Sunday, October 24, 2010

அவரவர் பார்வையில்....!


அடர்பச்சைப் புதராய்

படர்ந்திருக்கிறது கொடி.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அசைந்து கொண்டிருக்கின்றன

அழகழகாய்ப் பழங்கள்........


அடர்பச்சை நிறத்தில்

வந்தமர்கின்றன கிளிகள்.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அழைத்துக் கொண்டிருக்கின்றன

அதனழகு அலகுகள்.....


புதரும் பறவையும்

வண்ணத்தில் ஒன்றாகி

எண்ணத்தை வென்றேகி

என்னுள் கலக்க......

என்னை நான் மறந்தே

படைப்பின் விந்தையை எண்ணி....

சிந்தை கலங்கி நிற்கிறேன்.


அங்கே....

விரித்த வலையின் சுருக்கை

சரிசெய்து கொண்டிருக்கிறான்

புதருக்குள் இருக்கும் அவன் .....

.

Thursday, October 14, 2010

ஒர் அதிகாரத்திற்கான சாட்சியாய் .......!





ஈழம் :







1) கைவசமிருந்த கண்ணாடி பொம்மையை உடைத்துவிட்டு , அசையாதிருந்த மண்குதிரையை சாய்த்துவிட்டு,

வென்றுவிட்டதாய் பெரும்புரளியைக் கிளப்பிவிட்டு,

வெற்றுப்பரணியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்

வெட்டிவீணருக்கு முதல் ஐந்தும் சமர்ப்பணம் :

ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை

ஈழம் உணர்த்தும் உமக்கு [01]

யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ஈழம்.

பதரென்(று) அழித்தாய்; பதறாமல் அங்கே

புதருள் இருக்கும் புலி [02]

எதிர்ப்பே இல்லாமல் ,எல்லாம் வெறும் பதராக இருப்பதாய் மகி(ழ்)ந்தே , நல்ல வேட்டை என காட்டை அழித்துச் செல்கிறாய் ..உனக்குத் தெரியுமா? பதறாமல் அருகிலேயே புதருக்குள் உனக்காகக் காத்திருக்கலாம் ஒரு புலி

அகம்தவிர் உன்னுள்; எதிர்க்கும் நிகர்எதிரி

உண்டாம் எதற்கும் அறி [03]

தான் என்ற அகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாய் நீ .உனக்காக அன்றே நியூட்டன் சொன்ன சேதி ஒன்று இங்கு

எந்த ஒருவிசைக்கும் சமமான எதிர்விசை உலகில் உண்டு

புதைத்ததாய் தற்பெருமை கொள்வோரே ; எல்லாம்

விதையென்(று) அறிவீரா நீர் [04]

சுத்தமாய் அழித்து , மொத்தமாய் மழித்துப் புதைத்ததாய் எண்ணி தற்பெருமைக் கொள்வோரே! உண்மை ஒன்றை அறிந்து கொள்ளவீரா? வென்றதாய் எண்ணி, வெறியில் புதைத்தது அத்தனையும் வீரியவிதைகள் என்பதை.

ஈசலுக்கும் கூட இணையில்லார்; காட்டுவார்

ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு [05]

போர்தர்மம் குலைத்து , குற்றங்கள் இழைத்து , பிறர் உதவியால் பிழைக்கும் உமது வ(வெ)ல்லரசு மாயத்தோற்றம் வெகுவிரைவில் கலையும்/குறையும்/கரையும்/.

2) கூட்டுச்சதியாலும் ,கோடாரிக் காம்புகளாலும்

கூட்டம் கூட்டமாய் கூட்டை இழந்து தவிக்கும் குலக்கொழுந்தினருக்குதொடர்வது அனைத்தும் சமர்ப்பணம் :

வலியினைத் தாங்கும் வழியை அறிவாய்;

வலியதாய் ஆகும் மனது [06]

தீயுள் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயில்

பழுத்துவிடும் தங்கம்போல் நாம் [07]

எளிதன்(று) எனமலைத்து நிற்கிறாய்; எல்லாம்

எளிதென்று வெல்வாய் உணர்ந்து [08]

ஆற்றல் அனைத்துமுண்டே ஆள்வதற்கு; தேவையா

ஆறுதல் வார்த்தை நமக்கு [09]

திலகம் அணிந்திடும் நாள்உண்டு; நம்பின்

உலகும் அணிதிரளும் அன்று [10]

மேலுள்ள எதற்கும்

விளக்கம் என்றெதுவும்

தேவையில்லை உனக்கு .

காலம்மும் கனியும் நமக்கு..

கலக்கம் தராதிரு மனதுக்கு....

உனைக்கண்டு மீண்டும் ‘அவர்கள்

கலங்கும்நாள் வெகுவிரைவில் இருக்கு .......

Wednesday, October 13, 2010

சர..சர..அவசர.......!


அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய்க் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் நுழைந்து

அவசரமாய் அமர்ந்து

அவசரமாய் எழுதி

அவசரமாய்க் கூட்டி

அவசரமாய்க் கழித்து

அவசரமாய்த் திட்டமிட்டு

அவசரமாய் வெளியிட்டு

அவசரமாய்த் திட்டுவாங்கி

அவசரமாய் மறந்து

அவசரமாய் மூடி

அவசரமாய் வெளியேறி

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் ஓய்வெடுத்து

அவசரமாய் சொல்லிக் கொடுத்து

அவசரமாய் உணவெடுத்து

அவசரமாய்த் தூங்கவைத்து

அவசரமாய்ப் படுத்து

அவசரமாய்ப் படித்து

அவசரமாய் முடித்து

அவசரமாய்க் கண்மூடி சயனித்து

அவசரமாய்க் கனவில் பயணித்து

..........................

அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவச......................


சே.... என்ன இது ?

என்னதான் வாழ்க்கை இது !

ஒரு நொடியில் உறைகிறேன்

மறு நொடியில் சரிகிறேன்

சன்னலைத் தாண்டி எங்கோ

சூனியத்தில் வெறிக்கிறேன்


அருகிருந்த கிளையில்

நிதானமாய்

நகர்ந்து கொண்டிருக்கிறது

நத்தை ஒன்று


.

Saturday, October 2, 2010

காந்தி ஜெயந்தி..: அவருக்கென்ன ?...விடச் சொன்னார் தான் ...!


விடிந்தால் பள்ளிவிடுமுறை

வீட்டிற்குப் போகும்முன்

நல்லதாக நாலுவார்த்தை

நாமளாவது காந்தியைப் பற்றி

நறுக்குன்னு சொல்லியணுப்புவோம்

பசங்களா .....

காந்தித் தாத்தா...

அவரது அறிவுரைகளைப் பற்றி

அணுஅளவாவது தெரிஞ்சிக்கோங்க .....

ஆழ்ந்த கருத்துக்களைப் பற்றி

மேலாகவாவது புரிஞ்சுக்கோங்க....

அவர்.........

இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்
அந்நிய மோகம் அணை(னை)த்தும் விடச்சொன்னார்

தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்
ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்

ஆள்க்கொள் ளுமாசை சித்தம் விடச்சொன்னார்
ஆழ்மன வேற்றுமையை உன்னில் விடச்சொன்னார்

வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்
சோம்பல் அதனை மொத்தம் விடச்சொன்னார்

மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்
உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்

என்ன சந்தேகம் என்றாலும்

என்னிடம் கேளுங்கள் என்றேன்

இரண்டுபேர் எழுந்தனர்

ஆளுக்கொன்றாய் தொடுத்தனர்...

இதுவரைக்கும் என்னவெல்லாம் விட்டீங்க சார் ?

இன்றைக்கு லீவும் விடச் சொன்னாரா சார் ??

குட்டிக் குழந்தைகளின் கேள்விகள்

நெற்றிப் பொட்டில் அறைந்தன .....

‘விடச்சொன்னார் ..சரிதான் ...!

விட்டிருக்கிறோமா நாம் ? - அவர்

சொன்னது எதையும் விடவில்லை ஆனால்

சொல்லாததை எல்லாம் விட்டிருக்கிறோம் ..!

இரவெல்லாம் என்னைச் சுற்றிலும்

ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன

அந்தக் கேள்விகள்......!


தூங்கவில்லை நான்........!

”நீங்கள்” ............?

Friday, October 1, 2010

வழுக்கல்கள் : இரண்டு ..........!


நடைபாதை ஓரத்தில்

தடம் வழுக்கியே

தடுமாறிச் சரிகிறேன் நான்..


எதிர்பாராத தருணமதில்

எங்கிருந்தோ வருகிறாள அவள்...


அறிமுகம் இல்லாத என்னை

பதறித் தாங்குகிறாள்....


தோள்களைப் பற்றி என்னைத்

தூக்கி நிறுத்துகிறாள்.....


பிடறியை உதறிய படியே

திடுக்கென விழித்துக் கொள்கிறது

போர்த்தியிருந்த பசுத்தோலுக்குள்

உறங்கிக் கொண்டிருந்த


என் மனம்........


.

Thursday, September 23, 2010

அடக் கடவுளே .........!


கோடிகளை விழுங்கி
கோபுரங்களாய் எழும்பி
அங்கங்கள் அத்தனையும்
தங்கத்தால் இழைத்து
பரலோகத்தைப்போல்ப் பரந்த
பிரமாண்ட பிரகாரங்களுடன்
பரபரப்பாய் இருக்கிறது கோவில்.

பக்தியின் உச்சத்தில்
சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும்...
சத்தமாய் வேண்டிக்கொண்டு
சுற்றத்தை ஈர்த்துநிற்கும்........
சிக்கலைத் தீர்ப்பதற்கு
சதத்தில்(%) பேரம்பேசும்......
நேர்த்தியாய் உடுத்திய சுத்தமான பக்தர்கள்.....

பட்டாடைகள் பளபளக்க
அணிகலன்கள் தகதகக்க
வருவோருக்கெல்லாம் அருளை
வாரி வாரி வழங்கியபடியே
கற்பக்கிரகத்துள் கடவுள் சிலை......


கருவேல மரத்தின் நிழலில்
கருகிய புதரின் நடுவில்.......
குழந்தைகள் ஒன்றுசேர்ந்து
அழுக்குக் கைகள்கொண்டு
உடைந்த செங்கலையும்
உளுத்த செத்தையையும்
ஒன்றாய் அடுக்கி வைத்து
‘கோவில்’ என்று பெயரிட்ட
குவியலுக்குள் நுழைந்து
தலைக்குக் கைவைத்து
தரையில் படுத்திருக்கிறார்

கடவுள்.....................


[கரு : நன்றி: குதசெ : -சங்கர பாண்டியன்]

.

Wednesday, September 22, 2010

பொய்......பொய் தவிர வேறில்லை.......!


எனது கண்களுக்குள் பார்த்தபடியே
பேசிக்கொண்டே இருக்கிறான்
அவன்........

பொய்...
அத்தனையும் பொய்....
அவன் வாயிலிருந்து வரும்
அத்தனையும் பெரும் பொய்.....

உண்மையைப் போலவே பொய்யையும்
திண்மையாய்ப் பேசுகிறான் அவன்....

எனக்கு எல்லாம் தெரியுமென்பது
அவனுக்கும் தெரியும்தான்

ஆனாலும்......

எப்படிதான் முடிகிறது
இப்படி எல்லாம் பேசுவதற்கு ....

எப்போதுதான் திருந்துவார்கள்
இத்தன்மை கொண்டவர்கள்......

பேசி முடித்துவிட்டான் அவன்
என்முகம் பார்த்து நிற்கிறான்

அவன் நிறுத்தத்தானே
காத்திருந்தேன் நானும்........

ஆவேசமாகத் தொடர்ந்து
பேச ஆரம்பிக்கிறேன்

உண்மையைப் போலவே
ஒரு பொய்யை நானும்.......

.

Monday, September 20, 2010

என்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் ..........!


என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் :

என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் சேட்டைக்காரன் அவர்களுக்கு நன்றி. நகைச்சுவை மன்னரின் அழைப்புக்கான பதிலை நான் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவுக்குத் தந்திருக்கிறேன் .. என நினைக்கிறேன் ...சரியில்லை எனில் மன்னிக்க வேண்டுகிறேன் ..

அனைத்து செயல்களுக்கும் ,விளைவுகளுக்கும் நல்லது ,கெட்டது என்ற இரண்டுமுகம் உண்டு . மூன்றாவது முகமாக நல்லதை மட்டுமே நமக்கு சாதகமாகக் கொள்ளும் முடிவைக் எடுப்போம் . நாளைப் பொழுது நல்லதாகவே விடியும் நமக்கு. நல்லவற்றிலிருந்து நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்
கொள்ளும் ஒரு தேடல் இது ....

( என் திறன் / நம் திறன் பற்றி எடுத்துச்சொல்ல ’எந்திரன்’ தேவைப்படுகிறார் இங்கு )

•வெண்பா என்பது எளிதென்பதையும் இங்கே சொல்ல முயன்றிருக்கிறேன். கசப்பு மருந்து என ஒதுக்கி வைத்திருப்பதை, இனிப்போடு/எந்திரனோடு கலந்து தரும் முயற்சி இது .. மருந்தின் உண்மை தன்மையை ஒருவராவது அறிந்து கொண்டாலே வெற்றியாகும் எனக்கு அது. ’இனிப்புக்கும்’ என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன் . )

எளிதன்று என்றபிறர் எண்ணத்தை; எல்லாம்
எளிதென்றே எள்ளி எழுது [01]


சில துண்டுச் செய்திகள் :
•இரண்டு வருட திட்டமிட்ட உருவாக்கம்..
தமிழகத்தின் தொழில் நுட்ப அறிவை உலகுக்குக் காட்டப்போகும் படைப்பாக்கம் . இந்தியாவின் ‘அவதார்’ என்ற சிறப்பை பெற்ற படம் . . உலகளாவிய வியாபாரம்..... மிகப் பெரிய வெற்றியை எதிர் நோக்கி இருக்கும் படைப்பு
ஆம் .......

தந்திரத்தை எந்திரத்தால் காலத்தே செய்வார்முன்
மந்திரம்என்(று) ஒன்றும்இல் லை [02]



•’பின்நின்று’ நடத்துநராய் வாழ்க்கையைத் துவங்கியவர் அவர். இன்று ஒருதுறையினை ’முன்நின்று’ வழிநடத்திக் கொண்டு இருக்கிறார் . அயராத உழைப்பின் எடுத்துக்காட்டாக இன்று அவர் ........

விசிலடித்து வாழ்ந்தார்; உழைப்பால் உயர்ந்தார்
விசிலடித்து வாழ்த்துகிறோம் நாம் [03]



•எதற்கும் இயலாதவர் /எதுவும் இல்லாதவர் என வெளியில்/ ஒருகோடியில் ஒதுக்கிவைக்கப் பட்டவர் அவர் . இன்று அவரின் கடைக்கண் பார்வைக்காக வரும்வழியில் ஒதுங்கி நிற்பவர்கள் பலகோடி

கறுப்பைப் பழிப்போரும் வாய்பிளப்பார் தன்னால்;
சிறப்பே இதுதான் அவர்க்கு [04]


•எந்திரம்போல உழைப்பார். எல்லாமுமாய் இருப்பார்
ஆனாலும்... ’தான்’ என்ற அகம் தன்னுள் இல்லாத சிகரம் அவர் .

