Monday, June 8, 2009

அறுபதானாலும் ஆண்டவன் கூடவே இருப்பார்..!


பெற்றபிள்ளைகளின் ஆசையையும்
பேரப்பிள்ளைகளின் இம்சையையும்
சுற்றங்களின் யோசனையையும்
தவிர்க்க முடியவில்லை

அறுபதாம் கல்யாணம் முடிந்து
அன்று இரவு முதலிரவுபோல்
அமர்க்களமான ஏற்பாடு
எதிர்க்க முடியவில்லை

அந்தவயதிலும் வெட்கப்படும்
அவள்முகம் பார்க்க ஆசையாய்
அறைக் கதவினைத் திறந்தவன்
அப்படியே அதிர்ந்து நிற்கிறேன்
எதிரே நிலைமை சரில்லை

கலைந்து கிடக்கிறது எனது
கடந்தகால நாட்குறிப்பேடுகள்
தலை கவிழ்ந்திருக்கும் அதுபோலவே
நிலைகுலைந்து இருக்கிறேன்
எதிர்பார்க்கவே இல்லை

அவள் கைகளில் விரிந்தநிலையில்
அந்த கருப்புவெள்ளைப் புகைப்படம்

நான்காக மடிக்கப்பட்டிருந்த படம்
நன்றாக சிறகுகள் விரித்து எழுந்து
என்மனப் பறவையோடு சேர்ந்து
பின்னோக்கிப் பறக்கிறது
பல்லாண்டுகள் கடக்கிறது

பன்னிரண்டு வயதினில்
பள்ளி செல்லுகையில்
பாதையினில் கண்டெடுத்தேன்
கோதையவளின் புகைப்படம்

கலையான முகம்பார்த்து
களையானது என்மனது
மலைத்து நின்ற எனக்குள்
கலைந்துவிட்ட மனதுக்குள்

கலைத்துவிட்டவள் எளிதாய்
நுழைந்து இடம் பிடித்துவிட்டாள்
சிலையாய் தடம் பதித்துவிட்டாள்
நிலையாய் இன்றுவரை இருந்துவிட்டாள்

அன்னாளில் மனதில்அவள் நுழைந்ததநாளே
பின்னாளில் எனது மணநாளாகிப்போனது
மணநாளெல்லாம் என்மனது உடைந்து
ரணகளமாகிப் போயிருக்கும்

நிழலைக் காதலித்து வருவதும்
நிஜத்திடம் மறைத்து வாழ்வதும்
மடத்தனமென அறிவுக்குத் தெரிந்தாலும்
மறந்துவிட மனதுக்கு முடியவில்லை

தன்னிரு கைக்குள் புதைந்திருந்த
புகைப்படத்துக்குள் மூழ்கியிருந்தவள் முன்
தண்டனையை ஏற்கத் தயாராக
மண்டியிட்டு தலைகுனிந்து நான்

"எனது குழந்தைப்பருவப் படம்
எப்படி கிடைத்தது உங்களுக்கு ?!"


ஒரேயொரு கேள்வி வந்துது அவளிடமிருந்து
ஓராயிரம் விடைகள் கிடைத்தது அதிலிருந்து
ஒருநொடியில் வெடித்துவந்தேன் தெளிவாய்
மறுபடியும் பிறந்துவிட்டேன் புதியதாய்

நிழல் இங்கே நிஜமாகிப்போனது !
நிழலும் நிஜமும் ஒன்றாகிப்போனது !
உண்மைக்காதலுக்கு என்றென்றும்
ஆண்டவன் அவனின் துணை இருக்கும் !!
அந்தம் முன் அதுதான் செயிக்கும் !!!

முதன்முதலாய் வெட்கத்தோடு நான் !
முதலிரவும் இன்றுதான் எங்களுக்கு !!



நன்றி:கரு/sms நண்பர்கள்

1 comment:

தேவன் மாயம் said...

கவிதையில் இனம்புரியாத ஒரு ஆழ்ந்த அனுபவத்தை சொல்லி இருக்கிறீர்கள்!!