இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Friday, April 1, 2011
மறையும் பழைமையை நிலைநிறுத்த முயலும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்...!
Wednesday, March 23, 2011
கிராமத்துக்குள்ளே வாரீயளா..........!
35) முக்கியமான கதையை மறந்துட்டேன் பாருங்க .................
Monday, March 21, 2011
சில சிங்க(X) நாய்கள்................
அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் ...22/03/11....
(செய்தி :அன்னையின் அஸ்தி வங்கக்கடலில் கரைக்கப் படுகிறது)
சில நடுநிசி(X) நாய்கள் :
ட்ராய்(TROY)ன் போர்தர்மத்தை
நாய்களிடம் எதிர்பார்த்து
தாய்மணணில் பிடியை
தற்காலிகமாய் இழந்து
பொய்யாகிப் போனது போன்ற
மாயத் தோற்றத்தின்பின்
அரங்கேற மறைந்திருக்கிறது
பல்லாயிர ரத்த சரித்திரம் –
நாளைய உலகம்
போற்றக் காத்திருக்கும்
நிகழ்கால யுத்த சரித்திரம் ....!
அதீத நம்பிக்கையோடு
வெற்றியை நிர்ணயித்து
தேதியை நிச்சயித்து
சேதியை அறிவித்தும்........
பெரும் கண்டங்கள் துணயோடு
வருங்கால வல்லரசுகள் இணையோடு
வான்வெளியை வளைத்துப் பிடித்தும்
கடற்பரப்பை வலைக்குள் அடைத்தும்.....
கைப்பற்ற வேண்டிய ’இலக்கு’
காற்றில்கரைந்ததால் கலங்கி
கையிலிருந்த நகலை கசக்கி எறிந்து
அசலின் கதைமுடிந்ததாய் அறிவித்து
வெளியில் ஆட்டம் போட்டு
உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன
இலக்கின் இலக்காகிப்போன
சில சிங்க(X) நாய்கள்................
’விலங்கிடமிருந்து’ காப்பதாய்
உலகுக்குக் காட்டிவிட்டு
அப்பாவிகளைப் பிடித்து
வேலிக்குள் அடைத்து
உலகை ரட்சிக்கும்
பெரியண்னன்கள் ரசித்திருக்க
வெறிகொண்டு வேட்டையாடி
ருசித்துக் களைத்திருக்கின்றன
சிங்கமென்ற நினைப்பில்
காவல் பொறுப்பிலிருக்கும்
சில சிங்க(X) நாய்கள்............
பசித்தவர் கஞ்சிக்கும் நீருக்கும்
வரிசையில் ஏங்கி நிற்க .....
‘புளிசாதம்’ என்றொரு குரல்
சன்னமாய்க் கேட்டு வைக்க....
தலைமுதல் கால்வரை கவசமும்
தளும்பத் தளும்ப ஆயுதமிருந்தும்
முள்வேலியைத் தாண்டி
தலைதெறிக்க பாய்ந்தோடி
பங்கருக்குள் பதுங்குகின்றன
முன்னர் மகி(ழ்)ந்த
சில சிங்க(X) நாய்கள்.......
உறுப்பிழந்தவரையும்
உள்ளம் பேதலித்தவரையும்
முள்வேலிக்குள் நெருக்கமாய்
அடைத்து வைத்திருப்பது
’தலை நிமிர்ந்த வீரத்தால் அல்ல......
தன்னுயிர் பற்றிய பயத்தால்’ என்பதை
உலகறியச் செய்து கொண்டிருப்பதும்
’அதே முள்வேலி’ தான் என்பதை
இன்னும் உணராமல் இருக்கிறார்கள்
சில சிங்க(X) நாய்கள்...............
பீனிக்ஸ் பற்றிய கற்பனையில்
பற்றிய பயம் தொற்றிக் கொள்ள
சிதையைச் சிதைத்து
புழுதியில் கலப்பதாய் நினைத்து
எம்தலைக் கிழவியின் சாம்பலை
எம்மண்ணிலேயே விதைத்து
ஏங்கிப் புதைந்திருக்கும்
எம்குல வித்துக்களுக்கு
தம்மையும் அறியாமல்
உரம் இட்டுச் சென்றிருக்கிறார்கள்
சில நடு நிசி நாய்கள்
..........சிங்க(X) நாய்கள்
இப்போதைய எகிப்தும்
துனிசியாவும் லிபியாவும்
உரத்துச் சொல்லும்
நாளைய வரலாறு ஒன்றை
இன்றைய உலகுக்கு..................
”பூஜ்ஜியத்துகுள் இருந்து
பொங்கி வந்தவர்கள் பொடியன்கள்........
இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.....”
Tuesday, March 8, 2011
14 : மகளிர் தினமாம்...மகளிர் தினம்...! ...தேவையா இது ...!!

ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....
தேவையா இதுபோன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!
தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்
வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்
படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்
வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்
உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்
ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்
எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்.....
பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!
Saturday, February 26, 2011
13.இந்த நூற்றாண்டின் நிலவரம்...கலவரமாய்..........!

