Thursday, April 2, 2009

நெற்றிக்கண் திறப்பினும்............!


வானத்துக் கடவுள்களின் மேல்
வழக்குகள் பல தொடுத்திருக்கிறேன்


பார்வைக் குறைபாடுள்ள
பச்சிளம் குழந்தைகள்
மனவளர்ச்சிக் குன்றிய
மழலைச் செல்வங்கள்
உடல் ஊனத்தோடு
உழலும் பிள்ளைகள்

ஆக்கும் கடவுளுக்கு
அதிகப்படியான வேலைபளுவா?
அதனால் இந்தக் கவனக் குறைவா??

உருவாக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தீவிரவாதி ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்
அப்பாவிப் பொதுமக்கள்
அநியாயமாகச் செத்துமடிகிறார்கள்
ஒன்றுக்கு நூறு
என்ற விகிதாச்சாரத்தில்

மறைந்திருந்து இயக்கும்
மரண வியாபாரிகள்
நலமாய் இருக்கிறார்கள்
நல்லபடி வாழ்கிறார்கள்

காக்கும் கடவுளுக்கு
கணக்கில் தடுமாற்றமா?
கணிப்பில் குளறுபடியா??

நலம் காக்கும் கடவுளின்மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தொடர்வண்டி விபத்துகள்
தொடரும் சாலை ஆபத்துகள்
இனப் படுகொலைகள்
இயற்கைப் பேரழிவுகள்

கொத்து கொத்தாக
மொத்தமாய்ப் போய்ச்சேரும்
எதிர்காலக் கனவிலிருக்கும்
நாதியற்றக் குடிமக்கள்

அழிக்கும் கடவுளுக்கு
அப்படி என்ன அவசரம்?
குறியீட்டு அளவின் நிறைவேற்றமா?
(TARGET ACHIEVEMENT)
குறுக்குவழியில் நடைபெறுகிறதா??

மொத்தமாய் அழிக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


சாட்சிகளோடு காத்திருக்கிறேன்!
சத்தியமாய் செயிக்கப் போகிறேன்!!
நீங்களும் சாட்சியாய் வாருங்கள்!
நிச்சயமாய் செயித்து விடுவோம்!!

No comments: