இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Wednesday, August 14, 2013
ஒரு மகளின் அப்பாவாகிய நான் ...!
+2 ரிசல்ட்
கோவையில் நான் ..செல்போன் அடிக்க எடுத்தேன்
”அப்பா .. நான் 1132 மார்க்”
”ஆகா ..கலக்கீட்டியேடா ... இதோ வாரேன் ..”
எல்லாத்தையும் பாதியில நிறுத்திவிட்டு கெளம்பியாச்சு ..4மணி நேரம்
தூத்துக்குடி..கேக்கும் சாக்லேட்டுமாக துள்ளிக்குதித்து வீட்டுக்குள் நுழைய ..
அட என்ன் இது ..அங்கே (ஒரு அமானுஷ்ய) அமைதி .... ஏன் ..என்னாச்சு ..
”ஏன் எல்லாரும் இப்பிடி இருக்கீங்க ?”
”அவளையேக் கேளுங்க”
”என்னடே ..”
”அப்பா.. காலேஜுக்கு நான் வெளியூரெல்லாம் போக மாட்டேன் .. வீட்ல இருந்துதான் போய்ட்டு வருவேன் ... இப்டீன்னு தெரிஞ்சிருந்தா நான் மார்க் குறைச்சலாவே எடுத்திருப்பேன்”
”அட..இதுக்குத்தானா .. கோவைல நம்ம காலேஜ்லயே ( நான் கட்டிய கல்லூரி அது..தற்புழுதும் வேலை நடக்கிறது அங்கே ) சேர்துக்கலாம் .. அங்கே வீட்ல இருந்து போய்க்கலாம் ..அடுத்த வருசம் தம்பியும் காலேஜ்தானே..அவனும் வந்திருவான் ,.. அப்புரமா எல்லாரும் அங்கேதானே”
இருண்டுகிடந்த முகத்தில் லேசாக வெளிச்சம் ...
”அங்கே என்கூட யார் இருப்பா”
”இப்போ ஆச்சி இருக்கட்டும் .. நான் வாரம் 2 நாள் வந்திருவேன்..சனி ஞாயிறு அம்மா வந்திருவா ..பிறகென்ன”
”ஐஈஈஈஈ..ஜாலி..ஜாலி...” அவள் மகிழ்ச்சியில் குதிக்க நண்டு சுண்டுகள் எல்லாம் சேர்ந்து கொள்ள வீடும் சேர்ந்து குதிக்க ஆரம்பித்த்து ..
நான் நழுவி என் அறைக்குள் நுழைந்தேன் ..பின்னாலேயே வீட்டம்மா .சாந்தி..
அவள்முகம் அப்படியே முன்பார்த்த மகள்முகம்போல் இருண்டு கிடந்த்து ..
கூடுதலாக கண்ணும் கலங்கி இருந்த்து
”இப்போ உனக்கென்ன?”
”ஏங்க ,, நீங்க சொன்னதெல்லாம் உண்மையா”
”பாப்போம்”
”என்ன பாப்போம் ..அப்போ பொய்யா சொன்னீங்க”
”பாதி”
அவள் கண்ணைத் துடைக்க .. நான் கோபமானேன்
”என்ன இது சின்ன பப்பா மாதிரி அழுதுகிட்டு ... அவ என்ன சின்னப்புள்ளயா .
நல்லாப் படிக்கணுமுன்னா வெளியே போய்த்தானே ஆகணும் .. குழந்தை மாதிரி அழுது மத்தவங்களையும் குழப்பி விட்ட்டு விடாதே”
வெடுக்கென்று திரும்பினாள் ”உங்களுக்கென்ன நீங்க ஆண்புள்ள”
’என்ன இப்படி சொல்லீட்டாளே’
பிறந்ததிலிருந்து ஒருநாள்கூட அவளில்லாமல் தூங்கியதில்லை..இருக்கட்டும்
தும்மினால் கூட மகள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் – இருக்கட்டும்
இப்போ உனக்குத் தும்மல் வரும் பாருன்னு அம்மா மகளிடம் சொல்வாள் – இருக்கட்டும் .. ஆனாலும் நடைமுறை வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே .. அதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் .. இதுகூடப் புரியாமல் வயசாகி என்ன ப்ரயோசனம் ?
”இனிமே என்முன்னால கண்ணுல தண்ணிவுட்டேன்னா பாத்துக்கோ .. என்னக் கோவப்படுத்தாம நிலைமையப் புரிஞ்சுக்கப் பாருங்க”
மகளைவிட அம்மாவுக்குத்தான் சொல்லிப் புரிய வைக்க நாளாகுமோ .. பார்ப்போம் ..
அவளுக்கு படம் வரைவதிலும் , புதியனவற்றை உருவாக்குவதிலும் ஆர்வம் அதிகம் என்பதால் ‘ஆர்க்கிடெக்ட்’ ஆகணும்/ ஆக்கணும் என்றே முடிவாகிவிட்ட்தால் .. NATA விலும் நல்ல தேர்ச்சி ( ஒரு மாதக் கோச்சிங் க்ளாஸ் இதற்கு உண்டாம் ..ஆனால் இவள் வீட்டிலிருந்தே 150 ரூ புத்தகம் மட்டும் தான் வாங்கிப் பார்த்திருந்தாள் )... மாநிலக் கோட்டாவில் 7வது இடம் வாங்கிவிட்டாள் .
வீட்டில் எனக்கு சிக்கல்கள் ஆரம்பம்
”இந்தாங்க .. நல்லா சப்பிட்டுக்கோங்க இன்னிக்க்கு ..இந்தமாதிரி இனிமே வைக்க மாட்டேன் ..இது அவளுக்கு ரொம்ப்ப் பிடிக்கும் ..லீவுல அவ வ்வார அன்னிக்குத்தான் இதெல்லம் கெடைக்கும்”
”இந்தாங்க ..செர்ரி பழம் .. நல்லா சாப்பிட்டுக்கோங்க இன்னிக்கு....”
”இந்தாங்க எலுமிச்சை சர்ப்பத் நல்லா....”
”இந்தாங்க பாயாசம் .....”
”இந்தா...”
”இ..”
ஆகா .. நம்மள கொல்றாய்ங்களே
கோவைக் கல்லூரியின் சேர்மன், முதல்வர் எல்லாரிடமும் பேசி எல்லா ஏற்பாடுகளும் முடித்து வைத்தாகிவிட்ட்து ..
சென்னையில் கவுன்சிலிங்கிற்கு 3 நாட்களுக்கு முன்பு
”அப்பா நான் மதுரைல படிக்கிறேனே ... ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடலாம்பா ... ப்ளீஸ்ப்பா”
”என்ன இப்போப்போயி இப்படிச் சொல்ற ,, மதுரைன்னா ஹாஸ்ட்டல்லதான் தங்கணும்..பரவாயில்லையா ?”
”பரவாயில்லப்பா .. நெனச்சா நீ வந்து கூட்டிப்போயிருவேல்ல”
”பார்ப்போம்டே”
பாவமாக இருந்தது ..
என்ன செய்ய .. கோவையில் என்ன பதில் சொல்ல ..குழப்பத்திலேயே இரவு கழிந்த்து
மறுநாள் காலை.. சென்னைக்குக் கிளம்பியாகி விட்ட்து.. வழியில் மதுரைக் கல்லூரிக்குச் சென்று பார்த்துவிட்டு ( எல்லாருக்கும் பிடித்துப்போய் விட்ட்து.. அதுதானே அவுங்க திட்டமும் கூட : நன்றி மதுரை நட்புகள் பாலாஜி பாஸ்கரன், சுப்புரமணி, உதயன் ) சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்று மறுநாள் நிகழ்வுக்காக ஒரு ஒத்திகைப் பார்த்துவிட்டு
சென்னை நண்பர்களைப் பார்த்துவிட்டு (’அவளை சென்னைலயே சேருங்க .. நாங்க எங்க குழந்தைப் போலப் பாத்துக் கொள்கிறோம்’ / நன்றி – ஆசாத் ஜீ , விழியன், உதயன், மோர்சுப்ரா) இரவு சிறிது குழப்பத்துடனேயே உறங்கச் சென்றோம்
அண்ணா பல்கலைக் கழகம் :
சில பல குழப்பங்களுக்கிடையே ... ஆரம்பக் கட்டங்களை எல்லாம் தாண்டி இடம் தேர்வு செய்யும் பகுதி ... கால் லெட்டரைக் கொடுத்துவிட்டு
கம்ப்யூட்டர் முன் நான் , அவள் ...
”எந்த காலேஜ் வேணும் உங்களுக்கு?”
”கோவை அல்லது மதுரைல கிடைக்குமா பாருங்களேன்”
கொஞ்சம் அமைதி
திடீரென்று பக்கத்து மேசையில் ஒரு பெண் ‘ய்ய்ய்ய்ய்ய்யெஸ்ஸ்ஸ்’ என்று வேகமாக அலற, அவளது அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் குதிக்க ..
(அவங்க கேட்ட காலேஜ் கிடைத்து விட்டதாம் )
”அமைதி அமைதி” எனக் கூறிக்கொண்டே வந்தார் ஒரு அம்மையார் ..
”என்ன இது ..சுற்றிலும் எத்தனை பேர் பதட்டமா உக்கார்ந்திருக்காங்க பாருங்க .. இப்படி சத்தப் போட்டால் ஏதாவது தப்பா எண்ட்ரி போட்டுட்டா என்னாவது ..”
”உக்காருங்க மொதல்ல” என்று கொஞ்சம் மிரட்டலாகச் சொல்லிவிட்டு .. எங்கள் பக்கம் திரும்பினார் .. ”இவங்களுக்கு என்னவாம்” .. எனக் கேட்டுக் கொண்டே உமாவின் பேப்பர்களை கையிலெடுத்த்தார் ... திரையைப் பார்த்தார் .. என்னைப் பார்த்தார் ...
”அப்பாவா”
”ஆமாம் அம்மா”
”என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க”
”எஞ்சினியர்”
”இப்போ இங்கே என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன்”
நான் திரு திருவென்று முழிக்க
”அவள் ரேங்க் 7 .. தமிழ் நாட்டின் டாப் 40 ஸ்ட்டூடண்ட்ஸ் படிக்கப்போற SAP லயே அவளுக்கு இடம் கிடைக்கும் .. இந்த வாய்ப்பை விட்டுவிட்டு வேற எங்கேயோ தேடிக்கிட்டு இருக்கீங்க”
”அது வந்து ..பக்கத்துல இருந்து ..
”சார் உங்க வசதிக்காக பசங்க வாய்ப்பைக் கெடுத்திடாதீங்க ,, அவ்ளொதான்”
போய்விட்டார் .. ( அவர்தான் SAPன் டீன் SAP = ஸ்ஹூல் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் / அண்ணா யுனிவெர்சிட்டி ) ...
நான் பாப்பாவைப் பார்க்க , அவள் என்னைப்பார்க்க , ஆபரேட்டர் கணினியை பார்த்து ஓகே சொல்லி ஆர்டரை எடுத்துக் கையில் கொடுத்து ”””கண்கிராட்ஸ்” என்றார் .
எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடம் , எத்ர்ர்பார்ப்புகளே இல்லாமல் வந்த எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்துவிட்ட்து ..
”வெளியே காத்திருங்க சார் .. அவங்க மட்டும் இருக்கட்டும் .. ஆர்டரோடு வருவாங்க”
நான் வெளியே போய் நிற்க ..வீட்டம்மா ஆவலாய் ஓடிவந்தார்
”எங்கே?”
”சென்னை!”
”சென்னையா!!!!”
ஒவ்வொரு குழந்தையாய் கையில் ஆணையுடன் துள்ளிக் குதித்துவர ..இவள் மெதுவாக நடந்து வந்தாள் ..முகம் கவலையால் சுருங்கிப்போய் இருந்த்து
”அடுத்தவாரமே ஜூலை 19ல் காலேஜ் தொடங்குதாம்”
ஒருவாரம்..
மிக்க் கடினமான காலமாகிப் போனது எனக்கு
வீட்டில் ஒவ்வோருவரையும் சமாளித்து சமாதானப் படுத்தி , அழுதவர்களை மிரட்டி ஒருவழியாக ஒரு நிலைக்குக் கொண்டுவந்து ... ஒரு லாரி சாமான்களோடு 18ல் சென்னை வந்து சேர்ந்தோம்
சில நிர்வாக்க் குறைபாடுகள் ... அங்கே இங்கே என்று அலைச்சல்கள் ..மனதில் சஞ்சலம் உருவாக்க .. ஒருவழியாய் விடுதி அறைஎண்
4 மணிக்குத்தான் கொடுத்தார்கள் .. அங்கும் சில குறைகள் ..எல்லாவற்றையும் சரிசெய்து கிளம்ப இரவு மணி 9 ஆகி இருந்த்து
”பாப்பா ..கெளம்பட்டுமா ...”
காலைல பெற்றோர்கள் சந்திப்பு 9 மணிக்கு .. அதுக்கு வந்திட்டு ..சாயங்காலம் வரைக்கும் இங்கே இருந்திட்டுத்தான் கிளம்ப்புவோம் ..
அவள் அமைதியாய் குனிந்து நின்றாள்
”நானும் உங்ககூட இன்னிக்கு வாரேனே”
”ஏண்டா”
’எனக்கு இங்கப் பிடிக்கல அப்பா”
எனக்குப் பகீரென்றது .. முதன்முதலாய் எனக்குத் தொண்டை அடைத்தது
”புரிஞ்சுக்கோடா ... காலைல நீ 8.30க்கு வகுப்புல இருக்கணும் .. நைட்டு புது ரூம் ப்ரண்ட்ஸ் கூட அறிமுகமாகி சந்தோசமா இருக்கணும் ..என்ன..சரியா”
”நான் வாரேன்பா ..ப்ளீஸ் ...”
அவள் இதுவரைக்கும் என்னிடம் வேண்டுகோளாய் எதுவும் கேட்டதில்லை ..
என்கண்கள் கலங்கியது போலத் தெரிந்த்து
’அழுதிருவேனோ’
சாந்திக்கு ஏதோ புரிந்திருக்கும் போல ( இப்போது சாந்தி மிகத் தெளிவாய் இருந்தாள் ) ..அவளை மெல்ல அழைத்துக்கொண்டு தூரம் சென்று ஏதோ சொல்லியபடி இருந்தாள் ... பாப்பா திடீரென ஓடிவந்து எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ( இது இரவு படுக்கப் போகும் முன்னால் தினமும் கிடைக்கும் ) திரும்பிப் பார்க்காமல் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள் .. மழை தொடங்கி இருந்தது
மெல்ல வண்டியை எடுத்து எங்கோ சாப்பிட்டு, எங்கோ அறை எடுத்து படுக்கப் போகும்போது மணி 11 .. அலைச்சல் காரணமாக சாந்தி உடன் தூங்கிப்போக .... எனக்குள் மட்டும் ஏதோ இனம் புரியாத குடைச்சல் ..
இரவு மணி 2 .. ஒரு எஸ் எம் எஸ் ...
பதட்டத்தோடு எடுக்க ..அவள் தான்
‘ஐ மிஸ் யூ டாட் ‘
அதுவரையில் இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் ஒளிந்து கிடந்த எனக்கேத் தெரியாத அவன் ‘ஓ’ வென்று வாய் விட்டுக் கதற ஆரம்பித்தான் ..
எப்பொழுது தூங்கினேனோ தெரியவில்லை ..சாந்தி 6 மணிக்கு எழுப்பினாள்
“கிளம்புங்க .. 8க்கு முன்னால்யே அங்கே போனாத்தானே நல்லா இருக்கும்
அட..என்ன கண்ணெல்லாம் வீங்குனாப்ல இருக்கு”
”சரியா தூக்கமில்ல”
அவள் நம்பினதுபோல் தெரியவில்லை
பல்கலைக் கழகம் ..காலை 8 மணி ..விடுதியில் இருந்து அவள் வரக் காத்திருந்தோம் ... ஒரு கூட்டமாய் வந்தார்கள் .. பின்னால் கடைசியாக அவள் .. பகிரென்றது ..LKGல் இருந்து +2 வரையில் ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை ( 14 ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே 2 மணி நேரம் முன்னதாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அழைத்து வந்திருக்கிறோம்) தாமதமாகப் போனதில்லை .. எதிலும் முதலாய் இருக்க வேண்டுமென்று நினைப்பவள் ..
எங்களைப் பார்த்த்தும் கூட்ட்த்தை பிளந்து ஓடி வந்தாள் ..அவளுக்கும் கண்கள் வீங்கி இருந்தது .. சாந்தி அர்த்தத்தோடு என்னைப் பார்க்க ,என்னிடம் ஏதோ எதிர்பாத்து என்கண்ணுக்குள் பாப்பாவும் பார்க்க , நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்க்க எங்கோ பார்க்க ஆரம்பித்தேன் ..
சந்திப்பு முடிந்து எல்லாரும் கிளம்ப எத்தனிக்க ., ஆங்காங்கே குடும்பம் குடும்பமாய் கூடி நின்று பேசி சிரித்து விடைபெற்றுக் கலையத் தொடங்க ,
”இப்போ போயிருவீங்களாப்பா” என்றாள் மெதுவாய்...
எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்த்து .. கண்ணீர் பெருக்கெடுக்க .. வண்டியை பார்த்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன்
”என்னாங்க எங்கே போறீங்க ?”
திரும்பாமலேயே சொன்னேன்
”அங்கேயே இருங்க ..இதோ முகம் கழுவீட்டு வாரேன்”
அந்த அரைமணிக்குள் 6 முறை முகம் கழுவிய என்னைபார்த்து முதலில் பயந்த குழந்தைகள் எல்லாம் இப்போது சிரிக்கதொடங்கி இருந்தன ..
’’
Saturday, May 18, 2013
க(தை)விதை :நிறைவேறாத ஒன்று ......!

ஊதிய உடல் ஒன்று.......
தண்ணீரில்லாத அந்தக்
கிணற்றைச் சுற்றிலும்
கண்ணீர் தேங்கிய கண்கள் ...
மிகக் கனத்த
கவலை தோய்ந்த கணம் அது....
எல்லாம் முடிந்து
எங்கோ.....
’அது’ எரியூட்டி
கரைக்கப் பட்டபின்பும்
இங்கே......
வெறுமையால் நிறைந்த
அந்தப் பாழும் கிணற்றின்
கைப்பிடி சுவரையும் தாண்டி
’கவனிப்பாரில்லாக் கவலையுடன்’
பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........
‘அதோடு’
சேர்ந்து விழுந்த
கரைசேராத சோகங்களும்..
விடைகிடைக்காத கேள்விகளும்...
கொஞ்சம் கவனியுங்கள்....
உங்களின் காலடியிலும்
கசிந்து கொண்டிருக்கலாம்
இதுபோல
ஏதாவது ’ஒன்று’ ......
Sunday, September 16, 2012
க(தை)விதை : நனையுதே மாராப்பு ..!
மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் க(தை)விதை சொல்ல வந்திருக்கிறேன்..
மரபில் / குறளில் கொஞ்சம் மூழ்கிப் போனதால் .... இதிலிருந்து விலகியே இருந்திருக்கிறேன் .....இது மீண்டும் இன்று எனக்கு நினைவுக்கு வந்தது உங்களின் கெட்ட நேரமாக இருக்கலாம் .......அனுபவியுங்கள் ...:))

’பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?
கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?
சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி
தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தப்பத்தமாத் தொலக்கி
நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு
எட்டுபோட்டு நடக்கோணும்
காட்ட மேட்டக் கடக்கோணும்
தோட்டம் போயிக் கெடக்கோணும்......
பச்சப்புள்ளய அமத்திப்போட்டு
புல்லறுக்கப் போகோணும்
கஞ்சித்தண்ணி கண்ணுலபட
நெஞ்சிமுட்ட சொமக்கோணும்
ம்ம்ம்ம்ம்...............’
நட்ட நடு சாமத்துல
கெட்ட சுடும் விடிகாலப்
பொழப்பைப் பத்துன நெனப்பால
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டு நான் படுக்கையில
பச்சப்புள்ள ஏங்கியழும்
உச்ச சத்தம் கேட்டுத்தான்
அதறிப் பதறி எந்திரிச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்
ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதானே என்ராசா ...
நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில
ஏதோ உறுத்துன்னு
என்னான்னு நான்பாக்க...
பசிச்ச என்வயிறு
கீழே வறண்டுகெடக்க
எங்கோ பசிச்ச வயிறுக்காக
இங்கே நனைஞ்சுக் கெடக்குது
என்னோட மாராப்பு..........!
Friday, January 27, 2012
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை : ஜெயிக்கப் போவது யாரு ?
அவ்வளவாக தொலைக்காட்சி நான் பார்ப்பதில்லை ... நேற்று சிறிது உடல்வலிபோல இருக்க ..சீக்கிரமாக படுக்கப் போனேன் ..செய்திச் சானலைத் தேடும்போது மிகத்தற்செயலாக ஜெயா தொலைக்காட்சியின் 'செயிக்கப்போவது யாரு ?' நடன நிகழ்ச்சியில் கவனம் பதிந்தது....
கருப்பு கருப்பாக குழந்தைகள் ,இளைஞர்கள் மேடையில் ........ மேகராஜ் தாண்டவன் / பெங்களூரு குழுவினர் .....
'அரவான்' படப் பாடலுக்கான நடனம் ... அரண்டுபோனேன் நான் ...... என்ன ஒரு வெளிப்பாடு ...... கடவுளே ... எனக்குள் ஒருவேகத்தை உருவாக்கிவிட்டார்கள் அந்தக் குழந்தைகள் ........ (படுத்துக் கிடந்தவன் .. நடனம் முடியும் நேரம் ... என்னையும் அறியாமல் நின்று கொண்டிருந்தேன் )
அரவான் படம் இன்னும் வெளியாக வில்லை ...அதன் காட்சி அமைப்புகள் எப்படி இருக்கும் என்று தெரியாது .... ஆனால் அது கண்டிப்பாக இவர்களின் வெளிப்பாடு அளவுக்கு இருக்காது என என்னால் உறுதியாகக் கூறமுடியும் ....
(ஒரு நொடியில் வந்துபோகும் பறவை, பாம்பு ,பல்லி, ஈசன் , எமன் போன்ற வற்றுக்கு அவர்கள் செய்யும் முத்திரை... பெரும் கலைஞர்களையும் மிஞ்சிய வேகம் அது .......
மேகராஜ் முகத்தில் தெரியும் ரெளத்திரம் .... வாய்ப்பே இல்லை ...இன்றைய பெரும் நடிகர்கள்கூட இவரிடம் படிக்க வேண்டும் ........
எனக்காக ஒரு 5 நிமிடங்கள் ஒதுக்கி ... இந்தக் குழந்தைகளை வாழ்த்துங்கள்
http://www.youtube.com/watch?v=iLwv_zK6xxI&feature=player_embedded
(#ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் ... உங்களின் வாழ்த்துகள் , அவர்களை உயர்த்தட்டும் )
(#என் வாழ் நாளிலேயே உடல் நலக் குறைவு வந்ததற்காக முதன்முதலாக மகிழ்வடைந்த தருணம் இது )
(#காலையிலிருந்து இணையத்தில் பைத்தியம் போல வலைபோட்டுத்தேடி ..இதன் சுட்டி இப்பொழுதுதான் கிடைத்தது )
குடியரசு தின வாழ்த்துகள் ! ..குடியரசு என்றால் என்ன ?
குடியரசுதின நல்வாழ்த்துகள்
குடியரசு என்றால் என்ன ?
குடியரசு நாளே முழுமையாய் நாம்நம்
விடுதலையைப் பெற்றடைந்த நாள்
(#என்குறள்)
ஒருவிளக்கம் :
( #என்போன்ற தெரியாதவர்களுக்கு மட்டும் )
1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு விடுதலை என்ற பெயரில் டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது
(இது விடுதலைக்கான ஆரம்ப அறிவிப்பு வெளியான நாள் )
(#டொமினியன் =ஆங்க்கிலேய மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருப்பார்).
விடுதலைக்குப் பின், நம்மை நாமே ஆளும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு செயல்படும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் ,83 நாடுகளின் அரசியல் சட்டங்களை அராய்ந்து , தேர்ந்து , திருத்தம் செய்து இந்திய அரசியலமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டது . அந்த அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி பதவி(மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்) உருவாக்கப்பட்டது.
இந்தியக் குடியரசு உருவானது
(இதுதான் உண்மையான / முழுமையான விடுதலை நாள் )
வாழ்க உறவுகள்
Sunday, November 6, 2011
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 4
ச(ர்)க்கர :( இதுதான்யா சொர்க்கம் - 4)
என்ன செய்யலாம் ????
உச்சந்தலையைத் தடவிய படியே... வண்டி இருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன் ......
மனம்... ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் ஓர் உலக அதிசயம் ...
கண்மூடுவதற்காகவே காத்திருந்த்துபோல ...நொடியில் என்னை பின்னோக்கி 20ஆண்டுகள் கடத்திச் செல்கிறது அது.
#தூத்துக்குடி
“அம்மா ..தந்தி வந்திருக்கு”
தந்தி – இந்த வார்த்தையைக் கேட்டவுடன் அம்மாவின் கைகாலெல்லாம் உதறலெடுக்க....
முகம் வெளிறத் தொடங்க ......
இதைப் பார்த்தவுடன் இப்போ தபால்கார்ருக்குப் பதட்டம் ஆரம்பிக்கிறது ..
“ஐய்ய்யோ...எம்மா .... கொஞ்சம் பொறுங்க ...நல்ல சேதிதான் .. நல்ல சேதிதான் “
“கட்டைல போறவனே.. இதை மொதல்லயே சொல்லித் தொலைகிறதுக்கு என்னாவாம் “ சேலை முந்தானையால் முகத்தைத் தொடைத்துக் கொண்டே அம்மா மெல்ல சிரிக்கிறாள் .. அவர்தான் எங்க ஏரியாவின் நிரந்தரப் ‘போஸ்ட்மேன்’ . எல்லாரிடமும் உள்வீட்டு ஆளப்போல பாசமாப் பழகுவார் ...
”என்னத்த சொல்லவிட்டீய ...இப்போ மயக்கம் போட்டிருந்தீயன்னா எஞ்சோலியல்ல உங்க ஊட்டுக்காரரு முடிச்சிருப்பாரு ’’
”சரிசரி ..என்னாவிசயமாம் ..இப்பயாச்சும் சொல்லு தம்பி”
”எம்மா ..மவராசி.. மொதல்ல எனக்குக் கொஞ்சம் நீச்சத்தண்ணியாச்சும் மோராச்சும் கொடுங்க ... போன உசிர திரும்ப வரவசுக்கிறேன் ..”
மெதுவாக தனக்குள் ”மொதல்ல இந்த ‘தந்தி’ கோண்டுபோற வேலைய விடணுமப்பா ”
”உங்க ஊட்டய்யா தங்கச்சி மவா பெரியமனுசி ஆயிருக்குதாம் ...தாதன்குளத்துல கல்வூட்ல விசேசமாம் ..உடனே வரச்சொல்லி தந்தி கொடுத்திருக்காங்க ...”
எங்கிட்டே திரும்பி ‘தொரே...உங்க அயித்த பொண்ணாம் ..ம்ம்ம் ..ஜமாய்” என்கிறார்
”ஓ..”அம்மாவுக்குக் கொஞ்சம் சுதி எறங்கிப்போச்சு ...( அப்பா வீட்டு உறவுன்னா கொஞ்சம் அம்மாவுக்கு ஆகாது ... கலயாணமான புதுசுல ஏதோ பிரச்சினையாம் )
அப்பா வந்தவுடன் தடபுடலாய் டேப்ரெக்கார்டர்வச்ச வெள்ளை அம்பாஸ்ட்டர் கார் பிடிச்சு கெளம்பினோம் .
முக்கியமான ஒரு கேரக்டரை இங்கே அறிமுகப்படுத்தியே ஆகணும் .. என்னோட பிரண்டு ‘ராசாமணி’ .திருப்பூர்காரன் . ஸ்கூல்லீவுக்காக அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தவன்.. எங்களோடத் தொத்திக் கொண்டான் ...கொஞ்சமா வாய்மட்டும் ஜாஸ்தி ஆவனுக்கு...
அதான் மொதல்லயே அவன்கிட்டே சொல்லிவச்சுட்டேன்
”எலேய் ..ஒங்கூரு மாதிரி இங்கே பேசிக்கிட்டிருக்காதே .... பாத்துக்கோ ...எல்லாப் பயலும் கத்தி வச்சிருப்பான்”
பயந்துட்டேன் போல ... ரொம்ப அமைதியாகவே வந்தான் ...
#தாதன்குளம் :கிராமம்:
வண்டியில வந்த அலுப்புல..எல்லாரும் அடிச்சுப்போட்டாப்ல தூங்கீட்டோம் போல ..காலைல லேட்டாத்தான் எந்திரிச்சோம் நாங்க 2 பேரும் ... வீட்ல கொஞ்சம் பேருதான் இருக்காங்க .. வெளியே திண்ணைல பெரியாத்தா ... கூடத்துல புள்ளைங்க பல்லாங்குழி ,கலஞ்சி (தட்டாமாலை) வெள்ளாண்டுக்கிட்டு இருக்க ..பல்லுவெளக்காம நாங்க மட்டும்தான் போல ...
”அம்மா ..காப்பி கொடு” ந்னு சவுண்டு வுட்டுட்டு ( எப்படியும் அயித்த மகதான் கொண்டுவரப் போறாJ)
ராசாமணிகிட்டே ”கூச்சப்படாம கேட்டுவாங்கி சாப்பிடுல” ந்னு சொன்னேன்..
நெனச்சாப்லயே அவதான் கொண்டுவந்தா...
காப்பியக் கையிலவாங்கி வாயிலவச்சவன் ..ஊருக்குள்ள வந்ததுல இருந்து மொதமொதலா வாயத் தொறந்தான்.
“எனக்கு சக்கர கம்மி .. கொஞ்சம் தாரீங்களா ”
திடீர்ன்னு அங்கே ஒரு அமானுஷ்ய அமைதி.......
அயித்தமக கைய ஒதறி வாயப்பொத்திக்கிட்டே உள்ளே ஓட.....
சளசளன்னு சளம்பிக்கிட்டிருந்து பொடுசுக எல்லாம் கப்புன்னு வாயமூடீட்டு ..அவன ஒருமாதிரியா குறுகுறுன்னு பாத்துட்டு..
”அய்ய்ய்ய..ஆத்தா...இந்த அண்ணன் ஆயிஆயியாப் பேசுது” ன்னு ஆத்தாகிட்டே கோத்துவுட்டுட்டு ... கத்திக்கீட்டே வெளியே ஓடுதுக
திண்ணைல இருந்து ஒரு கும்பா ராசாமணியப் பாத்து பறந்துவந்த்து முன்னே ...
பெரியாத்தா ஆவேசமா வந்தாள் பின்னே ....
“எடு வெளக்குமாற .. பொண்டுபுள்ளங்க இருக்குற எடத்துல யார்ல அவன் ..வாயப்பாரு ...ஏலே மாரி ..ஓடியால ..இந்தப்பயலப் புடிச்சுக் கட்டுல புளியமரத்துல.. பத்தலையாமுல்ல ...அந்தப் படுக்காளிப் பயலுக்கு கொஞ்சம்நஞ்சம் இருக்குறதையும் இழுத்துவச்சு ஒட்ட நறுக்கி காக்காய்க்குப் போடு“
ஈரத்துண்டால மூடிப்போட்ட கோழியப்போல நாடிநரம்பெல்லாம் ஒடுங்கிப்போச்சு அவனுக்கு ..........
மெதுவா என்கையைச் சொரண்டி ”டேய் ..என்னாடா நடக்குது இங்கே ... என்னை ஏண்டா இந்த்த் திட்டு திட்டுது .... நான் என்னடா பண்ணேன்...எதையோ அறுக்க வேற சொல்லுது பாட்டி ?”
”எலேய் ..கொஞ்சம் சும்மாத்தான் இறேன் ... அதான் ஒரே வார்த்தைல ஒருமாசத்துக்கு சனியன இழுத்திட்டீயே”
”ஏண்டா..உங்க ஊர்ல சக்கரைக் கேட்டாத் தப்பாடா,,கம்மியா இருக்கப்போயிதானடா கேட்டேன் ”
”இங்கே சக்கரன்னா வேற அர்த்தம் மக்கா ...”
”அய்யோ ..எனக்குத் தெரியாதே ..அப்படீன்னா என்னடா ”
”விடு விடு..இப்போ வேணாம் ..பொறவு சொல்றேன் ..”
”டேய் ...சொல்லுடா... எனக்கு இப்பவேத் தெரிஞ்சாகணும் ..”
”ம்ம்ம்...நீ சாவணுமுன்னு முடிவு பண்ணீட்டே ...நான் என்ன செய்ய .. ‘சக்கர’ன்னா இங்கே ’குஞ்சுமணி’ன்னு அர்தமுடியோய்.. ... அந்தப்புள்ள கீட்டே பத்தலன்னு நீ கேட்டது அதைத்தான்”
இப்போ நான் சொன்னதக் கேட்டதும் நாக்கு மேலன்னத்தில் ஒட்ட...கண் சொருக ஆரம்பித்தது அவனுக்கு ...
நல்லவேளயா அப்பாவும் அந்தநேரத்துல அங்கே வர அவன் தப்பிச்சான் .
என்ன! ..ஆத்தாவச் சமாதானம் பண்னத்தான் நேரமாகிப் போச்சுது ........
20வருடங்கள் ஆகிவிட்டன ...
ராசாமணி இன்னும் சமாதானமாகவில்லை.. எப்போ சந்தித்தாலும் அவனோட மொதக்கேள்வி இதுதான் ...
”டேய் ..உங்க பெரியாத்தா அன்னிக்கு எதையோ இழுத்துவச்சு அறுக்கணுமுன்னு சொன்னாங்களே ..அது என்னடா “
’‘ நாக்கைத்தான் அவங்க சொன்னாங்கன்னு எத்தனை தடவைதான் உங்கிட்டே சொல்றது”
அவன்தான் இன்னும் இன்றுவரையிலும் என்னை நம்பியதுபோலத் தெரியவில்லை ..
நீங்களாவது நம்புறீங்களா ????
(போய்க்கிட்டே இருப்போமா ............)
Tuesday, November 1, 2011
பெரியாத்தா : -- இதுதான்யா சொர்க்கம் -3
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....:3


அவனை தோள்சேர்த்து பற்றிக்கொண்டேன் ...ம்ம்ம் .. தோட்டத்திலிருந்து வருகிறான் போலும் ...மண்வாசம் ...
Saturday, October 29, 2011
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 2

Friday, October 28, 2011
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன்

Saturday, August 20, 2011
கொள்ளை போகுதே எம் பிள்ளைகளின் எதிர்காலம் ....!
ஆற்றுப் படுகையிலிருந்து ஒரு மரண வாக்குமூலம் :
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என நம் மக்கள் பேசும்போதெல்லாம் , நம்மையும் ஒரு பொருளாக எடுத்துப் பேசுகிறார்களே என்று மணல் பெருமைபட்டிருக்கும் முன்பு..
ஆனால்........
தொடரும் அடுத்த 10ம் ஆண்டின் முடிவில்
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என மேடை போட்டுப் பேசுபவரிடமே கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர் கேள்வி கேட்பார்
‘எல்லாம் சரிதான் ..மண்ணு, மண்ணுங்கறீங்களே ..
அப்படீன்னா என்ன ?’
கடந்த 20 ஆண்டுகளில் , ஆற்று மணலின் இருப்பில் பாதியை கொள்ளையடிக்கப் பட்ட அவலம் கண்டு ,பொங்கி எழுவோர் யாருமில்லை... தவறி யாரும் எழுந்தாலும் அவருக்கு துணைவருவோர் யாருமில்லை .. நம் குழந்தைகளின் வருங்காலம் நம் கண்முன்னே கொள்ளை போய்க் கொண்டிருப்பதை யாரும் உணர்ந்ததுபோலவேத் தெரியவில்லை .
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?
ஆற்றுப் படுகையில் 1 அங்குலம் உயரத்திற்கு மண் சேகரமாகிப் படிய ஆகும் காலம் 5000 ஆண்டுகள் ..
நமது அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அளித்திருக்கும் அளவு 3 அடி ..அதாவது 36 அங்குலம் தோண்டிக்கொள்ளலாம் ...
அதாவது 1,80,000 ஆண்டுகள் சேமிப்பை அரசாணை என்ற பெயரில் அபகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ...
ஆனால் ... நடப்பது என்ன ???
இயந்திரங்களின் உதவியோடு 20 அடி ஆழம் தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப் படுகிறது ....அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல்லாயிரம் மடங்கு அதிகமாக......
என்னவாகும் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் நிலத்தடி நீரோட்ட நிலைமை ?
ஆற்றின் நீர்மட்ட அளவைப் பொறுத்தே அமையும் கிணற்றின் நீர்மட்டங்களும் ....ஏற்கனவே 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 40 அடியைத் தாண்டியும் கிடைப்பதில்லை.
கடல் மட்டம் உயரும் பொழுது உள் நுழையும் நீர் பள்ளங்களில் தேங்கி பக்கவாட்டில் நீரோட்டங்கள் மூலமாக விளை நிலங்கள் , கிணறுகளில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கிறது ... குடிமக்களின் குடி நீர் ஆதாரங்களை அழிக்கிறது
இனி அணைகளில் திறந்துவிடப்படும் நீர்.... இடையிலேயே இந்தப் பள்ளங்களில் தேங்கி, கடைமடையை அடையாமலேயே போகக் கூடும்..
கேரள ஆறுகளில் மணல் எடுக்க அங்கே தடை உள்ளது.அந்த அரசுக்கு மணலின் தேவை புரிந்திருக்கிறது ...ஆனால் இங்கோ...!!
இரவு,பகல் பாராமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கிருந்து நம் மணல் வளங்களை கேரளாவுக்குக் கடத்தி கொண்டிருக்கிறோம்....
ஏன் ..நமக்கந்த விழிப்புணர்ச்சி இல்லை...எங்கே போனது நம் சுயபுத்தி .... எப்போதிரிந்து இப்படி சுயநலமாகவே சிதிக்கத் தொடங்கினோம் ?
பழமொழிகளின் பெருமையே அது காலத்தைத் தாண்டியும் நிலைத்து நிற்பதுதான்...
ஆனால் நம் முன்னால் அது தோற்கப் போகிறது ... ஆம் பழமொழிகளின் பெருமையை சிதைத்த பெருமையை நாமே முதன்முதலில் அடையப் போகிறோம்
RIVERS NEVER GO REVERSE
--இந்தப் பழமொழி விரைவில் காணாமல் போகும்...ஆம் ..கடல் ஒருநாள் பொங்கும் போது .. நாம் தோண்டி வைத்திருக்கும் பள்ளங்களின் வழியே கடல்நீர் ஆறாக பின்னோக்கி ஓடத்தான் போகிறது ...
வாழ்க நமது திறமை !...வளர்க அதன் புகழ் ..!!
