Wednesday, April 20, 2011

16 :நம் மரபைக் காக்க..இயன்றவரை என்னாலானதை இறுதிவரைச் செய்வேன் ....!


உலக மரபு தினம்..(18.04.11)

அழிவின் நுனி விளிம்பில்
பரிதாபமாய் நின்றபடி
பழைமையின் பெருமையை
பலன் எதிர்பாராது நம்முன்
பறைசாற்றிக் கொண்டிருக்கும்

’நினைவுச் சின்னங்களை
புராதானக் கோவில்களை
வண்ண நுண்ணோவியங்களை
கலைமிகு அழகுச் சிலைகளை’

மேலும் சிதையாமல்
யாரும் சிதைக்காமல்
பாதுகாக்கும் விழிப்புணர்வை
பொதுவில் உருவாக்கும் ஒரு
தன்னலமில்லாப் பண்பாளர்களின்
தன்னார்வச் சுற்றுலா அது .......

இந்தியா முழுதும் சுற்றிவந்து
இன்றுடன் முடிவடைகிறது
மன்றம் வைத்த மதுரையின்
மீனாட்சி அம்மன் கோவிலில்..........

நம் முன்னோரின்
கலை தொழில்நுட்பத்தின்
வானளாவிய முதிர்ச்சியை
இன்றும்காட்டிக் கொண்டிருக்கும்
காலக் கண்ணாடி அது......

கலையின் வீச்சில் மிரண்டு நான்
மலைத்துப் போய் நிற்கிறேன்
மறு நிமிடமே மனம் கலைந்து
வெறுத்துப் போய் விடுகிறேன்

சுற்றிலும் குப்பைகள்
சுகாதாரச் சீரழிவுகள்
சுற்றுச்சூழல் சீர்கேடுகள்
கசங்கிய காகிதப் பொட்டலங்கள்
காலியான குளிர்பானக் குடுவைகள்

”மாற்றவேண்டும் இந்த
மனிதனின் தன்மையை...
காக்கவேண்டும் கலைச்
சின்னங்களின் மேன்மையை....

நாம் மனது வைத்தால்தான்
நாளையாவது மாற்றங்கள் வரும் - எல்லாம்
நமது உடமைகள் எனக் கொண்டால்தான்
நம்மிடையுள்ள தடுமாற்றங்கள் தீரும்”

என்றாவது ஒரு நாளிந்த
உண்மை எல்லாருக்கும் புரியும்
என்னும் அதீத நம்பிக்கையோடு
அங்கிருந்து கிளம்புகிறேன்

”அட ,
.!!!”

கலைச் சின்னங்கள் பற்றிய
கவலையில் எனது மொத்த
கவனம் சிதறிப் போனதில்
முக்கியக் கடமை ஒன்றை
செய்யாமல் விட்டிருக்கிறேன் :(

’இந்தியா முழுதும் செய்ததை எப்படி
இங்கே முழுதாய் மறந்துபோனேன் ?
இங்கேவரும் வாய்ப்பெனக்கு
இனியும் இருக்குமோ எனத் தெரியவில்லை..!’

எனவே .........

கோவிலின்
சுவரிலில்
எனது வரவையும்
என்னவளின் பெயரையும்
சுரண்டிப் பதிக்கக் கிளம்புகிறேன் நான் ..............

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

கோவிலின் சுவரிலில்
எனது வரவையும்
என்னவளின் பெயரையும்
சுரண்டிப் பதிக்கக் கிளம்புகிறேன் நான் ......//
:நம் மரபைக் காக்க..இயன்றவரை என்னாலானதை இறுதிவரைச் செய்வேன் ....!"//
படிப்பது ராமாயணம்,இடிப்பது???