Saturday, April 4, 2009

க(உ)ருவானநாள் நல்வாழ்த்துக்கள்...!


இன்று 'தமிழ் நண்பர்கள் குழுமம்' பிறந்தநாள்
==========================================

ஆயிரம் கரு சுமக்கும்
அற்புதக் கருவறை இது

கருவிலிருக்கும் குழந்தைகள் நாம்
காவலிருக்கும் வேலி இது

இதனுள் நுழைந்திருக்கிறோம்
இதயத்தால் இணைந்திருக்கிறோம்
இணையத்தால் பிணைந்திருக்கிறோம்

ஒருவரின் மனதில் நினைப்பது
ஒட்டிப் பிறந்த இரட்டையருக்கே
ஓரளவுக்குத்தான் புரியுமாம் !

மனதில் உருவாகும் அத்தனையும்
முகமறியா நமதாயிரம் சோதருக்கு
மறுநொடி சென்று சேர்ந்துவிடும்
அற்புதம் இங்கே நிகழ்ந்துவிடும் !!

ஏங்கோ பிறந்த நாம்
எங்கெங்கோ வளர்ந்த நாம்
இதோ மீண்டும் கருவாகி இருக்கிறோம்
இங்கிருந்து பிரமாண்ட உருவாகி வருவோம்
ஆயிரம் மூளை ஒன்றாய் சேர்த்து
அற்புதம் இங்கே சமைத்திடுவோம்

கருவிலிருந்து வெளிவந்த நாள்
நமக்கெல்லாம் பிறந்தநாள் !
கருவுக்கே எப்படிவரும் பிறந்தநாள்??
உருவாக்குவோம் நாம் அந்தநாள் !!

இணையத் தளத்தினில்
இலக்கியக் களத்தினில்
அகலக் கால் பதிப்போம்
ஆதவன் போல் உதிப்போம்
அகிலம் முழுதும் புகழ்பரப்பி
அங்கீகாரம் வாங்கிக் கொடுப்போம்

அந்தநாளே நமது T2F
அம்மாவின் இனிய பிறந்தநாள் !

இன்று என் இணைய அம்மாவுக்கு
இனிய உ(க)ருவானநாள் நல்வாழ்த்துக்கள் !!

Thursday, April 2, 2009

நெற்றிக்கண் திறப்பினும்............!


வானத்துக் கடவுள்களின் மேல்
வழக்குகள் பல தொடுத்திருக்கிறேன்


பார்வைக் குறைபாடுள்ள
பச்சிளம் குழந்தைகள்
மனவளர்ச்சிக் குன்றிய
மழலைச் செல்வங்கள்
உடல் ஊனத்தோடு
உழலும் பிள்ளைகள்

ஆக்கும் கடவுளுக்கு
அதிகப்படியான வேலைபளுவா?
அதனால் இந்தக் கவனக் குறைவா??

உருவாக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தீவிரவாதி ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்
அப்பாவிப் பொதுமக்கள்
அநியாயமாகச் செத்துமடிகிறார்கள்
ஒன்றுக்கு நூறு
என்ற விகிதாச்சாரத்தில்

மறைந்திருந்து இயக்கும்
மரண வியாபாரிகள்
நலமாய் இருக்கிறார்கள்
நல்லபடி வாழ்கிறார்கள்

காக்கும் கடவுளுக்கு
கணக்கில் தடுமாற்றமா?
கணிப்பில் குளறுபடியா??

நலம் காக்கும் கடவுளின்மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தொடர்வண்டி விபத்துகள்
தொடரும் சாலை ஆபத்துகள்
இனப் படுகொலைகள்
இயற்கைப் பேரழிவுகள்

கொத்து கொத்தாக
மொத்தமாய்ப் போய்ச்சேரும்
எதிர்காலக் கனவிலிருக்கும்
நாதியற்றக் குடிமக்கள்

அழிக்கும் கடவுளுக்கு
அப்படி என்ன அவசரம்?
குறியீட்டு அளவின் நிறைவேற்றமா?
(TARGET ACHIEVEMENT)
குறுக்குவழியில் நடைபெறுகிறதா??

மொத்தமாய் அழிக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


சாட்சிகளோடு காத்திருக்கிறேன்!
சத்தியமாய் செயிக்கப் போகிறேன்!!
நீங்களும் சாட்சியாய் வாருங்கள்!
நிச்சயமாய் செயித்து விடுவோம்!!

Monday, March 30, 2009

தெரியும்...! ஆனால் தெரியாது..!!


அமைச்சர்கள்வரும் அந்தத் தார்சாலை
அன்றுதான் போட்டதென்பது
அவர்களுக்குத் தெரியாதா?

சாலையோரம் தூவப்படும்
நோய்த் தடுப்பு மருந்துகள்
அன்று மட்டும்தான் என்பதும்
அவர்களுக்குத் தெரியாதா?

தெருவிளக்கு எரியாமல் கிடக்க
ஆடம்பர விளக்குகள் ஆயிரம்எரிவது
அன்று மட்டும்தான் என்பதும்
அவர்களுக்குத் தெரியாதா?

எங்களுக்குத் தெரியும் என்பதாவது
அவர்களுக்குத் தெரியுமா?தெரியாதா??

Saturday, March 28, 2009

பெரியது எது? இரண்டயிரமா,இருநூறா??........


சனிக்கிழமை இன்று
சாயங்கால நேரம்

தனித்தனியாய் இருக்கும் நண்பர்கள்
இனிதாய் சந்தித்துக்கொள்ளும் நேரம்
சுழற்சி முறையில் நண்பர்களுக்காக
சும்மா செலவு செய்யும் நாள்

இதோ கிளம்புகிறேன் நான்
அதே கிழக்குகடற்கரைச் சாலை
மதிமயக்கும் மாலை விருந்தின்
மொத்தச் செலவும் என்னுடையது

அதிகமாய் இரண்டாயிரம் ஆகலாம்
ஆனாலும் அதுபற்றிக் கவலையில்லை

இரண்டு லட்சம் சம்பாதிக்கிறேன்
இதற்கென நண்பர்களுக்கென
இருபதாயிரம் செலவு செய்யலாம்
இருந்தாலும் அதிலொன்றும் தப்பேயில்லை

பளபளக்கும் புத்தம் புது
சலவை நோட்டுகளில் பத்தை
சட்டைப் பைக்குள் வைக்கிறேன்
சாவி எடுத்துக் கிளம்புகிறேன்

பணத்தைப் பூட்டி வைக்காமல்
பள்ளத்தில் பதுக்கி வைக்காமல்
புழக்கத்தில் பறக்க விடும்
பரோபகாரிகள் நாங்கள்

நண்பர்கள் படை சூழ
நெடுநேரம் கும்மாளமிட்டு
ஆள் தவறாமல் கும்மியடித்து
நல்லபடியாய் முடிந்தது விருந்து

ஒவ்வொருவராய்க் கிளம்பிச் செல்ல
ஒருவழியாய் வந்துசேருகிறது பட்டியல்
எதிர்பார்த்தபடியே இரண்டாயிரத்து சொச்சம்
எண்ணி முழுநோட்டுக்களை வைக்கிறேன்

மிச்சம் வரக் காத்திருக்கிறேன்
மீதிப் பணத்தையும் பட்டியலையும்
மேசைமேல் வைத்துச் செல்கிறார் அவர்
மனம்போல அன்பளிப்பு வைக்கிறேன்

அப்போதுதான் கவனிக்கிறேன்

மீதம் இருக்கவேண்டியதோ நூறு
முன்னால் இருப்பதோ முன்னூறு
சுற்றும் முற்றும் கணிக்கிறேன்
சுருட்டி பையில் வைக்கிறேன்

அவசரமாய்க் கிளம்புகிறேன்
அலுவலகம் வந்து சேர்கிறேன்
அதன்பின்தான் யோசிக்கிறேன்
ஏதோ தவறுதலாய் உணர்கிறேன்

எடுத்திருக்கக் கூடாதோ????
கொடுத்திருக்க வேண்டுமோ!!!!!

Wednesday, March 25, 2009

ஒரு கேள்விக்காவது விடை தெரிந்திருந்தால்......


எனது அப்பா
எண்பது வயது அப்பா
நான் குழந்தையாய் இருக்கும்போது
கோமாவில் விழுந்தஅவர் இப்போது
என்குழந்தையைப் பார்க்க எழுந்திருக்கிறார்

நாற்பது வருட எதிர்பார்ப்பு அது
நான்கு நாட்களாகிறது விடியல் பிறந்து

தனக்குள் முழ்கி இருந்த அவர்
தன்னைச் சுற்றி நடப்பதை அறிய
ஆர்வக் கோளாரில் அவரோடு
நகர் வலம் கிளம்புகிறேன்

இருவரும் தெருவில்
இறங்கி நடக்கிறோம்


பொதி சுமக்கும் கழுதைபோல
ஆள் உயர பையைத் துக்கி
பள்ளி செல்லுகிறார்கள் குழந்தைகள் !
நாற்பது பக்க ஏட்டை
நான்காய் மடித்து அதை
காற்சட்டைக்குள் சொருகி
வெறும் கையை வீசி
கல்லூரி வருகிறார்கள் மாணவர்கள் !!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

வழிநெடுக முளைத்து நிற்கும்
குழந்தைகள் நல மருத்துவர்கள்
பிரசவக் கால மருத்துவமனைகள்
"பிறப்பு எல்லாமே எளிதாகி இருக்குமே?" என்கிறார்
"சுகப் பிரசவமே கிடையாது இப்போது!" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

கருப்புச் சட்டையணிந்து கன்னிச்சாமியார்கள்
கடவுளுக்கு விரதமிருந்து கோவிலுக்கு வருகிறார்கள்
கருப்புச் சட்டையணிந்து கட்சிசார்பானவர்கள்
கடவுளுக்கு விரோதமாக கோசமிட்டுச் செல்கிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"சுதந்திரதினம், விடுதலைதினம் போல
காதலர்தினம் கொண்டாடுகிறார்களே?
காதல்மனம் எதிர்ப்போர் குறைந்து போயினரா??
கலப்புமணம் மறுப்போர் மறைந்து போயினரா???"
என்கிறார்
"உலகம் மாறவில்லை இன்னமும்!" என்கிறேன்

பிறகு ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

குழம்பிப்போய் இருக்கிறார் அவர்
குதூகலமாய் மாற்ற அவரை
புதுத்திரைப்படம் கூட்டிச் செல்கிறேன்

ஆடல் காட்சியில் பனிப் பிரதேசத்தில்
ஆண்கள் அனைவரும் முழு ஆடையோடு
கம்பளியும் சேர்த்து அணிந்திருக்கிறார்கள்!
பெண்கள் வெறும் உள்ளாடையோடு
காலணிகூட இல்லாமல் ஆடுகிறார்கள்!!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

ஆண்கள் அனைவரும் பாடல் காட்சியில்
அவரவர் குரலில்அமைதியாகவேப் பாடுகிறார்கள்
பெண்கள் மட்டும் முக்கி திக்கித்திணறி
ஆண் குரலில் ஆர்ப்பாட்டமாய்ப் படுத்துகிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

விதியை நொந்து சோர்ந்துபோய் இருக்கிறார்
வீடு வந்து சேர்கிறோம் இருவரும்

"பங்காளி சொக்காரன் சொந்தங்களைவிட
பக்கத்து வீட்டுக்காரன் மிகமிகமுக்கியம்!
என்னை அறிமுகப்படுத்து அவர்களிடம்"
என்கிறார்
"எனக்கே அறிமுகமில்லை இன்னமும்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"குழந்தை குட்டியுள்ள வீடெனில்
குயில் கூவும் தோட்டம்போல
ஆரவாரமாய் இருக்கவேண்டுமே!
ஆனால் இங்கே என்ன இது
கல்லறைத் தோட்டம்போல
அமைதியாய் இருக்கிறதே?"
என்கிறார்
"தொலைக்காட்சி பார்ப்பதால்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"அரசே மதுபானக்கடை நடத்துகிறதா?
அங்கே மதுவும் ஊற்றிக் கொடுக்கிறதா??

கணக்கில் வராத கள்ளப்பணத்திற்கு
காந்திக்கணக்கு என்ற பெயரா?

மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்
மிதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறதே?"


கேள்விகள்? கேள்விகள்?? கேள்விகள்???
கேட்டுக் கொண்டே இருக்கிறார்.........
கொஞ்ச நேரத்தில் யாரையும் கேட்க்காமலேயே
குழம்பிப் போன மனத்தோடும் முகத்தோடும்
கோமாவுக்குள் சென்றுவிடுகிறார் மறுபடியும்

நாற்பது வருடங்கள் நலமாய் இருந்தவர்
நான்கே நாட்கள் திரும்ப வந்து
இதுவரை இருந்த நிம்மதியையும்
இங்கே தொலைத்து சென்றுவிட்டார்

அவர் அப்படியே இறந்திருக்கலாமோ?
மறுபடியும் இங்கே
வராமலேயே இருந்திருக்கலாமோ????

Tuesday, March 24, 2009

கடவுளே ஆனாலும் காத்திருக்க வேண்டும் !....


ஒரு 'SPLIT PERSONALITY' யாக என்னை உருவகம் செய்து கொள்ளுங்கள்:
------------------------------------------------------

பிஞ்சபாய சுருட்டி மூலைல வச்சுட்டு
கரையுர காக்காவ சேலையால வெரட்டிட்டு
அரை இருட்டுல குளிச்சு முடிச்சிட்டு
கெடச்ச கஞ்சிய குடிச்சி தொடச்சிட்டு

ஆட்டையும் குட்டியையும் பத்திக்கிட்டு
மாட்டையும் கன்னையும் கூட்டிக்கிட்டு
எருமைய குட்டையில எறக்கி விட்டுட்டு
எல்லாத்தையும் மொத்தமா மேச்சுகிட்டு

வெறகு சுள்ளிய சேர்த்துகிட்டு
காட்டு வேலைய முடிச்சிட்டு
வீட்டப் பாக்க வந்து சேர்ந்துட்டேன்

புண்ணாக்க எடுத்துப் போட்டுட்டு
கழனித் தண்ணிய கலக்கி விட்டுட்டு
மூஞ்சி மோரைய நல்லா கழுவிட்டு
கைய காலயும் கொஞ்சமா அலசிட்டு

ஆத்தா மொகத்த அன்னாந்து பார்த்துகிட்டே
முத்தத்தில வந்து உக்காந்து இருக்கேன்

கைல கெடச்சத அள்ளி சேத்து
கொஞ்சமா தண்ணியயும் அதுல ஊத்தி
தட்ட என்முன்னால தரையில
தள்ளி வச்சிட்டுப் போறா என்ஆத்தா

தெளிஞ்ச தண்ணிக்கு உள்ளார
குனிஞ்சு நல்லா பாத்தேன் பாரு
ஒத்த ஒத்தப் பருக்கையா
முத்து முத்தாத் தெரியுது சோறு

"உத்து உத்துப் பாக்காத புள்ள
உள்ளே என்ன இருக்கும்ன்னு
அள்ளிப்போட்ட எனக்குத் தெரியும்
உள்ளத குடிச்சிட்டுப் போய்த் தூங்கு"

முடிய அள்ளிச் சொருவிக் கிட்டு
முனங்கிக் கிட்டே போறா ஆத்தா

என்னுள் இருந்த அவள்
கொஞ்சம் புரண்டு படுக்கிறாள்


"இரு கொஞ்சம் பொறு
இருட்டு நல்லா விலகட்டும்
முரட்டு மேகமும் களையட்டும்"


"கஞ்சியக் குடிக்கச் சொன்னா
கண்டதையும் பேசுதே இந்தக்
கிறுக்குப் பய புள்ள"

குறுகுறுவென பாத்திட்டே போறா ஆத்தா

காத்திருக்கிறேன் கண்கொட்டாமல்
கலைந்தது அந்த மேகக் கூட்டம்
கணநொடிக்குள் நிகழ்ந்தது மாற்றம்
எனக்கு உள்ளும்,புறமும்

எனக்குள் அவள் எழுந்து நிற்கிறாள்
எனது தட்டுக்குள் இப்போது
எல்லாமே வந்து சேர்ந்துவிட்டன
"வானத்து பால் நிலாவும்
வண்ண வண்ண வின்மீன்களும்
சிதறிக் கிடந்தன என்
சின்னஞ்சிறியத் தட்டுக்குள் !

இரவு உணவுக்கு இதோ
பால் சோறும்! மீன் கூட்டும்!
இதற்கு மேல் என்ன வேண்டும் !!
கடவுளும் கூட இதற்காகக்
காத்திருக்கத்தான் வேண்டும்!!!"


எல்லாம் முடிந்து விட்டது
எனக்குள் அவள் தூங்கிவிட்டாள்

பாய ஒதறி போட்டுட்டு
படுக்கப் போறப்போ மெதுவா
பயந்துகிட்டே சொல்லுதேன்
"நாளைக்காவது ஒருவேளைக்கு
நல்ல சோறு தா ஆத்தா"