Thursday, May 21, 2009

அம்பும் வில்லும் எதிரெதிராய்....!?






பதுங்க நேரம்தராமல்
பாதுகாக்க தடம்விடாமல்
எதிர்பாராத நேரத்தில்
எதிரிகளின் தாக்குதல்

திடீரென வானிலிருந்து பொழியும்
தொடர் மழை அம்புகள்
தரையைத் தாக்கும் வேகத்தில்
நிலை குலைய வைக்கின்றன

எதிர் கணைகளைத் தொடுக்க
ஏழு வண்ணங்களில் எட்டு திக்குமாய்
வான்நோக்கி விரிந்து இருக்கும்
வானவில்லை எடுத்து நிறுத்துகி்றோம்

வில்லைப் பார்த்தவுடன்
விலகி ஓடுகின்றனர் எதிரிகள்
அம்புகளின் தாக்குதலும்
அப்படியே நின்று போகிறது

ஏவலாய்ப் பாய்ந்துவரும் அம்புகள்
எதிர்பார்க்காமல் எதிரியாய் அங்கே
எதிரே வில்லைப் பார்த்தவுடன்
விதிர்த்துப்போய் மலைத்து நிற்கிறது

வெஞ்சினத்தோடு பாய்ந்து வந்தவை
பூஞ்சாரலாகி சாமரம் வீசுகிறது
வில்லிருக்கும் வரை நமக்கு
வெற்றியின் துணை இருக்கும்

No comments: