Saturday, November 13, 2010

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !




கிடைக்கக் கூடும் விடை ...!

சிறைப் பிடிக்கப்பட்ட கோபத்தில்

சீற்றத்தோடு சுற்றிவருகிறது

கூண்டுக்குள் சிங்கம் ஒன்று....


விடுதலையின் வேகத்தை

தூரிகையால் சிறைபிடிக்க

தீரத்தோடு காத்திருக்கிறான்

தூரத்தில் ஓவியன் ஒருவன்


சிதைந்த ஓவியனோ !?

அல்லதொரு

சிறந்த ஓவியமோ !?........

இரண்டில் ஒன்று

இறுதியில் கிடைத்துவிடும்....


கேயாஸ்தியரியில் (chaos theory)

புதைந்திருக்கக் கூடும்

உங்களுக்கான உறுதியான விடை .....!


.

முளையிலேயே கிள்ளப்பட்ட........


அவர்களைப் போலவே................... :

அவர்களைப் பின் தொடர்ந்தும்

அவர்களின் முன் தொடர்ந்தும்

அவலத்தை விலக்கச் சொல்லியும்

அசிங்கத்தை விளக்கிச் சொல்லியும்

அவர்களின் முகத்தினை நோக்கி

அரற்றிக் கொண்டே இருக்கிறேன் நான்


எனது அரையின்மேல்

குவித்த பார்வையுடன்

குவிந்த புருவங்களுமாய்....

குறையெதையோக் கண்டதுபோல்

குனிந்து கிசுகிசுப்பாய்

தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே

கவனமாய் இருக்கிறார்கள் அவர்கள்......


வலிக்கும் மனதுள்

வழி என்றெதுவும்

புலப்படவில்லை எனக்கு...


புலம்பலை விடுத்து

அவர்களைப் போலவே

கோவணமின்றி

உலாவத் தொடங்குகிறேன்

நானும்.............!


.

ஆயிரத்தில் ஒன்றல்ல நான் .....!

எனது பார்வையில் .....

சிறப்புத் திறனாளிகளுக்கு

சமர்ப்பணம் )


கண்வழியே தெரிந்து

நீங்கள் அறிந்த யானை

உங்கள் அருகிருக்கும்

ஆயிரம் பேருக்கும்

அப்படியேத்தான் தெரியும்


செவிவழி அறிந்து

உணர்வினால் புரிந்து

எனக்குள் படிந்திருக்கும்

யானையின் வடிவம்

எனக்கு மட்டுமே சொந்தமென்பது

யாருக்காவது தெரியுமா !


எனக்குள் கருவாகி இருக்கும்

இந்த உலகின் உருவத்தை

எந்தவகைக் கருவியாலும்..

எந்தவித அறிவியலாலும்...

அறிந்து கொள்ள இயலாதென்பது

உங்களுக்குத் தெரியுமா !!


எனக்கான உலகை..

நான் உணரும் உலகை..

மற்றொருவர் உணருவதற்கான

வாய்ப்பெதுவும் இனிமேலும்

வாய்க்கப் போவதுமில்லை ...

இது எனக்கானது ....

எனக்கே எனக்கானது ....


கடலின் அலையைப் போல்

விரலின் ரேகையைப் போல்

நெருப்பின் சுடரைப் போல்

தனித்திறன் கொண்டவன் நான்...


உங்களைப் போல நான்

ஆயிரத்தில் ஒன்றல்ல ...


அறிந்துகொள்ளுங்கள் ...


நான்...

ஆயிரத்து ஒன்று ...!

Tuesday, November 2, 2010

பார்......இது(வும்) ஒர் உலகம்....!



முற்றிலும்....

தன்னை மறந்த நிலையில்

கையில் வழியும் பணத்தோடு...

கூட்டத்தின் நடுவில் அமர்ந்து ....

தொடர்பில்லாமல் எதையோ

தொடர்ந்து உளறிக் கொண்டே

இருக்கிறான் அவன்.....


சுற்றிலும்....

தலை சுற்றிய நிலையில்

பையில் வழியும் வெறுமையோடு...

மேலும் எதையோ எதிர்பார்த்து...

தொடர்ந்து எதற்காகவோ

கைதட்டிக் கொண்டே

இருக்கிறார்கள் அவர்கள்......

அருகே.....


முற்றிலும்....

காலியாகிக் கிடக்கிறது

ஒரு கோப்பை.....


சுற்றிலும்....

பறந்து கொண்டிருக்கின்றன

பல ஈக்கள்.........

.

Sunday, October 24, 2010

என்னிலை அறிக்கை...!


அழுகையில் கரையும் இரவுகளோடும்

ஆளுமையில் இறுக்கும் உறவுகளோடும்..

வரப்போகும் தருணம் ஒன்றிற்காக

வரம் வேண்டித் தவமிருக்கிறேன்....


