Wednesday, May 13, 2009

ஆண்டவனுக்கு ஒரு அவசரத் தந்தி.....!


வானுகத்தில் கடவுள்
வாட்டமாய் இருக்கிறார்
நிலவரம் புரியாமல்
நிலைகுழம்பி இருக்கிறார்
பூமியில் நடப்பதறியாமல்
புலம்பிக் கொண்டிருக்கிறார்

"அன்று
தமிழகம் முழுவதும் வறட்சியில் மிதக்க
திருமங்கலம் மட்டும் வசதியாய் தெரிந்தது !
உலகிலேயே செழிப்பான நகரம் என்ற
உயர்ந்த பட்டமும் கொடுத்தோமே !!

இன்று
உலகம் முழுவதும் வறண்டு கிடக்க
உணவு கிடைக்காமல் புரண்டு படுக்க
இந்தியா முழுவதும் பசுமையாய்த் தெரிகிறதே !!!

அட !
அப்படி என்னதான் அங்கே ?!

வறட்சி காலத்திலும்
வளமாய் இருக்கும் ரகசியம் !
வறண்ட நேரத்திலும்
வாழ்வு செழிக்கும் அதிசயம் !!

உலகெங்கும் நடப்பதென்னவோ
கலிகாலம் மட்டும் தானே !
இந்தியாவுக்குள் மட்டும் என்ன
இப்போது நடப்பது பொற்காலமா ?

எப்படி இந்த மாற்றம் ?
எதனால் இந்த ஏற்றம் ?
என்ன தான் நடக்குமங்கு ?
எத்தனை நாள் தொடருமிது ?

ஒன்றுவிடாமல் தெரிந்துகொண்டு
ஏனையநாடுகளுக்கும் உடனேபரப்ப
ஆவன செய்யவேண்டும் !
அவர்களும் பிழைக்கவேண்டும் !!

ஒடுங்கி இருக்கும்
உலகப் பொருளாதாரம்
உயிர்பெற்று தலைதூக்க
உதவி செய்யவேண்டும் "


இந்தியப் பயணத்துக்கு தயாராகிறார்
இன்று இரவுதான் கிளம்பப்போகிறார்

இன்றுதான் மே 13
இன்றுதான் கடைசி நாள்

எதிர்பார்த்து வருபவர்
தாமதமாக வந்தால்
ஏமாந்துதான் திரும்புவார்

நாலும் தெரிந்தோரே
நாலு மணிக்குள் வந்துசேர
உண்மை நிலை விளக்கி
உடனடியாய் தந்தி கொடுங்கள்

No comments: