Saturday, November 13, 2010

ஆயிரத்தில் ஒன்றல்ல நான் .....!

எனது பார்வையில் .....

சிறப்புத் திறனாளிகளுக்கு

சமர்ப்பணம் )


கண்வழியே தெரிந்து

நீங்கள் அறிந்த யானை

உங்கள் அருகிருக்கும்

ஆயிரம் பேருக்கும்

அப்படியேத்தான் தெரியும்


செவிவழி அறிந்து

உணர்வினால் புரிந்து

எனக்குள் படிந்திருக்கும்

யானையின் வடிவம்

எனக்கு மட்டுமே சொந்தமென்பது

யாருக்காவது தெரியுமா !


எனக்குள் கருவாகி இருக்கும்

இந்த உலகின் உருவத்தை

எந்தவகைக் கருவியாலும்..

எந்தவித அறிவியலாலும்...

அறிந்து கொள்ள இயலாதென்பது

உங்களுக்குத் தெரியுமா !!


எனக்கான உலகை..

நான் உணரும் உலகை..

மற்றொருவர் உணருவதற்கான

வாய்ப்பெதுவும் இனிமேலும்

வாய்க்கப் போவதுமில்லை ...

இது எனக்கானது ....

எனக்கே எனக்கானது ....


கடலின் அலையைப் போல்

விரலின் ரேகையைப் போல்

நெருப்பின் சுடரைப் போல்

தனித்திறன் கொண்டவன் நான்...


உங்களைப் போல நான்

ஆயிரத்தில் ஒன்றல்ல ...


அறிந்துகொள்ளுங்கள் ...


நான்...

ஆயிரத்து ஒன்று ...!

No comments: