Wednesday, September 2, 2009

உயிருக்கும் உண்டோ அளவுகோல்....... ?


சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே..

கோழிப் பண்ணையின் சுற்றுச் சுவரில்லா
கிணற்றில் தவறிவிழுந்த திருட்டுப் பூனை

பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !

காப்பாற்ற கயிறு கடப்பாரையோடு தீயணைப்புத்துறை
காவலுக்கு கடமை உணர்வோடு காவல்துறை

பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !

ஓர் உயிரை காப்பாற்ற ஒற்றுமையாய்
ஒட்டுமொத்த ஊரும் திரண்டு வந்துநிற்கிறது

பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !

காப்பாற்றிய திருட்டுப் பூனையை கையிலேந்தி
ஆர்ப்பாட்டமாய் ஊர்நுழையும் அதிரடிவீரர்கள்

பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !

உயிர்பற்றிய கவலையோடு அப்பாவியாய்
உயிர்பறிக்கவே வளர்க்கப்படும் உயிர்கள் !

பார்த்துக்கொண்டே....!

வாழும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் - ஆனாலும்
வழியேயில்லாத ஆயிரமாயிரம் அனாதை சீவன்கள் !!

சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே...........!

No comments: