Monday, November 22, 2010

ஏன்?..எதற்கு??....எப்படி???


அனைவரும் கிளம்பியபின்

அத்தனையும் அணைத்து

அலுவலகம் முடித்துக் கிளம்ப

எப்படியும் அரைமணி ஆகிவிடும் ....


ம்ம்ம்ம்....


பாப்பாவின் பத்தாவது

பிறந்த நாள் கொண்டாட்டம்

பரபரப்பாய் முடிந்திருக்கும் ....


இப்போதே பத்தாகப் போகிறது

அரக்கப் பரக்க விரைந்தாலும்

இன்னும் அரைமணி தாண்டிவிடும்


பதட்டமாய் இருக்கிறது எனக்கு...


ஏங்கிப் போயிருப்பள் அவள்.....

தூங்கிப் போகும்முன் முன்நின்று

சிரிக்க வைத்துவிட வேண்டும்...

நெற்றியில் முத்தமிட்டுவிட வேண்டும்


மிகவும் பதட்டமாய் இருக்கிறது எனக்கு....


வேகவேகமாய்க் கதவடைத்து

அவசர அவசரமாய் படிஇறங்கத்

தொடங்குகிறேன் நான்....


எதிர் கீழே

மெல்லிய இருளில்

மங்கிய உருவில்

கலங்கிய முகத்துடன்

ஒரு நிமிடம் நிற்க

சொல்லி கெஞ்சலாய்

சைகை செய்த படியே

கீழ்ப் படியிலிருந்து

மேலேறத் தொடங்குகிறாள் அவள்


பலநாள் பழகிய முகம்.......

மிகமிக அறிமுகமான உருவம்.......


இவர் யாராய் இருக்கும் ?

இங்கே யாரைப் பார்க்க ??

இந்த நேரத்தில் எப்படி ???


உள்ளே கேள்விகள்

வளையமிடும் வேளையில்

பாப்பாவின் நினைவுகள் தூண்டிலிட.....


குடையாய் சுருங்கிய புருவங்களுடன்

அவசரமாய் அவளைக் கடக்கிறேன்


அந்த நொடியில்

திடுக்கிட்டுப்போய் நிற்கிறேன்


வாசம் ....

அக்காவின் வாசம் ...

பத்தில் பறந்துபோன

பாசமிகு அக்காவின் வாசம்....


இந்த வயதிலிருந்தால்

இப்படித்தான் இருப்பாள் அவள்


அதிர்ந்து திரும்புகிறேன் ...


அங்கே யாரும் இல்லை

அருகில் ஒருவரும் இல்லை


ஒருவேளை மேலேறிச் சென்றிருக்கலாம் ?

அல்லது வெறும் பிரம்மையாய் இருக்கலாம் ??


ஆராய நேரமின்றி

ஒரு நொடி தாமதித்து

என்னையே தேற்றிக் கொண்டு

தாவி இறங்கி தரையைத் தொடுகிறேன் ....


ஒரு நொடியின்

நூறில் ஒருபங்கு

நேர இடைவெளியில்

என்னையும் முந்திக்கொண்டு

எனது இருசக்கர வாகனத்தின்


மேலேறி........

நகராமல் நிற்கிறது

நகரப் பேருந்து ஒன்று ......!

.

Wednesday, November 17, 2010

காதல் : இதில் எது வெற்றி ...????

அடர்ந்த யோசனையுடன்

தொடர்கிறதென் திட்டங்கள்....

மொத்தமாய் அவளிடம்

தோற்றுப் போகும்

முழு முயற்சியில் இருக்கிறேன் நான்......


என்னைபோலத் தானே

இருப்பாள் அவளும்........?!


தெரிந்துகொள்ளும் ஆவலில்

தேடுகிறேன் அவளுக்குள் ...


அடர்ந்த யோசனையுடன்

தொடர்கிறதவள் திட்டங்கள்.......

எப்படியும் என்னை

வென்றுவிட வேண்டும் என்ற

பெரும் முயற்சியில் அவள்.....!!!!!!!


.

Tuesday, November 16, 2010

எனக்குப் பயனில்லாதது தான் ......


பசையில்லா வறண்ட

கரிசல் நிலத்தைப்

பரவலாய் ஆக்கிரமித்திருக்கிறது

பசுமையாய் கருவேலங்காடு.....


அடிமுதல் கலக்கும்

மிரட்டும் தோற்றத்துடன்

கூரிய முட்களும்

பாரிய கிளைகளுமாய்

பிரமாண்டமாய் காடு

என்கண் முன்னால்...


பயனில்லாத அதனை

பங்கம் ஏதுமின்றி

எப்படி அழிக்கலாம்

என்ற சிந்தனையில் நான்

இருக்கும் வேளையில்.....


என்னையும் தாண்டி

சருகொன்றைக் கொத்தியபடி

கருவொன்றைச் சுமந்தபடி

கூடுகட்ட இடம்தேடி

அந்தக்

காட்டுக்குள் மறைகிறது

சிட்டுக் குருவி

ஒன்று ..............

.

Saturday, November 13, 2010

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !




கிடைக்கக் கூடும் விடை ...!

சிறைப் பிடிக்கப்பட்ட கோபத்தில்

சீற்றத்தோடு சுற்றிவருகிறது

கூண்டுக்குள் சிங்கம் ஒன்று....


விடுதலையின் வேகத்தை

தூரிகையால் சிறைபிடிக்க

தீரத்தோடு காத்திருக்கிறான்

தூரத்தில் ஓவியன் ஒருவன்


சிதைந்த ஓவியனோ !?

அல்லதொரு

சிறந்த ஓவியமோ !?........

இரண்டில் ஒன்று

இறுதியில் கிடைத்துவிடும்....


கேயாஸ்தியரியில் (chaos theory)

புதைந்திருக்கக் கூடும்

உங்களுக்கான உறுதியான விடை .....!


.

முளையிலேயே கிள்ளப்பட்ட........


அவர்களைப் போலவே................... :

அவர்களைப் பின் தொடர்ந்தும்

அவர்களின் முன் தொடர்ந்தும்

அவலத்தை விலக்கச் சொல்லியும்

அசிங்கத்தை விளக்கிச் சொல்லியும்

அவர்களின் முகத்தினை நோக்கி

அரற்றிக் கொண்டே இருக்கிறேன் நான்


எனது அரையின்மேல்

குவித்த பார்வையுடன்

குவிந்த புருவங்களுமாய்....

குறையெதையோக் கண்டதுபோல்

குனிந்து கிசுகிசுப்பாய்

தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே

கவனமாய் இருக்கிறார்கள் அவர்கள்......


வலிக்கும் மனதுள்

வழி என்றெதுவும்

புலப்படவில்லை எனக்கு...


புலம்பலை விடுத்து

அவர்களைப் போலவே

கோவணமின்றி

உலாவத் தொடங்குகிறேன்

நானும்.............!


.

ஆயிரத்தில் ஒன்றல்ல நான் .....!

எனது பார்வையில் .....

சிறப்புத் திறனாளிகளுக்கு

சமர்ப்பணம் )


கண்வழியே தெரிந்து

நீங்கள் அறிந்த யானை

உங்கள் அருகிருக்கும்

ஆயிரம் பேருக்கும்

அப்படியேத்தான் தெரியும்


செவிவழி அறிந்து

உணர்வினால் புரிந்து

எனக்குள் படிந்திருக்கும்

யானையின் வடிவம்

எனக்கு மட்டுமே சொந்தமென்பது

யாருக்காவது தெரியுமா !


எனக்குள் கருவாகி இருக்கும்

இந்த உலகின் உருவத்தை

எந்தவகைக் கருவியாலும்..

எந்தவித அறிவியலாலும்...

அறிந்து கொள்ள இயலாதென்பது

உங்களுக்குத் தெரியுமா !!


எனக்கான உலகை..

நான் உணரும் உலகை..

மற்றொருவர் உணருவதற்கான

வாய்ப்பெதுவும் இனிமேலும்

வாய்க்கப் போவதுமில்லை ...

இது எனக்கானது ....

எனக்கே எனக்கானது ....


கடலின் அலையைப் போல்

விரலின் ரேகையைப் போல்

நெருப்பின் சுடரைப் போல்

தனித்திறன் கொண்டவன் நான்...


உங்களைப் போல நான்

ஆயிரத்தில் ஒன்றல்ல ...


அறிந்துகொள்ளுங்கள் ...


நான்...

ஆயிரத்து ஒன்று ...!

Tuesday, November 2, 2010

பார்......இது(வும்) ஒர் உலகம்....!



முற்றிலும்....

தன்னை மறந்த நிலையில்

கையில் வழியும் பணத்தோடு...

கூட்டத்தின் நடுவில் அமர்ந்து ....

தொடர்பில்லாமல் எதையோ

தொடர்ந்து உளறிக் கொண்டே

இருக்கிறான் அவன்.....


சுற்றிலும்....

தலை சுற்றிய நிலையில்

பையில் வழியும் வெறுமையோடு...

மேலும் எதையோ எதிர்பார்த்து...

தொடர்ந்து எதற்காகவோ

கைதட்டிக் கொண்டே

இருக்கிறார்கள் அவர்கள்......

அருகே.....


முற்றிலும்....

காலியாகிக் கிடக்கிறது

ஒரு கோப்பை.....


சுற்றிலும்....

பறந்து கொண்டிருக்கின்றன

பல ஈக்கள்.........

.

Sunday, October 24, 2010

என்னிலை அறிக்கை...!


அழுகையில் கரையும் இரவுகளோடும்

ஆளுமையில் இறுக்கும் உறவுகளோடும்..

வரப்போகும் தருணம் ஒன்றிற்காக

வரம் வேண்டித் தவமிருக்கிறேன்....


அன்பென்ற பெயர்சொல்லி

ஆக்கிரமித்து எழுவான் அவன்...

அவனைப் பின்தொடர

அயர்ச்சியோடு கை நீட்டி

ஆதரவு கேட்பேன் நான்....

அலட்சியப் பார்வையால் ஒதுக்கி

அங்கிருந்து விலகுவான் அவன்....

தன்னையவன் உலர்த்த

நினைக்கும் பொழுதெல்லாம்

ஈரமாகிக் கொண்டிருக்கிறேன் நான்....


உரிமை என்ற உத்திரவாதத்துடன்

அவனது சுற்றத்தாரின்

அழுத்தும் தாக்கத்தாலும்

கொழுத்தும் வெப்பத்தாலும்

உருகிக் கொண்டிருக்கிறேன் நான்.....


என்னில்

கை நனைத்து

கால் அலம்பி

முகம் கழுவி

முதுகு தேய்த்து

தாகமும் தணித்து

மிதப்பாய் இருக்கிறார்கள் அவர்கள்....


எதற்கும் தயாராய் இருக்கச்

சொல்லி வையுங்கள் அவர்களிடம்....


அவர்கள் எதிர்பாராத தருணத்தில....

வரக்கூடும் ஒரு

காட்டாற்று வெள்ளம்............!

வந்ததொரு வாய்ப்பு


ஓட்டைகளால் வேயப்பட்ட

ஓலைக் குடிசையில்

சமையலை மறந்து

ஊமையாகிப் போன பாத்திரங்கள்....


அடைத்த செவியோடும்

ஒட்டிய வயிறோடும்

ஒரு ‘கொதிக்கும் கானம்

கேட்கத் தவமிருக்கிறேன் நான்.....


எதிர்பாராமல்

வந்ததோர் வாய்ப்பு.....


அவசர அவசரமாய்

பாத்திரங்களை எடுத்துப்

பரப்பி வைக்கிறேன் ...........


தாள லயத்தோடு

ஆரம்பமாகிறது கச்சேரி


ஏற்கனவே பெய்யத்

தொடங்கி இருந்தது மழை............!

.

ஏதோ புரிய ஆரம்பிக்கிறது எனக்கு ...!


























காலை வேளையில் கடுமையாய்

கலவரப் படுத்துகிறது மேகம்....


அடிக்கும் காற்றில் தடுமாறி

கூட்டுக்குள் அடைகிறது காகம்....


நடுஇரவுப் பொழுதைப் போல்

திரண்டு நிற்கிறது இருட்டு.....


தரையில் தஞ்சம் புகுந்திட

தயாராகிக் கொண்டிருக்கிறது மழை...


நிலையைத் தாண்டிய பின்னரும்

நிலையில்லாமல் தத்தளிக்கிறது மனம்...


ஒரு நாள் மட்டும் தானே...

விடுப்பு எடுத்தால் என்ன..!

குடியா முழுகி விடும் ?

ஒருசில திட்டங்களோடு

ஓய்வெடுக்க முடிவெடுத்து

கதவைத் திறக்கக் கைவைக்கிறேன்


உணவைத் தேடியபடி

கதவின் இடுக்கின் ஊடாக

வீட்டின் உள்ளிருந்து

வெளியேறிக் கொண்டிருக்கின்றன

வரிசையாய் எறும்புகள்...........

.