Wednesday, July 8, 2009

இது என்னக் கொடுமை..!?


சிரபுஞ்சியில் என்னைச் சுற்றி
....கடும்வெயில் அடிக்கிறது
சஹாராவில் எனக்கு மட்டும்
....சாரல்மழை பெய்கிறது
சிம்லாவில் என்னைச் சுற்றி
....வெக்கையாய் இருக்கிறது

தலைக்கனம் பிடித்துத் திமிராய்
தன்னையே சுற்றிக் கொள்ளும்
பூமி இப்போதெல்லாம்
என்னவோ தெரியவில்லை
என்னையே சுற்றி வருகிறது

நெருப்பு பனியாய்க் குளிர்கிறது
நீரும் அனலாய்ச் சுடுகிறது
இரவு வெளிச்சமாய் இருக்கிறது
பகல் இருண்டுபோய்க் கிடக்கிறது

வெறும் காற்றில் உறைகிறேன்
கொட்டும் மழையில் உலர்கிறேன்
கடும் பனியில் உருகுகிறேன்
சுடும் வெயிலில் நனைகிறேன்

ஏனோ தெரியவில்லை
என்னவென்று புரியவில்லை
என்னைச் சுற்றிலும் எல்லாமே
எதிர்மறையாகவே நடக்கிறது

வா வா என எந்தன்
வாழ்க்கையின் வசந்தம் அவளை
வாழ்க்கைக்குள் வரவேற்க
வாய்நிறைய ஆசைதான் எனக்கும்

ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில்
அதற்கான வழிதான் ஏதுமில்லை
பெரியோரே புரிந்துகொள்ளுங்கள்
அறியோரே அறிந்துகொள்ளுங்கள்

அடுத்து வரும் வரவேற்புக்காக
அடியேனை மன்னித்தருளுங்கள்
அவளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்
ஆனவரை சமாதானம் செய்யுங்கள்

"வராதே வசந்தமே !
நீ வரவே வராதே !!
என் வாழ்க்கைக்குள் வரவே வராதே !!!"

1 comment:

ரவி said...

கவிதை, அதுக்கு தகுந்த படம். சூப்பர்