Thursday, May 28, 2009

காரணம் அவள்தான்..!


என்னிடம்
அதிகம் பேசுவாள்
ஆர்ப்பாட்டம் செய்வாள்

எடுத்தெறிந்து ஏசுவாள்
எதுசொன்னாலும் மீறுவாள்

வாயாடி எதிர்த்துநிற்பாள்
வாய்நிறைய பொய்யும்சொல்லுவாள்

தனக்கெல்லாம் தெரியுமென்பாள்
தான்சொன்னதுதான் சரியென்பாள்

ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்


சாலையில்
தலைக்கவசம் இல்லாமல்
தலைதெறிக்கும் வேகம் காட்டுவாள்

அலைபேசியில் பேசிக்கொண்டே
அலட்சியமாய் வாகனம் ஓட்டுவாள்

தவறு முன்னால்நடந்தால்
தைரியமாய்த் தட்டிக்கேட்ப்பாள்

மாற்றுக் கருத்து எதையும்
ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்

சுற்றத்தோரின் பேச்சை எல்லாம்
சற்றும் சட்டை செய்யமாட்டாள்

ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்


இதைச் செய்யாதே என்றால்
அதைத்தான் முதலில் செய்வாள்

தனக்குத் தோன்றியதை
தவறென்றாலும் செய்து முடிப்பாள்

இப்படித்தான் இருக்கவேண்டுமென்றால்
இப்படியும் இருக்கலாம் என்பாள்


ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்

ஆம் நான்
அவள்மேல் பைத்தியமாய் இருக்கிறேன்

Tuesday, May 26, 2009

இது உனக்கொரு (எனக்கும்) எச்சரிக்கை ...!


உறவாடிக் கெடுப்பவர்கள்
உன்னைச் சுற்றியே இருப்பார்கள்
உள்ளொன்று வைத்திருப்பார்கள்
உனக்காக உயிர்தருவதாய் நடிப்பார்கள்

குழி வெட்டிக் காத்திருப்பார்கள் - நீ
ஓய்வெடுக்க என்பார்கள்

வலை விரித்து காத்திருப்பார்கள் - நீ
தங்கிச் செல்ல என்பார்கள்

தூண்டிலிட்டுக் காத்திருப்பார்கள் - நீ
ஊஞ்சலாட என்பார்கள்

தடை உருவாக்கிக் காத்திருப்பார்கள் - நீ
நடை பயில என்பாகள்


தேரதை இழுத்து நடுத்
தெருவினிலில் விடுத்து அதை
வேடிக்கை பார்ப்பதையே தன்
வாடிக்கையாய்க் கொண்டோர் இவர்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
வஞ்சகரின் வாய்ப் பேச்சில்
வழுக்கி விழுந்து விடாதே
வாழ்க்கை இழந்து விடாதே

நல்லோரை அவர் தம்
நடத்தையால் தெரிந்துகொள்
உண்மையை உனது உள்
உணர்வால் புரிந்துகொள்

வஞ்சினம் கொண்டு நீ
வஞ்சகம் கொன்று நீ
வாழ்க்கையில் வென்று நீ
வழிகாட்டியாய் நின்று விடு

Thursday, May 21, 2009

அம்பும் வில்லும் எதிரெதிராய்....!?






பதுங்க நேரம்தராமல்
பாதுகாக்க தடம்விடாமல்
எதிர்பாராத நேரத்தில்
எதிரிகளின் தாக்குதல்

திடீரென வானிலிருந்து பொழியும்
தொடர் மழை அம்புகள்
தரையைத் தாக்கும் வேகத்தில்
நிலை குலைய வைக்கின்றன

எதிர் கணைகளைத் தொடுக்க
ஏழு வண்ணங்களில் எட்டு திக்குமாய்
வான்நோக்கி விரிந்து இருக்கும்
வானவில்லை எடுத்து நிறுத்துகி்றோம்

வில்லைப் பார்த்தவுடன்
விலகி ஓடுகின்றனர் எதிரிகள்
அம்புகளின் தாக்குதலும்
அப்படியே நின்று போகிறது

ஏவலாய்ப் பாய்ந்துவரும் அம்புகள்
எதிர்பார்க்காமல் எதிரியாய் அங்கே
எதிரே வில்லைப் பார்த்தவுடன்
விதிர்த்துப்போய் மலைத்து நிற்கிறது

வெஞ்சினத்தோடு பாய்ந்து வந்தவை
பூஞ்சாரலாகி சாமரம் வீசுகிறது
வில்லிருக்கும் வரை நமக்கு
வெற்றியின் துணை இருக்கும்

Monday, May 18, 2009

உதயசூரியன் கொண்டுவரும் சேதி..!


அதிகாலைச் சூரியனின்
அற்புத தரிசனத்திற்காக
கிழக்குக்கடற்கரை மணல்வெளியில்
கீழ்திசைநோக்கிக் காத்திருக்கிறேன்

குருதிப்புனலில் முகிழ்கும்
இறுதி நீர்க்குமிழ்போல
மெல்ல வெளிவரும்
காலைக் கதிரவனின்
சென்நிற கிரகணக்கரங்கள்
காத்திருக்கும் என்னிடம்
மொத்தமாய் அள்ளிக்
கொண்டுவந்து சேர்க்கின்றன

உணவில்லா வயிற்றின் ஓலத்தையும்
மருந்தில்லா காயத்தின் ஒப்பாரியையும்
உறுப்பிழந்த உடல்களின் கதறலையும்
உறவிழந்த உள்ளங்களின் உளரலையும்

ஒழுகும் குருதியின் ஓசையையும்
அழுகும் பிணங்களின் வாடையையும்
அழுதோய்ந்த குழந்தைகளின் விசும்பலையும்
கருகிமடிந்த காவல்தெய்வங்களின் சாம்பலையும்


அரைமணி பயணக் கீழ்திசையில்
அத்தனையும் அப்படியே தலைகீழாய் !
எனக்கான அதிகாலை போல
எப்போதங்கே விடியல் வரும் !!

அதிகாலை உதய சூரியனே !

அதிகாரம் படைத்தோரின்
குளிர்சாதன அறைக்குள் சென்று
தயங்குவோருக்கு உண்மை உணர்த்த
தூங்கும் உணர்வுகளை தட்டியெழுப்ப

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !

உன்னால் உயர்ந்தோரை
உன்சொல் கேட்கவைக்க

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!

யுத்தமில்லாமல் பூமிகாக்க
ரத்தமில்லாமல் தேசம்பார்க்க

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!!

Saturday, May 16, 2009

நான் ஏற்கனவே செயித்துவிட்டேன்....!!!


ஓட்டு எண்ணும் முன்னரே
ஒருதுளி சந்தேகமின்றி
எனதுதொகுதித் தேர்தலில்
ஏற்கனவே செயித்துவிட்டேன்

சனநாயகத்தில் மக்கள்தாம்
முடிவுக்காகக் காத்திக்கவேண்டும்
பணநாயகத்தில் வீட்டு வாசலில்
முடிவு எனக்காகக் காத்திருக்கும்

எனது கட்சிக்காரருக்கும்
எதிர் கட்சிக்காரருக்கும்
என்கணக்கில் பாதியும்
காந்திகணக்கில் மீதியுமாய்
தேர்தல்நிதியாய்ப் பணத்தை
தண்ணீராய் இறைத்திருக்கிறேன்

எனது பணத்துடன்
எனது பணம் மோதி
எனது பணம் செயித்து
என்னையும் செயிக்கவைக்கும்
எட்டாவது அதிசயமிதை
எங்கேனும் கண்டதுண்டா !

எவர் செயித்தாலும் கிரீடம்
என்தலைக்கு வந்து சேரும் !!

செயிக்கும் அணியிலேயே இருந்தவன்
செயிக்கும் அணியில்தான் இருக்கிறேன்
செயிக்கும் அணியில்தான் இருப்பேன் !!!

Friday, May 15, 2009

இந்த IPL அறிந்துகொள்ளுங்கள்...!


அகிலத்தின் மொத்த கவனமும்
குவிந்திருக்கிறது அங்கே

பட்டினியாக் கிடக்கும் நாடு
பலஆயிரம் கோடி செலவில
பலநாடுகளிடம் கடன் வாங்கி
பகட்டுக்காக நடத்தி வரும்
பரபரப்பான ஆட்டம் அது

நடுமைதானத்தில் இவர்கள்
நாற்புறமும் சுற்றி அவர்கள்

எளியோர் இவர்களை ஆட்டமிழக்க வைக்க
வலியோர் அவர்கள் தயாராயிருக்கிறார்கள்


அவர்கள்

ஆயத்தமாய்த் தாக்குதல் நடத்த
சூழ்ந்து நிற்கிறார்கள்

அடிக்கடிக் கூடிப்பேசி பல
திட்டம் தீட்டுகிறார்கள்

எல்லையைத் தாண்ட விடாமல்
தடுத்துப் பிடிக்கிறார்கள்

ஆனவமாய்ப் பேசிப் பார்க்கிறார்கள்
ஆவேசமாய் வீசித் தாக்குகிறார்கள்
ஓடவிடாமல் தடை செய்கிறார்கள்


இவர்கள்

தடுத்து ஆடுகிறார்கள்
தலை தப்ப ஓடுகிறார்கள்
எல்லைக் கோட்டை நாடுகிறார்கள்
மூன்றாம் நடுநிலையாளரின்
தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்


இடைவேளையில்

வேட்டு சத்தம் காதைப்பிழக்கிறது
வெடி சத்தம் வின்னைக் கிழிக்கிறது
நடுமுதுகில் எழும்பில்லாதவர்கள்
நடுநடுவே நடனமாடுகிறார்கள்

இவர்களின் வீழ்ச்சியை
அவர்கள் கொண்டாடுகிறார்கள்


சுற்றிலும்

பதட்டத்தோடு பார்த்துநிற்கும்
உற்றார் உறவினங்கள்
கூர்ந்து கவனிக்கும்
உலகப் பார்வையாளர்கள்

கருத்துச் சொல்லிப் பெயரெடுக்கக்
காத்திருக்கும் கணவான்கள்
தொடரும் நிகழவுகளை ஆரவாரமாய்
அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்

புதிய செய்திக்காக மட்டுமே
கவனித்திருக்கும் ஊடகங்கள்
தவறைத் தட்டிக்கேட்க முடியாமல்
திணரும் நடுநிலையாளகள்

இது எங்கோ நடக்கும் IPL
( இந்தியன் ப்ரீமியர் லீக் ) அல்ல

தெரிந்து கொள்ளுங்கள்
இது இங்கே நடக்கும் IPL
இது இனம் அழிக்கும் IPL

இலங்கையின் பழிவாங்கும் லீக் (IPL)
இலங்கையின் பலிகேட்கும் லீக் (IPL)
ஈழம் புறக்கணிக்கப்படும் லீக் (IPL)
ஈழம் புதைக்கப்படும் லீக் (IPL)

Thursday, May 14, 2009

அம்மா, அவள், என் சுவாசம்....


ஐயிரண்டு திங்களாய்
அன்னையுள் வசித்து

ஆழ்குள மீன்போல
அக்கிநீருள் சுவாசித்து

பரந்தஉலகில் நான்
பிறந்தநாளன்று தான்

கிடைத்தது எனக்கு முதல்
காற்றின் புதிய சுவாசம்

ஐநான்கு வருடமாய்
பத்தோடு பதினொன்றாய்

விறிந்த உலகில் பிடியின்றி
வீணே சுற்றித்திரிந்த நான்

வானத்து தேவதையவளை
வாழ்வின்வாசலில் சந்தித்த நாள்

அறிதாய் எதுவோ உணர்ந்தேன்
புதிதாய் மறுபடி பிறந்தேன்

வஞ்சிக்கொடி அவளை
நெஞ்சில் நினைக்கும் பொழுதினில்
திடுக்கென எனக்குள்
நொடிகொருமுறைப் பிறக்கிறேன்

பிறக்கும்போதெல்லாம் பறக்கிறேன்
பறக்கும்போதெல்லாம் கிடைக்கிறது
என் முதல்காதலின் புதிய சுவாசம்

Wednesday, May 13, 2009

ஆண்டவனுக்கு ஒரு அவசரத் தந்தி.....!


வானுகத்தில் கடவுள்
வாட்டமாய் இருக்கிறார்
நிலவரம் புரியாமல்
நிலைகுழம்பி இருக்கிறார்
பூமியில் நடப்பதறியாமல்
புலம்பிக் கொண்டிருக்கிறார்

"அன்று
தமிழகம் முழுவதும் வறட்சியில் மிதக்க
திருமங்கலம் மட்டும் வசதியாய் தெரிந்தது !
உலகிலேயே செழிப்பான நகரம் என்ற
உயர்ந்த பட்டமும் கொடுத்தோமே !!

இன்று
உலகம் முழுவதும் வறண்டு கிடக்க
உணவு கிடைக்காமல் புரண்டு படுக்க
இந்தியா முழுவதும் பசுமையாய்த் தெரிகிறதே !!!

அட !
அப்படி என்னதான் அங்கே ?!

வறட்சி காலத்திலும்
வளமாய் இருக்கும் ரகசியம் !
வறண்ட நேரத்திலும்
வாழ்வு செழிக்கும் அதிசயம் !!

உலகெங்கும் நடப்பதென்னவோ
கலிகாலம் மட்டும் தானே !
இந்தியாவுக்குள் மட்டும் என்ன
இப்போது நடப்பது பொற்காலமா ?

எப்படி இந்த மாற்றம் ?
எதனால் இந்த ஏற்றம் ?
என்ன தான் நடக்குமங்கு ?
எத்தனை நாள் தொடருமிது ?

ஒன்றுவிடாமல் தெரிந்துகொண்டு
ஏனையநாடுகளுக்கும் உடனேபரப்ப
ஆவன செய்யவேண்டும் !
அவர்களும் பிழைக்கவேண்டும் !!

ஒடுங்கி இருக்கும்
உலகப் பொருளாதாரம்
உயிர்பெற்று தலைதூக்க
உதவி செய்யவேண்டும் "


இந்தியப் பயணத்துக்கு தயாராகிறார்
இன்று இரவுதான் கிளம்பப்போகிறார்

இன்றுதான் மே 13
இன்றுதான் கடைசி நாள்

எதிர்பார்த்து வருபவர்
தாமதமாக வந்தால்
ஏமாந்துதான் திரும்புவார்

நாலும் தெரிந்தோரே
நாலு மணிக்குள் வந்துசேர
உண்மை நிலை விளக்கி
உடனடியாய் தந்தி கொடுங்கள்

Tuesday, May 5, 2009

பார்த்தவுடன் வருமா காதல் ?!


"முகம் பார்த்தவுடன் காதல்"
"நகம் பட்டவுடன் காதல்"

எதிர்ப்பவனை முட்டாள்
என்பேன் நான்

முழு சாட்சியாய்
முன்னால் நான்

நானும் காதலிக்கிறேன்
நாற்பது வருடங்களாக

என்றும் காதலிப்பேன்
என் அம்மாவை




நன்றி :கரு/கு.த.ந

Monday, May 4, 2009

நகைப் பெட்டி



வீட்டில் நட்டநடு நாயகமாய்
கூடத்தின் நடுவில் அந்தப் பெட்டி.

பரம்பரை பரம்பரையாய் தொடர்ந்து
பாதுகாக்கப்பட்டு வரும் பெட்டி.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால்
மறைந்துபோன பொருளின் மாதிரி
அதனுள் இன்னும் இருக்கிறது
அதுவும் ஒன்றுதான் இருக்கிறது

சிறு குழந்தையாய் இருக்கும்போததை
ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன் !

குடும்பத் தலைவிக்கும் மகளுக்கும்
கேள்விஞானம் தான் அதைப்பற்றி !!

எனது பேரக் குழந்தைகளுக்கு
என்னவென்றே தெரியாது அது !!!

இந்தப்பெட்டியை திறந்து பார்க்கத்தான்
இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்.

வாசல் வரை வந்து அவர்களை
வரவேற்று அழைத்துச் செல்கிறேன்
இருக்கையில் அமரச் செய்கிறேன்
இருண்டுகிடக்கிறது அனைவரது முகமும்

ஆர்வமாய் கேட்கிறது குழந்தை
"அது இன்னுமிங்கே இருக்கிறதா ?
எப்படி இருக்கும் அது ?
இப்போதே பார்க்க வேண்டுமே !"


அமைதியாய் பதில் சொல்கிறேன்
"புது வருடப் பிறப்புக்கான
பரிசு உங்களுக்கு அதுதான் !
பார்ர்க்கலாம் அதைக் அதிகாலையில் !!


விடிந்த பின் எல்லோருக்கும்
வந்திருக்கும் அனைவருக்கும்

சிரிப்பின் முகம் காட்டக் காத்திருக்கிறது
சிரிப்பின் மாதிரி அடைக்கப் பட்டிருக்கும்

அந்த நகைப் பெட்டி( சிரிப்புப் பெட்டி )

விடிந்தால் புதுவருடம் கி.பி.2200