எந்திரன் போல இருப்பாராம்; தன்திறன்மேல்
சிந்தனை இல்லா(த) அவர் [05]



•ஒருவார்த்தை சொன்னாலும் , உலகம் ...ஓராயிரம் பொருள் கொள்ளும், புண்படுத்திக் கொல்லும் , இல்லாததை சொல்லும் . இருந்தாலும் எதையும் எளிதெனக் கொள்ளும் இனிமையாளர் அவர்...

புலியைப்போல் பாய்வார்; புழுதியையும் ஆய்வார்;
எளிதின் சிகரம் அவர் [06]


•துறைசார்ந்த உலகில் அவரது வாக்கே வேதவாக்கு. இல்லாதவரையும் இருப்பவராக்குவார். தயாரிப்பாளர் ஆக்குவார். தள்ளி நின்று ரசிப்பார் . தயாளன் அவர்

ஒருமுறை தான்சொல்வார்; நூறாக்கி வெல்வார்;
மறுபார்வை இல்லை அவர்க்கு [07]



•அவரது அபிமானிகளை ஒரு பிரிவுக்குள் அடைப்பதென்பது இயலாத ஒன்று .. ஆறிலிருந்து அறுபதுவரை அத்தனை வயது வரம்பிலும் அவரது ஆதரவாளர்கள்......இதுதான் அவரது பலம்...

ஆறும் அறுபதும் மாற்றமெதும் இல்லாமல்
சொந்தமாம் என்றும் அவர்க்கு [08]

•தலையின் மேலிருப்பதை இழந்தாலும் , தன்னை தனது
உயிராகத் தலைக்குள் வைத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட.... தலைசிறந்த கலைஞர் அவர்

மயிர்போனால் என்ன ; உயிர்தரும் தொண்டர்
உயர்சொத்தாம் என்றும் அவர்க்கு [09]


•இலக்கினை முடிவு செய்து பயணத்தைத் தொடங்கினால்
இலகுவாகும் வெற்றி என்பதை உலகுக்கு உணர்த்தியவர் அவர்.

எந்திரனின் முந்தைய வாழ்க்கை; உணர்த்தியது
என்திறன் பற்றி எனக்கு [10]



(தேவையா இதெல்லாம் ?? என்ற கேள்வி தோன்றும் உள்ளங்களுக்கு............
உழைப்பால் உயர்ந்த யாரையும் ,வழிகாட்டும் உதாரணமாகக் கொள்ளலாம் என்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...)

தொடரைத்தொடர நண்பர் தேவாவையும் , அக்கா அஷிதாவையும் , தம்பி அச்சுவையும் , மரபுக்கவி ப்ரசாத்தையும் நகைச்சுவை மன்னரின் சார்பில் அழைக்கிறேன் .


.

Wednesday, September 15, 2010

தொடக்கம் : (வெண்பாவும்,என்பாவும்)


தொடக்கம் : ( வெண்பா / நேரிசை)

மரத்தினடி நோக்கிவரும் ஆதாம் ; உருகி

வரவுக்குக் காத்திருக்கும் ஏவாள் - அருகில்

உருவில் குறைந்ததோர் ஆப்பிள்; தொடங்க

மரத்தின்மேல் காத்திருக்கும் பாம்பு





தொடக்கம் : [என்பா / க(தை)விதை ]


மரத்தின்மேல் வலைவிரித்த பாம்பு;
மரநிழலில் காத்திருக்கிறாள் ஏவாள்; அருகில்
கடிக்கப்பட்ட ஒரு கனி ; தொலைவில்............
வந்து கொண்டிருக்கிறான் ஆதாம் !


( நன்றி:கரு : யாழி )

Tuesday, September 14, 2010

அறிந்துகொள்வோம் இவர்களையும் ....!


குறுந்தகவல் இதழ்கள் :

12.09.10 . திருச்சி ; ஒரு சந்திப்பு ; 70பேர் சந்தித்துக் கொண்ட ஒரு சிறிய சந்திப்பு. ஆனால் கலைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு சந்திப்பு. குறுந்தகவல் (SMS) பறிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கலைஞர்கள் சந்தித்துக் கொண்ட ஒரு முப்பெரும் விழா . எளியோரின் இணையமாக மாறி இருக்கும் அலைபேசித் தகவல் பரிமாற்றத்தின் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியின் சாட்சியான சந்திப்பு இது . இதற்குப் பின்புலமாக மறைவில் இருக்கும் சக்திகளை வெளிக்காட்டும் பதிவு இது .



SMS குறுந்தகவல் செய்தி . இன்றைய தொலைத் தொடபில் மிக முக்கியமான ஒன்று . வியாபார, விளம்பர நிறுவனங்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைத் தொடர்பாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு இனிய , ஊக்கமளிக்கும் செய்தியும் இதில் உண்டு

.ஆம்

குறுந்தகவல் இதழ்கள் ....



20 க்கும் மேற்பட்ட குறுந்தகவல் இதழ்கள்.

தினம் ஒரு படைப்பாளியின் படைப்பினை ,கவிதையினை ,கருத்தினை தமிழகம் முழுவதும் குறைந்தது 10000 வாசகர்களிடம் குறுந்தகவல் மூலமாக கொண்டு சேர்க்கின்றன இவைகள் .



கண்காணாத இடத்தில் தனக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை , அவர்களின் படைப்புகளை வெளியிட்டு ,

வெளி உலகுக்குக் காட்டி , அவர்களுக்கு ஊக்கம் ஊட்டி , புதிய கவிஞர்கள் , கலைஞர்கள் ,படைப்பாளிகளை உருவாக்கி வருகின்றன் .



முன்பெல்லாம்

படைப்புகளை உருவாக்கிவிட்டு ,

பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு ,

வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த கவிஞர்கள், கலைஞர்கள் ஏராளம் ..



பொதுப் பார்வைக்கு சமர்பிக்கும் முறையறியாமல் ,

புதைந்து போன புதையல்களோ ஏராளம் , ஏராளம் ...........



இன்று நிலைமை மாற்றம் வந்திருக்கிறது . மாற்றாக ஒரு புதிய தொழில் நுட்பம் துணைக்கு வந்திருக்கிறது

தொட்டுவிடும் தூரத்தில் தொடுவானம் போல் ,

கணினி , இணையத்தளம் தொட முடியாதவர்களின் முன்னால்

விரல் நுனியில் ஒரு இலவசப் பதிவுலகம் . அலைபேசியால் இணைக்கும் அற்புத உலகம் அது .



முக்கிய செய்தி ; இந்தச் செய்தி பரிமாற்றம் ஒரு இலவசச் சேவை . இவை இணைய கூகுள் ,யாகூ குழுமங்கள் போன்ற இலவசச் சேவை .. அனால் அவைகளைப்போல பலம் படைத்த பின்புலம் கொண்டவைகள் அல்ல. ஆம். ஒவ்வொரு இதழாசிரியரும் தனிமனிதனாய் நின்று தமிழுக்கு ஆற்றும் சேவை இது .


இந்த இதழ்களைத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் வாழ்கையில் வசதியான இடத்தில் இல்லை . தானிருக்கும் இடத்தையே தக்கவைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கும் பொருளாதார பலமில்லாத நடுத்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சராசரியானவர்கள்தான் . தனது தினக் கூலியில் இருந்து , மாத வருமானத்தில் இருந்து , பொருள் ஒதுக்கி இந்தச் சேவையைத் தொடர்பவர்கள் இவர்கள். பணிச் சுமைக்கு இடையிலும் , குடும்பச் சூழலுக்கு நடுவிலும், பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஊடாகவும் கடமையாக நினைத்து கருத்தாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயல் வீரர்கள் இவர்கள் . எந்தவிதப் பலனும் எதிர்பாராமல் இவர்கள் ஒவ்வொருவரும் பிற முகமறியாத கலைஞர்களின் படைப்புகளை 500லிருந்து 1000 பேர்வரையிலும் கொண்டு சேர்க்கிறார்கள் குறுஞ்செய்திகள் மூலமாக .



’அப்படி என்னய்யா வந்துச்சு இவங்களுக்கு ?

பேசாம இருக்க வேண்டியதுதானே ??

எதுக்கு தேவையில்லாம இழுக்கணும் /சுமக்கணும் இதை ???’



பலகேள்விகள் தோன்றலாம் மனதுக்குள் ....!



அதற்கான விடையை என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன் .தொடர்ந்து வருவது தற்பெருமை இல்லை . உண்மையை உலகுக்குச் சொல்லும் வேளையில் ( நெல்லும் நீர்பாய்ச்சும் வேளையில், சரிவிலுள்ள புல்லுக்கும் சிறிது கசிவது போல ) வெளிப்படும் செய்தி இது



நான் பிறந்த இடம் இது . நான் ஒரு கட்டுமானப் பொறியாளர் .ஆங்கிலவழியில் கல்வி கற்றவன் . கல்லையும் , மண்ணையும் , கலவையையும் , ,கட்டுமானத்தையும் தவிர எதுவும் தெரியாதவன் நான். 2008வரையில் பத்திரிக்கைகள் வாசிக்கும் வழக்கம் கூட இல்லாதவன் நான். விளையாட்டாக நான் எழுதிய ஒரு 3வரிகளை திரு.கன்னிக்கோவில் ராஜா அவர்கள் (திருத்தம் செய்து) , அவரது SMS இதழில் நான் எதிர்பார்க்காத வேளையில் வெளியிட்டார் .

நமது படைப்பை கண்முன்னால் பார்க்கும் வேளையில் ’நம்மாலும் முடியும் ‘ என்ற எண்ணத்தை ,

நம்மேலுள்ள தன்நம்பிக்கையை எனக்குள்ளேயே ஆழமாய் விதைத்து விட்டது அந்த குறுந்தகவல் செய்தி

’அட நமக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறதே !!! , முயன்றால் நம்மாலும் முடியும் போல !!!’ என்று என்னையும் திசை திருப்பி விட்டது அது .



இரண்டே வருடங்கள்



குறுஞ்செய்தி இதழில் அறிமுகமாகி , இணையத்தில் இணைந்து ,( நன்றி : அய்யா . கிரிஜா மணாளன் அவர்களுக்கு )

இன்று எனக்கென வலைப்பூக்களை உருவாக்கி இருக்கிறேன் , ஒருங்குறித் தமிழில் ஒருவிரல் தட்டச்சில் ஓரளவு வேகம் காட்டுகிறேன் , கவிதைகளாய் கொடுக்கிறேன் , வெண்பாவாய் வடிக்கிறேன் , குறும்பாக்கள் தொடுக்கிறேன் , திருக்குறளுக்கு விளக்கமாக , குறளுரையாக 1330 புதியகுறள்களை வெண்பாவில் அமைத்திருக்கிறேன் .(எனக்குத் தெரிந்த அளவில்)



குறுஞ்செய்தி இதழ்களின் விளைவுக்கு நானே நேரடிச் சான்று’.

எங்கோ ஆரம்பித்து, எப்படியோ சென்று கொண்டிருந்தவன் , இன்று இங்கே வந்து நிற்கிறேன் .

( இது நல்லதா , கெட்டதான்னு நீங்கதான் சொல்லணும் :)



மிகச்சிறந்த எழுத்தாளர்கள் இங்கிருந்து உருவாகி இருக்கிறார்கள் . , உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் .....

தமிழகத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்

குறுந்தகவல் இதழ்கள் : ஆசிரியர்கள்



கேகேஆர்-ன் SMS ஹைக்கூ: கன்னிக்கோவில்ராஜா,சென்னை[9841236965]

தேசிங்குராஜா குறுஞ்செய்தி இதழ்: இயற்கை சிவம்,விழுப்புரம்
[9941116068]

கேகேஐ குறுஞ்செய்தி இதழ் : கொள்ளிடம் காமராஜ்,திருச்சி

[9894058651]

சுந்தர் குறுஞ்செய்தி இதழ் : அண்ணாமலை,ஆரணி

[9842106170]

மழைத்துளி குறுஞ்செய்தி இதழ் : சத்யா

எண்ணத்தின் வண்ணம் : எம்.எஸ்.பாபு

ஜெயம் குறுஞ்செய்தி இதழ் : ஜெயக் குமார், அந்தியூர்

[9842163703]

வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ் :பாரதி ராஜா,பனையடி ஏந்தல்

[9894887705]

சம்பூரணம் குறுஞ்செய்தி இதழ் : தமிழாளி,அழகாபுரம்

[8144260620]

ராகா குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9786098440]

செந்தமிழ் குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9688429731]

சித்தன் குறுஞ்செய்தி இதழ் : நித்யானந்தம்,மாமண்டூர்

[9095942789]

தெனாலி குறுஞ்செய்தி இதழ் :கலைவாணி

உதயம் குறுஞ்செய்தி இதழ் : செல்லதுரை ,ஓசூர்

[9578129090]

சிற்பி குறுஞ்செய்தி இதழ் : ரம்யா,மாமண்டூர்

லிங்கம் குறுஞ்செய்தி இதழ் : ராமலிங்கம்,சிறுவந்தாடு

[9976227703]

யவசம் குறுஞ்செய்தி இதழ் : ஜானி அந்தோணிராஜ்,உறையூர்

[9842163703]

ஜாலி கவிக்கடல் : ஹயத்பாஷா , சென்னை

[9952071178]

தெரியுமா ? :ப்ராங்ளின் குமார்

[9843921471]

மற்றும்

யாழிசை : யாழி ,கோவை

[9976350636]




வேரின்றி மண்ணிலே நிற்பதாய் எண்ணியே
பாரமாய் எண்ணாதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரப் பாய்வோம்;யாம்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..


இந்த விதையை என்னுள் வித்தவர்கள் இவர்கள்


புதிய படைப்பாளிகளை உருவாக்கும்

இவர்களின் உன்னத உள்ளத்தை உணர்ந்து கொள்வோம் !

இவர்களின் தன்னலமில்லா உழைப்பு சிறக்க வாழ்த்துவோம் !!


சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி :


(சரஸ்வதி பஞ்சு (உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் , திருச்சி தலைமை) , கிரிஜா மணாளன், சேதுமாதவன் , சி.ம.சரவணன், ஆங்கரை பைரவி, நடராஜன்,கொள்ளிடம் காமராஜ்,முத்து நிலவன் ,பிச்சை முஹைதீன்,தஞ்சை மனோகர்,பேராசிரியர்.சந்திரா பெருமாள்,பாபு, தனலெட்சுமி பாஸ்கரன்,சேலம் சுமதி,ஜோதி லட்சுமி, சோமசுந்தரம்,ஸ்ரீகாந்த்(ஆல் இந்தியா ரேடியோ),யாழி , நாணல்காடான்,ப்ராங்ளின்குமார்,விநாயக மூர்த்தி, லெட்சுமணன்,மு.வேலா,அய்யாவாடி சத்யா,ஜெயக்குமார்,கீரைத்தமிழன்,ராஜீவ்காந்தி,சந்திரசேகரன்,சார்லஸ்,உதயகுமாரன் , யோகானந்தன், குமாரப்பாளையம் துரை, மற்றும் பெயர் அறியமுடியாத சகோதரர்கள் பலர் ...

வழக்கம்போல நான் தாமதம் :( . கோவையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு 11 மணிக்குக் கிளம்பி 1.45க்குத்தான் போய் சேர்ந்தேன் . காலை நிகழ்ச்சி முடிந்து பலர் கிளம்பி இருந்தனர் )



வாழ்க உறவுகள் !

--
என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral