Monday, January 10, 2011

யுகம் கடந்தும் இருக்கிறான் உயிரோடு..........




உள்காமம் மறைத்து

கிடைக்கும் இடைவெளியில்

வசரகதியில் அத்துமீறி

கண்ட பாகங்களில் பாய்ந்து

மேய்ந்து திரும்பும் கண்கள்....


குறுநகைப் போர்வையுள்

குதறும் வாய்ப்புக்காக

மறைந்து காத்திருக்கும்

வெறிகொண்ட பற்கள்....


நம்பவைக்கும் நோக்கில்

நாசுக்காய் வலைவீசி

எண்ணியதை சாதிக்கும்

வண்ணம் பூசிய வார்த்தைகள்....


தம்மில் சிறியோரை

தலை நிமிரவிடாது

தட்டியபடியே இருக்க

பரபரக்கும் கைகள்.....


ம்ம்ம்..............


யுகங்கள் கடந்தும்

ஆழ்மனதின் அடியில்

அடர்இருளின் மடியில்

தற்பொழுதும் உயிரோடு

மிச்சமிருக்கத்தான் செய்கிறது....

அந்த.......

கற்கால மனிதனின் எச்சம்...........

.

Sunday, January 9, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(1) விளையாட்டாய் வெல்லுவோம்.


மிக சமீபத்தில் குழந்தைகளின் தேர்வு சமய சந்தேகங்களைத் தீர்த்துவைக்க விளையாட்டாகத்தான் கணக்கு என்ற கடலுக்குள் இறங்கினேன் ...
கணிப்பொறி (CALCULATOR) இன்றி... ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலவில்லை என்னால்.

குழந்தைகள் சிரித்து / கிண்டலடித்து... மீண்டும் என்மன வேதாளத்தை முருங்கைமரம் ஏறச் செய்துவிட்டனர்...

ஏதாவது செய்தாக வேண்டுமே ...கணக்கு சம்பந்தப்பட்ட எளிய வழிமுரைகளைத் தேட ஆரம்பித்தேன்....

கூட்டல்/வகுத்தல்/பெருக்கல், ரூட், ஸ்கொயர் ரூட், பின்னக் கணக்குகள் - இவற்றில் ’கால்குலேட்டர்’ இல்லாமல் மிக வேகமாய் விடைகாண மிக எளிய முறைகள் இருப்பதை ‘ப்ரைனெட்டிக்ஸ்’ முறையில் அறிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் ..

எத்தனை இலக்க எண்ணையும் எத்தனை இலக்க எண்ணால் பெருக்கவோ , வகுக்கவோ ..10 நொடிக்குள் முடியும்....


கணக்கில் எல்லாம் செய்ய முடியும் என்ற நிலைவரை போக முடியும் .......

முக்கியமாக குழந்தைகளுக்கான மிக முக்கியமான தூண்டுதல் / செய்திகள் உள்ள இழையாக இது இருக்கப் போகிறது என நம்புகிறேன் ...
இந்த இழை முடியும் தருவாயில் வாய்ப்பாடுகளே தேவை இல்லை ..என்ற நிலை கூட உருவாகலாம் (எனக்கு:)....

[அவங்களுக்கு ‘சார்ட் கட்’ சொல்லிக் கொடுத்து ...பேர் வாங்கிக்கலாம் :))))) ]


தொடக்கம் :
இது தெரிந்துகொள்லலாம் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் / தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கொண்டோருக்குமான இழை :))...

இப்போது ஆரம்பப் பாடங்கள் எல்லாம் ‘ இதான்..எனக்குத் தெரியுமே...!’ என்று சொல்லச் சொன்னாலும் ....
தொடர்ந்து வருவோருக்கு ...’அட..ஆமாம்..இவ்ளோ எளிதா....!’ என சொல்லவைக்கும் அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ....

உங்களின் ஆதரவு மிக முக்கியம் ..

கணிதத்துறை சார்ந்த பெரியோரே.....ஒரு வேண்டுகோள்.. தவறுகள் வரும் இடத்தில் ...தவறாமல் சுட்டிக் காட்டுங்கள் ...
உடனடியாகத் திருத்தம் செய்துகொள்ளலாம் ....

தொடங்கி வைக்கிறேன் ... இது ஆரம்பம்தான் ..அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் .... ‘ப்ரைனெட்டிக்ஸ்’ பின்னர்வரும் :)

அ]எளிய வழிமுறை( சார்ட்கட்)

1) இரண்டு இலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் :
a) . 62 x 11
செய்முறை :

# முதல் எண்ணையும் , இரணடாம் எண்ணையும் ஒரு இடைவெளி
விட்டு எழுதுங்கள் ....................................................................................................... 6 _ 2

# இரு எண்களையும் கூட்டி நடிவில் இடுங்கள் ( 6+2= 8) .......................................6 8 2

விடை = 682


b) .

73 x 11
# முதல் எண்ணையும் , இரணடாம் எண்ணையும் ஒரு இடைவெளி
விட்டு எழுதுங்கள் ...................................................................................................... 7 _ 3

# இரு எண்களையும் கூட்டி நடிவில் இடுங்கள் ( 7+3= 10) ... ...............................7+1 0 3
(ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை
முந்தைய எண்ணுடன் கூட்டவும் ) .............................................................. = 8 0 3

விடை = 803


2)மூவிலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் : 234 x 11

செய்முறை :

# முதல் இலக்கத்தையும் , கடைசி
இலக்கத்தையும்
இரு
இடைவெளி விட்டு எழுதுங்கள் .................................................................................... 2 _ _ 4

(முன்பு ...ஈரிலக்க எண்ணிற்கு ஒரு இடைவெளி கொடுத்திருந்தோம்... இங்கே மூவிலக்கம் என்பதால் இரு இடைவெளிகள் )


#இனி வலமிருந்து இடமாக (கடைசியிலிருந்து ) வரவேண்டும் .
கடைசி இரு எண்களையும்(3வது ,2வது) கூட்டி கடைசியிலிருந்து
முதல் இடத்தில் இடுங்கள் ( 4+3= 7) ...............................................................................2 _ 7 4

2வது ,1வது இலக்க எண்களைக் கூட்டி அடுத்த இடத்தில் இடுங்கள் (3+2=5)........2 5 7 4

விடை = 2574

கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் ...விடாமல் மறுமுறை படிக்கவும் :))
எனக்கு இந்ததுறை புதியது ...சில வார்த்தைகள் தவறாக இருக்கலாம்... மன்னித்து திருத்திவிடுங்கள் ...

Thursday, January 6, 2011

புலம் பெயர்ந்ததோர் உடலின் புலம்பல்


அது ஒரு

ஐப்பசியின் மழைக் காலம்….

தூங்கும் நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி நீ..

உன்னைத் தொங்கியபடி நான்


உலகமே ஒரு நொடியில்

எனது காலடிக்கும் கீழாகிப்போனது


என்னை மறந்தேன் நான்..மிதந்தே

எங்கெங்கோ பறந்தேன் நான்


இது ஒரு

வளைகுடாவின் பனிக்காலம்...

ஏங்கியபடி நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி அங்கே நீ..

உன்னைத் தொங்கியபடி எனது நினைவுகள்..

அவற்றைத் தூக்கியபடி இங்கே நான்..


ஏனோ ஒரு நொடியில்

எல்லாமே தலைகீழாகிப்போனது


எனதுலகை இழந்திருக்கிறேன்.. இங்கே

ஏதோ இருக்கிறேன்...........

Wednesday, January 5, 2011

ஓவியமாய் ஒருத்(தீ)தி :

அழகுக் கவிதைகள்..

அதீதக் கற்பனைகள்..

சிறுசிறு சீண்டல்கள்..

திடீர் தீண்டல்கள்...கலந்த

அற்புதக் கலவையிலிருந்து

எனதுவிரல் தூரிகையால்

வண்ணம் எடுத்துத்

தீட்டத் துவங்குகிறேன் நான்.....


சின்னச் சிணுங்கல்கள்..

செல்ல மிரட்டல்கள்..

தள்ளி உதறுதல்..

வெட்டி விலகுதல்...என

தூரிகையின் வண்ணங்களுக்கு ஏற்ப

நொடிக்கொரு ஓவியமாய்

மாறிக்கொண்டிருக்கிறாள் அவள்........


[நன்றி :கரு: இயற்கை சிவம்]

Monday, January 3, 2011

நேரான பாதையை விட்டு விலகியும்....

திரும்பிப் பார்க்கிறேன் :

நிதானமாய்ச் செல்லும்

நேரான பாதையைத் தவிர்த்து...

சுற்றிச் சுழலும்

மாற்றுப் பாதையைத் தேர்ந்து...


சீரற்ற வேகத்தில்

சரேலென வளைந்து...

இடமும் வலமுமாய்

திடீரென நுழைந்து...

குறுக்கும் நெடுக்குமாய்

வேகத்துடன் விரைந்து...

திகைக்கவைக்கும் திருப்பங்களுடன்

திசையெல்லாம் பயணித்து.........


முடியுமிடத்தில் இருந்து

திரும்பிப் பார்க்கிறேன்


அழகாய்

உருவாகி இருந்தது

கோலம் ஒன்று ............!

Sunday, January 2, 2011

முயல்.......!

ஊடே விழுந்து வழிமறிக்கும்

கூட இருந்தே குழிபறிக்கும்

உலகின் தரம்பார்த்து

உடைந்து கலங்காமல்

நிமிர்ந்தே

ஒருமுறை

களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....


நிலவும் உன்கையில் கிட்டும்...

உலவும் மேகமும் முன்வந்து கைகட்டும்...

மின்னும் நட்சத்திரங்களும் உனக்கு எட்டும்...

இன்னும் முயன்றுபார் அந்த

விண்ணும் உன்தலையில் தட்டும்.......


Sunday, December 26, 2010

அறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...

என்னவள்

தாய்மையுடன் சென்றிருக்கிறாள்


அவளது தாய்வீட்டுக்கு நேற்று..


வெள்ளி இல்லாமல்

துடைத்து விடப்பட்ட

நேற்றைய வானம் போலவே

ஒரேநாளில் அனைத்தும்

அணைந்து போனது எனக்குள்...


அட....

இன்றும் வானில்

நேற்றைப் போலவே....

எங்கும் காணவில்லை

மின்னும் அந்த நட்சத்திரங்களை....


எதிரே..

வரண்டு போன

பளிங்குத் தரையைப் போல

வெறுமையாய் வெளிர்வானம்..


திடீரென வீசத்துவங்கியது

மண் வாசம்...

கடும் கோடையிலும்

மழையின் வாசம்...


என்வீட்டு முற்றத்தில் மட்டும்

மேகங்கள் திரண்டொரு

மழைக்கான முன்னேற்பாடு...


வாசலில் இருந்த

கோலத்தின் கோடுகளை

அழிக்கும் முயற்சியில்

மும்முரமாய் இருக்கிறது மழை...


அட

அப்போதுதான் கவனிக்கிறேன்


அதுவொன்றும் சராசரி மழையன்று...

இதுவொரு மீட்புப் போராட்டமென்று.....


இரண்டு நாட்களுக்கு முன்

என்னவள் வரைந்து......இன்னமும்

அழியாத கோலத்தின்

வளைவுகளுக்குள் சிக்கி

தரையெங்கும் இறைந்து

அடைபட்டுக் கிடக்கின்றன

அந்த நட்சத்திரங்கள்

புள்ளிகளாக ...................!

.

Wednesday, December 22, 2010

பெண்ணியத்தைப் போற்றடா....!



பாதி(50%) கேட்டு

நீதியை நிலைநாட்ட

நாளை நடத்தப்போகும்

மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஒரு வருங்கால

வரலாறாகப் போகிறது.......


போராட்டமாய்த் தொடங்கி

ஒருபுரட்சியாய் முடியப்போகிறது

நாளைய பொழுது.....


பெண்ணியத்தைப் போற்றவும்

பெண்ணினத்தின் முன்னேற்றவும்

தலைவன் நானே தெருவிலிறங்கி

என்னுயிரையும் தாரைவார்த்து

தீக்குளிக்கவும் தலைமை

ஏற்பேன் அப்பொழுது.......


நாளைய எனது உரை....

ஆண்களின் சுயநல முகத்திரையை

அகற்றும்படி அமையப் போகிறது...

ஒவ்வொரு வார்த்தையிலும்

பொறி பறக்கப் போகிறது...

கூடி இருக்கும் கூட்டத்துள்

தீப் பிடிக்கப் போகிறது....


இதோ.....

33%தான் தருவோமென

வேசமிட்டிருக்கும் ஆண்முகத்தை

ஆவேசமாகக் கிழித்து வெளிப்படுத்தும்

வாசகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்

அந்திசாய்ந்த வேளையில்.........


மெல்லக் கதவுதிறந்து

உள்ளே வருகிறாள் அவள்...!


முன்னாலிருந்த அந்த

பாதி மீதியிருந்த கோப்பையை

ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கிறேன் நான் ...


இனி

தேவையிருக்காது இதற்கு ....!!

Saturday, December 11, 2010

பாரதியின் வளர்ப்பாகிய நான் ...!


பாரதியின் பிறந்த நாளுக்கு ஒரு சமர்ப்பணம் :



வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..








(வெண்பா : நேரிசை)
.

Thursday, December 9, 2010

எங்கே போனது மனிதம்.......?


தாண்டிச் செல்வோரெல்லாம்

சொல்லிவைத்தார்ப் போன்று

கவனிக்காதது போல தவிர்த்துவிட...


சாலையைக் கடக்க

வழியற்ற நிலையில்

விழியற்ற ஒருவர்..........


ஒருகரம் கொடுத்தால்

மறுபுரம் சென்றிடுவாரே நொடியில்...!


ஒருமணி நேரமாகியும்

ஓராயிரம்பேர் கடந்தும் - அதில்

ஒருமனிதன் கூட வரவில்லையே...?


என்னாயிற்று மனித நேயம் ??


விடையைக்

கணிக்க இயலாமல்

நிகழ்வைக்

கவனித்து கொண்டிருக்கிறேன்


நான் எனது

சன்னலின் வழியே ........

.