அன்பென்ற பெயர்சொல்லி

ஆக்கிரமித்து எழுவான் அவன்...

அவனைப் பின்தொடர

அயர்ச்சியோடு கை நீட்டி

ஆதரவு கேட்பேன் நான்....

அலட்சியப் பார்வையால் ஒதுக்கி

அங்கிருந்து விலகுவான் அவன்....

தன்னையவன் உலர்த்த

நினைக்கும் பொழுதெல்லாம்

ஈரமாகிக் கொண்டிருக்கிறேன் நான்....


உரிமை என்ற உத்திரவாதத்துடன்

அவனது சுற்றத்தாரின்

அழுத்தும் தாக்கத்தாலும்

கொழுத்தும் வெப்பத்தாலும்

உருகிக் கொண்டிருக்கிறேன் நான்.....


என்னில்

கை நனைத்து

கால் அலம்பி

முகம் கழுவி

முதுகு தேய்த்து

தாகமும் தணித்து

மிதப்பாய் இருக்கிறார்கள் அவர்கள்....


எதற்கும் தயாராய் இருக்கச்

சொல்லி வையுங்கள் அவர்களிடம்....


அவர்கள் எதிர்பாராத தருணத்தில....

வரக்கூடும் ஒரு

காட்டாற்று வெள்ளம்............!

வந்ததொரு வாய்ப்பு


ஓட்டைகளால் வேயப்பட்ட

ஓலைக் குடிசையில்

சமையலை மறந்து

ஊமையாகிப் போன பாத்திரங்கள்....


அடைத்த செவியோடும்

ஒட்டிய வயிறோடும்

ஒரு ‘கொதிக்கும் கானம்

கேட்கத் தவமிருக்கிறேன் நான்.....


எதிர்பாராமல்

வந்ததோர் வாய்ப்பு.....


அவசர அவசரமாய்

பாத்திரங்களை எடுத்துப்

பரப்பி வைக்கிறேன் ...........


தாள லயத்தோடு

ஆரம்பமாகிறது கச்சேரி


ஏற்கனவே பெய்யத்

தொடங்கி இருந்தது மழை............!

.

ஏதோ புரிய ஆரம்பிக்கிறது எனக்கு ...!


























காலை வேளையில் கடுமையாய்

கலவரப் படுத்துகிறது மேகம்....


அடிக்கும் காற்றில் தடுமாறி

கூட்டுக்குள் அடைகிறது காகம்....


நடுஇரவுப் பொழுதைப் போல்

திரண்டு நிற்கிறது இருட்டு.....


தரையில் தஞ்சம் புகுந்திட

தயாராகிக் கொண்டிருக்கிறது மழை...


நிலையைத் தாண்டிய பின்னரும்

நிலையில்லாமல் தத்தளிக்கிறது மனம்...


ஒரு நாள் மட்டும் தானே...

விடுப்பு எடுத்தால் என்ன..!

குடியா முழுகி விடும் ?

ஒருசில திட்டங்களோடு

ஓய்வெடுக்க முடிவெடுத்து

கதவைத் திறக்கக் கைவைக்கிறேன்


உணவைத் தேடியபடி

கதவின் இடுக்கின் ஊடாக

வீட்டின் உள்ளிருந்து

வெளியேறிக் கொண்டிருக்கின்றன

வரிசையாய் எறும்புகள்...........

.

அவரவர் பார்வையில்....!


அடர்பச்சைப் புதராய்

படர்ந்திருக்கிறது கொடி.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அசைந்து கொண்டிருக்கின்றன

அழகழகாய்ப் பழங்கள்........


அடர்பச்சை நிறத்தில்

வந்தமர்கின்றன கிளிகள்.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அழைத்துக் கொண்டிருக்கின்றன

அதனழகு அலகுகள்.....


புதரும் பறவையும்

வண்ணத்தில் ஒன்றாகி

எண்ணத்தை வென்றேகி

என்னுள் கலக்க......

என்னை நான் மறந்தே

படைப்பின் விந்தையை எண்ணி....

சிந்தை கலங்கி நிற்கிறேன்.


அங்கே....

விரித்த வலையின் சுருக்கை

சரிசெய்து கொண்டிருக்கிறான்

புதருக்குள் இருக்கும் அவன் .....

.

Thursday, October 14, 2010

ஒர் அதிகாரத்திற்கான சாட்சியாய் .......!





ஈழம் :







1) கைவசமிருந்த கண்ணாடி பொம்மையை உடைத்துவிட்டு , அசையாதிருந்த மண்குதிரையை சாய்த்துவிட்டு,

வென்றுவிட்டதாய் பெரும்புரளியைக் கிளப்பிவிட்டு,

வெற்றுப்பரணியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்

வெட்டிவீணருக்கு முதல் ஐந்தும் சமர்ப்பணம் :

ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை

ஈழம் உணர்த்தும் உமக்கு [01]

யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ஈழம்.

பதரென்(று) அழித்தாய்; பதறாமல் அங்கே

புதருள் இருக்கும் புலி [02]

எதிர்ப்பே இல்லாமல் ,எல்லாம் வெறும் பதராக இருப்பதாய் மகி(ழ்)ந்தே , நல்ல வேட்டை என காட்டை அழித்துச் செல்கிறாய் ..உனக்குத் தெரியுமா? பதறாமல் அருகிலேயே புதருக்குள் உனக்காகக் காத்திருக்கலாம் ஒரு புலி

அகம்தவிர் உன்னுள்; எதிர்க்கும் நிகர்எதிரி

உண்டாம் எதற்கும் அறி [03]

தான் என்ற அகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாய் நீ .உனக்காக அன்றே நியூட்டன் சொன்ன சேதி ஒன்று இங்கு

எந்த ஒருவிசைக்கும் சமமான எதிர்விசை உலகில் உண்டு

புதைத்ததாய் தற்பெருமை கொள்வோரே ; எல்லாம்

விதையென்(று) அறிவீரா நீர் [04]

சுத்தமாய் அழித்து , மொத்தமாய் மழித்துப் புதைத்ததாய் எண்ணி தற்பெருமைக் கொள்வோரே! உண்மை ஒன்றை அறிந்து கொள்ளவீரா? வென்றதாய் எண்ணி, வெறியில் புதைத்தது அத்தனையும் வீரியவிதைகள் என்பதை.

ஈசலுக்கும் கூட இணையில்லார்; காட்டுவார்

ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு [05]

போர்தர்மம் குலைத்து , குற்றங்கள் இழைத்து , பிறர் உதவியால் பிழைக்கும் உமது வ(வெ)ல்லரசு மாயத்தோற்றம் வெகுவிரைவில் கலையும்/குறையும்/கரையும்/.

2) கூட்டுச்சதியாலும் ,கோடாரிக் காம்புகளாலும்

கூட்டம் கூட்டமாய் கூட்டை இழந்து தவிக்கும் குலக்கொழுந்தினருக்குதொடர்வது அனைத்தும் சமர்ப்பணம் :

வலியினைத் தாங்கும் வழியை அறிவாய்;

வலியதாய் ஆகும் மனது [06]

தீயுள் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயில்

பழுத்துவிடும் தங்கம்போல் நாம் [07]

எளிதன்(று) எனமலைத்து நிற்கிறாய்; எல்லாம்

எளிதென்று வெல்வாய் உணர்ந்து [08]

ஆற்றல் அனைத்துமுண்டே ஆள்வதற்கு; தேவையா

ஆறுதல் வார்த்தை நமக்கு [09]

திலகம் அணிந்திடும் நாள்உண்டு; நம்பின்

உலகும் அணிதிரளும் அன்று [10]

மேலுள்ள எதற்கும்

விளக்கம் என்றெதுவும்

தேவையில்லை உனக்கு .

காலம்மும் கனியும் நமக்கு..

கலக்கம் தராதிரு மனதுக்கு....

உனைக்கண்டு மீண்டும் ‘அவர்கள்

கலங்கும்நாள் வெகுவிரைவில் இருக்கு .......

Wednesday, October 13, 2010

சர..சர..அவசர.......!


அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய்க் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் நுழைந்து

அவசரமாய் அமர்ந்து

அவசரமாய் எழுதி

அவசரமாய்க் கூட்டி

அவசரமாய்க் கழித்து

அவசரமாய்த் திட்டமிட்டு

அவசரமாய் வெளியிட்டு

அவசரமாய்த் திட்டுவாங்கி

அவசரமாய் மறந்து

அவசரமாய் மூடி

அவசரமாய் வெளியேறி

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் ஓய்வெடுத்து

அவசரமாய் சொல்லிக் கொடுத்து

அவசரமாய் உணவெடுத்து

அவசரமாய்த் தூங்கவைத்து

அவசரமாய்ப் படுத்து

அவசரமாய்ப் படித்து

அவசரமாய் முடித்து

அவசரமாய்க் கண்மூடி சயனித்து

அவசரமாய்க் கனவில் பயணித்து

..........................

அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவச......................


சே.... என்ன இது ?

என்னதான் வாழ்க்கை இது !

ஒரு நொடியில் உறைகிறேன்

மறு நொடியில் சரிகிறேன்

சன்னலைத் தாண்டி எங்கோ

சூனியத்தில் வெறிக்கிறேன்


அருகிருந்த கிளையில்

நிதானமாய்

நகர்ந்து கொண்டிருக்கிறது

நத்தை ஒன்று


.