போர்க்களம்.....
தம் கலையைக் காட்ட
தம்மை நிலை நாட்ட
எதிர் எதிர் துருவங்கள்
வெற்றியைக் குறிவைத்து
வெறியுடன் மோதும் ஆடுகளம் ...
அடியார்கள் கூடிவர
பெரியோர்கள் பாடிவர
தேவதைகள் ஆடிவர
அமைதியாய் வருகிறார் கடவுள்
அரக்கர்கள் வெடிவெடிக்க
ஆயுதங்கள் சடசடக்க
அங்கங்கள் துடிதுடிக்க
ஆர்ப்பரித்து நிற்கிறான் சாத்தான்
பாந்தமாய் நடுவர் கொடியசைக்க
பார்ப்போர் மனதுக்குள் இடிஇடிக்க
இந்தப் பூகோளம் ஒடுங்கிநிற்க
அந்தக் பாதாளம் நடுங்கிநிற்க
தொடங்கிய போராட்டம்....
கடுமையான விதிமுறைகளுடன்
கொடுமையான வழிமுறைகளுடன்
வியூகங்களைப் புரிந்துகொண்டும்
சாகசங்களால் முறியடித்தும்
சமயத்தில் சறுக்கிவிழுந்தும்....
முடிவேத் தெரியாமல்
விடைகாண முடியாமல்
விடாமல் தொடர்கிறது..............
ஏற்கனவே ‘எங்கோ’
செய்துகொண்ட ஒப்பந்தப்படி
கடவுள் வெற்றிபெற்றதாக
’வழக்கம் போலவே’
அறிவிக்கப் படுகிறது......
தேவதைகளின் எண்ணிக்கையும்
கூடிக்கொண்டே இருக்கிறது
நடுவரின் அந்தப்புரத்தில் ....!
[கரு : யாழி]
Wednesday, February 23, 2011
12.அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!
அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :

ஆம்.....
இன்றோடு....
நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்
நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்
அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...
எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...
என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...
எதற்கும் உண்டே எல்லை..
இன்றுடன் கதையை முடித்துவிட்டால்
இனியும் தொடராது இந்தத் தொல்லை...
பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்
பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை
வலதுகால் வைத்து விளக்கேற்றி
எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...
அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா
எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..
ஆம் இல்லை என்பதே
அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்
அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்
என்னை வேகவைக்கும் சாட்டைகள்
சைகையால் உரைப்பாள் – சமயத்தில்
கண்சாடையால் உறைப்பாள் - நான்
சல்லி சில்லியாய் உடைவேன்
சுக்கல் சுக்கலாகி மடிவேன்
என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்
பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்
நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்
பக்கத்து ’மெத்தை’யையே அடைத்துவிடலாம்
ஒருவேளை இருக்கலாம்
ஏதாவதொரு பழைய மனச்சுமை...
அவளாக இறக்குவாளென
அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்
இன்று தலைக்குமேல் வெள்ளமாகி
பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது
இதோ..
வந்து நிற்கிறாள் அவள்..
திட்டமிட்டபடியே
காலணிகள் இடம்வலமாய் உதற
முன்னால் உள்ளதெல்லாம் சிதற
பாத்திரங்கள் உடைந்து நொறுங்க
பத்திரங்கள் நைந்து பறக்க.......
உருவம்தான் மாறவில்லையே தவிர
மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்
இன்றுதான் அவளது
உலகவாழ்க்கை வரலாற்றிலேயே
முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை
நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்
மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி
வாய்திறந்து பெரும்குரலெடுத்து
‘ஓ’வென அழ ஆரம்பிக்கிறாள் .
ஆகா...
இதற்குத்தானே காத்திருந்தேன்....
ஓடிச்சென்று கட்டியணைத்து
முதுகை வருடி தலையைத் தடவி
மெல்ல அவள் காதருகில்
செல்லமாய் கிசுகிசுக்கிறேன்
”.உனக்கு பாடவும் தெரியுமா..?
முகாரி ராகம் இது ...!”
சட்டென அழுகையை நிறுத்தி
சரேலென என்னை விலக்கி
விறுவிறுவென எதையோ தேடி
குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்
எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..
பொங்கும் வெட்கத்துடன்
இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி
அறையெங்கும் எதிரொலிக்க
அருவியாகச் சிரிகிறாள்
”அடடா.... இது ஆனந்த பைரவி......!”
.gif)
கரு : மகாபாரதம் / கண்ணன்
Monday, February 21, 2011
11.பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!
.gif)

உச்சந்தலையில் விழுந்திருக்கிறது பல்லி...
இடிந்துபோய் முடங்கிக்கிடக்கிறாள் அவள்...
முன்பொருமுறை...
அப்பாவின்மேல் விழுந்ததற்கே
படபடத்து...பதறித்துடித்து
பூசையும் பரிகாரமுமாய்
ஊரையே கூட்டி...
வீட்டையும் இரண்டாக்கி...
தலைகீழாகப் புரட்டித்தான்
போட்டிருக்கிறாள் அம்மா ..
ஓ.....
இது உச்சந்தலை ....
நினைக்கும்பொழுதே உள்ளம்
வெடித்துச் சிதறுகிறது அவளுக்கு...
சோதிட...எண்கணித...வாஸ்து...
வல்லுனர்களைத் தேடியும்
பெயரியல்...ப்ரசன்ன...நவரத்தின...
நிபுணர்களை நாடியும்
வீதிவீதியாய் படபடப்புடன்
அலைந்து கொண்டிருக்கிறது பாதிக்குடும்பம்
அவளுக்கு விளங்கச் சொல்லி
துலங்கவைக்கும் வழிதெரியாமல்
பரிகாரமுறையும் சரியாகப்புரியாமல்
தொலைக்காட்சியின் முன்
விடைக்காகப் பதட்டத்துடன்
நகம்கடித்துக் காத்திருக்கிறது மீதிக்குடும்பம்
தனியே....
பல்லி விழுந்த
மரப்பாச்சி பொம்மையின்
தலையைத் தடவியபடியே
தேம்பலுடன் விரல்சப்பி
தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்...
திருதிருவென விழித்தபடி...
அருகிலேயே இருக்கிறது
’அந்த’ ரப்பர் பல்லியும்.........
