Monday, August 17, 2009

நான்.....! .மிகப் பெரியவன் நான்.........!!


அவன்.....
லட்சத்தில் குளிக்கிறான் !
கோடியில் முகம் துடைக்கிறான் !!

சக்தியின் அதிகார மய்யம் - அவனிடம்
சத்தியமே கைகட்டி சேவகம் செய்யும்
பெய்யென்றால் தான் மழையே பெய்யும்

அவன் வரும் வழியில்
அமைச்சர்கள் கைகட்டி இருப்பார்கள்
அதிகாரிகள் வாய்பொத்தி நிற்பார்கள்


அவனிருக்குமிடத்தில்
பணம் பந்தியில் விஞ்சி இருக்கிறது
குணம் கைகட்டி அஞ்சி நிற்கிறது

காசு கை காட்டும் இடத்தில் - மெய்யது
தூசு தட்ட காத்திருக்கிறது

விந்தையாய்த் தெரியாது இது
அகந்தை உள்ளிருக்கும் வரை

புதியதாய் அகம் அரியணை ஏறுகிறது
பழகிய முகம் அடுக்களை ஏகுகிறது


வீட்டில்...
எழுப்பிவிட.. தூக்கிவிட
பல்துலக்க.. பாதம்துடைக்க
துணி மடிக்க.. துவட்டிவிட
ஊட்டிவிட.. வாய்துடைக்க
செருப்பு மாட்ட.. ஆடை பூட்ட
வாசல் திறக்க.. வழி அணுப்ப

அப்பப்பா....
ஆயிரம் சேவகர்கள் !!


வெளியில்...
கால் பிடிக்க.. காக்கா பிடிக்க
செருப்பு துடைக்க.. உறுப்பு துடைக்க
கார் கழுவ.. கதவு திறக்க
அழைத்துசெல்ல.. அறிமுகம் சொல்ல
எழுதிக்கொடுக்க.. எடுத்துப் படிக்க
வாய்பார்க்க.. திறந்தவுடன் கைதட்ட
கைகூப்ப.. காலில் விழ

அப்பப்பப்பா...
ஆயிரம் ஆயிரம் சேவகர்கள் !!!

திடீரென.....
சகாராவில் மழைதுளி போல
சிம்லாவில் பனித்துளி போல
சுனாமியில் சுண்டைக்காய் போல
சூறாவளியில் பஞ்சுமிட்டாய் போல

எரிமலையில் தண்ணீர் போல
கடலலையில் கண்ணீர் போல
ஒருநொடியில் அத்தனையும்
ஒருங்கே காணாமல்போனது

பங்குசந்தையின் சரிவில்
சிக்கி சீரழிந்த காளையாகிறான்
சீக்கிரமே உயிரிழந்த கரடியாகிறான்

பணம் பாதாளம்வரை பாயுமாம் - இங்கே
பணம் பாதாளத்துள் புதைந்துவிட்டது !

தேரில் வந்து கொண்டிருந்தவன்
தெருவில் விழுந்து கிடக்கிறான் !!

இன்று இவன்....
கண்ணைக் கட்டிக்
காட்டில் விட்டது போல

கையைக் கட்டி
கிணற்றில் இறக்கியது போல

அடுத்த அடிக்கு பாதை புரியாமல்
அடுத்த வேளைக்கு வழி தெரியாமல் ?????
................................................................

இங்கே இன்று இவனுக்கு.....
பெரிசாக எதுவும் வேண்டாம் - வயிறாற
பரிசாக ஏதாவது கிடைத்தால்போதும் !

அங்கே அவர்கள் சேவகர்களாகவே
அவரவர் வேளையில்
அவரவர் வேலையில்

அவரவர் நிலையில் நிரந்தரமாய்........!
அவரவர் பொறுப்பில் கவனமாய்................!

3 comments:

Unknown said...

சரிங்க, உங்க கவிதைய கொஞ்சம் வெளி இடுங்க.

Anonymous said...

ஒரு எழுத்துக்குள்ள மறைந்து இருக்கும் நீங்க யாரு !
அதை முடிந்தால் முதலில் சொல்லுங்கள் நண்பா !!

duraian said...

ஒரு எழுத்துக்குள்ள மறைந்து இருக்கும் நீங்க யாரு !
அதை முடிந்தால் முதலில் சொல்லுங்கள் நண்பா !!