Monday, November 17, 2008

மற்றவர்களும்,என் இதயமும்


"இதயத் துடிப்பு அடங்குகிறது
இயன்றவரை செய்துவிட்டோம்
இன்று இரவு தாங்காது
இறைவனிடம் வேண்டுங்கள்"

அவசரச் சிகிச்சை பிரிவில்
தீவிர சோதனைகளுக்குப்பின்
சூழ்ந்து நிற்கும் சொந்தங்களிடம்
சொல்லிக்கொண்டிருக்கிறார் மருத்துவர்

என் இதயத் துடிப்பா?
நிற்கப்போகிறதா?
அது எப்படி நிற்கும்?

அயல் நாட்டு சாதனங்களாலும்
அனுபவப் பாடங்களாலும் கூட
சரியாகக் கணிக்க முடியவில்லையே
அவர்களை பார்த்தால்
எனகுப் பாவமாக இருக்கிறது

இதயமற்ற இறைவனிடம் என்
இதயம் காக்க வேண்டிக்கொண்டு
இரவு முழுவது கண் விழித்து
இதமாய் கவனிப்பார்கள் பெற்றோர்கள்

நலம் விசாரித்துவிட்டுச் செல்லும்
நண்பர்கள் கவலையோடு
நடுநிசிவரைக் பார்த்திருப்பார்கள்
நிகழ்வுகளை அசை போட்டிருப்பார்கள்

என்னுள் இருக்கும் இதயம்
எனக்காக மட்டுமே துடிப்பதாக
தவறுதலாய்க் கணித்துவிட்டு
தவிப்போடு காத்திருக்கிறார்கள்

அவர்களை நினைத்தால்
எனக்குப் பாவமாக இருக்கிறது

அவர்களுக்குத் தெரியாது

அது அதனுள் இருக்கும்
என் அவளின் இதயத்துக்காகத்
துடித்துக்கொண்டிருக்கிறது

பிறகு எப்படி நிற்கும்?

Saturday, November 15, 2008

காதலனை சந்திக்க ...


முகம் பார்க்காமல்
முடிந்தே விட்டது
முழுவதுமாய் ஒரு ஆண்டு
முப்பதாண்டு வேதனை எனக்கு

தடை எத்தனை வந்தாலும்
தண்டனை ஏதும் கிடைத்தாலும்
அந்திசாயும் நேரம் அவரை
சந்திக்கத்தான் போகிறேன் தோட்டத்தில்

அடக்கி வைத்த அத்தனையும்
அவர் முன்னால் அள்ளித் தெளிக்கப்போகிறேன்
பொத்திவைத்த மொத்தத்தையும்
அவர் முன்னால் கொட்டித் தீர்க்கப்போகிறேன்

என்னை தினமும் எதிர்பார்த்து
ஏமாந்து போயிருப்பாரோ?
எதிர்பாராமல் இன்று பார்த்ததும்
எழுந்து வந்து அணைப்பாரோ?

வந்துவிட்டேன் தோட்டத்திற்கு
வரவேற்காமல் அமைதியாய் அவர்
சொந்தங்கள் சூழ்ந்திருக்க
சலனங்கள் ஏதுமின்றி அவர்
அன்று பார்த்த அதே கண்கள்
இன்றும் என்னவோ சொல்லத் துடிக்கின்றன

கண்கள் சிவக்க அவர் அப்பா வலப்பக்கம்
கொடுவாள் மீசையோடு மாமா இடப்பக்கம்
கை கட்டி பின்னால் என் அப்பா
கவலையோடு அருகே என் தம்பி

சுற்றியிருக்கும் சுற்றத்தின் முன்னால்
சொல்லவந்ததை சொல்ல முடியாமல்
கொண்டுவந்த மலர்களை மட்டும் அவர்கள்
காலடியில் வைத்து விட்டு

ஒன்றல்ல இரண்டல்ல
ஒட்டு மொத்த சொந்தத்தையும்
ஒரே நாளில் இழந்துவிட்டு
தனி மரமாய் அத்தனை
துக்கத்தையும் சுமந்துகொண்டு

வந்த வழி திரும்புகிறேன் தனியே
அந்தத் தோட்டத்திலிருந்து !

கல்லறைத் தோட்டத்திலிருந்து !!

Thursday, November 13, 2008

எங்கே அவன் ?


புத்தாண்டு 2108 ல்
புதிய உலகம் கண்டுபிடிக்க
புறப்பட்டோம் பிரபஞ்சப்பயணம்
பறக்கத் தொடங்கி ஆண்டுகள்
பல பறந்து போயின

சூரியனிலிருந்து சக்தி பெற்று
சளைக்காமல் எங்களை
சுமந்து செல்லும்
சின்னஞ்சிறிய விண்கலம்

வானில் சூழல் புரிந்து
வந்துபோகும் திசை தெரிந்து
வரப்போகும் இடர் அறிந்து
வழி நடத்த நான்

என் சைகை புரிந்து
தன் கணினியுடன் இணைந்து
கண நேரம் இமைக்காமல்
கலம் செலுத்த அவன்

இருக்கை மட்டுமே எங்கள்
இருப்பிடமும் உலகமும்
இருவரும் இதுவரை
இரு நிமிடம் பிரிந்ததில்லை
இருந்தாலும் சேர்ந்தார்ப்போல
இரு நிமிடம் பேசியதுமில்லை

பூமியிலிருந்து கிளம்பி
சூரியனிலிருந்து விலகி
நிலவு தாண்டி
செவ்வாய் கடந்து
தொடர்ந்து ஒளிவேகத்தில்
போய்க்கொண்டே......... . . . . . . . . .

திடீரென உறக்கம் கலைந்தேன்
தடுமாற்றம் கலத்திலும் உணர்ந்தேன்
எதிர்பார்க்கவே இல்லை
எதிரே புதிய விண்கோளம்

ஒன்று ஒன்பதாக
ஒன்பது எண்பதாக
வெடித்துச் சிதறி
பெருகிக்கொண்டே இருக்கிறது
நெருப்பு மழையாக

உயிர் தப்ப வேண்டுமெனில்
உடனே கலம் திருப்ப வேண்டும்
உள்ளம் துடிக்கத் திரும்பினேன்

உடன் இருந்தவன் அங்கு இல்லை.

Wednesday, November 12, 2008

என்ன தான் செய்யலாம் ?


அலுவலகத்தில் அல்லல்பட்டு
அமைதி நாடிவரும்போது
எள்ளும் கொள்ளும் வெடிக்கும்
அதிரடிப் படையாய்.,

சிறுதவறு செய்துவிட்டு
செய்தி கசிந்து மாட்டிக்கொண்டு
கலவரம் எதிர்பார்த்து
கதவு திறந்து மெதுவாய்
காலடிவைத்தால்
அமைதியே உருவான
சமாதானப் புறாவாய்.,

சந்தோசச் செய்தியோடு
ஆனந்த அதிர்ச்சி தர
துள்ளிக்கொண்டு முன்னால்
திடீரென போய் நின்றால்
அதிர்ச்சி தன்னையேத்
திருப்பித் தாக்கும்படி
கொந்தளிக்கும் கலக பூமியாய்.,

என்னதான் செய்வான் அந்த
ஏதுமறியாத அப்பாவிக் கணவன்

(பி.கு :எதிர்ப்பு தெரிவிக்கும் சங்கத்தினர்
மனைவி என்று மாற்றிப் படிக்கவும்

இணைப்புப் படம்
நகைத்து ரசிக்க மட்டும்
நடைமுறைக்கு அல்ல )

Monday, November 10, 2008

அந்த ஐந்தாவது நபர் !


அம்மா மடியில் நான்
தலை வைத்திருக்க
அப்பா கால் அமுக்க
அக்கா விரல் சொடுக்க
அரைக்கண் திறந்து
அறையோர சன்னலைப் பார்க்கிறேன்
சாத்திய கதவுக்குப்பின்னால்
ஏக்கத்தோடு இரு கண்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருப்பது
எனக்கு மட்டும் தெரியும்

சனிக்கிழமை சாயங்காலம்
அப்பா வாங்கிவரும்
இனிப்புச் சேவுக்கும்,
அம்மா பாசத்தையும் சேர்த்து
கரைத்துவைத்த கஞ்சிக்கும்
அரைத்துவைத்த துவையலுக்கும்
அக்காவோடு சண்டைபோட்டு
வரிசையில் நிற்கும்
கடைக்குட்டி எனக்கு
பின்னாலிருந்து
நீட்டிக் கொண்டிருக்கும்
இரண்டு கைகள்
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவின் கண்ணைக் கட்டிவிட்டு
அம்மா கதவுக்குப் பின் மறைய
அக்கா கட்டிலுக்கு கீழே பதுங்க
அவசரமாய் இடம் தேடி நான்
அலமாரி கதவு திறக்க
அங்கே எற்கனவே முக்காடிட்டு
ஒளிந்திருந்தது யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவின் மிதிவண்டியில்
எங்களுக்கே இடமில்லாதபோது
விடாமல் பின்னால்
அடம் பிடித்தபடி
தொங்கிக்கொண்டே வரும் அந்த
ஐந்தாவது நபர் யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவுக்கு நெஞ்சுவலி என
அவசர சேதி வர
புதை மணலில் நெஞ்சம்
பதைபதைக்க ஓடும்
என்னைத் தாண்டி
முன்னால் பதியும்
காலடித்தடங்கள்
யாருடையது என்பது
எனக்கு மட்டும் தெரியும்

எல்லோருக்கும் தெரியும்
என்குடும்பம் ஒரு கோவில் என்று

எனக்கு மட்டுமே தெரியும்
அந்த ஐந்தாவது நபர்
கடவுள் என்று.

Saturday, November 8, 2008

பத்தே பைசாதான் !


'அய்யா' என்ற அவலக்குரல்
அவசரமாய் வாசல் வந்தேன்

கையில் குழந்தையோடும்
கண்கள் நிறைய பசியோடும்
தட்டு நிறைய எதிபார்ப்போடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
எட்டுவயது சிறுமி பிச்சை கேட்டு

"போ!போ!!" என உறைத்து
புறங்கையால் இல்லையென மறுத்து
உறத்து கதவடைத்து
உள்ளே திரும்பினேன்
உள்ளம் அதிர திடுக்கிட்டேன்

மூடிய கையில் பத்துபைச்சாவுடனும்
திறந்த கண்ணில் அதிர்ச்சியோடும்
எதுசரி என்ற குழப்பத்தோடும்
என்முகத்தில் எதையோ தேடியபடி
எதிரே என் குட்டிக் குழந்தை

ஒருநொடியில் உறைந்துபோனேன்
மறுநொடியே உடைந்தும் போனேன்
நல்ல அப்பா என் உருவத்தை
நானே கலைத்துவிட்டேனா?

குற்ற உணர்வில் மூழ்கிப்போனேன்
குழந்தைமுகம் பார்க்கவே இல்லை

பலவற்றை இழந்திருக்கிறேன்
வாழ்க்கையில்
பதறியதே இல்லை

பத்தே பைசாதான்
பல நாள்
தூங்கவே இல்லை.

Wednesday, November 5, 2008

ஒய்யாரக் கொண்டை


கோடிகளைக் கொட்டி
குளிர்சாதன வசதியோடு
கோபுரமாய் எழுந்து நிற்கும்
கல்யாண மண்டபம்

லட்சங்களில் தோரணம் கட்டி
நோட்டுக்களால் கம்பளம் விரித்து
வாகனங்களால் நிரம்பி வழியும்
வரவேற்பு நுழைவாயில்

மிச்சம் வைப்பதையே அந்தஸ்த்தின்
உச்சம் எனக் கருதும்
தட்டை கையில் ஏந்திய
மேல்தட்டு மக்கள்
சாப்பாட்டு அறையில்

பட்டுச் சேலையில்
தொட்டுப் பேசாத
நாகரீக நங்கைகள்
நவீன மணமேடையில்

ஒட்டு சேலையில்
பட்டினியோடு
எல்லோருக்கும்
சமைக்கும்
சமையல்காரி
சமையலறையில் .

Tuesday, November 4, 2008

இரண்டாவது அம்மா


பெத்ததே
போதுமென
மொத்தமாய் போய்
சேர்ந்துவிட்டாள் அம்மா

அறியாத வயதில்
தெரியாத பொறுப்பை
புரியாமலேயே ஏற்று
பெரியமனுசி ஆகிப்போன அக்கா,

என் கை பிடித்துக் கூட்டிச் செல்ல
என் பை தூக்கி அழைத்துச் செல்ல
தன் படிப்பை இழந்த
தற்குறி ஆகிப்போன அக்கா,

ஆறு வயதுவரை என்னை
அரையிலிருந்து இறக்காமல்
தரையே தொடவிடாமல்
தலை தடவி பாதுகாத்த அக்கா,

கரையேற வழியில்லாமல்
காத்து நிற்கிறாள்
காரியம் கைகூடுமென
கனவோடு நிற்கிறாள்
எப்படியும் முடிப்பேன் என
எதிர்பார்த்து நிற்கிறாள்
என் முகம் பார்த்து
ஏங்கி நிற்கிறாள்.

என்னசெய்யப் போகிறேன் நான்?

ஒத்த மூக்குத்திக்கும் !
ஒருசோடி கம்மலுக்கும் !!

Sunday, November 2, 2008

மனிதன் என்ற ஒருவன்


விபத்தில் காயம் பட்டு
சாலையில் கிடப்பவரை
பாவப்பட்டுக் கொண்டே
கடந்து செல்கிறோம்

தெருவில் கல்லடிபட்ட நாய்க்காக
இரக்கப்பட்டுக் கொண்டே
இறைச்சிக் கடையில்
வரிசையில் நிற்கிறோம்

பத்தாயிரம் செலவு செய்ய மனமில்லாமல்
முப்பதாயிரம் நன்கொடை கொடுத்து
முதியோர் இல்லத்தில்
சேர்த்து வருகிறோம்

பசியோடு வருபவருக்கு
இல்லையென மறுத்து
பல கோடி காணிக்கையாய்
உண்டியலில் செலுத்தி
புண்ணியம் தேடுகிறோம்

வீடு தாண்டி வெளியே
உள்ள உறவு முறை
தெரியாமலேயே போனதை
பெறுமையாய் பேசுகிறோம்

உங்களுக்குத் தெரியுமா?

முன்பு ஒரு காலத்தில்
மனிதன் என்ற ஒருவன்
இருந்தான் என்று

Saturday, November 1, 2008

உண்மையைச் சொல்கிறேன்.


பூவில் தேன் உண்ட பட்டாம்பூச்சி
சிறகுகள் படபடக்க
விண் நோக்கிப் பறக்கையில்
அதன் வண்ணங்கள் சிதறி
சித்திரம் போல உதிர்கிறதே

கிழக்குச் சூரியனின்
காலைக் கதிரின்
வெளிச்சத்தில் உலகம்
நிமிடத்துக்கொரு நிறத்தில்
வானவில்லாய் தெரிகிறதே

விண்ணிலிருந்து விழும்
மழைத் தூறலின்
ஒவ்வொரு துளியிலும்
வெவ்வேறு வாசம் வீசுகிறதே

சுழற்றியடிக்கும் காற்றின்
சத்தத்தில் இருந்து
இதுவரை தெரியாத
மொழிகளின் அர்த்தங்கள்
பல எளிதாய் புரிகிறதே

ஆமாம் நண்பர்களே
அன்புத் தோழர்களே

நான் காதலிக்கப்படுகிறேன்