Saturday, November 15, 2008

காதலனை சந்திக்க ...


முகம் பார்க்காமல்
முடிந்தே விட்டது
முழுவதுமாய் ஒரு ஆண்டு
முப்பதாண்டு வேதனை எனக்கு

தடை எத்தனை வந்தாலும்
தண்டனை ஏதும் கிடைத்தாலும்
அந்திசாயும் நேரம் அவரை
சந்திக்கத்தான் போகிறேன் தோட்டத்தில்

அடக்கி வைத்த அத்தனையும்
அவர் முன்னால் அள்ளித் தெளிக்கப்போகிறேன்
பொத்திவைத்த மொத்தத்தையும்
அவர் முன்னால் கொட்டித் தீர்க்கப்போகிறேன்

என்னை தினமும் எதிர்பார்த்து
ஏமாந்து போயிருப்பாரோ?
எதிர்பாராமல் இன்று பார்த்ததும்
எழுந்து வந்து அணைப்பாரோ?

வந்துவிட்டேன் தோட்டத்திற்கு
வரவேற்காமல் அமைதியாய் அவர்
சொந்தங்கள் சூழ்ந்திருக்க
சலனங்கள் ஏதுமின்றி அவர்
அன்று பார்த்த அதே கண்கள்
இன்றும் என்னவோ சொல்லத் துடிக்கின்றன

கண்கள் சிவக்க அவர் அப்பா வலப்பக்கம்
கொடுவாள் மீசையோடு மாமா இடப்பக்கம்
கை கட்டி பின்னால் என் அப்பா
கவலையோடு அருகே என் தம்பி

சுற்றியிருக்கும் சுற்றத்தின் முன்னால்
சொல்லவந்ததை சொல்ல முடியாமல்
கொண்டுவந்த மலர்களை மட்டும் அவர்கள்
காலடியில் வைத்து விட்டு

ஒன்றல்ல இரண்டல்ல
ஒட்டு மொத்த சொந்தத்தையும்
ஒரே நாளில் இழந்துவிட்டு
தனி மரமாய் அத்தனை
துக்கத்தையும் சுமந்துகொண்டு

வந்த வழி திரும்புகிறேன் தனியே
அந்தத் தோட்டத்திலிருந்து !

கல்லறைத் தோட்டத்திலிருந்து !!

No comments: