Monday, March 23, 2009

ஆடை இருந்தும் அம்மணமாய்.....!


மிருகக்காட்சிசாலை அது

கூண்டுக்குள் காட்சிப்பொருளாய்
கூச்சத்தோடு மிருகங்கள்
வரிசையில் ஆர்வமாய்
வந்துசெல்லும் மனிதர்கள்

சிங்கம்
சுற்றத்தை அடக்கி ஆளும் - அதன்
சொந்தங்களை சேர்த்து வாழும்

நரி
அண்டி ஒண்டிப் பிழைக்கும் - கூடவே
இருந்து குழியும் பறிக்கும்

பாம்பு
பார்த்தால் பயந்ததுபோல ஓடும் - அதன்
நாக்கினில் விசமும் இருக்கும்

நாய்
நன்றியோடு இருக்கும் - சமயத்தில்
நல்லவரையும் கடிக்கும்

குயில்
சொந்த வீடில்லாத ஏக்கத்தை -அதன்
சோகக் குரலில் காட்டும்

யானை
எளிமையாய் இருக்கும் - ஆனாலும்
அதற்கு மதமும் பிடிக்கும்

குரங்கு
குட்டிச் சேட்டைகள் செய்யும் _ அசந்தால்
இருப்பதைப் பிடுங்கித் திண்ணும்

பூனை
கண்களை மூடிக்கொள்ளும் _ உலகமே
இருண்டதாய் எண்ணிக்கொள்ளும்

நெருப்புக்கோழி
தரைக்குள் தலை நுழைக்கும் _ தான்மட்டும்
தப்பியதாய் நினைத்துக்கொள்ளும்

ஐந்தறிவு விலங்குகள் ஒவ்வொன்றிற்கும்
அதற்கென தனித்தனியே சிறப்புக்குணங்கள்

ஆறறிவு மனிதன் நம்மிடம்
அப்படி என்ன சிறப்பு குணம்?

அட,ஆச்சரியமாய் உணர்கிறேன்!
அனைத்து குணங்களும் என்னிடமும்
அப்படியே மாறாமல் இருக்கின்றன!!


ஒருநிமிடம் எனக்குள் யோசிக்கிறேன்
மறுநிமிடம் அதிர்ச்சியாகி நிற்கிறேன்
"மிருகங்களின் மொத்த கலவையா நான்!
குறிப்பிட்டுச் சொல்ல எனக்கென
சிறப்புக்க்குணம் ஏதும் இல்லையா?"


கட்டணம்கட்டி வந்தேன் மிருகக்காட்சிசாலை!
நட்டநடுவில் காட்சிப்பொருளாய் நிற்கிறேன்!!
அனைத்து மிருகங்களும் பார்த்துகொண்டிருக்கின்றன
என்னை இப்போது இலவசமாக!!!

அத்தனைக் கண்களுக்கும் முன்னால்
ஆடையோடு இருந்தாலும் நான்
அம்மணமாய் உணர்கிறேன்

Monday, March 16, 2009

பரிதாபத்துக்குரியவனின் கடைசி ஆசை....


இன்று ஒருநாள் எப்படியும் தாண்டிவிட்டால்
இனிய பிறந்தநாள் கொண்டாடிவிடுவேன்
இனி அதற்கு வழியே இல்லை
இன்று தாங்குவேனோ தெரியவில்லை

என் நூறாவது பிறந்தநாள்
ஏன் நூலிழையில் தவறியது
என்ற கதையைக் கேளுங்கள்

வீட்டிற்கு வடகிழக்கு மூலையில்
வாகாய் வளர்ந்து நிற்கும்
வாகை மரம் நான்

ஆயிரம் பேர் தங்கிச்செல்ல
அருமைநிழல் கொடுத்த நான்
அங்கே ஆயிரம் கருசுமக்க
அகன்றகிளை கொடுத்த நான்

கொளுத்தும் வெயிலைத் தாங்கி
கடும் குளிரில் தூங்கி
அடிக்கும் மழையில் நனைந்து
துடிக்கும் புயலில் நெளிந்து

இயற்கையை இதுவரை வென்று
இன்றுவரை நிமிர்ந்து நிற்கும் நான்
இந்த மனிதனின் சூழ்ச்சிவலையில்
இதோ வசமாய்ச் சிக்கிக்கொண்டேன்

விதி எனக்கு வந்துசேர்ந்தது
விருந்தினர் என்ற வடிவத்தில்
ஆச்சரியமாய் பார்த்தார் என்னைச் சுற்றி
ஆர்வமாய் விசாரித்தார் என்னைப் பற்றி

"வாஸ்த்துவின்படி வடகிழக்கில் மரம்
வீட்டின் நலத்திற்கு அகாது-அதிலும்
வாகைமரம் ஆகவே ஆகாது"


மெதுவாக பற்ற வைத்துவிட்டு
சாதுவாகக் கிளம்பிச் சென்றுவிட்டார்

இதோ..........

என்னை வெட்டி சாய்க்க
எனது நிழலில் நின்றுகொண்டு
கூட்டம் கூட்டி அமர்ந்துகொண்டு
திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்

நாளை விடியும்போது
நான் விறகாகி இருப்பேன்
நீங்கள் மனது வைத்தால்
நான் உயிரோடு இருப்பேன்

இறந்தநாளா? பிறந்தநாளா??
இனி உங்கள் கையில் தான்!
இரக்க மனம் உள்ளோர்களே!!
யாராவது உதவி செய்வீர்களா?

Saturday, March 14, 2009

அவனை விடக் கேவலமாய்....


அதிகாலைப் பொழுது
ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் நான்
அவனும் தயாராகி இருப்பான்
ஆரம்பமாகப் போகிறது எங்கள் ஊர்வலம்

தெருவுக்கு வந்து விட்டேன் நான்
தூரத்தில் காத்திருக்கிறான் அவன்
பெருமையோடு முன்னே நடக்கிறேன் நான்
பின் தொடர்ந்து வருகிறான் அவன்

இதோ ஆரம்பம் எங்கள் பயணம்
இனிவரும் ஒருமணி நேரம்
என் அருகில் எனக்கு எதிரில்
என் நிழலின் அருகில் கூட
எவரும் நெருங்கி வரமுடியாது

வாசல்வரை கொண்டு சேர்த்தபின் அவன்
விலகித் தன்வழிப் போய்விடுவான்
பத்து வருடமாய் தொடரும் நட்புக்கு
பதிலுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்

இத்தனை நன்றி காட்ட நான்
இவனுக்கு என்னதான் செய்துவிட்டேன்

முன்னம் ஒருநாள் இரவில்
சின்னஞ்சிறிய தாள் அளவில்
ரொட்டித் துண்டை வீசியதிலிருந்து
ஒட்டிக் கொண்டான் அன்றிலிருந்து

வீட்டிலும் வளர்க்கிறேன் நாய் ஒன்றை
வாசலைத்தாண்டி நான் வந்தவுடன்
வாலை லேசாய் ஆட்டி
காலை வாகாய் நீட்டி
கண்ணை லேசாய் சிமிட்டி
கவிழ்ந்து படுத்துக்கொள்ளும்

திடீரெனத் தடைபட்டது என் சிந்தனை ஓட்டம்
தெரு முனையில் அவனின் அலறல் சத்தம்
சுறுக்கு வலையில் சிக்கி அவன்
சுற்றிலும் நாய் பிடிக்கும் ஊழியர்கள்
ஒன்பதுபேர் இருந்தாலும் கூட
ஒருவராலும் நெருங்க முடியவில்லை

என்னைப் பார்த்தவுடன்
எப்படியும் காப்பேன்
என்ற எதிர்பார்ப்போடு
எதிர்த்து போராடாமல்
ஏக்கத்தோடு நிற்கிறான்

அமைதியாய் நிற்கிறேன் நானும்
அடுத்து என்ன செய்யவேண்டும்


அமைதியான அவனை அப்படியே
அடித்துத் தூக்கி கூண்டிற்க்குள் அடைக்கும்
அவர்களிடம் விடச் சொல்லிக் கேட்கலாமா?
அல்லது அப்படியே விட்டு விடலாமா?
இந்தப் பெரிய மனுசனுக்கும் தெரு நாய்க்கும்
இது என்னய்யா தொடர்பு என
ஏளனமாய்ப் பேசிவிடுவார்களோ?
என்வீடுவரை சொல்லிவிடுவார்களோ?

அமைதியாய் கூண்டுக்குள் நிற்கிறான் அவனும்
ஆயிரம் அதிர்ச்சி தெரிக்கிறது அவன் முகத்தில்

பலவருடம் பாதுகாத்த அவனுக்காக
சில நொடிகூட போராடாத என்முகத்தில்
இன்னும் எதையோ எதிர்பார்த்து
இமைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறான்

வண்டி அவனோடு மெல்ல நகர்ந்து
சின்னப் புள்ளியாகித் தொடர்ந்து
கண்ணிலிருந்து மறைந்ததே போனது

அவன் பார்வையிலிருந்தும் நான்
அர்த்தமில்லாத ஒற்றை புள்ளியாகி
அசிங்கமாகி மறைந்தே போய் இருப்பேன்

Saturday, March 7, 2009

அவன்,அவள்,நான்.......


கையில் விஷத்தோடும்
கண்களில் கலவரத்தோடும்
கையும் களவுமாய்
தலை குனிந்து அவன்
தரை பார்த்து நிற்கிறான்

தற்கொலை முயற்சி அது
தடைபட்ட வருத்தத்தில் அவன்
தலைவிறிக் கோலத்தில் அவள்

அண்ணன் என்றும் பாராமல்
அவள் அனலை வாரி வீசுகிறாள்

"சாகவேண்டும் என முடிவெடுத்தபின்
சாதிக்க வாய்ப்பு இருந்த போதும்
அமைதிச் சாவுதான் வேண்டுமெனில்
ஆணாய் பிறந்ததன் அர்த்தமென்ன ?

உன் சாவு சந்தேகத்தோடுதானே
உரசப்படும் இந்த உலகத்தால் !

எதனால் இது நிகழ்ந்தது ?
எப்படி இது நடந்தது ?
மருந்து குடித்தாலா ?
மாரடைப்பு வந்ததாலா ?
பயம் பிடித்ததாலா ?
பாசம் மிகுந்தலா ?
நோய் நொடியாலா ?
நொந்து போனதாலா ?

ஆளாளுக்கு ஒன்று கூறி
அசிங்கத்தின் ஒட்டு மொத்த
அடையாளமாகவே நீ
ஆக்கப் பட்டுவிடுவாயே!

மறந்து விட்டாயா அல்லது
மன்னித்து விட்டாயா ?

அம்மாவையும்
அப்பாவையும்
பொறுக்கி எடுத்து
எரியூட்டி முடித்து
எட்டுநாள் தானே ஆகிறது

அக்காவும் மாமாவும்
அவளது குழந்தையும்
சென்ற இடம் பற்றிய விபரம்
இன்றுவரைத் தெரியவில்லை!
உயிரோடாவது இருக்கிறார்களா ?
உண்மை இன்னும் புரியவில்லை!

எட்டத்தில் உள்ள சொந்தங்கள்
என்னவானார்கள் எனப் புரியவில்லை
பக்கத்தில் உள்ள பந்தங்கள்
பதுங்கிய இடம் தெரியவில்லை

உன்னால் முடியும்!
உண்மை உணர்!!

காயம்பட்ட இதயங்களுக்கு
களிம்பு தடவ முயற்சி செய்!
ஆயிரத்துக்குள் ஒன்றாய் இருந்துவிடாமல்
ஆயிரத்து ஒன்றாய் தனித்து நில்!

மண்ணோடு புதைந்த பின்னும்
உன்னோடு முடிந்து விடாமல்
உன்னுடய தடம் பதித்து செல்!
எதிரியின் மனதில் ஆழமாய்
என்றும் மறையா பயம் விதைத்து செல்!

வாழ்த்தி உன்னை நானே
வழி அனுப்பி வைப்பேன்"


வயதுக்கு மீறிய ஆவேசத்தோடு
வார்த்தைகளைக் கொட்டி விட்டு
இடுப்பில் கட்டியிருந்த என்னையும்
இடை மறைவிலிருந்த பொத்தானையும்
இதமாய் வருடிக்கொடுத்து விட்டு

ஏதோ முடிவோடு
எங்கோ கிளம்புகிறாள் அவள்

Wednesday, February 25, 2009

ரஹ்மான் உணர்த்தும் உண்மை......



Aது யாR ரஹ்மான்?
அவரு என்ன சாதிச்சாரு????
இது உலகில் நேற்று வரை

AR ரஹ்மான்!!!!
அட அவரைத் தெரியாதா!!!
இது உலகின் இன்றைய நிலை

இரண்டு ஆஸ்கார் மூலம்
இருண்ட கிடந்ததுபோல் தோன்றிய
இந்தியக் கலை உலகத்தினை
உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறான்
உலக நாயகன் எங்கள் ரஹ்மான்

இருங்கள்,கொஞ்சம் இருங்கள்
இதற்கே இப்படி என்றால்
இனியும் தொடர்ந்து பாருங்கள்

விருது கிடைத்த மகிழ்ச்சியில்
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காமல்
உண்மை நிலையை கொஞ்சம்
உரசிப் பார்க்கலாம் வாருங்கள்

ரோஜாவின் தமிழா தமிழா_வை விடவா
பம்பாய்_ன் உயிரே உயிரே_யை விடவா
ஸ்லம் டாக்_ன் ஜெய் ஹோ சிறந்தது??????????????

ஒரு அந்நிய நாட்டுப் படத்தின் மூலமே
ஒரு ஆந்நிய மொழிப் படத்தின் மூலமே
ஒரு அற்புதக் கலைஞன் அவன்
ஒருவழியாய் அடையாளம் காணப்பட்டிருக்கிறான்

ஏன் இந்த அவல நிலை??
என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்???
ஒரு இந்தியப் படைப்பாளியாய்
ஒரு இந்தியக் கலைஞனாய்
ஆஸ்கார் களத்தில் தடம் பதிக்க
ஆவன செய்ய முடியாதா????

இங்கே வழி நடத்த ஆள் இல்லையா?
இல்லை வழிதான் தெரியவில்லையா??
இல்லை வழியாரும் தரவில்லயா???

தாமதமான அங்கீகாரம் என்றுமே
மறுக்கப்பட்ட நீதிக்கு சமமல்லவா!
சரியாக மேலே உள்ளவர்கள் வழிநடத்தி இருந்தால்
சாதித்திருப்பார்களே நம்மவர்களும்
சரிக்கு சரியாய்! சாரி சாரியாய்!!

உண்மையை உணர்ந்தால்
உலகமே நம் காலடியில்!

Friday, February 20, 2009

மந்திரவாதி நான்.........


நான்...........

மந்திரம் தந்திரம் அறிந்தவன்
மனோவசியம் தெரிந்தவன்
மாயாஜாலம் புரிந்தவன்

அரைநொடியில் ஆயிரம் மைல் நடப்பேன்
ஒரேநொடியில் முழுக் கண்டமும் கடப்பேன்
அதேநொடியில் உங்கள் அருகிலும் இருப்பேன்

சோதித்துப் பார்க்கிறீர்களா என்னை?
சந்திக்கத் தயாராகுங்கள் உண்மையை!!!

நீங்கள் இப்போது
எங்கே இருந்தாலும்
எனக்குக் கவலை இல்லை

பக்கத்தில் இருந்தால்
பத்து மைல் தூரம்
பாக்தாத்தில் இருந்தால்
பலஆயிரம் மைல் தூரம்
அமெரிக்காவில் இருந்தால்
ஆயிரம் ஆயிரம் மைல் தூரம்

இதோ கடந்து விட்டேன்

இதைப் படித்துக்கொண்டிருக்கும்
இந்த நேரம் இங்கிருக்கும் நான்
உங்களின் கண் வழி நுழைந்து
உங்களுக்குள் தான் இருக்கிறேன்

நேரம் தின்று விட்டேன்
தூரம் கொன்று விட்டேன்
கண் இமைக்கும் நேரத்திற்குள்
கூடுவிட்டு கூடு பாய்ந்து விட்டேன்

உண்மையா இல்லையா ?
உள்ளபடி கூறுங்கள்!!
உங்களின் பதிலுக்காக

நான்........

Tuesday, February 17, 2009

சதியை மதியால்.....


என்னோட மவராணியே
என்ன மாதிரியான ஒலகமிதுன்னு
ஒரு மண்ணும் வெளங்கலியே

என்னையும் ஒன்னையும்
ஒன்னுபோலப் பாக்கணுமுன்னு
ஒட்டுமொத்தமா கேக்கிறானுவளே

சேத்துப் பாத்தா எப்படியும்
சத்தமா எதுப்பானுவன்னு
எதிர்பாத்து இருந்தா இப்படி
ஏங்கிப்போயி கெடக்கிறானுவளே

சதி வேலயா இருக்குமோ?

சாதி சரியில்லன்னு சொல்லி
சங்கப் பிடிச்சிருவாங்களோ?
ஒன்னுபோல பாத்த பின்னால
ஒதுக்கிப் பிரிச்சிருவாங்களோ?

என்ன நடந்தாலும் சரிதான்னு
எதுக்கும் துணிஞ்சிட்டேன் மக்கா

முள்ள முள்ளால தானே எடுக்கணும்
சதிய மதியால தானே வெல்லணும்

சரி !

இங்கேயே பாக்கணுமா ?
இப்போதே பாக்கணுமா ??
பக்கத்துல வந்துக்கோங்க !
உத்து உத்துப் பாத்துக்கோங்க !!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
N1

Monday, February 16, 2009

எங்கே ஆரம்பமானது...?


"கம்பங்கூழும் நீச்ச தண்ணியும்
கஞ்சிச் சோறும் கடிக்க மிளகாயும்
கேப்பை களியும் சோள தோசையும்
கருவாடோடு முந்தாநாளு கூட்டிவச்ச
கறிக் குழம்பும் கொடிக் கறியும்
சகட்டுமேனிக்கு சாப்பிட்ட தாத்தா

நூறுவயசத் தாண்டிய பின்னாலும்
மருந்துக்குக் கூட மருந்து வாங்க
மருத்துவமனை வாசல மிதிச்சதில்லை
மலை போல இன்னும் இருக்கிறார்"


குக்கர் சாதமும் பீசா ரொட்டியும்
உடனடிக் குழம்பும் தடாலடி உணவும்
சத்து மாவும் சக்தியூட்டும் பானமும்
திட்டமிட்டு தினமும் சாப்பிடும் அப்பா

மறந்துபோய் நூறுநாள் தாண்டியும்
மருந்து வாங்க மருத்துவம் பார்க்க
மருத்துவமனை வாசல் மிதிக்காவிட்டால்
தடுமாறித் திணறிப்போய் விடுகிறார்

"சாதாரணமாய் சாப்பிட்ட தாத்தா நல்லா
சம்முன்னுதானே இருக்காரு
கணக்குப் பண்ணி சாப்பிடும் அப்பா ஏன்
கசங்கிப் போயி கிடக்காரு"


தவறு எங்கே நிகழ்ந்தது?
தடம் எப்போது மாறியது?
ஆரம்ப புள்ளியாய் அது
ஆரம்பித்த இடம் எது?

Saturday, February 7, 2009

காதலர் தின டைரிக் குறிப்பு...!!


காதலர் தினம்....
காதலின் உண்மை கனம் அறிய
கடவுள் நான் களத்தில் இறங்குகிறேன்

தேர்ந்து எடுத்திருக்கிறேன் அவர்களை
தேரியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

நெடுநாள் காதலர்கள் போலும்
நெருக்கமாய் அமர்ந்து இருந்தாலும்
இடைவெளி அதிகமாகவே தெரிகிறது
இடையே அனல் காற்று வீசுகிறது

கடுமையாய் மோதிக் கொள்கிறார்கள்
கடுஞ்சொல் பறிமாறிக் கொள்கிறார்கள்
திசைக்கு ஒருவராய் திரும்பி
தடம் மாறிச் சென்றுவிடுகிறார்கள்

இரவு முழுவதும் கவலையில்
இருவரும் ஒருநொடி தூங்கவில்லை
மனதில் தோன்றியதை டைரியில்
மொத்தமாய்க் வடித்து வைக்கிறார்கள்

அடுத்தவர் டைரியைப் படிப்பது
ஆண்டவனே ஆனாலும் குற்றம் தான் !
ஆனாலும் என்னதான் எழுதி இருப்பார்கள்
அறிந்து தானே ஆகவேண்டும் !!

அவளின் டைரிக் குறிப்பு:
ஒருமுறை விட்டுக் கொடுத்து இருக்கலாமோ ?
ஒரே அடியாய் தோற்கடித்து விட்டோமே!

அதற்காக இப்படியா நடந்து கொள்வது!
அவர்களைத் தேடிப் போய் இருக்கிறோம் என்ற
ஆணவம் தானே அவர்களுக்கு!

அமைதியாய் இருந்துவிட்டால்
அடங்கிப் போய்விடுவோம் என்ற
திடமான எண்ணம் தானே அவர்களுக்கு!

இருந்தாலும் கொஞ்சம் நாமும்
அமைதி காத்து இருந்திருக்கலாமோ?
அவனும் காயம் அடைதிருப்பானோ?

தொங்கிப்போன அவன் முகம்
இங்கே கண் முன்னால் விரிகிறதே
இரவெல்லாம் கவலையாய் இருப்பான்
இதைப் பற்றியே நினைத்திருப்பான்

இன்றய பொழுது முடியட்டும்
இனிமையாய் காலை விடியட்டும்
நாளை அவனை சமாதனம் செய்வோம்
நாள் முழுவதும் சந்தோசமாய் இருப்போம்


அவனின் டைரிக் குறிப்பு:
ஒருமுறை விட்டுக் கொடுத்து இருக்கலாமோ?
ஒரே அடியாய் தோற்கடித்து விட்டோமே!

அதற்காக இப்படியா நடந்து கொள்வது?
அவர்களைத் தேடிப் போய் இருக்கிறோம் என்ற
ஆணவம் தான் அவர்களுக்கு!

தவறான முடிவுகள் கொடுத்தால்
தடுமாறி விடுவோம் என்ற
தன்னம்பிக்கை தான் அவர்களுக்கு!

சச்சினை சாய்த்துவிட்டால்
சமாளிக்க மாட்டோம் என்ற
சிறுமதி தானே அவர்களுக்கு!

சோதனைகளை எல்லாம் ஓரமாய்
சாத்தி வைத்து விட்டு
சாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம் !!

எனது டைரிக் குறிப்பு:
???????????????????????????????

Wednesday, February 4, 2009

ஆண் பாவம்...!!!


என் வீட்டில் உள்ளோருக்கும்
என் சொந்தங்கள் எல்லோருக்கும்
அம்மாவின் ஒரு வார்த்தைதான்
ஆண்டவனின் திரு வார்த்தை
அம்மாவை சுற்றித்தான் இங்கே
அனைவரும் சுழன்று வருவோம்

அவளன்றி அங்கே ஒரு
அணுவும் கூட அசையாது
அப்பா வெறும் பார்வையாளராய்
ஒப்புக்குத் தனியாகவே இருப்பார்

நடப்பது எதையும் ஒன்றும் சொல்லாமல்
நிகழ்வது எதுவானாலும் கண்டு கொள்ளாமல்
மெலிதாய் சிரித்து விட்டு அவர்
மெல்லக் கடந்து போய்விடுவார்

மாமியாருக்கு ஏற்ற மருமகளாய்
மாறாமல் வந்துசேர்ந்தாள் என்னவள்

குடும்பத்தின் நிகழ்ச்சிகள்
குழந்தைகளின் பராமரிப்பிகள்
பெரியவளின் கல்யாண வேலைகள்
அடுத்தவனின் கல்லூரிக் கனவுகள்
வரவு செலவு விபரங்கள்
வயல் வெளி நிலவரங்கள்
................
................
சொந்தங்களை சேர்த்து
பந்தங்களைப் பாதுகாத்து
அனைத்தையும் முன் நின்று
அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்

ஊர்கூடி நின்று அவளை
உயர்த்தி வைத்து பேசுகிறது
நான் வலம்வரும் இடமெல்லாம் அவள்
நலம் பற்றித்தான் தான் விசாரிக்கிறது

வருடம் இருபது கடந்தபின் எந்தன்
பொறுமை முழுவதும் இழந்துவிட்டேன்

"இங்கு நான் ஒருவன் இருப்பது
உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?

என் தோளில்மீது அமர்ந்துதான் அவள்
எல்லாவற்றையும் தாங்குகிறாள்
என்பது யாருக்கும் புரியவே இல்லையா?

எனது தைரியத்தால் தான் அவள்
எதிர் நீச்சல் போடுகிறாள்
என்பது யாருக்கும் உறைக்கவே இல்லையா?

மொத்த சுமையையும் தாங்கிக்கொண்டு
சத்தமில்லாமல் நின்று கொண்டிருக்கும்
எங்களையும் கொஞ்சமாவது
ஏறிட்டுத்தான் பாருங்களேன்"


அப்போதுதான் தற்செயலாய்
அப்பாவை கவனிக்கிறேன்

அப்பாவிடம் அங்கே
அம்மாவைப் பாராட்டி
என்னவோ சொல்லிவிட்டு
எழுந்து போகிறார் யாரோ ஒருவர்

மெல்லிய சிரிப்புடன்
மெதுவாய் தலையாட்டியபுடி
எதுவுமே நடக்காதது போல
ஏகாந்தமாய் அமர்ந்து இருக்கிறார் அவர்

நான் அந்த சிரிப்பை கடந்த
நாற்பது வருடங்களாகப் பார்த்திருக்கிறேன்
ஆனாலும் அதன் முழுஅர்த்தத்தை
அப்போது தான் உணர்ந்துகொள்கிறேன்
விட்டுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடத்தை
வரிக்கு வரி புதியதாய் தெரிந்துகொள்கிறேன்

நாலே நொடியில் மனதிற்குள் அப்பா
நாலு மடங்காய் உயர்ந்து நிற்கிறார்