Tuesday, September 30, 2008

நானும்,எனது மகனும்,அந்த வேப்பமரமும்


முழுப்பரிட்சை முடிஞ்சு வரும்
மூணுமாச விடுமுறைக்காக - அன்று
ஏக்கத்தோடு காத்திருப்போம் நானும்
எங்க வீட்டு வேப்பமரமும்.

குரங்கு போல ஏறி
குதித்து விளையாடி
ஊஞ்சல் கட்டி ஆடி
மஞ்சள் பை முழுவதும்
வேப்பங்கொட்டை பொறுக்கி
வீறுநடை போட்டு
ஐந்து பைசாவுக்குவிற்று
ஐம்பது ரூபாய் சம்பாதித்ததுபோல
ஆனந்தமாய் சுற்றி வருவோம்
அந்த வேப்பமரத்தை.

பரிட்சை முடிந்து - இன்று
பள்ளிக்கு விடுமுறை.
அன்பு மகன்
ஆறே வயதில்
கண்ணாடி மாட்டி
கணினிக்குள்உக்கார்ந்து
புரியாத மொழியில் ஏதேதோ
புதியதாய் செய்துகொண்டே இருக்கிறான்.

வீட்டு வாசலில் அந்த
பரிதாப வேப்பமரம்
ஊஞ்சல் கட்டி ஆட
ஏறி விளையாட
கூடுதல் கிளையோடும்.,
வீதியெங்கும் வாரியிறைத்த
வேப்பங் கொட்டைகளோடும்
ஏக்கத்தோடு யாருக்காகவோ
காத்துக்கொண்டே இருக்கிறது .................

No comments: