமாய்………

விடுமுறை முடிந்து
விமானத்தில் ஏறி
சன்னல்வழி வெளியே
கைகாட்டும் பொழுது
தவித்துத் துடிக்கத்
துவங்கியது மனசு ........

.

Wednesday, December 23, 2009

மேனகையும் நானும் ...!


பழிக்குப் பழி :

சிங்கமாயிருந்தேன்
அசிங்கப்படுத்திவிட்டாள் என்னை !

அலட்சியம் தோய்ந்த பார்வை
ஆணவம் தடவிய செய்கை
விசம் புதைந்த வார்த்தைகள்
வீசி எறியும் பேச்சுகள்
--தாங்க முடியவில்லை

பழி வாங்கியே ஆகவேண்டும்!

அலுவலகத்திலிருந்து
அரைமணிக்கு ஒருமுறை
அலைபேசியில் அழைத்து
ஒருமணி நேரம் பேசுவேன்
--இன்று பேசவில்லை

ஆறு முழம்பூவும்
அரைக்கிலோ அல்வாவும்
அவளுக்கென வாங்குவேன்
--இன்று வாங்கவில்லை

ஆணியடித்தாற் போல்
ஆறுமணிக்கு அவளருகே
வீட்டில் இருப்பேன்
--இன்று இருக்கவில்லை

ஒன்பது மணி..
அழைப்புமணியை அடித்து
வாசலில் காத்திருக்கிறேன்
--அவள் வரவில்லை

நானே திறந்து
உள் நுழைகிறேன்
--விளக்குகள் எரியவில்லை

படுக்கையறைக் கதவை
வேகமாய்த் திறக்கிறேன்
உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்
--இன்னும் விழிக்கவில்லை

கோபம் தலைக்கேற
கதவினை அறைந்து சாத்துகிறேன்

பதறி எழுகிறாள்.....
பதட்டமாய் அடிப்பார்வையால்
எனைத் துளைக்கிறாள்.......

மெல்ல இருகைத் தூக்கி
மெதுவாய் எனக்கு முன்னால்
மேனகையாய் மாறி அவள்
சோம்பல் முறித்த அந்த
அழகிய நொடியில்
கலைந்தே போனது
இந்த விசுவாமித்திரனின் தவம்...

Monday, December 21, 2009

விதைத்ததே விளையும்..



மெல்லியப் பூக்களைப் பறித்து
சாலையில் வெயிலில் விரித்து
அதன்மேல் நடந்தாலும்
அவள்பாதம் நோகுமென்று
என்பாதத்தின் மேலேற்றித்
தொடர்ந்தேன் பயணம்.......

காலத்தின் ஓட்டத்தில்
பாதையும் , ஓரமும்
கல்லும் முள்ளுமாய் மாற
நான் பழக்கிவிட்ட அந்தப்
பயணமுறை மட்டும்
மாறாமல் தொடர்கிறது......

குருதி தோய்ந்த எனது
காலடித் தடங்களை பார்த்து
கேலிசெய்து கொண்டிருக்கின்றன

பாதையின் ஓரத்தில்
சருகாய்க் காய்ந்து கிடந்த
அந்தப்பூக்கள் .

.

Thursday, December 17, 2009

வழக்கம்போல வாலாட்டுகிறது...!


காலத்தின் கோரலீலையில்
சிக்கிய சிலையாய் அவள்....

அன்று ....
உனது கரம் பிடிப்பேன் அல்லது
காலனிடம் சிரம் கொடுப்பேன்
என்ற என்னவள் அவள்

இன்று...
வந்து நிற்கிறாள்
இன்னொருவனின் கரம்பிடிக்கும்
மண நாளுக்கான அழைப்பிதழோடு

பகுத்தறிவுக்குப் புரிகிறது நிலை
பேதைமனதுக்குத்தான் புரியவில்லை

இல்லை என்றானபின்பும்
அவளைப் பார்த்தவுடன்
துள்ளிக் குதித்து
வழக்கம் போலவே
வாலாட்டுகிறது மனது

.